Monday, February 15, 2021

அஜ்மீர் ஹாஜா நாயகம்

 1.

கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளர்) என்று இன்றளவும் ஏழை மக்களால் வழங்கப்படுகின்ற ஹஜ்ரத் முயினுதீன் அஜ்மீர் ஹாஜா நாயகம் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்று குறிப்பிலிருந்து:
பிறப்பு:

கி.பி. 1142-ல் ஹிஜ்ரி 530 ரஜப் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சஞ்சர் என்ற கிராமத்தில் பிறந்தார்கள். பிறந்த நிலையிலும் சுஜுதில் தான் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
பெற்றோர்கள்:
தாயார்: பீபி உம்முல் வரஃ மற்றும் தந்தை: ஸையத் கியாஸுத்தீன் அவர்கள்.தந்தை வழியில் செய்யதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் தாயார் வழியில் செய்யதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவார்கள்.
இறைநேசச் செல்வர்களுக்கெல்லாம் அரசர் கொதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் தாய் மாமனார் ஆவார்கள் என்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. இருவரும் வாழ்நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து குத்பு நாயகம் அவர்களின் துவாவை அஜ்மீர் ஹாஜா நாயகம் பெற்றிருக்கிறார்கள்.
சிறு பிராயம்:
ஐந்து வயதிலேயே ஐவேளையை தொழுகையை தந்தையோடு சென்று பள்ளியில் நிறைவேற்றுவார்கள். ஒன்பது வயதிலேயே குரான் ஷரீஃப் முழுவதையுமே மனப்பாடம் செய்து விட்டார்கள்.பாரசீக மொழியிலேயே குரான் ஷரீஃ தப்ஸீர், ஹதீது, ஃபிக்ஹ் போன்ற மார்க்க நூல்களை கற்றார்கள். அவர்களுக்கு தஸவ்வுஃப் என்று இஸ்லாமிய மெய்ஞ்ஞான கலையின் மீது ஆர்வம் அதிகரிக்கவே அதனையும் கற்றார்கள்.
14 வயதில் தந்தையை இழந்தார்கள். இழந்த சிறு மாதங்களில் 15 வயதை அடைந்த போது தாயாரையும் இழந்தார்கள். தந்தை வழி வந்த பழத்தோட்டத்திலிருந்து கிடைத்த வருவாயில் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.
தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் போது கூட சதா இறைவனையே திக்ரு செய்த வண்னம் இருப்பார்கள்.
உஸ்தாத்மார்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி அவர்கள் - முதியவரான இவர்களை தனது தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் தோட்டத்தில் ஓரிடத்தில் அமர்ந்து திக்ரு செய்த வண்ணம் இருப்பதை ஹாஜா நாயகம் காண்கிறார்க்ள். உடனே சில திராட்சைகளை பறித்துக் கொண்டு போய் வைத்தார்கள். அந்த முதியவர் கண் விழித்தார்கள். ஹாஜா நாயகமவர்களை முன்னால் வைத்து விட்டு அமர சொன்னார்கள். அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். திராட்சை பழத்தில் ஒன்றை எடுத்து ஹாஜா நாயகமவர்கள் வாயில் ஊட்டினார்கள். கண்களை மூடி திராட்சையை கவனமாக உணர்ந்து சாப்பிட்டு விட்டு கண் விழித்திருக்கிறார்கள். எதிரே அமர்ந்திருந்த அந்த முதியவர் மறைந்திருந்தார்கள். ஆனால் ஹாஜா நாயகத்தின் உள்ளே முதல் ஞான வெளிச்சம் ஒளியூட்டியிருந்தது.
ஹாரூன் நகரத்தில் வசித்து வந்த ஹாஜா உதுமான் ஹாரூனி என்பவர்கள் பகலில் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்கள் மறுமுறை இரவிலும் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்களாம். இரவில் சிறிது நேரமே தூங்குவார்களாம். இவர்கள் எதை சொன்னாலும் அது பலிக்கும், இவர்களின் இறைஞ்சுதல் இறைவனால் உடனே கபூல் செய்யப்பட்டு விடுமாம். இப்படிப்பட்ட சிறப்புடையவர்களை பற்றி கேள்விப்பட்டு அவர்களை சந்திக்க காடு மலைகளை கடந்து காண சென்றார்கள். உதுமான் ஹாரூனி அவர்களின் தரீக்கா ஷிஸ்தியா தரீக்காவாகும். இவர்களை நேரில் சந்திக்கிறார்கள். தேடலின் சந்திப்பில் ஹாரூனி அவர்களின் முகத்தை பார்த்தவுடனேயே தம் மனதிற்கு இறைவனிடத்தில் இறைஞ்சுகிறார்கள், “யா அல்லாஹ்! இவர்களே ஆன்மீக குருவாக அமைய நீ அருள வேண்டும்..” - தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது தாகம் கொண்டவர்களை என்ற மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் கூற்றுக்கு ஏற்ப தண்ணீரான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களும் தாகம் கொண்ட ஹாஜா நாயகத்தை தம் சீடராக ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களோடு தான் இருபது ஆண்டு காலம் உண்டு, உறங்கி, திக்ரு செய்து, பல ரிலாயத் எனும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த கட்டத்தில் தமது தாய் மாமாவான கௌதுல் அஃலத்தை சந்தித்து அவர்களின் துவா பரக்கதையும் பெறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஷாம் நகரில் ஒரு குகையின் வாசலில் இரண்டு சிங்கங்கள் காவல் காப்பதை காண்கிறார்கள். அப்போது குகைக்குள் இருந்து ஒரு முதியவர் இவர்களை அழைத்து (இவர்கள் யாரென்று நான் படித்த எந்த புத்தகத்திலும் பதிவாகவில்லை) எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள், “இந்தியா செல்கிறேன்” என்று இவர்கள் பதிலளித்ததும், அந்த முதியவர், “..அல்லாஹ்வைத் தவிர.. எல்லாக் காரியங்களும், ஏழைகளுக்கும், வறுமைபட்டோருக்கும் (தர்வேஷ்கள்) நன்மை அளிப்பதாக அமையட்டும்..” என்று துவா செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
ஷாம் நகர் வழியாக பகுதாதில் வந்தடைந்து தம் உஸ்தாதான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து மதினா பயணத்தின் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி இந்தியா பயணம் சென்று தீன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக தாம் உணர்ந்ததாக தமக்கு நேர்ந்த அந்த அனுபவத்தை எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள் உளமகிழ்ந்து ஒரு ஆசா கோலும், முஸல்லாவும், கபன் துணி போன்ற ஹிர்கா எனும் உடையையும் கொடுத்து துவா செய்து வழியனுப்பினார்கள்.
மேற்கொண்ட பயணங்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி ஏற்றி வைத்த விளக்கின் ஒளியால் ஏற்பட்ட வெளிச்சத்தில் தனது தோட்டத்தை விற்று வந்த காசை ஏழைகளுக்கு வழங்கி விட்டு (ஏழைகளின் பங்காளராயிற்றே) பயணமானார்கள்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகரம் சென்றார்கள். பின்னர் சமர்கந்த் சென்றார்கள். அந்நாளில் சமர்கந்தும் புகாராவும் அறிவின் இரு கண்கள் என்று வருணிக்கப்பட்டதாம். பின்னர் ஹாரூன் நகரத்தை நோக்கி ப்யணமானார்கள். இங்கு தான் இவர்களின் ஆன்மிக குருவான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து தஸவ்வுஃப் பாடம் பயின்றார்கள். இருவரும் சேர்ந்து மக்கமா நகரம் பயணமானார்கள்.
பின்பு பகுதாத் பயணத்தில் கௌதுல் அஃலம் அவர்களுடைய சந்திப்பு. 53ம் வயதில் ஹிஜ்ரி 583ம் ஆண்டு மக்கா நக்ர் ஹஜ் பயணம். பின்பு எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் புவியின் பூஞ்சோலை மதீனா பயணம்.
இங்கே தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “நீங்கள் இந்தியாவுக்கு சென்று தீன் பணியாற்றுங்கள்” என்று தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக உணர்கிறார்கள்.
பின்பு ஷாம் நகர் வழியாக பகுதாது மீண்டும் பயணமானார்கள். ஹிஜ்ரி 586ல் அப்போது இந்தியாவில் உள்ள லாஹூர் வந்தடைகிறார்கள். அங்கே புகழ்பெற்ற ஹுஜ்விரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்தில் நாற்பது நாட்கள் தனித்திருந்து இறை தியானத்தில் “சில்லா” இருந்தார்கள். லாஹூரில் ஐந்து ஆண்டுகள் தங்கி இஸ்லாமிய பணி செய்தார்கள். இவர்களுக்கு இந்தியே தெரியாது ஆனாலும் ஏராளமானோர் மககள் வெள்ளம் போல் திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
அதன் பின்பு டெல்லிக்கு வருகை தருகிரார்கள். அங்கிருந்து 40 சீடர்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த அஜ்மீர் எனும் நகரை தேர்ந்தெடுத்து வந்தடைந்தார்க்ள். அங்கு தான் தம் வாழ்வின் இறுதி வரை வசித்தார்கள்.

திருமணம்:
இந்தியாவில் அஜ்மீர் ஹாஜா நாயகம் வந்த காலங்களில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.
ஒரு முறை ஹாஜா நாயகம் அவர்கள் சம்பல் நதிக்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது.
(சற்று முன் என்ன நடந்தது என்றால்:)
ராஜ குல புத்திரர்களில் ஒருவனான இளவரசன் ஒருவனுக்கு குஜராத்தை சேர்ந்த அரச குல பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. பெண்ணையும் குஜராத்திலிருந்து ராஜஸ்தான் பகுதிக்கு அழைத்து வந்தாயிற்று. ஆனால் திடீரென இளவரசன் இறந்து விட்டான். இவர்களது குல வழக்கப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டாலே கணவன் மனைவியாகத் தான் கருதப்படுவார்கள். ஆகையினால் கணவனான இளவரசன் இறந்து போய்விட்டான் என்றும் அந்த பெண்ணை கையை காலை கட்டி இளவரசன் உடல் எரியும் சிதையில் தள்ளி விடும் காட்டுமிராண்டித் தன சூழலிலிருந்து தப்பித்து ஓடி வருகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு பிற ராஜ புத்திரர்களும் மூச்சிறைக்க தீப்பந்தங்களுடன் ஓடி வருகிறார்கள். அந்த பெண் தூரத்தில் ஒருவர் வந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு அவர்களிடம் போய் அடைக்கலம் தேடுகிறார்கள்.
“என்னைக் காப்பாற்றுங்கள். எனக்கு உயிர் பிச்சைக் கொடுங்கள். நான் உங்கள் அடிமை” என்றாள்.
யாரிடம் வந்து அடைக்கலம் கேட்டிருக்கிறார்கள் என்று சொல்ல தேவையில்லை.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்கள், “பெண்ணே! யாரும் யாருக்கும் அடிமையில்லை.. நாம் எல்லோருமே அல்லாஹ்வுக்கு தான் அடிமைகள்..” என்று விசாரிக்கிறார்கள்.
பின்னாடியே துரத்திக் கொண்டு வந்தவர்கள், “பெரியவரே..” என்று அஜ்மீர் ஹாஜா நாயகத்தை அழைத்து “அந்த பெண்ணை தம்முடன் அனுப்பி வைக்குமாறு” கேட்டுக் கொள்கிறார்கள்.
ஹாஜா நாயகம் அவர்கள் மறுத்து அவர்களுடன் கராமத்து மூலமாக சண்டையிட்டு திருப்பி அனுப்புகிறார்கள்.
அந்த பெண் தான் பின்னாளில் இஸ்லாத்தில் இணைந்து பீபி அமதுல்லாஹ் ஆகிறார்கள், இவர்களையே அஜ்மீர் ஹாஜா நாயகம் நிகாஹ் செய்கிறார்கள்.
ஹாஜா நாயகமவர்களுக்கு இன்னொரு மனைவியும் உண்டு. அவர்கள் அஜ்மீரில் வாழ்ந்த காஜா வஹ்ஹுத்தீன் மஷ்ஹதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகளார் பீபி இஸ்மத்துல்லாஹ் அவர்களையும் நிகாஹ் செய்து கொண்டார்கள்.
பிள்ளைகள்:
மூன்று ஆண் பிள்ளைகள்:
1. ஹஜ்ரத் காஜா பஹ்ருத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
2. ஹஜ்ரத் காஜா ஜியாவுத்தீன் அபுசாது ரஹ்மத்துல்லாஹி அலைஹி
3. ஹஜ்ரத் காஜா ஹிஷா முத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஒரு மகள்:
பீபி ஹாஜா ஜமால் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3

அஜ்மீரில் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏழை எளியோரெல்லாம் இவர்களின் கராமத்து மூலம் சுகம அடைந்து கொண்டிருந்தார்கள். ஆயிரமாயிரம் மக்கள் தூய இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.
இந்த கால கட்டத்தில் தான் அஜ்மீரை பிருதிவிராஜன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு உயர்வதை இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தம் படையை அனுப்பி இவர்களை இந்த நாட்டை விட்டு சென்று விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.
ஆனால் "அதெல்லாம் முடியாது" என்று அஜ்மீர் ஹாஜா நாயகம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
இதனால் சினம் கொண்ட பிருதிவிராஜன் இவர்களை அழித்து ஒழித்து விட முடிவு செய்தான்.
இந்த காலகட்டத்தில் கடும் புயலும் மழையும் வெள்ளமும் சேர்ந்து அஜ்மீர் நகரம் சீரழிந்திருந்தது. ஏராளமான பொருள் சேசமும் உயிர் சேதமும் ஏற்பட்டிருந்தன. பிருதிவிராஜனின் அன்னையர் வாசவத்தா என்பவர் இந்த சேதங்களுக்கு எல்லாம் காரணம் தன் மகன் ஆளும் அரசு முஸ்லிம் பெரியவரை பகைத்துக் கொண்டது தான் காரணம் என்று நம்பினார். பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முறையிட்டார். ஆனால் பிருதிவிராஜனோ, “உங்களுக்கு தெரியாது அம்மா!. ஒரு சாதாரண பக்கீர் இந்த சம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை அழித்துவிட முடியுமா? என் வாளும், தோளும் அப்படியா வலிமை இழந்து போயின்! வயதானதால் நீங்கள் நம்பிக்கைத் தளர்ந்து போனீர்கள். நான் வெல்வது உறுதி!” என்று திமிராக கூறினான்.
அன்றிரவே தன் ராஜகுருவும் தளபதியுமான ஜெயபாலரை அழைத்து இதற்கொரு முடிவு கட்ட முடிவெடுத்தான்.
ஜெயபாலர் பெரும் படைகளுடன் ஒரு ஏழை பக்கீரை எதிர்க்க போரிடுவது போல் சென்றார். அங்கே அந்த ஏழை பக்கீரின் கராமத்தினால் கண்கள் ஒளியிழந்து திரும்பினார்.
அப்போது காளி கோயிலின் முன்னே அவர் வேண்டிக் கொண்டார், “காளியே! நான் என் குழந்தையை உயிர்பலி தருகிறேன்.. எனக்கு இந்த முஸ்லிம் பக்கீரை வெல்லும் சக்தியை கொடு!” என்று வேண்டிக் கொண்டு சொன்னது போலவே தன் ஐந்து வயது மகனை பலி பீடத்தில் கிடத்தில் அந்த பாலகனோடு சேர்ந்து கோயிலே அலறுவதை பொருட்படுத்தாது பலியும் கொடுத்து விட்டான்.
பின்னர் எதுவும் நடக்காமல் போகவே நட்ட நடு நிசி நேரம் காளி கோயிலில் நின்று கொண்டு கத்தினான், “என் நரபலியை ஏற்றுக் கொள்ள மாட்டாயா! நான் மன்னருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதா!! ஐயகோ!!! நான் என் செய்வேன்!!!!” என்று அழுது புலம்பினான். சிறிது நேரத்தில் அவன் தோள்களில் ஒரு பூவின் ஸ்பரிசம் பட்டது. திரும்பி பார்க்கிறான். அஜ்மீர் ஹாஜா நாயகம் நின்று கொண்டிருந்தார்கள்.
அவனிடத்திலே அன்போடு நடந்து கொள்கிறார்கள். போதனை செய்கிறார்கள். இறந்த குழந்தையையும் உயிரோடு கொண்டு வருகிறார்கள். அடுத்த கனமே அவன் அவர்களாகி ஜெயபாலர் அப்துல்லாஹ்வாகி இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு நாம் ஜியாரத்திற்கு செல்லும் அஜ்மீர் தர்கா ரௌலா ஷரீஃப் என்பது இந்த ஜெயபாலராக இருந்து அப்துல்லாஹ்வாக மாறிய இவர்களின் இல்லம் தான் என்றும் அறியப்படுகிறது.
இதற்கிடையில் மாமன்னர் ஷிகாபுத்தீன் கோரி கஜ்னவி ஒரு கனவு காண்கிறார்கள். கனவிலே ஒரு பக்கீர் அவர்கள் “படைகளோடு போரிட்டு பிருதிவி ராஜனை கைது செய்! வெற்றி உனக்கு தான்!!” என்று காண்கிறார்கள். பின்னாளில் தாம் கனவில் கண்டது அஜ்மீர் ஹாஜா நாயகம் என்பதை அறிந்து கொள்கிறார்கள். உடனே பெரும் படையை திரட்டி பிருதிவி ராஜனை எதிர்த்து போரிட தயாரானார்.
பிருதிவிராஜனும் போருக்கு ஆயத்தமாகி யானை மீதேறி டில்லி நோக்கி புறப்பட்டான். அப்போது ஹாஜா நாயகம் இருக்கும் இடத்தை கடக்க நேர்ந்தது, அப்போது அவன் உறுமினான், “போரில் வெற்றி பெற்று வரும் போது இந்த தவச்சாலையை அழிப்பேன். இங்கு உள்ளவர்களைக் கொன்று அவர்களது ரத்தத்தை உடம்பில் பூசிக் கொண்டு தான் ஊருக்கு திரும்புவேன்” என்று புறப்பட்டான்.
டில்லியில் நடந்த கடும் போரில் பிருதிவிராஜன் தோற்று போய் கைது செய்யப்படுகிறான். மாமன்னர் ஷிகாபுதீன் தமது வெற்றியை அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார்.
அத்தோடு நிற்காமல் படையோடு புறப்பட்டு அஜ்மீருக்கு வந்து அவர்களின் துவாவை பெற்றார். டில்லி பாதுஷாவாக ஆனார். அவர் மட்டுமல்ல அவ்ரை தொடர்ந்து டில்லியை ஆட்சி செய்த குத்புதீன் ஐபெக், இல்துத் மிஷூம், ஆகியோர்களும் பெரிதும் மரியாதை செலுத்தினார்கள்.

4
மறைவு:
ஹிஜ்ரி 633 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 6-ஆம் நாள் (கி.பி. 1236ம் ஆண்டு) தம்முடைய 97வது வயதில் இறைவனின் நாட்டப்படி கொடுக்கப்பட்ட மிஸ்ஸனை சிறப்பாக நிறைவேற்றி விட்டு இறைவனிடம் திரும்பினார்கள்.
இவர்களின் மூத்த மகனார் ஹாஜா பஹ்ருத்தீன் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அவர்களுக்கு எந்த இடத்தில் கஃபனிடப்பட்டதோ அந்த இடத்தில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்கள் மக்கமா நகரில் கஃபாவின் முன்னிலையில் இறைவனிடம் கையேந்தினார்கள், “யா அல்லாஹ்! யார் என்னுடைய வம்சா வழியில் மூரிதாகி உன்னை (அல்லாஹ்வை) வழிபடுகிறார்களோ அவர்களை நீ மன்னிப்பாயாக! என்று.
அந்த துவா இன்றளவும் கபூலாக்கப்படுகிறது என்பது கண்கூடு.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Sunday, November 1, 2020

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்.. (Thanks to Abedeen Nana and Hameed Jaafar Nana)

கீழே வரும் லிங்கை கிளிக் செய்யவும்:

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்..

நன்றிகள்: 

  • ஆபிதீன் நானா
  • ஹமீது ஜாஃபர் நானா

Sunday, August 4, 2019

மூஸா நபி அலைஹிஸ்ஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுடைய காலம்

28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்) - ஆயத் 22லிருந்து 27வரை (நேரடி மொழி பெயர்ப்பு அல்ல)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து மத்யன் எனும் நகருக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்கள் பலர் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி தண்ணீரை கிணற்றுக்குள் இருந்து இறைத்து கொண்டிருக்கிறார்கள். சற்று தள்ளி, இரு பெண்கள் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த இரண்டு பெண்களிடம் விபரம் கேக்க அவர்களோ, தாங்கள் அந்த ஆடு மேய்ப்பவர்களான ஆண்கள் அவர்களது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டி முடியும் வரை தாங்கள் எடுக்க முடியாது என்றும் அவர்களது தந்தை வயோதிகர் என்றும் கூறுகின்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டுகிறார்கள்.

உதவியவுடன் நிழலில் ஒதுங்கி,”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் ஒரு ஃபகீராக இருக்கின்றேன்” என்று துவா செய்கிறார்கள்.

பிறகு அந்த இரு பெண்களும் தமது வயோதிகமடைந்த தந்தையிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி கூறுகிறார்கள். அந்த தந்தையோ தமது இரு மகளில் ஒரு மகளை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வருமாறு கோருகிறார்கள்.

அந்த பெண் நாணத்துடன் மூஸா நபியவர்களிடம் வந்து, “எங்களுக்காக நீங்கள் தன்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மூஸா நபி அவர்களுடன் அவர்களுடைய இல்லம் வந்தடைந்து அவர்களின் தந்தையிடம் தாம் எகிப்திலிருந்து மத்யன் வந்ததற்கான காரணத்தை ஒன்று விடாமல் தாம் எகிப்தி ஒருவரை எவ்வித நோக்கமும் இல்லாமல் கொலை செய்தது உள்பட எல்லாவற்றையும் சொல்கிறார்கள்.

அதற்கு அந்த இரு பெண்களின் தந்தை, ”பயப்படாதீங்க! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது அவர்களின் இரு மகள்களில் ஒருவர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விருப்பமுள்ளவர்களாக, தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் வேலைக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” என்று கூறுகிறார்கள்.

தந்தை மகளின் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான விருப்பத்தை உணர்ந்தவர்களாக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “நீங்கள் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உங்களது விருப்பம், நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்கள்’ என்று கூறுகிறார்கள்.

28. ஸூரத்துல் கஸலில் வரும் 27 வது ஆயத்

قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏

மேலே  உள்ள ஆயத்தில் 8 ஆண்டுகளை பற்று குறிப்பிடும் போது “ஆண்டு” எனும் பதத்திற்கு  ”ஸனதுன்” அல்லது ”ஆமுன்” அல்லது “ஹவ்லுன்” என்ற பிற வார்த்தைகளை பயன்படுத்தாமல்  “ஹிஜஜின்” என்ற வார்த்தையை அந்த தந்தை பயன்படுத்தியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இந்த வார்த்தை ”ஹஜ்ஜுன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அதாவது இது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஹஜ்ஜு யாத்திரையை குறிக்கும். அதாவது எட்டு ஹஜ் சீஸனுக்கு நீங்கள் எனக்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதாவது கஃபாவை பற்றியும் ஹஜ் யாத்திரையை பற்றியும் அந்த தந்தைக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்பலாம். இதிலிருந்து யஹீதிகளுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்ப முடிகிறது.

ஆகையினால் தான் இறைவன் தமது திருமறையில் 2. ஸுரத்துல் பகரா 146வது வாக்கியத்தில் எவர்களுக்கு நாம் வேதங்களை கொடுத்தோமே அவர்கள் (யஹீதிகள்) தமது சொந்த மக்களை அறிவதைப் போல் (குரான் ஷரீஃபை - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) அறிவார்கள் என்று குறிப்பிடுகிறான்.

Monday, May 6, 2019

மில்குல் யமீன் (மலகத் அய்மானுஹும் எனும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்)

குரான் ஷரீஃப் 23வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமுனூன் (விசுவாசிகள்): 6 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குரான் ஷரீஃப் 70வது அத்தியாயம் ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்): 30 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

இது தவிர கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களிலும் ”மலகத் அய்மானுஹும்” பற்றி வருகிறது

குரான் ஷரீஃப் 4வது அத்தியாயம் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) :24வது வாக்கியம் +  குரான் ஷரீஃப் 33வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்) :52வது வாக்கியம்

படித்தவுடன் என்னால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்றால் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடம் உறவு கொள்ளலாம் என்பது தான் அது.

அப்படி என்றால் இதையொட்டி கீழே வரும் கேள்விகள் எனக்கு தோன்றுகிறது என்றால்..

1. மலகத் அய்மானுஹும் என்றால் யார்?
2. மலகத் அய்மானுஹும் என்பவர்களை நிகாஹ் செய்யாமலே உடல் உறவு கொள்ளலாமா?

இதற்கு பதில் தெரிவதற்கு முன்னர் அரபு நாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே இருந்த “அடிமைகள்” இனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

----------------------

இஸ்லாம் ஒருவரை இரண்டு வழிகளில் மட்டுமே அடிமைகளாக ஆக்கி கொள்வதை அனுமதி தந்தது.

1. போரில் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள்
2. ஏற்கனவே அடிமைகளாக இருப்பவர்களை அவர்களின் முதலாளியிடமிருந்து விலை கொடுத்து வாங்குதல்.

முக்கியமாக ஏதாவது ஒரு காலனைஸ்டாக இருக்கும் நாட்டிற்கு சென்று அடிமைகளை கடத்தி வந்து விற்பது அல்லது அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து வாங்குவது விற்பது  போன்றவைகள் தடை செய்யப்பட்டன ஹராம் ஆக்கப்பட்டன. அதாவது ஸ்மக்லிங் ஆஃப் ஸ்லேவ்ஸ் தடை செய்யப்பட்டது.

இஸ்லாம் அடிமைகளை சமூகத்தில் இருந்தே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்கு முன்பே சமூக அமைப்பில் வேலை செய்யும் சமூகமாக அடிமைகளாக இருந்த அவர்களை (வேலை செய்யும் சமூகத்தில் இத்தகைய அடிமைகள் தான் பெரும்பான்மையாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம் மட்டுமே) உடனடியாக தடை செய்து அன்றாட வேலையில் தேக்கத்தையோ நிறுத்தத்தையோ ஏற்படுத்தவும் இல்லை.

உதாரணமாக, ஒரு நாட்டில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பான்மையாக வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை வைத்து அவர்களை திடீரென்று தடை செய்து விட முடியாது அனைத்து வேலைகளும் அல்லது பெரும்பாலான வேலைகளும் செயலற்று போய்விடும். மாறாக அவர்களுக்கான நியாயமான வேலை சூழல்களை உருவாக்கி தர முயற்சிக்கலாம். அதை தான் இஸ்லாம் செய்தது. அடிமைகளாக இருந்த அவர்களுக்கான நீதியை பற்றித் தான் இஸ்லாம் முதலில் பேசியது.

(அரபு நாட்டில் அன்று சமூக வேறுபாடுகள் அடுக்குகளாக இருந்தன, மத குருக்கள் முதல் தட்டிலும், பெருவியாபாரிகள் இரண்டாவது தட்டிலும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூன்றாவது தட்டிலும் அடிமைகள் நான்காவது தட்டிலும் இருந்தார்கள்.
இஸ்லாம் மத குருக்களை முற்றிலுமாக மாற்றி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வசம் தந்தது.(இது தவிர்த்து, புது குழுவான முஜாஹிதீன் எனும் போராளிகளை உருவாக்கியது.)

ஆக, புதிதாக போர்க் கைதிகளை அல்லாமல் அடிமைகள் சமூகத்தில் வர முடியாத நிலையைக் இஸ்லாம் தான் கொண்டு வந்தது.

அத்தோடு விட்டுவிடவில்லை, இருக்கும் அடிமை முறைகளை சரி செய்ய ஒரு சட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. அதன் படி, அடிமைகளுக்கு அது ஒரு உரிமையை வழங்கியது.

அது என்ன உரிமை என்றால், ஒரு அடிமையானவர் தனது எஜமானிடத்தில் போய் “எனக்கு விடுதலை வேண்டும், அதற்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டும்?” என்று கேட்டால் அவரது எஜமானர் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இப்போது அந்த எஜமானருக்கு உள்ள ஒரே வழி அவர் அந்த அடிமையை விடுதலை செய்வதற்கான விலையை குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை அந்த எஜமானருக்கு வாஜிபாக்கியது அதாவது கடமையாக்கியது.

அந்த விலையையும் அந்த அடிமையால் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்கக் கூடாது என்று கைட்லைன்ஸ் வழங்கியது. அப்படி நிறைவேற்ற முடியாத விலையை சொன்னால் அந்த அடிமை தனது எஜமானரை ஷரியா கோர்ட்டில் நிறுத்த முடியும். அதன் பிறகு அந்த வழக்கை ஷரியா கோர்ட் கவனித்துக் கொள்ளும்.

ஆகவே, அவர் விடுதலை பெறுவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை கணக்கிட்டு அந்த கால அவகாசம் வரை அந்த அடிமை அவருடைய அந்த எஜமானரிடத்தில் வேலை பார்த்து விட்டால் அவர் விடுதலை பெற்றவராகி விடுவார். அதன் பிறகு அவர் அடிமை இல்லை. அவர் சமூகத்தில் ஒருவராக வலம் வரலாம்.

இப்படி தான் பிற்காலத்தில் மிகச்சிறந்த நபித்தோழராக விளங்கிய சல்மான் பின் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏராளமான அருமை சஹாபாக்களும் விடுதலை பெற்று உற்ற நபித்தோழர்களாக பெருமை பெற்றார்கள்.

இஸ்லாம் சட்டம் இயற்றாமல் வாழ்வியல் நடைமுறை வழி அடிமைகளை ஒழிக்கவும் செய்த்து. உதாரணமாக, ஒரு முஸ்லிம் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால பகரமாக சில அனுமதிக்கப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் அதில் ஒன்று தனக்கு அடிமை இருந்தால் அந்த அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

அடிமைகளுக்கு தான் உண்ணும் உணவையே வழங்க வேண்டும், நல்ல ஆடைகள் வழங்க வேண்டும், கனிவான சொற்களை சொல்ல வேண்டும் என்று கற்றுத் தந்தது.

இப்படியாக இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்து அதே போல் வேலை சமூகம் ஒன்று இருக்குமானால் அவர்களுக்கான நீதியை வழங்கியது.

இப்போது போருக்கு வரும் பெண்களை பிடித்து கைது செய்த போர்வீரர் மூன்று வகைகளில் அந்த கைதிகளை அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம்.

1. அமா - போர்க்கைதியான பெண் அடிமை - அமா என்றால் சாதாரண வீட்டு வேலை செய்யக் கூடியவர் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களை அவரது எஜமானர் தனது இல்லத்தில் வீட்டு வேலைகள் செய்ய பணியில் அமர்த்திக் கொள்வார்.

2. மில்குல் யமீன் (பன்மையில் மலகத் அய்மானுஹும்) - வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் - மில்குல் யமீன் என்றால் மனைவியை போன்று வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அந்த அடிமை பெண்ணின் அனுமதி வேண்டும் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களுக்கு அவரது எஜமானர் தனி வீடு கொடுக்க வேண்டும். மனைவியை போன்று எல்லா உரிமையும் உண்டு ஒன்றைத்தவிர, மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்குண்டு ஆனால் மில்குல் யமீனுக்கு தனது எஜமானரிடத்திலிருந்து சொத்தில் பங்கு கிடையாது.

3. உம்முல் வலத் - குழந்தையின் தாய் - மில்குல் யமீனாக இருப்பவர்கள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து விட்டால் அல்லது எஜமானரின் பிற மனைவியின் மூலம் பிறந்த குழந்தைக்கு பால் கொடுத்தால் அவர் விடுதலை பெற்றவராகிறார், அதோடு தனது எஜமானரிடமிருந்து வரும் சொத்திலும் பங்கு கொள்வதோடு அவர் அவரது எஜமானரின் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகி விடுவார், அதாவது எஜமானர் தவறி விட்டால் அவரை அந்த குடும்பத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆக, இஸ்லாம் முதலாவதாக புதிதாக அடிமைகள் உருவாவதை தடுத்தது, இரண்டாவதாக இருக்கும் அடிமைகளை பல வழிகளில் விடுதலை பெற உதவியது. மூன்றாவதாக, அடிமைகளாக இருப்பவர்களின் உரிமைகளை பெற்று தந்தது.

Wednesday, February 6, 2019

ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்

1

இந்த மாதம் ஜமாத்துல் ஆஹிர் மாதம். இந்த மாதத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது யாரென்று சொல்லவே தேவையில்லை... நம் கண்மனி பாதுஷா நாயகம்.

 எஜமான் என்று மிகுந்த முஹப்பத்தோடு நாம் அழைக்கும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் தான்.

இவர்கள் ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் பிறந்தார்கள்.

2

இவர்களின் உஸ்தாது முஹம்மது கௌது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குவாலியர் என்ற ஊரில் வசித்தவர்கள்.

கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஏராளமானவர்கள் தஸவ்வுஃப் ஞானம் பயின்று வந்தாலும் குறிப்பாக இரண்டு பேர்கள் பிரசித்தி பெற்றவர்கள். ஒன்று நம் எஜமான் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள். மற்றொன்று அக்பர் அவையில் மாபெரும் சிறந்த இசைகலைஞராக விளங்கிய தான்சேன் என்பவர்.

அவர் வெள்ளைக்காரர் என்றும் இஸ்லாத்திற்கு வந்தவர் என்றும் நான் எனது உஸ்தாது வாய் வழி கேட்ட செய்தி உள்ளது.

3

எஜமான் என்றதும் நம் உடனே அவர்களிடம் எதையாவது கேட்டு பெறுவதிலேயே நமக்கும் எஜமானுக்குமான தொடர்பு நின்று விடுகிறது. அல்லது அப்படி கேட்பது ஷிர்க்காகி விடுமோ என்று உலக அறிஞரின் (பிஜே) கூற்றின் இன்ஃபுலியன்சில் மனதில் புகுந்த கேள்விக்கு பதில் தேடுவதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.

4

எஜமான் எப்போதும் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அப்போது செல்லும் போது வழியில் ஒரு ஏழை முஸாபிர் வாசலிலேயே உட்கார்ந்து இருப்பார்.

அவருக்கு ஒரு முறை அவர்களின் மகனார் யூசுஃப் தாதாவிடம் “நீங்கள் எடுத்து போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்கிறார்கள்.

சின்ன எஜமான் அவர்கள் “அவருக்கா..?” என்பது போல் கேட்க, வந்ததே கோபம் பெரிய எஜமானுக்கு, “ஏன் அவர்க்கு என்ன... அப்படி இருப்பது தவறில்லை.. நீங்கள் நினைத்ததில் தவறு உள்ளது.. போங்கள்.. போய் கொடுத்து விட்டு வாருங்கள்..” என்று கடிந்து பக்குவப்படுத்தினார்கள்.

இன்னைக்கும் தர்ஹாவை கடக்கும் போது முஸாபிர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது எஜமானுக்கு பிடிக்காது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

5

சாப்பிடும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போலவே இவர்களும் பேச மாட்டார்கள்.

6

நம் நாகூரில் மட்டும் 28 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். மீனவர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்னமும் எஜமானின் தலைமாட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.

7

அவர்கள் ஹிஜ்ரி 978 ஜ்மாத்துல் ஆஹிர் பிறை 10ல் அதிகாலை 4:20 மணிக்கு வஃபாத்தானார்கள்.

ஆசரஹான் என்ற இடத்தில் எஜமானின் உடலை வைத்து மழை நீரில் தான் கழுவினார்கள்.அந்த தண்ணீர் சேர்ந்த இடம் தான் தர்கா குளம்.

பீர் மண்டபம் என்ற இடத்தில் வைத்து தான் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது. பின்னாளில் போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் தான் பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் போது முஸ்லிம்களுக்கு சொல்லொணா துன்பமிழைத்தார்கள், அந்த அட்டூழியங்களை எதிர்த்து போராட குஞ்சாலி மரைக்காயரை தயார் செய்து போருக்கு அனுப்பியவர்கள் எஜமான் அவர்கள். அத்தகையவர்களே எஜமானை புரிந்து கொண்டு பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள்.

8

எஜமான் அவர்கள் வஃபாத்திற்கு பிறகு அவர்களின் சீடர்கள் 404 பேரும் பான்வா, மலங்கு,மதாரி, ஜலாலி என்றும் பல குழுக்களாக பல ஊர்களுக்கு அடுத்த ஆண்டு வஃபாத்தான நாளில் சந்திப்பது என்ற நிய்யத்தோடு பிரிந்து சென்றனர்.

அடுத்த வருடம் அவர்களின் வருகையை எண்ணி சின்ன எஜமான் அவர்கள் அரிசி, பருப்பு, கறி, நெய், விறகு, எண்ணெய், காய்கறிகள், பாய்கள், தென்னங்கீற்றுகள் இன்னும் வேண்டியவை அனைத்தையும் தயார் செய்து வைத்து காத்திருந்தார்கள்.

சொன்னது போலவே கூட்டம் கூட்டமாக மக்கள் அதே நாளில் வந்தார்கள்.

எல்லோரும் ஃபக்கீர்மார்கள். ஏழைகள். வந்து தொழுதார்கள், ஓதினார்கள்,

ரிலாயத் எனும் எஜமான் கற்றுக் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டார்கள்.

இன்னமும் அந்த நான்கு பிரிவினரும் வருகிறார்கள், அவர்கள் திரும்பி செல்லும் போது மேற்சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தான் கந்தூரி.

9

நீங்கள் எங்கிருந்தாலும் அந்த ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் 4 மணி முதல் 4:40 வரை எஜமானுடைய தரீக்காவில் உள்ளதை நல்ல ஆலிமுடன் கன்சல்ட் பண்ணி உட்கார்ந்து ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எங்கள் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்க்ள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி ஓதும் போது எஜமானின் மக்பரா ஷரீஃபை மனக்கண் முன் நிறுத்த வேண்டும் என்பதும் உத்திரவு.

10

சின்ன எஜமான் அவர்களுக்கு கவிதை எழுதும் வழக்கம் இருந்தது. அவர்க்ளின் கவிதையில் எஜமானை பற்றி அவர்களின் உணவு பழக்கம், படுக்கும் முறையை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கவிதையில் பாடி பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் நடைமுறை யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

11

நாகூர் தர்ஹாவின் நாலாபுறமும் பள்ளிவாசல். நவாப் பள்ளி, சின்ன ஹொத்துவா பள்ளி, பானா சாபு பள்ளி மற்றும் திவான்ஷா பள்ளி.

12


Sunday, June 10, 2018

மௌலானா ரூமி (றஹ்)

சத்தியத்தை தேடாதவரா
எங்களிடம் வாருங்கள்
நீங்கள் தேடுபவராவீர்கள்

இசைகலைஞனாக இல்லாதிருந்தவரா
எங்களிடம் வாருங்கள்
உங்களின் குரலை கேட்பீர்கள்

செல்வங்களின் அதிபதியானவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் பிச்சைக்காரனாவீர்கள்

அரசனாக உணர்பவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் அடிமையாவீர்கள்

சுயத்தை மறந்தவரா
எங்களிடம் வாருங்கள்
பட்டாடையை அவிழ்த்து விடுங்கள்
கரடுமுரடான ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையிடம் திரும்ப உங்களை சேர்ப்பித்து விடுகிறோம்.

Sunday, November 19, 2017

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏ 

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

யா அய்யுஹல்லதீன - ஓ! (அழைப்பது)
ஆமனு - ஈமான் கொண்டவர்களே!
லா - தகூலு - அழைக்காதீர்கள்
ராயினா - இரண்டு அர்த்தங்கள் உள்ளது, ஒன்று - ”மீண்டும் சொல்லுங்கள்” என்பது, இன்னொன்று - ”செம்மறி ஆட்டுக்காரர்” என்பது.
வ - கூலு - ஆனால், சொல்லுங்கள்!
உன்ளுர்னா - தயைகூர்ந்து, எங்களை அன்புடன் நோக்குவீர்களாக! 
வ-ஸ்மஉ - அத்தோடு, கவனியுங்கள்!
வலில் - காஃபிரீன - (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தையை மரியாதை இல்லாமல் பேசும் மறுப்பாளர்களுக்கு) 
அதாபுல் அலீமுன் - வலிகள் தரக்கூடிய வேதனை உண்டு!


விளக்கம்:
குரான் ஷரீஃபில் 89 முறை ”யா அய்யுஹல்லதீன ஆமனு” என்ற வார்த்தை வருகிறது. அதில் இந்த ஆயத்து தான் முதல் முறை. இதே சூரத்துல் பகறாவில் இதற்கு முன்னர் “யா அய்யுஹன்னாஸ் (2:21)” என்று ஒரு முறை வருகிறது, அதாவாது ஒட்டு மொத்த மனித இனத்தையே விளிக்கும் சொல் அது, அடுத்து இன்னொரு முறை, “யா பனீ இஸ்ராயீல் (2:40)” என்றும் அதாவது ”இஸ்ராயீலின் சந்ததிகளே!” என்றும் வருகிறது.

ஆனால் முதல் முறையாக “ஈமான் கொண்டவர்களே!” என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை யுடையவர்களை நோக்கி அழைத்து இறைவன் சொல்லும் முதல் கட்டளை இது தான்.

அப்படி என்ன கட்டளை?

லா தகூலு “ராயினா”

- இது தான் அந்த கட்டளை, அதாவது “ராயினா’ என்று சொல்லாதீர்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யூதர்களில் சிலர் “ராயினா” என்று சொல்வார்கள். “சரியா கேட்கலை, மறுபடி சொல்லுங்க..” என்று ஒரு சாதாரண மனிதரிடம் இயல்பாக பேசுவதை போன்ற தொனியை யுடைய வார்த்தை இது.

இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்து அவர்கள் சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, “செம்மறி ஆட்டை உடையவரே!” அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தானே, நம்மை போன்ற ஒரு மனிதர் தானே எனும் தொனி இருந்தது.

இதை பார்த்து விட்டு ஈமான் கொண்டவர்களில் சிலரும் அவ்வாறே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு யூதர்களுக்கு இருந்தது போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை மதிக்காத மரியாதை கொடுக்காத எண்ணம் இல்லை என்றாலும் அவர்கள் அவ்வாறே அழைத்தார்கள்.

ஆனால், தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அவ்வாறு அழைப்பதை இறைவன் விரும்பவில்லை.

அவ்வாறு “ராயினா” என்று சொல்லாதீர்கள் என்று கட்டளையிடுகிறான்.

வேறு எப்படி சொல்வது?

வ - கூலு ”உன்ளுர்னா”

- அதாவது, “உன்ளுர்னா” என்று அழையுங்கள்.

கிட்டதட்ட “ராயினா”விற்கும் “உன்ளுர்னா”விற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் “உன்ளுர்னா” எனும் வார்த்தையில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது. “எங்களை அன்புடன் பாருங்கள், தயவுசெய்து..” என்று கெஞ்சி கேட்பது போல் உள்ளது.

இத்தகைய வார்த்தையை தான் தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அழைக்க வேண்டும் என்று சொல்கிறான்.

வஸ்மஉ

- கவனமாக கேளுங்கள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால் கவனமாக கேளுங்கள், இதனால் நீங்கள் திரும்பி சொல்லுங்கள் என்று கேட்க வேண்டிய தேவையே இருக்காது. 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் கவனமாக கேட்பது, மிக மரியாதையான வார்த்தைகளைக் கொண்டு பேசுவது இவைகளே ஈமான் கொண்டவர்களுக்கு குரான் ஷரீஃபில் இறைவன் இட்ட முதல் கட்டளையாகும்.

வலில் காஃபிரீன அதாபுல் அலீமுன் 

- மேலும் அந்த காஃபிர்களுக்கு வலிகள் தரும் வேதனை உண்டு

பொதுவாக இறைவன் குரான் ஷரீஃபில் யூதர்களை அழைக்கும் போது “அஹ்லில் கிதாபு” என்று அழைப்பது உண்டு. ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காதவர்களை சொல்லும் போது இறைவன் “மறுப்பாளர்கள்” என்று தான் அழைக்கிறான். 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காத அந்த காபிர்களுக்கு வலிகள் தரும் துன்பம் நிறைந்த வேதனை உண்டு.

இத்தகைய காபிர்களை போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களாக அல்லாமல் அவர்களை போற்றும் புகழும் சுன்னத் வல் ஜமா அத்தில் இணையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி இறைவன் அருள் புரிவானாகவும்! ஆமீன்.

மீலாதுந் நபி முபாரக்!