Monday, February 15, 2021

அஜ்மீர் ஹாஜா நாயகம்

 1.

கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளர்) என்று இன்றளவும் ஏழை மக்களால் வழங்கப்படுகின்ற ஹஜ்ரத் முயினுதீன் அஜ்மீர் ஹாஜா நாயகம் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்று குறிப்பிலிருந்து:
பிறப்பு:

கி.பி. 1142-ல் ஹிஜ்ரி 530 ரஜப் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சஞ்சர் என்ற கிராமத்தில் பிறந்தார்கள். பிறந்த நிலையிலும் சுஜுதில் தான் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
பெற்றோர்கள்:
தாயார்: பீபி உம்முல் வரஃ மற்றும் தந்தை: ஸையத் கியாஸுத்தீன் அவர்கள்.தந்தை வழியில் செய்யதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் தாயார் வழியில் செய்யதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவார்கள்.
இறைநேசச் செல்வர்களுக்கெல்லாம் அரசர் கொதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் தாய் மாமனார் ஆவார்கள் என்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. இருவரும் வாழ்நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து குத்பு நாயகம் அவர்களின் துவாவை அஜ்மீர் ஹாஜா நாயகம் பெற்றிருக்கிறார்கள்.
சிறு பிராயம்:
ஐந்து வயதிலேயே ஐவேளையை தொழுகையை தந்தையோடு சென்று பள்ளியில் நிறைவேற்றுவார்கள். ஒன்பது வயதிலேயே குரான் ஷரீஃப் முழுவதையுமே மனப்பாடம் செய்து விட்டார்கள்.பாரசீக மொழியிலேயே குரான் ஷரீஃ தப்ஸீர், ஹதீது, ஃபிக்ஹ் போன்ற மார்க்க நூல்களை கற்றார்கள். அவர்களுக்கு தஸவ்வுஃப் என்று இஸ்லாமிய மெய்ஞ்ஞான கலையின் மீது ஆர்வம் அதிகரிக்கவே அதனையும் கற்றார்கள்.
14 வயதில் தந்தையை இழந்தார்கள். இழந்த சிறு மாதங்களில் 15 வயதை அடைந்த போது தாயாரையும் இழந்தார்கள். தந்தை வழி வந்த பழத்தோட்டத்திலிருந்து கிடைத்த வருவாயில் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.
தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் போது கூட சதா இறைவனையே திக்ரு செய்த வண்னம் இருப்பார்கள்.
உஸ்தாத்மார்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி அவர்கள் - முதியவரான இவர்களை தனது தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் தோட்டத்தில் ஓரிடத்தில் அமர்ந்து திக்ரு செய்த வண்ணம் இருப்பதை ஹாஜா நாயகம் காண்கிறார்க்ள். உடனே சில திராட்சைகளை பறித்துக் கொண்டு போய் வைத்தார்கள். அந்த முதியவர் கண் விழித்தார்கள். ஹாஜா நாயகமவர்களை முன்னால் வைத்து விட்டு அமர சொன்னார்கள். அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். திராட்சை பழத்தில் ஒன்றை எடுத்து ஹாஜா நாயகமவர்கள் வாயில் ஊட்டினார்கள். கண்களை மூடி திராட்சையை கவனமாக உணர்ந்து சாப்பிட்டு விட்டு கண் விழித்திருக்கிறார்கள். எதிரே அமர்ந்திருந்த அந்த முதியவர் மறைந்திருந்தார்கள். ஆனால் ஹாஜா நாயகத்தின் உள்ளே முதல் ஞான வெளிச்சம் ஒளியூட்டியிருந்தது.
ஹாரூன் நகரத்தில் வசித்து வந்த ஹாஜா உதுமான் ஹாரூனி என்பவர்கள் பகலில் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்கள் மறுமுறை இரவிலும் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்களாம். இரவில் சிறிது நேரமே தூங்குவார்களாம். இவர்கள் எதை சொன்னாலும் அது பலிக்கும், இவர்களின் இறைஞ்சுதல் இறைவனால் உடனே கபூல் செய்யப்பட்டு விடுமாம். இப்படிப்பட்ட சிறப்புடையவர்களை பற்றி கேள்விப்பட்டு அவர்களை சந்திக்க காடு மலைகளை கடந்து காண சென்றார்கள். உதுமான் ஹாரூனி அவர்களின் தரீக்கா ஷிஸ்தியா தரீக்காவாகும். இவர்களை நேரில் சந்திக்கிறார்கள். தேடலின் சந்திப்பில் ஹாரூனி அவர்களின் முகத்தை பார்த்தவுடனேயே தம் மனதிற்கு இறைவனிடத்தில் இறைஞ்சுகிறார்கள், “யா அல்லாஹ்! இவர்களே ஆன்மீக குருவாக அமைய நீ அருள வேண்டும்..” - தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது தாகம் கொண்டவர்களை என்ற மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் கூற்றுக்கு ஏற்ப தண்ணீரான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களும் தாகம் கொண்ட ஹாஜா நாயகத்தை தம் சீடராக ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களோடு தான் இருபது ஆண்டு காலம் உண்டு, உறங்கி, திக்ரு செய்து, பல ரிலாயத் எனும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த கட்டத்தில் தமது தாய் மாமாவான கௌதுல் அஃலத்தை சந்தித்து அவர்களின் துவா பரக்கதையும் பெறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஷாம் நகரில் ஒரு குகையின் வாசலில் இரண்டு சிங்கங்கள் காவல் காப்பதை காண்கிறார்கள். அப்போது குகைக்குள் இருந்து ஒரு முதியவர் இவர்களை அழைத்து (இவர்கள் யாரென்று நான் படித்த எந்த புத்தகத்திலும் பதிவாகவில்லை) எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள், “இந்தியா செல்கிறேன்” என்று இவர்கள் பதிலளித்ததும், அந்த முதியவர், “..அல்லாஹ்வைத் தவிர.. எல்லாக் காரியங்களும், ஏழைகளுக்கும், வறுமைபட்டோருக்கும் (தர்வேஷ்கள்) நன்மை அளிப்பதாக அமையட்டும்..” என்று துவா செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
ஷாம் நகர் வழியாக பகுதாதில் வந்தடைந்து தம் உஸ்தாதான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து மதினா பயணத்தின் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி இந்தியா பயணம் சென்று தீன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக தாம் உணர்ந்ததாக தமக்கு நேர்ந்த அந்த அனுபவத்தை எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள் உளமகிழ்ந்து ஒரு ஆசா கோலும், முஸல்லாவும், கபன் துணி போன்ற ஹிர்கா எனும் உடையையும் கொடுத்து துவா செய்து வழியனுப்பினார்கள்.
மேற்கொண்ட பயணங்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி ஏற்றி வைத்த விளக்கின் ஒளியால் ஏற்பட்ட வெளிச்சத்தில் தனது தோட்டத்தை விற்று வந்த காசை ஏழைகளுக்கு வழங்கி விட்டு (ஏழைகளின் பங்காளராயிற்றே) பயணமானார்கள்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகரம் சென்றார்கள். பின்னர் சமர்கந்த் சென்றார்கள். அந்நாளில் சமர்கந்தும் புகாராவும் அறிவின் இரு கண்கள் என்று வருணிக்கப்பட்டதாம். பின்னர் ஹாரூன் நகரத்தை நோக்கி ப்யணமானார்கள். இங்கு தான் இவர்களின் ஆன்மிக குருவான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து தஸவ்வுஃப் பாடம் பயின்றார்கள். இருவரும் சேர்ந்து மக்கமா நகரம் பயணமானார்கள்.
பின்பு பகுதாத் பயணத்தில் கௌதுல் அஃலம் அவர்களுடைய சந்திப்பு. 53ம் வயதில் ஹிஜ்ரி 583ம் ஆண்டு மக்கா நக்ர் ஹஜ் பயணம். பின்பு எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் புவியின் பூஞ்சோலை மதீனா பயணம்.
இங்கே தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “நீங்கள் இந்தியாவுக்கு சென்று தீன் பணியாற்றுங்கள்” என்று தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக உணர்கிறார்கள்.
பின்பு ஷாம் நகர் வழியாக பகுதாது மீண்டும் பயணமானார்கள். ஹிஜ்ரி 586ல் அப்போது இந்தியாவில் உள்ள லாஹூர் வந்தடைகிறார்கள். அங்கே புகழ்பெற்ற ஹுஜ்விரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்தில் நாற்பது நாட்கள் தனித்திருந்து இறை தியானத்தில் “சில்லா” இருந்தார்கள். லாஹூரில் ஐந்து ஆண்டுகள் தங்கி இஸ்லாமிய பணி செய்தார்கள். இவர்களுக்கு இந்தியே தெரியாது ஆனாலும் ஏராளமானோர் மககள் வெள்ளம் போல் திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
அதன் பின்பு டெல்லிக்கு வருகை தருகிரார்கள். அங்கிருந்து 40 சீடர்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த அஜ்மீர் எனும் நகரை தேர்ந்தெடுத்து வந்தடைந்தார்க்ள். அங்கு தான் தம் வாழ்வின் இறுதி வரை வசித்தார்கள்.

திருமணம்:
இந்தியாவில் அஜ்மீர் ஹாஜா நாயகம் வந்த காலங்களில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.
ஒரு முறை ஹாஜா நாயகம் அவர்கள் சம்பல் நதிக்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது.
(சற்று முன் என்ன நடந்தது என்றால்:)
ராஜ குல புத்திரர்களில் ஒருவனான இளவரசன் ஒருவனுக்கு குஜராத்தை சேர்ந்த அரச குல பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. பெண்ணையும் குஜராத்திலிருந்து ராஜஸ்தான் பகுதிக்கு அழைத்து வந்தாயிற்று. ஆனால் திடீரென இளவரசன் இறந்து விட்டான். இவர்களது குல வழக்கப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டாலே கணவன் மனைவியாகத் தான் கருதப்படுவார்கள். ஆகையினால் கணவனான இளவரசன் இறந்து போய்விட்டான் என்றும் அந்த பெண்ணை கையை காலை கட்டி இளவரசன் உடல் எரியும் சிதையில் தள்ளி விடும் காட்டுமிராண்டித் தன சூழலிலிருந்து தப்பித்து ஓடி வருகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு பிற ராஜ புத்திரர்களும் மூச்சிறைக்க தீப்பந்தங்களுடன் ஓடி வருகிறார்கள். அந்த பெண் தூரத்தில் ஒருவர் வந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு அவர்களிடம் போய் அடைக்கலம் தேடுகிறார்கள்.
“என்னைக் காப்பாற்றுங்கள். எனக்கு உயிர் பிச்சைக் கொடுங்கள். நான் உங்கள் அடிமை” என்றாள்.
யாரிடம் வந்து அடைக்கலம் கேட்டிருக்கிறார்கள் என்று சொல்ல தேவையில்லை.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்கள், “பெண்ணே! யாரும் யாருக்கும் அடிமையில்லை.. நாம் எல்லோருமே அல்லாஹ்வுக்கு தான் அடிமைகள்..” என்று விசாரிக்கிறார்கள்.
பின்னாடியே துரத்திக் கொண்டு வந்தவர்கள், “பெரியவரே..” என்று அஜ்மீர் ஹாஜா நாயகத்தை அழைத்து “அந்த பெண்ணை தம்முடன் அனுப்பி வைக்குமாறு” கேட்டுக் கொள்கிறார்கள்.
ஹாஜா நாயகம் அவர்கள் மறுத்து அவர்களுடன் கராமத்து மூலமாக சண்டையிட்டு திருப்பி அனுப்புகிறார்கள்.
அந்த பெண் தான் பின்னாளில் இஸ்லாத்தில் இணைந்து பீபி அமதுல்லாஹ் ஆகிறார்கள், இவர்களையே அஜ்மீர் ஹாஜா நாயகம் நிகாஹ் செய்கிறார்கள்.
ஹாஜா நாயகமவர்களுக்கு இன்னொரு மனைவியும் உண்டு. அவர்கள் அஜ்மீரில் வாழ்ந்த காஜா வஹ்ஹுத்தீன் மஷ்ஹதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகளார் பீபி இஸ்மத்துல்லாஹ் அவர்களையும் நிகாஹ் செய்து கொண்டார்கள்.
பிள்ளைகள்:
மூன்று ஆண் பிள்ளைகள்:
1. ஹஜ்ரத் காஜா பஹ்ருத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
2. ஹஜ்ரத் காஜா ஜியாவுத்தீன் அபுசாது ரஹ்மத்துல்லாஹி அலைஹி
3. ஹஜ்ரத் காஜா ஹிஷா முத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஒரு மகள்:
பீபி ஹாஜா ஜமால் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3

அஜ்மீரில் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏழை எளியோரெல்லாம் இவர்களின் கராமத்து மூலம் சுகம அடைந்து கொண்டிருந்தார்கள். ஆயிரமாயிரம் மக்கள் தூய இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.
இந்த கால கட்டத்தில் தான் அஜ்மீரை பிருதிவிராஜன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு உயர்வதை இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தம் படையை அனுப்பி இவர்களை இந்த நாட்டை விட்டு சென்று விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.
ஆனால் "அதெல்லாம் முடியாது" என்று அஜ்மீர் ஹாஜா நாயகம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
இதனால் சினம் கொண்ட பிருதிவிராஜன் இவர்களை அழித்து ஒழித்து விட முடிவு செய்தான்.
இந்த காலகட்டத்தில் கடும் புயலும் மழையும் வெள்ளமும் சேர்ந்து அஜ்மீர் நகரம் சீரழிந்திருந்தது. ஏராளமான பொருள் சேசமும் உயிர் சேதமும் ஏற்பட்டிருந்தன. பிருதிவிராஜனின் அன்னையர் வாசவத்தா என்பவர் இந்த சேதங்களுக்கு எல்லாம் காரணம் தன் மகன் ஆளும் அரசு முஸ்லிம் பெரியவரை பகைத்துக் கொண்டது தான் காரணம் என்று நம்பினார். பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முறையிட்டார். ஆனால் பிருதிவிராஜனோ, “உங்களுக்கு தெரியாது அம்மா!. ஒரு சாதாரண பக்கீர் இந்த சம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை அழித்துவிட முடியுமா? என் வாளும், தோளும் அப்படியா வலிமை இழந்து போயின்! வயதானதால் நீங்கள் நம்பிக்கைத் தளர்ந்து போனீர்கள். நான் வெல்வது உறுதி!” என்று திமிராக கூறினான்.
அன்றிரவே தன் ராஜகுருவும் தளபதியுமான ஜெயபாலரை அழைத்து இதற்கொரு முடிவு கட்ட முடிவெடுத்தான்.
ஜெயபாலர் பெரும் படைகளுடன் ஒரு ஏழை பக்கீரை எதிர்க்க போரிடுவது போல் சென்றார். அங்கே அந்த ஏழை பக்கீரின் கராமத்தினால் கண்கள் ஒளியிழந்து திரும்பினார்.
அப்போது காளி கோயிலின் முன்னே அவர் வேண்டிக் கொண்டார், “காளியே! நான் என் குழந்தையை உயிர்பலி தருகிறேன்.. எனக்கு இந்த முஸ்லிம் பக்கீரை வெல்லும் சக்தியை கொடு!” என்று வேண்டிக் கொண்டு சொன்னது போலவே தன் ஐந்து வயது மகனை பலி பீடத்தில் கிடத்தில் அந்த பாலகனோடு சேர்ந்து கோயிலே அலறுவதை பொருட்படுத்தாது பலியும் கொடுத்து விட்டான்.
பின்னர் எதுவும் நடக்காமல் போகவே நட்ட நடு நிசி நேரம் காளி கோயிலில் நின்று கொண்டு கத்தினான், “என் நரபலியை ஏற்றுக் கொள்ள மாட்டாயா! நான் மன்னருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதா!! ஐயகோ!!! நான் என் செய்வேன்!!!!” என்று அழுது புலம்பினான். சிறிது நேரத்தில் அவன் தோள்களில் ஒரு பூவின் ஸ்பரிசம் பட்டது. திரும்பி பார்க்கிறான். அஜ்மீர் ஹாஜா நாயகம் நின்று கொண்டிருந்தார்கள்.
அவனிடத்திலே அன்போடு நடந்து கொள்கிறார்கள். போதனை செய்கிறார்கள். இறந்த குழந்தையையும் உயிரோடு கொண்டு வருகிறார்கள். அடுத்த கனமே அவன் அவர்களாகி ஜெயபாலர் அப்துல்லாஹ்வாகி இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு நாம் ஜியாரத்திற்கு செல்லும் அஜ்மீர் தர்கா ரௌலா ஷரீஃப் என்பது இந்த ஜெயபாலராக இருந்து அப்துல்லாஹ்வாக மாறிய இவர்களின் இல்லம் தான் என்றும் அறியப்படுகிறது.
இதற்கிடையில் மாமன்னர் ஷிகாபுத்தீன் கோரி கஜ்னவி ஒரு கனவு காண்கிறார்கள். கனவிலே ஒரு பக்கீர் அவர்கள் “படைகளோடு போரிட்டு பிருதிவி ராஜனை கைது செய்! வெற்றி உனக்கு தான்!!” என்று காண்கிறார்கள். பின்னாளில் தாம் கனவில் கண்டது அஜ்மீர் ஹாஜா நாயகம் என்பதை அறிந்து கொள்கிறார்கள். உடனே பெரும் படையை திரட்டி பிருதிவி ராஜனை எதிர்த்து போரிட தயாரானார்.
பிருதிவிராஜனும் போருக்கு ஆயத்தமாகி யானை மீதேறி டில்லி நோக்கி புறப்பட்டான். அப்போது ஹாஜா நாயகம் இருக்கும் இடத்தை கடக்க நேர்ந்தது, அப்போது அவன் உறுமினான், “போரில் வெற்றி பெற்று வரும் போது இந்த தவச்சாலையை அழிப்பேன். இங்கு உள்ளவர்களைக் கொன்று அவர்களது ரத்தத்தை உடம்பில் பூசிக் கொண்டு தான் ஊருக்கு திரும்புவேன்” என்று புறப்பட்டான்.
டில்லியில் நடந்த கடும் போரில் பிருதிவிராஜன் தோற்று போய் கைது செய்யப்படுகிறான். மாமன்னர் ஷிகாபுதீன் தமது வெற்றியை அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார்.
அத்தோடு நிற்காமல் படையோடு புறப்பட்டு அஜ்மீருக்கு வந்து அவர்களின் துவாவை பெற்றார். டில்லி பாதுஷாவாக ஆனார். அவர் மட்டுமல்ல அவ்ரை தொடர்ந்து டில்லியை ஆட்சி செய்த குத்புதீன் ஐபெக், இல்துத் மிஷூம், ஆகியோர்களும் பெரிதும் மரியாதை செலுத்தினார்கள்.

4
மறைவு:
ஹிஜ்ரி 633 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 6-ஆம் நாள் (கி.பி. 1236ம் ஆண்டு) தம்முடைய 97வது வயதில் இறைவனின் நாட்டப்படி கொடுக்கப்பட்ட மிஸ்ஸனை சிறப்பாக நிறைவேற்றி விட்டு இறைவனிடம் திரும்பினார்கள்.
இவர்களின் மூத்த மகனார் ஹாஜா பஹ்ருத்தீன் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அவர்களுக்கு எந்த இடத்தில் கஃபனிடப்பட்டதோ அந்த இடத்தில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்கள் மக்கமா நகரில் கஃபாவின் முன்னிலையில் இறைவனிடம் கையேந்தினார்கள், “யா அல்லாஹ்! யார் என்னுடைய வம்சா வழியில் மூரிதாகி உன்னை (அல்லாஹ்வை) வழிபடுகிறார்களோ அவர்களை நீ மன்னிப்பாயாக! என்று.
அந்த துவா இன்றளவும் கபூலாக்கப்படுகிறது என்பது கண்கூடு.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Sunday, November 1, 2020

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்.. (Thanks to Abedeen Nana and Hameed Jaafar Nana)

கீழே வரும் லிங்கை கிளிக் செய்யவும்:

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்..

நன்றிகள்: 

  • ஆபிதீன் நானா
  • ஹமீது ஜாஃபர் நானா

Sunday, August 4, 2019

மூஸா நபி அலைஹிஸ்ஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஹஜ்ஜுடைய காலம்

28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்) - ஆயத் 22லிருந்து 27வரை (நேரடி மொழி பெயர்ப்பு அல்ல)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து மத்யன் எனும் நகருக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்கள் பலர் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி தண்ணீரை கிணற்றுக்குள் இருந்து இறைத்து கொண்டிருக்கிறார்கள். சற்று தள்ளி, இரு பெண்கள் தமது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட வேண்டி ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த இரண்டு பெண்களிடம் விபரம் கேக்க அவர்களோ, தாங்கள் அந்த ஆடு மேய்ப்பவர்களான ஆண்கள் அவர்களது ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டி முடியும் வரை தாங்கள் எடுக்க முடியாது என்றும் அவர்களது தந்தை வயோதிகர் என்றும் கூறுகின்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டுகிறார்கள்.

உதவியவுடன் நிழலில் ஒதுங்கி,”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் ஒரு ஃபகீராக இருக்கின்றேன்” என்று துவா செய்கிறார்கள்.

பிறகு அந்த இரு பெண்களும் தமது வயோதிகமடைந்த தந்தையிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி கூறுகிறார்கள். அந்த தந்தையோ தமது இரு மகளில் ஒரு மகளை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வருமாறு கோருகிறார்கள்.

அந்த பெண் நாணத்துடன் மூஸா நபியவர்களிடம் வந்து, “எங்களுக்காக நீங்கள் தன்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மூஸா நபி அவர்களுடன் அவர்களுடைய இல்லம் வந்தடைந்து அவர்களின் தந்தையிடம் தாம் எகிப்திலிருந்து மத்யன் வந்ததற்கான காரணத்தை ஒன்று விடாமல் தாம் எகிப்தி ஒருவரை எவ்வித நோக்கமும் இல்லாமல் கொலை செய்தது உள்பட எல்லாவற்றையும் சொல்கிறார்கள்.

அதற்கு அந்த இரு பெண்களின் தந்தை, ”பயப்படாதீங்க! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று பதில் கூறினார்கள்.

அப்போது அவர்களின் இரு மகள்களில் ஒருவர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விருப்பமுள்ளவர்களாக, தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் வேலைக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” என்று கூறுகிறார்கள்.

தந்தை மகளின் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதான விருப்பத்தை உணர்ந்தவர்களாக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “நீங்கள் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உங்களது விருப்பம், நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்கள்’ என்று கூறுகிறார்கள்.

28. ஸூரத்துல் கஸலில் வரும் 27 வது ஆயத்

قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏

மேலே  உள்ள ஆயத்தில் 8 ஆண்டுகளை பற்று குறிப்பிடும் போது “ஆண்டு” எனும் பதத்திற்கு  ”ஸனதுன்” அல்லது ”ஆமுன்” அல்லது “ஹவ்லுன்” என்ற பிற வார்த்தைகளை பயன்படுத்தாமல்  “ஹிஜஜின்” என்ற வார்த்தையை அந்த தந்தை பயன்படுத்தியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இந்த வார்த்தை ”ஹஜ்ஜுன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அதாவது இது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஹஜ்ஜு யாத்திரையை குறிக்கும். அதாவது எட்டு ஹஜ் சீஸனுக்கு நீங்கள் எனக்காக வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதாவது கஃபாவை பற்றியும் ஹஜ் யாத்திரையை பற்றியும் அந்த தந்தைக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்பலாம். இதிலிருந்து யஹீதிகளுக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்ப முடிகிறது.

ஆகையினால் தான் இறைவன் தமது திருமறையில் 2. ஸுரத்துல் பகரா 146வது வாக்கியத்தில் எவர்களுக்கு நாம் வேதங்களை கொடுத்தோமே அவர்கள் (யஹீதிகள்) தமது சொந்த மக்களை அறிவதைப் போல் (குரான் ஷரீஃபை - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) அறிவார்கள் என்று குறிப்பிடுகிறான்.

Monday, May 6, 2019

மில்குல் யமீன் (மலகத் அய்மானுஹும் எனும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்)

குரான் ஷரீஃப் 23வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமுனூன் (விசுவாசிகள்): 6 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குரான் ஷரீஃப் 70வது அத்தியாயம் ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்): 30 வது வாக்கியம்

 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

இது தவிர கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களிலும் ”மலகத் அய்மானுஹும்” பற்றி வருகிறது

குரான் ஷரீஃப் 4வது அத்தியாயம் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) :24வது வாக்கியம் +  குரான் ஷரீஃப் 33வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்) :52வது வாக்கியம்

படித்தவுடன் என்னால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்றால் வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடம் உறவு கொள்ளலாம் என்பது தான் அது.

அப்படி என்றால் இதையொட்டி கீழே வரும் கேள்விகள் எனக்கு தோன்றுகிறது என்றால்..

1. மலகத் அய்மானுஹும் என்றால் யார்?
2. மலகத் அய்மானுஹும் என்பவர்களை நிகாஹ் செய்யாமலே உடல் உறவு கொள்ளலாமா?

இதற்கு பதில் தெரிவதற்கு முன்னர் அரபு நாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே இருந்த “அடிமைகள்” இனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

----------------------

இஸ்லாம் ஒருவரை இரண்டு வழிகளில் மட்டுமே அடிமைகளாக ஆக்கி கொள்வதை அனுமதி தந்தது.

1. போரில் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள்
2. ஏற்கனவே அடிமைகளாக இருப்பவர்களை அவர்களின் முதலாளியிடமிருந்து விலை கொடுத்து வாங்குதல்.

முக்கியமாக ஏதாவது ஒரு காலனைஸ்டாக இருக்கும் நாட்டிற்கு சென்று அடிமைகளை கடத்தி வந்து விற்பது அல்லது அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து வாங்குவது விற்பது  போன்றவைகள் தடை செய்யப்பட்டன ஹராம் ஆக்கப்பட்டன. அதாவது ஸ்மக்லிங் ஆஃப் ஸ்லேவ்ஸ் தடை செய்யப்பட்டது.

இஸ்லாம் அடிமைகளை சமூகத்தில் இருந்தே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்கு முன்பே சமூக அமைப்பில் வேலை செய்யும் சமூகமாக அடிமைகளாக இருந்த அவர்களை (வேலை செய்யும் சமூகத்தில் இத்தகைய அடிமைகள் தான் பெரும்பான்மையாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம் மட்டுமே) உடனடியாக தடை செய்து அன்றாட வேலையில் தேக்கத்தையோ நிறுத்தத்தையோ ஏற்படுத்தவும் இல்லை.

உதாரணமாக, ஒரு நாட்டில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பான்மையாக வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை வைத்து அவர்களை திடீரென்று தடை செய்து விட முடியாது அனைத்து வேலைகளும் அல்லது பெரும்பாலான வேலைகளும் செயலற்று போய்விடும். மாறாக அவர்களுக்கான நியாயமான வேலை சூழல்களை உருவாக்கி தர முயற்சிக்கலாம். அதை தான் இஸ்லாம் செய்தது. அடிமைகளாக இருந்த அவர்களுக்கான நீதியை பற்றித் தான் இஸ்லாம் முதலில் பேசியது.

(அரபு நாட்டில் அன்று சமூக வேறுபாடுகள் அடுக்குகளாக இருந்தன, மத குருக்கள் முதல் தட்டிலும், பெருவியாபாரிகள் இரண்டாவது தட்டிலும், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூன்றாவது தட்டிலும் அடிமைகள் நான்காவது தட்டிலும் இருந்தார்கள்.
இஸ்லாம் மத குருக்களை முற்றிலுமாக மாற்றி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வசம் தந்தது.(இது தவிர்த்து, புது குழுவான முஜாஹிதீன் எனும் போராளிகளை உருவாக்கியது.)

ஆக, புதிதாக போர்க் கைதிகளை அல்லாமல் அடிமைகள் சமூகத்தில் வர முடியாத நிலையைக் இஸ்லாம் தான் கொண்டு வந்தது.

அத்தோடு விட்டுவிடவில்லை, இருக்கும் அடிமை முறைகளை சரி செய்ய ஒரு சட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. அதன் படி, அடிமைகளுக்கு அது ஒரு உரிமையை வழங்கியது.

அது என்ன உரிமை என்றால், ஒரு அடிமையானவர் தனது எஜமானிடத்தில் போய் “எனக்கு விடுதலை வேண்டும், அதற்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டும்?” என்று கேட்டால் அவரது எஜமானர் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இப்போது அந்த எஜமானருக்கு உள்ள ஒரே வழி அவர் அந்த அடிமையை விடுதலை செய்வதற்கான விலையை குறிப்பிட்டே ஆக வேண்டும். இதை அந்த எஜமானருக்கு வாஜிபாக்கியது அதாவது கடமையாக்கியது.

அந்த விலையையும் அந்த அடிமையால் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்கக் கூடாது என்று கைட்லைன்ஸ் வழங்கியது. அப்படி நிறைவேற்ற முடியாத விலையை சொன்னால் அந்த அடிமை தனது எஜமானரை ஷரியா கோர்ட்டில் நிறுத்த முடியும். அதன் பிறகு அந்த வழக்கை ஷரியா கோர்ட் கவனித்துக் கொள்ளும்.

ஆகவே, அவர் விடுதலை பெறுவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை கணக்கிட்டு அந்த கால அவகாசம் வரை அந்த அடிமை அவருடைய அந்த எஜமானரிடத்தில் வேலை பார்த்து விட்டால் அவர் விடுதலை பெற்றவராகி விடுவார். அதன் பிறகு அவர் அடிமை இல்லை. அவர் சமூகத்தில் ஒருவராக வலம் வரலாம்.

இப்படி தான் பிற்காலத்தில் மிகச்சிறந்த நபித்தோழராக விளங்கிய சல்மான் பின் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏராளமான அருமை சஹாபாக்களும் விடுதலை பெற்று உற்ற நபித்தோழர்களாக பெருமை பெற்றார்கள்.

இஸ்லாம் சட்டம் இயற்றாமல் வாழ்வியல் நடைமுறை வழி அடிமைகளை ஒழிக்கவும் செய்த்து. உதாரணமாக, ஒரு முஸ்லிம் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால பகரமாக சில அனுமதிக்கப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் அதில் ஒன்று தனக்கு அடிமை இருந்தால் அந்த அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

அடிமைகளுக்கு தான் உண்ணும் உணவையே வழங்க வேண்டும், நல்ல ஆடைகள் வழங்க வேண்டும், கனிவான சொற்களை சொல்ல வேண்டும் என்று கற்றுத் தந்தது.

இப்படியாக இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்து அதே போல் வேலை சமூகம் ஒன்று இருக்குமானால் அவர்களுக்கான நீதியை வழங்கியது.

இப்போது போருக்கு வரும் பெண்களை பிடித்து கைது செய்த போர்வீரர் மூன்று வகைகளில் அந்த கைதிகளை அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம்.

1. அமா - போர்க்கைதியான பெண் அடிமை - அமா என்றால் சாதாரண வீட்டு வேலை செய்யக் கூடியவர் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களை அவரது எஜமானர் தனது இல்லத்தில் வீட்டு வேலைகள் செய்ய பணியில் அமர்த்திக் கொள்வார்.

2. மில்குல் யமீன் (பன்மையில் மலகத் அய்மானுஹும்) - வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் - மில்குல் யமீன் என்றால் மனைவியை போன்று வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அந்த அடிமை பெண்ணின் அனுமதி வேண்டும் - இந்த வகையில் அடிமையாக பிடிக்கப்பட்டவர்களுக்கு அவரது எஜமானர் தனி வீடு கொடுக்க வேண்டும். மனைவியை போன்று எல்லா உரிமையும் உண்டு ஒன்றைத்தவிர, மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்குண்டு ஆனால் மில்குல் யமீனுக்கு தனது எஜமானரிடத்திலிருந்து சொத்தில் பங்கு கிடையாது.

3. உம்முல் வலத் - குழந்தையின் தாய் - மில்குல் யமீனாக இருப்பவர்கள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து விட்டால் அல்லது எஜமானரின் பிற மனைவியின் மூலம் பிறந்த குழந்தைக்கு பால் கொடுத்தால் அவர் விடுதலை பெற்றவராகிறார், அதோடு தனது எஜமானரிடமிருந்து வரும் சொத்திலும் பங்கு கொள்வதோடு அவர் அவரது எஜமானரின் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகி விடுவார், அதாவது எஜமானர் தவறி விட்டால் அவரை அந்த குடும்பத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆக, இஸ்லாம் முதலாவதாக புதிதாக அடிமைகள் உருவாவதை தடுத்தது, இரண்டாவதாக இருக்கும் அடிமைகளை பல வழிகளில் விடுதலை பெற உதவியது. மூன்றாவதாக, அடிமைகளாக இருப்பவர்களின் உரிமைகளை பெற்று தந்தது.

Wednesday, February 6, 2019

ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்

1

இந்த மாதம் ஜமாத்துல் ஆஹிர் மாதம். இந்த மாதத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது யாரென்று சொல்லவே தேவையில்லை... நம் கண்மனி பாதுஷா நாயகம்.

 எஜமான் என்று மிகுந்த முஹப்பத்தோடு நாம் அழைக்கும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் தான்.

இவர்கள் ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் பிறந்தார்கள்.

2

இவர்களின் உஸ்தாது முஹம்மது கௌது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குவாலியர் என்ற ஊரில் வசித்தவர்கள்.

கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஏராளமானவர்கள் தஸவ்வுஃப் ஞானம் பயின்று வந்தாலும் குறிப்பாக இரண்டு பேர்கள் பிரசித்தி பெற்றவர்கள். ஒன்று நம் எஜமான் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள். மற்றொன்று அக்பர் அவையில் மாபெரும் சிறந்த இசைகலைஞராக விளங்கிய தான்சேன் என்பவர்.

அவர் வெள்ளைக்காரர் என்றும் இஸ்லாத்திற்கு வந்தவர் என்றும் நான் எனது உஸ்தாது வாய் வழி கேட்ட செய்தி உள்ளது.

3

எஜமான் என்றதும் நம் உடனே அவர்களிடம் எதையாவது கேட்டு பெறுவதிலேயே நமக்கும் எஜமானுக்குமான தொடர்பு நின்று விடுகிறது. அல்லது அப்படி கேட்பது ஷிர்க்காகி விடுமோ என்று உலக அறிஞரின் (பிஜே) கூற்றின் இன்ஃபுலியன்சில் மனதில் புகுந்த கேள்விக்கு பதில் தேடுவதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.

4

எஜமான் எப்போதும் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அப்போது செல்லும் போது வழியில் ஒரு ஏழை முஸாபிர் வாசலிலேயே உட்கார்ந்து இருப்பார்.

அவருக்கு ஒரு முறை அவர்களின் மகனார் யூசுஃப் தாதாவிடம் “நீங்கள் எடுத்து போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்கிறார்கள்.

சின்ன எஜமான் அவர்கள் “அவருக்கா..?” என்பது போல் கேட்க, வந்ததே கோபம் பெரிய எஜமானுக்கு, “ஏன் அவர்க்கு என்ன... அப்படி இருப்பது தவறில்லை.. நீங்கள் நினைத்ததில் தவறு உள்ளது.. போங்கள்.. போய் கொடுத்து விட்டு வாருங்கள்..” என்று கடிந்து பக்குவப்படுத்தினார்கள்.

இன்னைக்கும் தர்ஹாவை கடக்கும் போது முஸாபிர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது எஜமானுக்கு பிடிக்காது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

5

சாப்பிடும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போலவே இவர்களும் பேச மாட்டார்கள்.

6

நம் நாகூரில் மட்டும் 28 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். மீனவர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்னமும் எஜமானின் தலைமாட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.

7

அவர்கள் ஹிஜ்ரி 978 ஜ்மாத்துல் ஆஹிர் பிறை 10ல் அதிகாலை 4:20 மணிக்கு வஃபாத்தானார்கள்.

ஆசரஹான் என்ற இடத்தில் எஜமானின் உடலை வைத்து மழை நீரில் தான் கழுவினார்கள்.அந்த தண்ணீர் சேர்ந்த இடம் தான் தர்கா குளம்.

பீர் மண்டபம் என்ற இடத்தில் வைத்து தான் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது. பின்னாளில் போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் தான் பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வரும் போது முஸ்லிம்களுக்கு சொல்லொணா துன்பமிழைத்தார்கள், அந்த அட்டூழியங்களை எதிர்த்து போராட குஞ்சாலி மரைக்காயரை தயார் செய்து போருக்கு அனுப்பியவர்கள் எஜமான் அவர்கள். அத்தகையவர்களே எஜமானை புரிந்து கொண்டு பீர் மண்டபத்தை கட்டிக் கொடுத்தார்கள்.

8

எஜமான் அவர்கள் வஃபாத்திற்கு பிறகு அவர்களின் சீடர்கள் 404 பேரும் பான்வா, மலங்கு,மதாரி, ஜலாலி என்றும் பல குழுக்களாக பல ஊர்களுக்கு அடுத்த ஆண்டு வஃபாத்தான நாளில் சந்திப்பது என்ற நிய்யத்தோடு பிரிந்து சென்றனர்.

அடுத்த வருடம் அவர்களின் வருகையை எண்ணி சின்ன எஜமான் அவர்கள் அரிசி, பருப்பு, கறி, நெய், விறகு, எண்ணெய், காய்கறிகள், பாய்கள், தென்னங்கீற்றுகள் இன்னும் வேண்டியவை அனைத்தையும் தயார் செய்து வைத்து காத்திருந்தார்கள்.

சொன்னது போலவே கூட்டம் கூட்டமாக மக்கள் அதே நாளில் வந்தார்கள்.

எல்லோரும் ஃபக்கீர்மார்கள். ஏழைகள். வந்து தொழுதார்கள், ஓதினார்கள்,

ரிலாயத் எனும் எஜமான் கற்றுக் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டார்கள்.

இன்னமும் அந்த நான்கு பிரிவினரும் வருகிறார்கள், அவர்கள் திரும்பி செல்லும் போது மேற்சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தான் கந்தூரி.

9

நீங்கள் எங்கிருந்தாலும் அந்த ஜமாத்துல் ஆஹிர் பிறை 10ல் 4 மணி முதல் 4:40 வரை எஜமானுடைய தரீக்காவில் உள்ளதை நல்ல ஆலிமுடன் கன்சல்ட் பண்ணி உட்கார்ந்து ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எங்கள் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்க்ள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி ஓதும் போது எஜமானின் மக்பரா ஷரீஃபை மனக்கண் முன் நிறுத்த வேண்டும் என்பதும் உத்திரவு.

10

சின்ன எஜமான் அவர்களுக்கு கவிதை எழுதும் வழக்கம் இருந்தது. அவர்க்ளின் கவிதையில் எஜமானை பற்றி அவர்களின் உணவு பழக்கம், படுக்கும் முறையை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கவிதையில் பாடி பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் நடைமுறை யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

11

நாகூர் தர்ஹாவின் நாலாபுறமும் பள்ளிவாசல். நவாப் பள்ளி, சின்ன ஹொத்துவா பள்ளி, பானா சாபு பள்ளி மற்றும் திவான்ஷா பள்ளி.

12


Sunday, June 10, 2018

மௌலானா ரூமி (றஹ்)

சத்தியத்தை தேடாதவரா
எங்களிடம் வாருங்கள்
நீங்கள் தேடுபவராவீர்கள்

இசைகலைஞனாக இல்லாதிருந்தவரா
எங்களிடம் வாருங்கள்
உங்களின் குரலை கேட்பீர்கள்

செல்வங்களின் அதிபதியானவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் பிச்சைக்காரனாவீர்கள்

அரசனாக உணர்பவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் அடிமையாவீர்கள்

சுயத்தை மறந்தவரா
எங்களிடம் வாருங்கள்
பட்டாடையை அவிழ்த்து விடுங்கள்
கரடுமுரடான ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையிடம் திரும்ப உங்களை சேர்ப்பித்து விடுகிறோம்.

Sunday, November 19, 2017

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

ஸூரத்துல் பகரா - ஆயத் 104 - விரிவுரை

 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏ 

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

யா அய்யுஹல்லதீன - ஓ! (அழைப்பது)
ஆமனு - ஈமான் கொண்டவர்களே!
லா - தகூலு - அழைக்காதீர்கள்
ராயினா - இரண்டு அர்த்தங்கள் உள்ளது, ஒன்று - ”மீண்டும் சொல்லுங்கள்” என்பது, இன்னொன்று - ”செம்மறி ஆட்டுக்காரர்” என்பது.
வ - கூலு - ஆனால், சொல்லுங்கள்!
உன்ளுர்னா - தயைகூர்ந்து, எங்களை அன்புடன் நோக்குவீர்களாக! 
வ-ஸ்மஉ - அத்தோடு, கவனியுங்கள்!
வலில் - காஃபிரீன - (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தையை மரியாதை இல்லாமல் பேசும் மறுப்பாளர்களுக்கு) 
அதாபுல் அலீமுன் - வலிகள் தரக்கூடிய வேதனை உண்டு!


விளக்கம்:
குரான் ஷரீஃபில் 89 முறை ”யா அய்யுஹல்லதீன ஆமனு” என்ற வார்த்தை வருகிறது. அதில் இந்த ஆயத்து தான் முதல் முறை. இதே சூரத்துல் பகறாவில் இதற்கு முன்னர் “யா அய்யுஹன்னாஸ் (2:21)” என்று ஒரு முறை வருகிறது, அதாவாது ஒட்டு மொத்த மனித இனத்தையே விளிக்கும் சொல் அது, அடுத்து இன்னொரு முறை, “யா பனீ இஸ்ராயீல் (2:40)” என்றும் அதாவது ”இஸ்ராயீலின் சந்ததிகளே!” என்றும் வருகிறது.

ஆனால் முதல் முறையாக “ஈமான் கொண்டவர்களே!” என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை யுடையவர்களை நோக்கி அழைத்து இறைவன் சொல்லும் முதல் கட்டளை இது தான்.

அப்படி என்ன கட்டளை?

லா தகூலு “ராயினா”

- இது தான் அந்த கட்டளை, அதாவது “ராயினா’ என்று சொல்லாதீர்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யூதர்களில் சிலர் “ராயினா” என்று சொல்வார்கள். “சரியா கேட்கலை, மறுபடி சொல்லுங்க..” என்று ஒரு சாதாரண மனிதரிடம் இயல்பாக பேசுவதை போன்ற தொனியை யுடைய வார்த்தை இது.

இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்து அவர்கள் சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, “செம்மறி ஆட்டை உடையவரே!” அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தானே, நம்மை போன்ற ஒரு மனிதர் தானே எனும் தொனி இருந்தது.

இதை பார்த்து விட்டு ஈமான் கொண்டவர்களில் சிலரும் அவ்வாறே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு யூதர்களுக்கு இருந்தது போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை மதிக்காத மரியாதை கொடுக்காத எண்ணம் இல்லை என்றாலும் அவர்கள் அவ்வாறே அழைத்தார்கள்.

ஆனால், தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அவ்வாறு அழைப்பதை இறைவன் விரும்பவில்லை.

அவ்வாறு “ராயினா” என்று சொல்லாதீர்கள் என்று கட்டளையிடுகிறான்.

வேறு எப்படி சொல்வது?

வ - கூலு ”உன்ளுர்னா”

- அதாவது, “உன்ளுர்னா” என்று அழையுங்கள்.

கிட்டதட்ட “ராயினா”விற்கும் “உன்ளுர்னா”விற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் “உன்ளுர்னா” எனும் வார்த்தையில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது. “எங்களை அன்புடன் பாருங்கள், தயவுசெய்து..” என்று கெஞ்சி கேட்பது போல் உள்ளது.

இத்தகைய வார்த்தையை தான் தன் நபியை ஈமான் கொண்டவர்கள் அழைக்க வேண்டும் என்று சொல்கிறான்.

வஸ்மஉ

- கவனமாக கேளுங்கள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால் கவனமாக கேளுங்கள், இதனால் நீங்கள் திரும்பி சொல்லுங்கள் என்று கேட்க வேண்டிய தேவையே இருக்காது. 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் கவனமாக கேட்பது, மிக மரியாதையான வார்த்தைகளைக் கொண்டு பேசுவது இவைகளே ஈமான் கொண்டவர்களுக்கு குரான் ஷரீஃபில் இறைவன் இட்ட முதல் கட்டளையாகும்.

வலில் காஃபிரீன அதாபுல் அலீமுன் 

- மேலும் அந்த காஃபிர்களுக்கு வலிகள் தரும் வேதனை உண்டு

பொதுவாக இறைவன் குரான் ஷரீஃபில் யூதர்களை அழைக்கும் போது “அஹ்லில் கிதாபு” என்று அழைப்பது உண்டு. ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காதவர்களை சொல்லும் போது இறைவன் “மறுப்பாளர்கள்” என்று தான் அழைக்கிறான். 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காத அந்த காபிர்களுக்கு வலிகள் தரும் துன்பம் நிறைந்த வேதனை உண்டு.

இத்தகைய காபிர்களை போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்கத் தெரியாதவர்களாக அல்லாமல் அவர்களை போற்றும் புகழும் சுன்னத் வல் ஜமா அத்தில் இணையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி இறைவன் அருள் புரிவானாகவும்! ஆமீன்.

மீலாதுந் நபி முபாரக்!



Monday, July 4, 2016

நோன்பு கவிதைகள்

ரமலானே வருக! இறையருளை தருக!!

உலகம் அழிக்கும்
மடமை ஒழிக்க
உலகம் வியக்கும்
மறையை வழங்கிய
உயர்வான
ரமலானே வருக! இறையருளை தருக!!

உலகம் அழிக்கும்
மூடநம்பிக்கை ஒழிக்க
உலகம் காக்கும்
இஸ்லாம் அருளிய
துணிவான
ரமலானே வருக! இறையருளை தருக!!

புனித மாதம்


பசியில்லாத இறைவனை
பசிபொறுத்து உணரும்
மாதம்

பெருமான் நபிகள்
போற்றி புகழ்ந்த 
மாதம்

மாறாத மறையாத
மறைகுரான் இறங்கிய
மாதம்

பசியெனும் ஏழையினாடையை
பணக்காரரும் அணியும்
மாதம்

கஞ்சனாய் இருந்தவரும்
கணக்கின்றி வாரிவழங்கும்
மாதம்

இரும்பிதயம் படைத்தவரும்
இதயம் கனியும்
மாதம்

விரட்டப்பட்ட ஷைத்தான் 
விலங்கு பூட்டப்படும்
மாதம்

அகிலமாளும் அல்லாஹ்வின்
அருள்மழை பொழியும்
மாதம்

முக்காலம் அறிந்தவராம்
முஹம்மதுநபி அகமகிழும்
மாதம்

இந்த 
புனித மாதம் 

நோன்பு


தொண்டையில் தாகமிருக்கும்
வயிற்றில் பசியிருக்கும்
மனம் நாடாது
பொறுத்து இருக்கும்
வறுமை அல்ல
கடமை..

ஜகாத்*

கழுத்துவரை தேவையிருக்கும்

கையளவே காசிருக்கும்
மனம் விரும்பி 
ஜகாத் கொடுக்கும்
விரயம் அல்ல
விவேகம்..
(ஜகாத்* - ஏழைவரி)



நபிமொழி

பசி வந்தால்

பத்தும் பறக்கும்
- இது பழமொழி
பசி பொறுத்தால்
சொர்க்கம் கிடைக்கும்
- இது நலமொழி


என்றும் நல்லமொழி
எங்கள் நபிமொழி
முற்றும். 

Friday, June 10, 2016

62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

முன்னுரை

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தினை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை எப்படி அழிக்கலாம் என்று யோசித்து பார்த்த போது அவர்கள் மூன்று விஷயங்கள் இஸ்லாத்தில் இருக்கும் வரை அதை அழிக்க முடியாது என்று இறுதி முடிவுக்கு வந்தார்களாம்.

அந்த மூன்றாவது
1. கஃபா எனும் இறையில்லம்
2. குரான் ஷரீஃப் எனும் இறைவேதம்
3. ஜும்ஆ எனும் வெள்ளிக்கிழமை தொழுகை.

ஜும்ஆ என்ற அரபி வார்த்தைக்கு பிரார்த்தனை அல்லது பிரசங்க கூட்டம் என்று பொருள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனமா நகருக்கு சென்ற ஐந்தாவது நாளே ஜுமுஆ தொழுகையை செயல்படுத்தினார்கள்.

ஷஹீஹ் புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

ஆங்கிலம் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

தமிழ் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்வார்கள்.

இதற்கிடையே சிரியாவிலிருந்து ஒரு வியாபார கூட்டம் மதினமா நகருக்கு வந்திருந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் ஊருக்கு வந்திருந்த அந்த வியாபார கூட்டம், சந்தை முடிந்து ஊருக்கு புறப்பட்டு போவதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டி  பறை கொட்ட ஆரம்பித்தது.

அந்த பறையொலியை கேட்டதும் 12 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போதே  வியாபாரத்தை முடித்து விட, இன்னும் சிலர் வேடிக்கை பார்க்க வெளியேறி விட்டனர்.

இந்த கட்டத்தில் தான் நாம் வெள்ளிக் கிழமை பிரசங்கத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஒழுங்குமுறைகளை இந்த ஆயத்தின் மூலமாக எடுத்து கூறுகிறான்.

இந்த ஸூரா மதினாவில் இறங்கப்பட்டது.

’யுஸப்பிஹ்” என்று அல்லாஹ்வை புகழ்ந்துரைக்கும் வார்த்தையை முதல் வார்த்தையாக வரும் ஸூராக்களுக்கு ”முஸப்பிஹத்” என்று பெயர். அந்த வகையில் இது ”முஸப்பிஹத் ஸூரா”வாகும். (குரான் ஷரீஃபில் இருக்கும் பிற முஸப்பிஹத் ஸூரக்களாவன: 57 அல் ஹதீத், 59. அல் ஹஷ்ர், 61. அஸ் ஸஃப்ஃபு, 64 அத் தஃகாபுன்)

இந்த ஸூராவை 4 பகுதிகளாக பிரிக்கலாம்

1. அல்லாஹ்வை பற்றி கூறுவது (1வது ஆயத்)
2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது (2 லிருந்து 4 வரை உள்ள ஆயத்)
3. வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது (5 லிருந்து 8வரை உள்ள ஆயத்)
4. ஜும்ஆ வைப் பற்றி கூறுவது (9லிருந்து 11வரை உள்ள ஆய்த்)

பகுதி 1 - அல்லாஹ்வை பற்றி கூறுவது

1வது வாக்கியம்
   يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏ 

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

யுஸப்பிஹ் -  சிறப்பு செய்வது, புகழ் சேர்ப்பது, மேன்மைப் படுத்துவது

யாரை?

லில்லாஹி - அல்லாஹ்வை

யார் சிறப்பு செய்கிறார்கள் அல்லாஹ்வை?

மா ஃபிஸ் ஸமாவாதி - வானங்களில்லுள்ளவையும்

நமக்கு தெரிந்து வானத்தில் பல இருக்கின்றன, தெரியாமல் என்னென்னவோ இருக்கின்றன. இதில் ’மா’ என்றால் எதுவெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கின்றதோ அது அத்தனையையும் குறிக்கும்.

- மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் and

மா ஃபில்அர்ள் - பூமியிலுள்ளவையும்

இங்கேயும் “மா” வருவதால் நமக்கு தெரியாமல் பூமியில் இருக்கின்றதோ அவைகள் அனைத்தையும் குறிக்கும்.

ஆக, வானத்திலும், பூமியிலும் மறைவாக உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வை சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.

இப்போது அத்தகைய அல்லாஹ் யாரென்று சொல்கிறான். வழக்கமாக குரான் ஷரீஃபில் தன்னை யாரென்று சொல்லி ஆயத்தை முடிக்கும் போது இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லும் அல்லாஹ் இந்த இடத்தில் மட்டும் தனது நான்கு பெயர்களை சொல்கிறான். அவையாவன...

1. மலிகில் - உச்ச அதிகாரம், (இது மாலிக் அல்ல - மாலிக் என்றால் உடமையாளர் என்று அர்த்தம்)
2. குத்தூஸில் - இயல்பாகவே தூய்மையான (அதாவது தூய்மையானது அல்லாஹ்வின் இயல்பிலேயே உள்ளது. ஜகாத் என்றாலும் தூய்மை தான் ஆனால் காசு தூய்மையாக இல்லை ஜகாத் கொடுத்ததும் தூய்மையாகி விடுகிறது, தஜ்கியா என்றாலும் தூய்மை என்று தான் பொருள், ஆனால் இயல்பில் தூய்மையில்லை, தஜ்கியா எனும் நற்செயல்கள் செய்தால் தூய்மையாகலாம். ஆனால் குத்தூஸ் என்றால் இயல்பிலேயே தூய்மையாக இருப்பதையும் எல்லா தூய்மைக்கும் மூலமாக இருப்பதையும் குறிக்கும்.)
3. அஜீஜில் - அதிகாரமும் மரியாதையும் (சிலருக்கு அதிகாரம் இருக்கும், மக்களிடம் மரியாதை இருக்காது வேறு சிலருக்கு மரியாதை இருக்கும் ஆனால் அதிகாரம் இருக்காது, இங்கே அஜீஜ் என்ற வார்த்தை அதிகாரத்தையும் மரியாதையையும் சேர்த்தே குறிக்கும்)
4. ஹக்கீம் - விவேகமும், ஞானமும்

உச்ச அதிகாரமுடைய, இயல்பாகவே தூய்மையுடைய, அதிகாரமும் மரியாதையும் கொண்ட, விவேகமும், ஞானமும் நிறைந்த அல்லாஹ்வை வானங்களிலும் பூமியிலும் நாம் அறியாத பல படைப்பினங்கள் சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.


பகுதி 2 - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது

2வது வாக்கியம்

   هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ 
وَالْحِكْمَةَ 
 وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ 
     
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

ஹுவ - அவன்

யார்?
அல்லாஹ் தான்

அல்லதி - (அவன்) தான்

பஃஸ - அனுப்பினான்

ஃபி -  (அவர்கள்) இடையே

ல் உம்மிய்யின - எழுத்தறிவில்லா

ரசூலன் - ஒரு தூதரை

மின்ஹும் - அவர்களிலிருந்து

(முன் ஆயத்தில் படித்தோமே அத்தகைய அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து தனது தூதராக அவர்களிடையே அனுப்பினான்.

பக்கத்து தேசங்களான ரோமும் பாரசீகமும் நாகரீகத்தில் கல்வியில் தேர்ந்தவர்களாக இருக்கும் போது அல்லாஹ் படிப்பறிவில்லாத சமூகத்திலிருந்து ஒருத்தவர்களை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறான். (இதனை அல்லாஹ் வழங்கிய கொடை என்றும் அடுத்த ஆயத்தில் சொல்கிறான்)

அந்த தூதர் என்ன செய்கிறார்கள்?

4 விஷயங்கள் செய்கிறார்கள்

1.
யதுலு - ஓதுகிறார்கள்
அலைஹிம் - அவர்களிடம்
ஆயாதிஹி - வாக்கியங்களை

2.
வ யுஜக்கீஹிம் - தூய்மையும் படுத்துகிறார்கள்.

3.
வ யுஅல்லிமுஹும் - போதிக்கவும் செய்கிறார்கள்
ல் -கிதாபி - புத்தகத்தை

4.
வ உல் ஹிக்மத - விவேகத்தையும், ஞானத்தையும்.

முதல் ஆயத்தில் அல்லாஹ் அவனை பற்றி நான்கு பெயர்களை சொன்னான்.

1. உச்ச அதிகாரமுடைய (அரசன்),

2. இயல்பாகவே தூய்மையுடைய,

3. அதிகாரமும் மரியாதையும் கொண்ட,

4. விவேகமும், ஞானமும் நிறைந்த

இரண்டாவது ஆயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 4 திருப்பணிகளை செய்வதாக சொல்கிறான். அல்லாஹ்வின் பெயருக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பணிக்கும் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ளலாம்.

1. ஆயத்துகளை ஓதிக் காட்டுவது - ஆயத்தில் அல்லாஹ்வின் அதிகாரம் (ஆட்சி) இருக்கும் உதாரணமாக, இம்மையில் உள்ளவை மறுமையில் இருக்க போறவை இவை அனைத்தையும் குறிக்கும்,  அதனை ஓதிக் காட்டுகிறார்கள்

2. தூய்மைப்படுத்துகிறார்கள் - இறைவன் இயல்பாகவே தூய்மையானவன், மனிதன் அப்படியல்ல, அவனை தூய்மைப்படுத்தி இறைவன் நேசிக்க கூடியவர்களாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றுகிறார்கள்.

3. கிதாபை போதிக்கிறார்கள் - கிதாபில் தான் அல்லாஹ்வின் அதிகாரம் கட்டளைகள் இருக்கும் (ஹராம், ஹலால்)

4. விவேகம் நிறைந்தவர்களாக ஞானம் மிக்கவர்களாக மாற்றுகிறார்கள் - அல்லாஹ் விவேகமிக்கவன் ஞானமிக்கவன்.

அல்லாஹ் எந்த தன்மையில் இருக்கின்றானோ அந்த தன்மைக்கு மனிதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மாற்றுகிறார்கள். அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளான் மனிதர்களை அவ்வாறு மாற்றுவதற்கு.

வ இன் - இருந்த போதிலும்

கானு - அவர்கள்

மின் - இருந்து

கப்லு - முன்னர்

லஃபி - தெளிவான

ழலாளன் - வழிகேடு

அவர்கள் முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.


(அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தனது தூதராக  தேர்ந்தெடுத்து அவர்களிடையே அனுப்பினான். (அந்த தூதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஆயத்துகளை (அல்லாஹிவின் அதிகாரம் எத்தகையது என்பதை) ஓதிக்காட்டுகிறார்கள், தூய்மை படுத்துகிறார்கள், (அல்லாஹ்வின் அதிகாரங்கள், கட்டளைகள் நிரம்பிய) கிதாபை போதிக்கிறார்கள், ஞானவான்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் (இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.

3வது வாக்கியம்
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 

(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

வ ஆஹரீன - மற்றும் அவர்களல்லாத

மின்ஹும் - அவர்களிலிருந்து

லம்மா - இன்னும் இல்லை

யல்ஹகூ - சேர்வது

பிஹிம் - அவர்கள்

வ ஹுவ - மற்றும் அவன்

ல் - அஜீஜு - அதிகாரமும் மரியாதையும் கொண்டவன்

ல் - ஹகீம் - விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

இன்னும்  அவர்களல்லாத (வ ஆஹரீன)

யார் அல்லாத?

படிப்பறிவில்லாதவர்களை குறிக்கலாம்
 மக்காவாசிகளல்லாதவர்களை குறிக்கலாம்

அவர்கள் (அதாவது மக்காவாசிகளல்லாதவர்கள்) இவர்களோடு இன்னும் சேரவில்லை (அதாவது முஸ்லிமாக வில்லை அல்லது இன்னும் பிறக்கவே யில்லை)

அதாவது இனிமேல் சேரலாம், அப்படி சேருகின்ற நான் நீங்கள் உள்பட முஸ்லிமாக பிறக்கின்ற அல்லது மாறுகின்ற அனைவரையும் இது குறிக்கும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி தூதுவர் என்பதற்கு இந்த ஆயத்து கூட சாட்சி தான் பகர்கின்றது.

மக்காவாசிகளல்லாத (பிற மக்கள், அதாவது) இன்னமும் (முஸ்லிமாக மாறி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூதராக ஏற்று அவர்களிடம் போதனை பெறாத) வேறு சிலர் இருக்கிறார்கள். (கியாமத் நாள் வரை வர இருக்கும் அவர்களுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூதராக இருப்பார்கள், போதனை செய்வார்கள்). அன்றியும் அவன் தான் அதிகாரமும் மரியாதையும் கொண்டவன், விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

4வது வாக்கியம்
   ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ

அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

தாலிக - அது

ஃபழ்லு - கொடை

ல் லாஹி - அல்லாஹ்வின்

அது அல்லாஹ்வின் கொடை.

எது?

அல்லாஹ் எழுத்தறிவில்லாத ஒருவரை தூதராக அனுப்பியது

யூதர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ”உம்மி (எழுத்தறிவில்லாதவர்கள்)” என்று ஏளனம் செய்தார்கள். ’உம்மி’யான ஒருவரை தூதராக ஏற்க முடியாது என்றார்கள். ”உம்மி’களில் எந்த இறைத்தூதரும் வரமுடியாது , இறைத்தூதார் என்பவர் யூத இனத்தவராகவே இருக்க முடியும் என்று பெருமை பேசினார்கள்.

ஆனால் அல்லாஹ் அப்படி”உம்மி’யான ஒருவர்களை தமது தூதராக தேர்ந்தெடுத்ததோடு அவர்கள் தூய்மைபடுத்துகிறார்கள் என்கிறான், அவர்களை நாம் தூதராக பெற்றது நமக்கு அல்லாஹ் வழங்கிய கொடை என்கிறான்.

அதுவும் பெருமானார் 4 செய்திகளை சொல்வதாக குறிப்பிடும் போது முதல் செய்தியில் “யுத்லு ஆயத்திஹி” வாக்கியங்களை படிக்கிறார்கள் என்று கூறினான். எழுத்தறிவில்லாத அவர்களை இறைவன் படிக்க வைத்தது இறைவனின் கொடையாகும்.

1400 வருடங்களுக்கு பிறகு வாழ்கின்ற நமக்கு அவனுடைய ஆயத்துகளை, தூய்மையாக மாறுவதை, கிதாபை விளங்கி கொள்வதை, ஞானவானாக மாறுவதை அதுவும் உலகின் மிக சிறந்த மனிதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக கிடைக்க பெறுவதை கொடை என்கிறான்.

யூதிஹி - அவன் வழங்குகின்றான்

மன் - யாருக்கு

யஸாஉ - நாடுகிறானோ

இத்தகைய கொடை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கு மட்டுமே அந்த கொடையை பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

து - உடைமையாளன்

ல் ஃபழ்லி - கொடை

ல் அழீம் - தலை சிறந்த

அல்லாஹ் தான் மேலான கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன்

(எழுத்தறிவில்லாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் தூதராக பெற்றது, அவர்கள் மூலமாக இறைவனின் ஆயத்துகளை கேட்பது, தூய்மையடைவது, கிதாபை புரிவது, ஞானவானாக உயர்வது, இப்படியாக,) அது (யாவும்) அல்லாஹ்வின் (அருட்) கொடையாகும். (இத்தகைய கொடையை) அவன் (யாருக்கு) நாடுகிறானோ அவருக்கு வழங்குகின்றான். அவனே (அருட்) கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன். 


பகுதி 3 - வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது

5வது வாக்கியம்

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ 

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

அல் லதீன - யாருக்கு

ஹும்மிலு - சுமத்தப்பட்டு/ ஒப்படைக்கப்பட்டு/ பொறுப்பு சாற்றப்பட்டு (கர்ப்பினி பெண்களை ’ஹமலா’யிட்டாஹா என்று சொல்வோம் அல்லவா... ஹமல் என்றால் சுமப்பது... ஹும்மிலு என்றால் கடுமையான சுமை (powerful burden))

ல் தவ்ராத - தவ்ராத் என்ற இறைவேதம்

சும்ம - பிறகு

லம் - இல்லாமல்/ செய்யாமல்

யஹ்மிலூஹா - பொறுப்புகளை (ஏற்றுக் கொள்ளவில்லை)

கமசலி - (அவர்களின்) உதாரணம்

ல் ஹிமாரி - கழுதை

யஹ்மிலு - சுமப்பது

அஸ்ஃபாரன் - புத்தகங்கள்

பிஃஸ - கொடுமையான/ மோசமான

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

ல் கவ்மி - அந்த நாட்டு மக்கள்

ல் லதீன - யார்

கத்தபு - மறுப்பு

பி ஆயாதில்லாஹி - அல்லாஹ்வின் வாக்கியங்கள்

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

லா - இல்லை

யஹ்தி - வழிகாட்டுதல்

ல் கவ்ம - அந்த நாட்டு மக்கள்

ல் ழாழிமீன் - (வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றும்) வழி தவறியோர்

ஒரு மக்களுக்கு தவ்ராத் எனும் கடுமையான சுமையை மகத்தான பொறுப்பை சுமக்கும்படி ஒப்படைத்தான். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை கொஞ்சம் கூட ஏற்று அதன்படி நடக்கவில்லை.

இந்த இடத்தில் அல்லாஹ் யஹூதிகள் என்றோ பனி இஸ்ராயீல்கள் என்றோ சொல்லவில்லை... உதாரணமாக சொல்கிறான்.... ”ஒரு மக்களுக்கு...” என்று.

அப்படி என்றால் இந்த உதாரணம் எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை முஸ்லிம்கள் குரான் ஷரீஃபை பெற்றுக் கொண்டு அந்த மகத்தான பொறுப்பை சுமக்க தவறினால்... என்றும் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

இத்தகையோரின் உதாரணமாவது ஒரு கழுதை புத்தகங்களை சுமந்து செல்வதை போன்றதேயாகும். கழுதையானது தனது முதுகில் புத்தகங்களை சுமந்து செல்கிறது. அதே போல் வேதத்தை அவர்கள் தங்கள் முதுகுக்கு பின்னால் வைத்து விட்டனர்.

இதே போன்றதொரு ஆயத் 2 வது ஸூராவான ஸூரத்து பகராவில் 101 வது ஆயத்தில் வரும்.. (அதன் மொழிபெயர்ப்பு: )

“... அல்லாஹ்வின் வேத்தத்தை தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.”

ஆக, இங்கே அல்லாஹ்வின் வேதத்தை பெற்று அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் ஆனால் அந்த வேதத்தை பேருக்கு வைத்திருக்கும் இவர்களின் உதாரணாமானது (இவர்களை கழுதை என்று சொல்லவில்லை... இவர்களின் உதாரணம் என்று தான் வருகிறது) புத்தக மூட்டையை சுமக்கும் கழுதையை போன்றது.

அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை நிராகரித்து அல்லது அதிலிருந்து படிப்பினைகள் பெறாமல்/ அதனை பின்பற்றாமல்/ அதில் சுமத்தப்பட்டிருக்கும் சுமைகளை ஏற்றுக் கொண்டு சுமக்காமல்/ செல்லும் நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு மோசமான/ கொடுமையான/ கொடூரமான உதாரணம் பாருங்கள்.

அல்லாஹ் இவ்வாறு தவறிழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட மாட்டான்.

தவ்ராத் (போன்ற) வேதத்தை சுமத்தப் பெற்று (தவ்ராத் வேதம் என்பது சுமை) அதிலிருந்து கொஞ்சம் கூட சுமந்து செல்லாமல் (படித்து பயன்பெறாமல்) இருந்த நாட்டு மக்களின் உதாரணம். அவர்களின் உதாரணமாவது, அடுக்கடுக்காய் புத்தகங்களை சுமந்து செல்லும் கழுதைக்கு ஒப்பானதாகும். (அல்லாஹ்வின் வேதங்களை நிராகரித்தவர்கள்/ படித்து பயன்பெறாமல் போன) அந்த நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு கொடூரமான உதாரணமாக இருக்கின்றது, அல்லாஹ் தவறிழைக்கும் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்க மாட்டான்.

6வது வாக்கியம்
   قُلْ يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 

(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”

குல் - சொல்லுங்கள்..!

யா அய்யுஹல்லதீன - ஓ..!

ஹாதூ - யூதவியத்தை கடைப்பிடிப்பவர்களே..!

இன் - ஒருவேளை

ஜஅம்தும் - உரிமை கோருவது

அன்னகும் - அதாவது நீங்கள்

அவ்லியாஉ - நேசர்கள்

லில்லாஹி - அல்லாஹ்வின்

மின் - லிருந்து

தூனி - தவிர்த்து

ல் னாஸி - மனிதர்கள்

ஃபதமன்னஉ - அப்போ விரும்புங்கள்

ல் மவ்த - மரணத்தை

ன் குன்தும் - நீங்கள் இருந்தால்

சாதிகீன் - உண்மையாளர்களாக


சில செய்திகள் விளங்க வேண்டும்:
குரான் ஷரீஃபில் அல்லாஹ் இறை நேசர்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு பயம், கவலை எல்லாம் கிடையாது என்கிறான்.
அவர்களுக்கு மரணம் பற்றியும் கூட பயமோ, கவலையோ, துக்கமோ கிடையவே கிடையாது.
அதனால் தான் இறை நேசர்களின் மரண இரவை “உரூஸ்” என்று சொல்கிறோம். உரூஸ் என்பது பாரசீக மொழி.  சரியான வார்த்தை “அரூஸ்” என்பதாகும். ’ஷபே - அரூஸ்’ என்றால் ”திருமண இரவு” என்று பொருள். அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். இது தான் மருவி “உரூஸ்” என்றானது.

இங்கே யூதவியத்தை பின்பற்றும் மக்கள் உண்மையிலேயே மற்றவர்களை விட நாங்கள் தான் இறைவனுக்கு நேசத்துக்குறியவர்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்படி அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் எங்கே மரணத்தை விரும்புங்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதவியத்தை பின்பற்றும் மக்களை நோக்கி கூறும்படி கூறுகிறான்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..! யூதவியத்தை பின்பற்றும் மக்களே..! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான் அல்லாஹ்வுக்கு நேசத்துக்குறியவர்கள் (உற்ற தோழர்கள்/ பாதுகாக்கப்பட்ட நண்பர்கள்) என்று உரிமை கொண்டாடுகிறீர்களே..! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்கே?) மரணத்தை விரும்புங்கள்... (பார்க்கலாம்?)!?” (என்று கூறுங்கள்)

7வது வாக்கியம்
   وَلَا يَتَمَنَّوْنَهٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏ 

ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

வலா - ஆனால் இல்லை

யதமன்னவ்னஹு - அவர்கள் விரும்புவது

அபதன் - எப்பொழுதும்

பிமா - எதனை

கத்தமத் - முன்னர் அனுப்பி வைத்த

அய்தீஹிம் - கைகள்

வல்லாஹு - அல்லாஹ்

அலீமுன் - எல்லாம் அறிந்தவன்

பிழ்ழாழிமீன் - தவறிழைப்பவர்களை

ஆனால் அவர்கள் மரணத்தை விரும்புவதில்லை.

இப்பொழுது நமக்கும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளலாம்? நாம் மரணத்தை விரும்புகிறோமா? என்று

யார் தான் மரணத்தை விரும்புவார்கள்?
அவனுடைய நேசர்கள் மட்டும் தான் விரும்புவார்கள்.

ஏன் அவ்வாறு விரும்புவார்கள்?
அவர்கள் மரணத்திற்கு பிறகு தேவைப்படும் பொருள்களை சம்பாதித்து அனுப்பி வைத்து விட்டார்கள். அவர்கள் இங்கே செய்த அமல்கள் இரட்டிப்பாகி அவர்களுக்கு லாபம் தரும் இடமாக காட்சியளிக்கிறது.

யார் மரணத்தை விரும்ப மாட்டார்கள்?
யார் மரணத்திற்கு பிறகு தேவையானதை இன்னும் சம்பாதித்து அனுப்பவில்லையோ அவர்கள் தான் விரும்ப மாட்டார்கள்.

அவர்கள் கைகள் முன்னர் அனுப்பி வைத்த (செய்த பாவங்கள்) காரணத்தினால் அவர்கள் அதனை (மரணத்தை) ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மற்றும் அல்லாஹ் தவறிழைக்கும் மக்களை முழுதுமாக அறிந்தவனாகவே இருக்கின்றான்.


8வது வாக்கியம்
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

குல் - சொல்லுங்கள்..!

இன்ன - நிச்சயமாக..!

ல் மவ்த - மரணமானது

ல் லதீ - எது

தஃபிர்ரூன - நீங்கள் விரண்டு ஓடுகிறீர்களோ

மின்ஹு - அதனை விட்டும்

ஃப இன்னஹு - அது நிச்சயமாக

முலாகீகும் - சந்திக்கும்

மரணம் நாம் விரும்பாமல் போனதற்காக நமக்கு வராமல் போய்விடுமா என்ன?

அல்லாமா இக்பால் ஒரு கவிதையில் இப்படி எழுதியிருப்பார்கள், “மக்கள் எல்லோரும் மரணத்தை கண்டு விரண்டு ஓடுகிறார்கள். ஆனால்... ஏ மரணமே..! அவர்கள் உன்னை நோக்கி தான் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்..” என்று

சும்ம - அப்பொழுது

துரத்தூன - நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள்

இலா - நோக்கி

ஆலிமி - அறிந்தவன்

ல் கைபி - மறைவானவையும்

வஷ்ஷஹாததி - வெளிப்படை யானவற்றையும்

ஃப யுனப்பி  ஊகும் - அவன் உங்களுக்கு அறிவிப்பான்

பிமா - எதை

குன்தும் - வழமையாக

தஃமலூன் - செய்து கொண்டிருந்தீர்களோ (அதனை)


(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..!  எந்த மரணத்தை கண்டு விரண்டு ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ..! நிச்சயமாக அந்த மரணமானது உங்களை சந்தித்தே தீரும் (அது வழியில் வந்து கொண்டிருக்கிறது) அதன் பிறகு நீங்கள் அனைவரும் (மரணம் வந்ததும்), மறைவானவற்றையும் (நாம் யாரும் இல்லாத சமயத்தில் வெளியே தெரியாமல் செய்ததையும்), பகிரங்கமானவற்றையும் (வெளிப்படையாக தைரியமாக கொஞ்சம் கூட பயமோ கவலையோ படாமல் செய்ததையும்) அறிந்தவனிடம் அனுப்பி வைக்கப் படுவீர்கள். அப்பொழுது நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று (ஒன்று விடாமல் அனைத்தையும் உங்களிடமே) அறிவிப்பான்.


                                        பகுதி 4 - ஜும்மாவை பற்றி கூறுவது

9வது வாக்கியம்
  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

யா அய்யுஹல்லதீன ஆமனு - ஓ..! ஈமான் கொண்டவர்களே..!

இதா - எப்பொழுது

நூதிய - அழைப்பு விடுக்கப்படுகிறது

லிஸ்ஸலாதி - தொழுகைக்கு

மின் - (நாளில்) ஒரு பகுதி

யவ்மி - நாள்

ல் ஜும்அதி - வெள்ளிக் கிழமை

வெள்ளிக்கிழமையின் ஒரு பகுதி (60 நிமிடங்கள் - 1 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம்)யினை பள்ளியில் கழிக்க உங்களுக்கு அழைப்பு விடப் படுகிறது.

யூதர்களுக்கு ‘சப்த்து’ (சபாத்து நாள் என்போமே, அது) எனும் சனிக்கிழமை வரையறை இருந்தது, அது ஒரு நாள் முழுமைக்கும் பொருந்தும். அதாவது ‘அந்த முழு நாளையும் அவர்கள் ஓய்வுக்கும் வணக்க வழிபாட்டுக்கும்  ஒதுக்கி விட வேண்டும். எந்த உலக அலுவல்களிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது’ என்று சட்டம் பிறப்பிக்கப் பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் அதனை மீறி விட்டார்கள் அவர்களை இறைவன் எவ்வாறு தண்டித்தான் என்று ஸூரத்துல் பகறாவில் 65, 66 ஆயத்துகளில் விளக்குகிறான்.

ஆனால் இங்கே முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமையில் ஒரு பகுதி மட்டுமே வேலைக்கு ஓய்வு கொடுக்க கட்டளையிடப் பட்டிருக்கிறது.

ஃபஸ் அவ் - விரைந்து செல்லுங்கள்

இலா - நோக்கி

திக்ரில்லாஹி - அல்லாஹ்வை நினைவு கூற

அல்லாஹ்வை நினைவு கூற - அதாவது முழுமையாக அல்லாஹ்வின் நினைவில் மூழ்கி இருக்க விரைந்து செல்ல வேண்டும்.

இங்கே அல்லாஹ்வை நினைவு கூற என்று வரும் போது முன்னர் கூறிய வசனங்களிலிருந்து தொடர்பு படுத்தி பார்ப்பது உகந்ததாகும்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது என்றால் அல்லாஹ் மலிக்காகவும், குத்தூஸாகவும், அஜீஜாகவும், ஹகீமாகவும் இருக்கிறான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கிடைத்த கொடை, அவர்கள் மூலமாக நாம் மலிக்கை பற்றியும், குத்தூஸை பற்றியும், அஜீஜை பற்றியும் ஹகீமை பற்றியும் தெரிந்து அதுவாக மாறுகிறோம்.

கைகளால் நாம் நன்மையை முற்படுத்தி அனுப்பி வைத்ததன் காரணத்தால் மரணத்தை விரும்புகிறோம்.

இத்தகைய நன்மையை அடைவதற்காக நாம் எதையாவது கொடுக்க வேண்டுமா?

ஆம்

எதனை?

வதரு - அதோடு விட்டும் விடுங்கள்

ல் பைஅ - வியாபாரங்களை (விற்பனைகளை)

வியாபாரம் என்றால் பல வேலைகள் இருக்கும், சரக்கு வாங்குவது, சம்பளம் தருவது, கடனில் வாங்கிய பொருளுக்கு காசு கொடுப்பது, இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். வியாபாரத்தில் எல்லா வேலைகளும் நமக்கு நாட்டம் வந்துவிடுவதில்லை. ஒரு பணம் போட்ட முதலாளிக்கு வியாபார வேலைகளில் பிடித்தமானது பொருள் விற்பனை நடந்து அதற்குறிய லாபத்தோடு பணம் வருவது தான்.

அல்லாஹ் இங்கே “பைஅ” என்று சொல்கிறான். “பைஅ” என்றால் வியாபாரம் என்ற பொது அர்த்தம் பொருந்தாது. “பைஅ” என்றால் குறிப்பாக விற்பனையை தான் குறிக்கும். ஆக, அல்லாஹ் ரொம்ப குறிப்பாக ஒரு வியாபாரத்தில் அல்லது வேலையில் எதில் நாட்டம் வருமோ அந்த காசு வரும் விற்பனையை(/ சம்பளம் வாங்குவதை அல்லது காசு வருவதை) விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவு கூற நாளின் ஒரு பகுதியை மட்டும் செலவிட விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான்.

தாலிகும் - அது

ஹைருன் - சிறந்தது

லகும் - உங்களுக்கு

இன் - எப்பொழுது

குன்தும் - நீங்கள்

தஃலமூன் - அறிவீர்களானால்

நாம் (அல்லாஹ்வை) அறிந்திருந்திருந்தால் நமக்கு வழங்கியிருக்கின்ற வாய்ப்பை பற்றி விளங்கியிருந்தால் நாம் விற்பனையை விட அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு விரைவது தான் சிறந்தது என்று தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமையன்று நாளின் ஒரு பகுதியில் (அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பள்ளியில் செலவழிக்க) தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் (பாங்கு சொல்லப்பட்டால்) விற்பனையை (காசு வரும் அந்த வியாபாரத்தை) விட்டுவிட்டு அல்லாஹ்வை (முற்றிலுமாக) நினைவு கூற (காசை பத்தியெல்லாம் நினைக்காமல் அல்லாஹ்வை பற்றி நினைக்க) பள்ளிக்கு விரைந்து செல்லுங்கள். நீங்கள் (அல்லாஹ்வை, ஹக்கை) அறிந்திருந்தால் (காசை பற்றி நினைப்பதை விட அல்லாஹ்வை பற்றி நினைப்பது தான்) அது தான் உங்களுக்கு சிறந்தது.

10வது வாக்கியம்
   فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

ஃப இதா - அதன் பிறகு

குழியதி - முடிந்து விட்டால்

ல்  ஸலாது - தொழுகை

ஃப அன்தஸிரு - பரவிச் செல்லுங்கள்

ஃபில் அர்ழி - பூமியை நோக்கி

வப்தகூ - அதோடு தேடுங்கள்

மின் ஃபழ்லில்லாஹி - அல்லாஹ்வின் அருட் கொடைகளை

நாள் பூரா பள்ளியிலேயே இருக்க சொல்லவில்லை, தொழுகை முடிந்ததும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட் கொடைகளை தேடுங்கள் என்று சொல்கிறான்.

பள்ளியிலிருந்து வெளியேறி வந்து விட்டால் வியாபார நாட்டத்தில் அல்லாஹ்வை நினைக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்க தோன்றும்.

அது தான் கிடையாது? பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடன் தான் இன்னும் அதிகமதிகமாக நினைக்க வேண்டும்.

பள்ளிவாசல் என்பது பயிற்சி கூடம், அங்கே பெற்றதை வெளியே வந்தவுடன் வழமையாக மாற்ற வேண்டும்.

வத் குருல்லாஹ -  அத்தோடு அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்

கஸீரன் - அதிகமாக

லஅல்லகும் - அதனால் நீங்கள்

துஃபிலிஹூன் - வெற்றி பெறலாம்

அருள்கொடையை தேடுங்கள் என்று சொல்லிவிட்டு நிறுத்தவில்லை, அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு சென்றோம், தொழுது முடிந்து அருளை தேடுகிறோம்,

அருள் காசு பணம் என்று வைத்துக் கொண்டால் காசு பணம் தேடுகிறோம், சம்பாதிக்கிறோம். ஆனால், பள்ளியில் எவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூறினோமோ அதே போல் வியாபாரம் செய்யும் போதும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அப்போது தான் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறான்.

தொழுகையை முடித்ததும் பூமியை நோக்கி பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள், அத்தோடு வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள் இதனால் நீங்கள் வெற்றி பெறலாம்

11வது வாக்கியம்
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏ 

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

வ இதா - அத்தோடு எப்பொழுது

ர அவ் - அவர்கள் பார்த்தார்களோ

திஜாரதன் - வியாபாரத்தை

அவ் - அல்லது

லஹுவன் - கேளிக்கையை

ன் ஃபழ்ழு - விரைகிறார்கள்

இலைஹா - அதனை நோக்கி

இங்கே தான் எந்த சூழலுக்கு இந்த ஆயத் இறக்கப்பட்டதோ அந்த விஷயத்துக்கு வருகிறான்.

ஒரு சாரார் பள்ளிக்கு அல்லாஹ்வை நினைவு கூற விரையவில்லை, மாறாக பள்ளியிலிருந்து ஒரு வியாபாரத்தையோ அல்லது வேடிக்கையையோ பார்த்ததும் அங்கே விரைந்து செல்கிறார்கள்.

இங்கே இரண்டு விஷயங்களை தேடி மக்கள் ஓடுகிறார்கள்.
1. வியாபாரம்
2. வேடிக்கை

இதில் வியாபாரம் என்றால் தனது பொருளை விற்பனைக்கு செய்து லாபம் பார்க்க விரைகிறார்கள்.
வேடிக்கை என்றால் அங்கே எதையும் விற்கவோ வாங்கவோ அல்ல, விண்டோ ஷாப்பிங் என்று சொல்கிறோமே அப்படி வேடிக்கை பார்க்க வேண்டியும் செல்கிறார்கள்.

எப்போது தெரியுமா செல்கிறார்கள்?

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது...

வதரகூக - அத்தோடு விட்டுவிடுகிறார்கள்

காயிமன் - நின்ற நிலையில்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்க அவர்களை பேச விட்டு விட்டு அந்த கூட்டத்திலிருந்து எழுந்து செல்வது என்பது மிகவும் அவமரியாதையான நன்னடத்தை இல்லாத செயலாகும்.

குல் - சொல்லுங்கள்..!

மா - எது

இன்தல்லாஹி - அல்லாஹ்விடத்தில் உள்ளது

ஹைருன் - சிறந்தது

மினல் லஹ்வி - கேளிக்கையை விடவும்

வமினல் திஜாரதி - வியாபாரத்தை விடவும்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து சொல்ல சொல்கிறான்..

என்ன சொல்ல சொல்கிறான்?

அல்லாஹ்விடத்தில் உள்ளது மேலே கண்ட இரண்டையும் விட சிறந்தது என்கிறான்.

ஆனால் மேலே சொல்லும் போது முதலில் வியாபாரத்தையும் இரண்டாவது வேடிக்கையையும் சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் உள்ளது சிறந்தது என்று வரும் போது முதலில் வேடிக்கையையும் வியாபாரத்தையும் விட சிறந்தது என்று மாற்றி சொல்கிறான்.

முதலில் சொன்னது மக்கள் விரைந்து செல்வது வேடிக்கையை விட வியாபாரத்திற்கு தான். அல்லது வேடிக்கைக்கு செல்பவர்களை விட விற்பனைக்கு செல்பவர்கள் அதிகமாக விரைந்து முடிக்க பார்ப்பார்கள்.

ஆனால், இரண்டிலும் எது தவறானது என்று கேட்டால், அது வேடிக்கைக்காக செல்வது தான், அதனால் தான் வேடிக்கையையும் வியாபாரத்தையும் என்று சரியான இடத்தில் முன் பின் பொருத்தி அல்லாஹ்விடத்தில் உள்ளது இதனை விட சிறந்தது என்கிறான்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

ஹைரு - சிறந்த

ல் ராஜிகீன் - வழங்குபவன்

மற்றும் அல்லாஹ் தான் நமக்கு வழங்குபவன், அந்த நேரத்து விற்பனைக்கு வாங்க வரும் வியாபார குழு அல்ல.

இன்னும் (நபியவர்களே. நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, (ஊருக்கு திரும்புவதை) கண்டால் அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், (நீங்கள் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது,) நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.