Tuesday, September 15, 2015

நூருன் அலா நூர் (ஒளிக்கு மேல் ஓளி)

முன்னெச்சரிக்கை: மிகப் பெரிய பதிவு.

குரான் ஷரீஃபில் ரொம்பவும் பிரபலமான சொற்றொடர் “நூருன் அலா நூர்”.
இதனை பற்றி பல அருமையான ஆய்வுகளடங்கிய விளக்கவுரைகள் மார்க்க புத்தகங்கள் எங்கும் வழிந்து கிடக்கின்றது. இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நூருன் அலா நூர் எனும் சொற்றொடரை பற்றி மிக ஆழமான அர்த்தங்களை கொண்ட மிஷ்காதுல் அன்வார் எனும் ஒரு நூலையே எழுதி தந்தார்கள்.

ஒளியை பற்றி இயற்பியல் வல்லுனர்கள் இன்றளவும் ஆச்சர்ய கண்களோடு தான் பார்த்து வருகிறார்கள். அது "particles" ஆகவும் "waves" ஆகவும் செயல்படுகிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.

பொதுவாக "waves" என்றால் அது செல்வதற்கு ஒரு பொருள் (medium) தேவைப்படும். உதாரணமாக ஒலி அனும் waves செல்வதற்கு காற்று மண்டலம் தேவைப்படுகிறது. காற்று இல்லாத வெற்று மண்டலத்தில் அதாவது vacuum த்தில் ஒலி செல்ல முடியாது.
ஆனால் இந்த ஒளியானது செல்வதற்கு எந்த ஒரு மீடியமும் தேவையே இல்லை. மிக ஆச்சர்யமாக இருக்கிறது (fascinating).

அல்லாஹ் குரான் ஷரீஃபில் பல இடங்களில் ஒளியை பற்றி பேசுகிறான்.

2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
257வது வாக்கியம்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருளின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.

மேலே உள்ள வாக்கியத்தில் அல்லாஹ் வந்து இருள்களிலிருந்து வெளிச்சத்தின் (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) பக்கம் கொண்டு வருவதாகவும் ஷைத்தான் வெளிச்சத்திலிருந்து (அரபியில் நூர் என்ற வார்த்தையில் சொல்கிறான்) இருளின் பக்கம் கொண்டு வருவதாகவும் சொல்கிறான்.

66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
8வது வாக்கியம்
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

மேலே உள்ள வாக்கியத்தில் ஈடேற்றம் பெற்றவர்களுடைய ஒளியை பற்றி (நூர் என்ற அரபி வார்த்தை) அவர்களை சுற்றி இருப்பதாகவும் அவர்கள் அதனை முழுமையாக்கி வைக்குமாறு கேட்பார்கள் என்றும் கூறுவதாக சொல்கிறான்.

இது பத்தாதற்கு தான் அனுப்பிய வேதங்களை நூர் என்று கூறுகிறான்

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்றாத் வேதத்தை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
44வது வாக்கியம்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
மேலே உள்ள வாக்கியத்தில் தவ்றாத்தில் பேரொளி இருந்ததாக கூறுகிறான்.

ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இன்ஜிலை ஒளியோடு ஒப்பிடும் வாக்கியம்
5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
46வது வாக்கியம்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
மேலே உள்ள வாக்கியத்தில் இன்ஜிலில் ஒளி இருந்ததாக கூறுகிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட குரான் ஷரீஃபையும் அல்லாஹ் நூர் என்று சொல்கின்ற வாக்கியம்

64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
8வது வாக்கியம்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
அல்லாஹ் இங்கே குரான் ஷரீஃப் என்று குறிப்பிடாமலேயே நாம் இறக்கி வைத்த ஒளி என்று கூறுகிறான்.
இது மாத்திரமல்லாமல் அல்லாஹ் முஃமீன்களையே ஒளி என்று தான் குறிக்கிறான். அந்த வாக்கியம் வருமாறு:

57. ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)
13வது வாக்கியம்
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
மேலே உள்ள வாக்கியத்தில் முஃமீன்களை பார்த்து முனாஃபிக்கானவர்கள் (நன்கு கவனிக்கவும் - காஃபிரானவர்கள் அல்ல) உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம் என்று கேட்பதாக மிக அற்புதமாக சொல்கிறான்.
நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை அல்லாஹ் ஒளி என எடுத்தியம்பும் அருமையான வாக்கியத்தையும் பார்ப்போம்:

5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
15வது வாக்கியம்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

மேலே உள்ள வாக்கியத்தில் முக்கியமாக இரண்டு சப்ஜெக்டை பற்றி பேசுகிறான். ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றொன்று குரான் ஷரீஃப். பெருமானாரை பற்றி இரண்டாவது முறை குறிப்பிடும் போது ”பேரொளி” என்கிறான் குரான் ஷரீஃபை பற்றி குறிப்பிடும் போது ”தெளிவு” என்று கூறுகிறான்.

ஆக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரொளியாக இருக்கிறார்கள். முஃமீன்கள் ஒளியாக இருக்கிறார்கள். வேதங்களும் ஒளியாக இருக்கின்றன.

அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களில் ஒன்றான அந்நூர் என்ற பெயரை குரான் ஷரீஃபில் உள்ள 24வது அத்தியாயமான ஸூரத்துந் நூரில் வரும் 35வது வாக்கியத்தை பிரதானமாக கொண்டே நாம் அமைத்திருக்கிறோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு மாதிரி பரவசம் பற்றிக் கொள்கின்ற ஆயத்தாக இந்த ஆயத்து அமைந்திருக்கிறது. அந்த வாக்கியத்தை படிப்போம்.

புரிந்து கொண்டதை இப்படி வெளிப்படுத்த விழைகிறேன்:
24. ஸூரத்துந் நூர் (பேரொளி)
35 வது வாக்கியம்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள் -
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கின்றான்.

கண்களால் எந்த பொருளையும் பார்க்க முடியாது, கண்ணில் ஒளி இல்லை என்றால்.
கண்ணில் ஒளி இருந்தாலும் இருட்டில் எதையும் பார்க்க முடியாது வெளியில் ஒளி இல்லை என்றால்.

இன்று நாம் வானத்தில் உள்ளதையோ அல்லது பூமியில் உள்ளதையோ வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது என்றாலும் அதனிலிருந்து விளங்கி கொள்ள வேண்டியது அறிந்து கொள்ள வேண்டியதை நீங்கள் perceive செய்ய வில்லை என்றால் அப்பவும் நீங்கள் அந்த பொருளை பார்க்கவில்லை என்று தான் பொருள்.

அப்படி நீங்கள் ஒரு பொருளில் என்ன பார்க்க வேண்டும்? அல்லது அந்த பொருளிலிருந்து எதை perceive செய்ய வேண்டும்?

ஒரு பொருளிலிருந்து எதை விளங்கிக் கொள்ள வேண்டுமோ (perceive) அதனை நீங்கள் விளங்காமல் வேறு விளங்க கூடாத ஒன்றை விளங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது perception distortion எனப்படும்.

கண்ணில் உள்ள ஒளி என்றாலும் சரி, பார்க்கும் பொருளில் உள்ள ஒளி என்றாலும் சரி அது அல்லாஹ் தான். அதாவது உதாரணமாக கடல் இருக்கிறது அதை நான் பார்க்கிறேன். பெரிதாக என்னால் கடலை பற்றி விவரிக்க முடியாது. ஆனால் கடல் ஆராய்ச்சியாளர்கள் கடலை பற்றி வால்யூம் வால்யூமாக புத்தகம் எழுதுவார்கள். இங்கே ஒளி என்பது நீங்கள் ஒரு பொருளை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வேறுபடும்.

ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு கடலை பற்றி ஆராய்ச்சி செய்தாலும் அதன் மூலமாக அல்லாஹ்வை விளங்கிக் கொண்டீர்களா என்பது தான் முக்கியம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஹதீதை நான் படித்த ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன், “ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க வாளியை விடும் போது அந்த வாளியானது அல்லாஹ்வை முட்டுகிறது..” என்பது போல் அந்த ஹதீது வரும்.

வானங்கள் பூமி எது என்ற போது அதில் உள்ள ஒளியாக அல்லாஹ்வே இருக்கின்றான்.அந்த அல்லாஹ்வின் ஒளியை பற்றி பேசுகிறான். எந்த ஒரு பொருளுக்குள்ளும் மறைவாக அல்லாஹ் எனும் ஓளியே அமையப் பெற்றுள்ளது.

مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌
மஸலு நூரிஹி கமிஸ்காதி ஃபீஹா மிஸ்பாஹுன் -
அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும்.
அந்த ’ஒளி’க்கான விளக்கத்தை அந்த ஒளியாகிய அல்லாஹ்வே சொல்கிறான்.
அதுவும் உவமை என்று கூறுகிறான். அதாகப்பட்டது ஒரு மாடத்தை பற்றி குறிப்பிடுகிறான். நீங்கள் ஒரு இடம்/வீடு இருட்டடைந்து கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுக்க விளக்கின் ஒளி படர வேண்டும் என்பதற்காக ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாடத்தில் தான் விளக்கு உள்ளது.
இதை இன்னும் deeper ஆக விளங்கிக் கொள்ள வீட்டிற்கு பதிலாக மனித உடலை நினைத்துக் கொள்ளுங்கள். அது இருளடைந்து அதாவது உயிரற்று கிடக்கிறது. அதில் உள்ள விலா எலும்புகள் தான் மாடம் என்பதாகும். அதில் உள்ள விளக்கானது இதயத்தை குறிக்கும்.

الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌
அல்-மிஸ்பாஹு ஃபீ ஜாஜதின் -
அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது;
அந்த விளக்கானது ஒரு கண்ணாடியின் உள்ளே இருக்கின்றது. பொதுவாக கண்ணாடி என்றால் எளிதில் அழுக்கடையும், தெறிப்பு ஏற்படும், ஆகவே அடிக்கடி சுத்தம் செய்து ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்ணாடியானது இதயத்தில் சுற்றியுள்ள நப்ஷ் எனும் மனசை குறிக்கும். அது எந்த நேரத்திலும் ஷைத்தானை நோக்கி தூண்டப்படலாம். அதனை அடிக்கடி திக்ர் செய்து சுத்தப் படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ
அஜ்ஜுஜாஜதுன் க அன்னஹா கவ்கபுன் துர்ரிய்யுன் -
அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்.
அந்த கண்ணாடி தான் அந்த வீடு முழுக்க ஒளியை ஊட்டும் நட்சத்திரம் போல இருக்கிறது.
உள்ளே இருக்கின்ற விளக்கு உடம்பு முழுக்க படர வேண்டும் என்றால் கண்ணாடியை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கே வலியுறுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ
யுவ்கது மின் ஸஜரதின் முபாரகதின் ஜய்தூனதின் -
அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது.
இப்போ அந்த விளக்குக்கு திரும்ப வந்து விடுங்கள், வீடு முழுக்க இருளடைந்து உள்ளது, வெளிச்சம் தேவை, வெளிச்சம் வீடு முழுக்க பட வேண்டும் என்றால் மாடம் தேவை, மாடம் உள்ளது, அதில் விளக்கு உள்ளது, விளக்கு கண்ணாடி குவியலின் உள்ளே உள்ளது, இப்போ என்ன தேவை? அந்த விளக்கு ஒளியூட்டப்பட வேண்டும்.. அதற்கு என்ன தேவை? எண்ணெய் தேவை. அந்த எண்ணெய் பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தினால் எறிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் தான் ரூஹு. அது தான் அல்லாஹ்.

لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ
லா ஸர்கிய்யதின் வலா கர்பிய்யதின் -
அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று.
அந்த எண்ணெயானது கீழ்த்திசையை சேர்ந்ததுமல்ல...
மேல்திசையை சேர்ந்ததுமல்ல
அல்லாஹ்வானவன் எந்த ஒரு பொருளை போலவும் இல்லை..நீங்கள் பார்க்கின்ற, பார்க்க முடியவில்லை என்று கூறுகின்ற அல்லது கற்பனை செய்கின்ற அல்லது கற்பனை செய்ய இயலாத இப்படி எந்த பொருளாகவும் இல்லை.. அது ஓர் அற்புதம்..

يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌
யகாது ஜய்துஹா யுளீஉ வலவ் லம் தம்ஸஸ்ஹு னாருன் -
அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும்,
சாதாரணமாக ஒரு நெருப்புக்கு தேவையான வெப்பம் என்பதே இல்லாமல் போனாலும் அந்த எண்ணெயானது ஒளி வீச தான் முற்படுகிறது.
நீங்கள் இறைவனையே நினைக்கா விட்டாலும் சரி, அந்த ரூஹானது அது அதன் தன்மையை மாறாமல் இருந்து கொண்டே தானிருக்கும். உங்களால் தான் அந்த விளக்குக்கு ஒளி என்று நினைத்து விடாதீர்கள்.

نُوْرٌ عَلٰى نُوْرٍ‌
நூருன் அலா நூர் -
ஒளி மேல் ஒளியாகும்.
உங்களுக்குள் அல்லாஹ் வழங்கியுள்ள அந்த ஒளியை (அல்லாஹ்வை) நீங்கள் ஒளியூட்டினால் அல்லாஹ் தன் புறத்திலிருக்கும் உள்ள ஒளியை உங்கள் மீது அவன் வழங்கியிருக்கும் ஒளியோடு ஒன்று சேர செய்வான். இரண்டு ஒளியும் ஒரே frequency யில் இணையும். அது தான் ஒளி மேல் ஒளியாகும். நூருன் அலா நூர்.
ஒளிக்கு மேல் ஒளி வந்தால் இருள் மறையும், கவலை இருக்காது, துக்கம் இருக்காது. அதனால் தான் அல்லாஹ் அவ்லியாக்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு துக்கமோ கவலையோ இருக்காது என்கிறான்.

يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌
யஹ்தில்லாஹி நூரிஹி மய்யஸாஹு -
அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளியின் பால் நடத்திச் செல்கிறான்.
இந்த வாக்கியத்தை இப்படி படிக்க வேண்டுகிறேன்:
யஹ்தில்லாஹி நூரிஹி - அல்லாஹ் ஒளியின் பக்கம் வழிகாட்டுவான்
யஹிதின்னா வழிகாட்டுவது (அல்ஹம்து சூரால யஹ்தி நஸ்ஸிராத்தல் என்று வருமே).
நூரின் அதாவது அல்லாஹ்வின் புரத்திலிருக்கும் ஒளியின் பக்கம் அவன் வழிகாட்டுவான்.
அடுத்த கேள்வி வழி யாருக்கு காட்டுவான்?
மய்யஸாஹு - அதாவது இது இரண்டு அர்த்தம் வருகிறது. முதல் அர்த்தம்: தான் நாடியவருக்கு
இரண்டாவது அர்த்தம்: நாடியவருக்கு (அதாவது ‘தான்’ என்ற வார்த்தையே இல்லாமல்)
ஒரே வார்த்தையில் இரண்டு பேரோட wills ஐயும் ஒன்று சேர்க்கிறான்.
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று தன் நப்ஷை தூய்மைபடுத்த நினைக்கிறானோ அவனுக்கு - என்றும் சொல்லலாம்
எந்த மனிதன் அந்த ஒளியின் பக்கம் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கிறானோ அவனுக்கும் - என்றும் சொல்லலாம்.
நூருன் அலா நூர் என்று எப்படி மனிதனுக்கு வழங்கப்பட்ட நூரையும் தன் புறத்திலிருக்கும் நூரையும் ஒன்றன் மீது ஒன்றாக இணைத்தானோ அதே போல மனிதனுடைய எண்ணத்தையும் தனது எண்ணத்தையும் இணைத்து அழகாக சொல்கிறான்.

وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ
வ யள்ரிபுல்லாஹுல் அம்ஸால லின்னாஸி -
மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இவ்வளவு விளக்கமும் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதனை வைத்தே சொல்கிறான்.

وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
வல்லாஹு பி குல்லி ஸய்இன் அலீமுன் -
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
அந்த அல்லாஹ் எல்லாம் எப்படி எப்படி என்பதை நன்றாகவே அறிந்தவன். எனக்கு ஏன் இன்னும் அந்த அளவிற்கு ஒளி இன்னும் ஒளி வரவில்லை என்றெல்லாம் நீங்கள் எடுத்து குறை சொல்ல வேண்டியதில்லை. அவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன். அவனுக்கு தெரியும்.

Friday, July 3, 2015

குரான் ஷரீஃப் 12. ஸூரா யூசுஃப் - 24வது வாக்கியம் (படித்தது கேட்டதிலிருந்து புரிந்து கொண்டது)

12. ஸூரத்து யூஸூஃப்
24 வது வாக்கியம்

وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

டாக்டர் முஹம்மது ஜானின் தமிழாக்கம்:
நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=12

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தை கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

உலக அறிஞரின் தமிழாக்கம்:
நன்றி: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thaw…/…/yusuf/…
24. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்).229 இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பை கவனிப்போம்:
வலகத் - And Certainly - அத்துடன் நிச்சயமாக
ஹம்மத் - She did desire - அவள் விருப்பம் கொண்டாள்
பிஹி - him - அவர் மீது
வஹம்ம - and he would have desired - அவரும் விரும்பம் கொண்டே இருந்திருப்பார்
பிஹா - her, - அவள் மீது
லவ்லா - if not - இப்படி நடக்கவில்லையெனில்
அன் - that he - அதாவது அவர்
ரஆ - saw - பார்த்தார்
புர்ஹான - the proof - ஆதாரத்தை
ரப்பிஹி - (of) his Lord. - அவருடைய இறைவனிடமிருந்து
கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
இன்னஹு - Indeed, he - நிச்சயமாக, அவர்
மின் - (was) of - இல் (இந்த வார்த்தையை அடுத்த வார்த்தையோடு சேர்த்து படிக்க வேண்டும் - அதாவது ”நம்முடைய அடியார்களில்”)
இபாதினா - Our slaves - நம்முடைய அடியார்கள்
ல்-முஹ்லஸீன் - the sincere - உண்மையானவர் / நேர்மையானவர்

மேலே உள்ள உலக அறிஞரின் தமிழாக்கத்தில் ”அவள் அவரை நாடினாள், அவரும் அவளை நாடி விட்டார்..” என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி மொழி தமிழாக்கம் செய்வதன் மூலமாக இந்த உலக புத்திசாலி என்ன நிறுவ விரும்புகிறார் என்றால், யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் சபலம் இருந்துள்ளது என்று தான். நஊதுபில்லாஹி..

அல்லாஹ் மிக அழகாக இந்த வார்த்தைகளை அமைத்து இருக்கிறான்.
நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள் என்று முதலில் சொல்கிறான்...
அடுத்து “வ” என்ற அரபி வார்த்தையை பயன்படுத்துகிறான்.
”வ” என்றால் ஆங்கிலத்தில் "and" என்று சொல்கிறோமே அதே போல் அரபியில் உள்ள இணைப்பு வார்த்தை..
ஒரு உதாரணம் சொல்கிறேன்..
ஆண் பெண் இரண்டு பேர் இட்லி சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..
அரபியிலும் சரி ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, ”பெண் இட்லி சாப்பிட்டார் ஆணும் இட்லி சாப்பிட்டார்” என்று எழுத தேவையில்லை.. ஒரே வார்த்தையில் “இருவரும் இட்லி சாப்பிட்டார்கள்” என்று சொல்லிவிடலாம்.
"She ate idly and he ate idly" என்று "and"ஐ பயன்படுத்தி எழுத தேவையில்லை, ஒரே வார்த்தையில், "Both of them ate idly" என்று சொல்லிவிடலாம். "and" என்ற வார்த்தையே தேவையில்லை.
இன்னொரு உதாரணம் - இப்படி வைத்துக் கொள்ளுங்கள், ஒருவர் இட்லி சாப்பிடுகிறார், இன்னொருவர் தோசை சாப்பிடுகிறார் என்று. அப்பொழுது தமிழில் பிரித்து தான் சொல்ல வேண்டும். அதே போல ஆங்கிலத்தில் "and" பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

“பெண் இட்லி சாப்பிட்டார் ஆண் தோசை சாப்பிட்டார்” என்று தமிழிலும் "She ate idly and he ate dosai" என்று "and"ஐ பயன்படுத்தி தான் எழுத வேண்டும்.

இப்போ இங்கே படித்து பாருங்கள்..
அல்லாஹ் எப்படி சொல்கிறான் என்று கவனியுங்கள்..

நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள். (அதில் எந்த மாற்றமும் இல்லை)
அவரும் விருப்பம் கொண்டார் என்பதை ”வ” (and) என்ற வார்த்தையை போட்டு அல்லாஹ் பிரிச்சிட்டான்.
ஏனெனில் இரண்டு பேரும் கொண்டது ஒரே மாதிரியான விருப்பம் கிடையாது.
ஏன் கிடையாது?
அதற்கு பின்னர் விளக்கம் சொல்கிறான்..
அவருடைய இறைவனிடமிருந்து வந்த ஆதாரத்தை அவர் பார்த்தார்.

இதற்கு அடுத்து வருகின்ற 25வது வாக்கியத்தின் முதல் செய்தியை மட்டும் படியுங்களேன்..
வஉஸ்தபக ல்-பாப - And they both ran/raced towards the door - அத்துடன் அவர்கள் இருவரும் கதவை நோக்கி (ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு) ஓடினார்கள்.

இங்கே பார்த்தீர்கள் என்றால், இரண்டு பேரும் ஓடினதை இருவரும் ஓடினார்கள் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். அவர் ஓடினார். அவள் ஓடினாள் என்று சொல்லவில்லை. 

அப்போ (நாம படிச்சிக்கிட்டு இருக்கின்ற) இந்த 24வது வாக்கியத்தை எப்படி தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்த 24வது வாக்கியமும் 25வது வாக்கியமும் suggest செய்கிறது என்றால்,
”நிச்சயமாக அவள் விருப்பம் கொண்டாள்..
அவர் தன்னுடைய இறைவனுடைய ஆதாரத்தை கண்டிராமல் இருந்திருந்தால் அவர் விருப்பம் கொண்டிருப்பார்” என்று தான்.
அவர் விருப்பம் கொள்ளவே இல்லை என்பதற்கு தொடர்ந்து வரும் சொற்களும் அழகாக சொல்கிறது...

கதாலிக - Thus, - இப்படியாகத்தான்
லிநஸ்ரிஃப - that, We might avert - நாம் விலக்கிவிட்டோம்
அன்ஹு - from him - அவரிடமிருந்து
அஸ்ஸுவஅ - the evil - தீயவைகளை
வஉல்ஃபஹ்ஸாஅ - and the immorality. - மானக்கேடான செயல்களை
”இப்படியாகத்தான் நாம் அவரிடமிருந்து தீயவைகளையும் மானக்கேடான செயல்களையும் அவரிடமிருந்து விலக்கிவிட்டோம்” என்று சொல்கிறான்.
என்ன அழகாக சொல்லப்பட்டிருக்கிறது...!
நல்லா கவனிங்க... மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டிய செய்தி

கம்ப்யூட்டர், வைரஸ் இவைகளை வைத்து இரண்டு செய்திகள் ஓரு உதாரணத்துடன் சொல்கிறேன்.
முதல் செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கி விட்டது. ஆகையினால் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை வைரஸிலிருந்து விடுவிப்பது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்....
நாம் (அல்லாஹ்) தீயவையும் மானக்கேடானவையிலிருந்தும் யூசுப் அலைஹிஸ்ஸலாத்தை விலகிவிட்டோம்.
Allah removed Yusuf alaihissalaam from evil and shamelessness
இது எப்படி என்றால் தீயதையும் மானக்கேடானதையும் யூசுப் அலைஹிஸ்ஸலாம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அல்லாஹ் அவர்களை விலக்கி விட்டுவிட்டான்.

இரண்டாவது செய்தி:
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்க இருந்தது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை தாக்குவதற்கு முன்பாகவே ஏதோ ஒரு வெளியில் உள்ள கருவி மூலமாக விலக்கப்பட்டது.
இந்த முறைப்படி சொல்வதென்றால்... இப்படி சொல்ல வேண்டும்...
நாம் (அல்லாஹ்) யூசுப் அலைஹிஸ்ஸலாத்திடமிருந்து தீயதையும் மானக்கேடானதையும் விலக்கி விட்டான்
Allah removed evil and shamelessness from Yusuf alaihissalaam
இது எப்படி என்றால் தீயதும் மானக்கேடானது என்ற ஷைத்தான்கள் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றிப் பிடிக்க வந்தது, அல்லாஹ் அவைகளை விலக்கி விட்டான்.

அல்லாஹ் இந்த வாக்கியத்தில் எப்படி சொல்கிறான் என்று நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது செய்தியில் உள்ள உதாரண முறைப்படி தான் சொல்கிறான்.

அல்ஹம்துலில்லாஹ்..! 
ஆக, மொத்த வாக்கியத்தை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்..

தீயவைகளும் மானக்கேடான செயல்களும் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய வந்தன..
அல்லாஹ் அவைகளை யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைய விடாமல் அதை விலக்கிவிட்டான்.
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அப்படி அல்லாஹ் தட்டி விடுவதை கண்டார்கள்.
அல்லாஹ் அப்படி தட்டி விடவில்லை என்றால்..
அது அவர்களை அடைந்திருந்தால் அவர்களும் விருப்பம் கொண்டு தானிருப்பார்கள்..

அல்லாஹ் எந்த அளவுக்கு யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை தூய்மையாக அடையாளப்படுத்தியிருக்கிறான் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கடைசியாக ஒரு செய்தி..
யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களாவது, யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உடலை தான் கிணற்றின் கீழே இறக்கினார்கள்.

ஆனால் இந்த கேடு கெட்ட உலக அறிஞர் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் characterஐயே கீழே இறக்கி விட்டர்.
இந்த தீய மானக்கேடான காரியத்தை செய்தவரின் வாடை கூட நம்மீது படாமல் நம்மை பாதுகாக்க இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.

Saturday, February 28, 2009

தௌர் குகை - சிலந்தி

ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அரசியல் தலைவர் பேசுகிறார். அங்கே திடீரென்று கூச்சல், குழப்பம்,  வெட்டு, குத்து. இதை தொடர்ந்து அந்த கூட்டத்திலிருந்து முதல் ஆளாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுவது அந்த தலைவர் தான். இது தான் இன்றைய தலைவர்களின் முன்மாதிரி.

ஆனால் மக்காவில் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அகிலத்தின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னாரை பின்பற்றியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது பெருமானார் அவர்கள் மக்காவிலேயே இருந்து கொண்டு பின்பற்றியவர்களை அபிசினியாவிற்கும், யத்ரிபுக்கும் (பெருமானார் காலடி எடுத்து வைக்கும் வரை மதினாவின் (மதினத்துந் நபி - நபியின் பட்டணம்) முந்தைய பெயர் தான் யத்ரிப்) அனுப்பி வைத்தார்கள்.

இந்த சமய்த்தில் தான் மக்கத்து குறைஷிகள் ஊர்மன்றமாகிய தாருன்னத்வாவில் அமர்ந்து பெருமானாரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். வீட்டுக்கு ஒருவர் என வேங்கை போல் புறப்பட்டு கொலை வெறியோடு ஆயுதமேந்தி புறப்பட்டனர்.

அதே நேரத்தில் பெருமானார் அவர்கள் அவர்களது தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினா செல்லும் வழியில் மக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தௌர் எனும் குகைக்கு வந்து சேர்கிறார்கள்.

மூன்று நாட்கள் அந்த தௌர் குகையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இதற்கிடையில் கொலை வெறியோடு புறப்பட்டவர்கள் ஆளுக்கொரு திசையாக முஹம்மது நபியவர்களை காணாது தேடி அலைந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் பெருமானாரும் தோழரும் மறைந்திருந்த தௌர் குகையை நெருங்கினர். அந்த சிலர் அங்கே எதிர்பட்ட ஒரு இடையனை பார்த்து, 'இந்த குகையில் யாரேனும் ஒளிந்திருப்பதை பார்த்தாயா?" என்று கேட்டனர்

அதற்கு அந்த இடையன், "நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை, நீங்களே நுழைந்து பாருங்கள்! யாரேனும் அங்கே இருந்தாலும் இருக்கலாம்" என்று கூறினான்

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பது பெருமானார் அவர்களுக்கும்  தோழர்அவர்களுக்கும் தெளிவாக கேட்டது.

ஈரக் குலையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தோழர் அவர்கள் ,
".. குனிந்து தன் கால் பெரு விரலை பார்த்தால் கூட நாம் உள்ளே இருப்பது தெரிந்து விடுமே.. நிறைய பேர் வந்திருப்பது போல் தெரிகிறதே . நாம் இருவர் தாமே இருக்கிறோம்" என்று ஏக்கத்திலும் பயத்திலும் கூறினார்கள்

இத்தகைய பயம் நியாயமானது தான், அந்த நேரம் சாமானிய நேரமில்லை. கையில் வாளுடன் தலையை சீவுவதற்கு காத்திருக்கும் கொலை வெறி கூட்டம் வெளியே. இரண்டே இரண்டு பேர் மட்டும் அதுவும் நிராயுதபாணியாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி ஒளிந்து கொண்டு உள்ளே. என்ன செய்வது? வயிற்றுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

பெருமானார் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்படி பதில் மொழி பகர்ந்தார்கள், "இல்லை, இல்லை, நாம் மூவர் இங்கு இருக்கின்றோம், அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்.."

யா அல்லாஹ்.! என்ன உறுதி! என்ன நம்பிக்கை! என்ன தெளிவு!

இனி இந்த பிரச்சினை பெருமானாரின் சம்மந்தப்பட்டது அல்ல, இறைவனின் சம்மந்தப்பட்டது.

இறைவன் தன் தூதரை, தன் மீது முழுமையாக பொறுப்பை ஒப்படைத்தவரை எப்படி காப்பாற்ற போகிறான்? எந்த படையை அனுப்ப போகிறான்?  என்பதே படிக்கும் அனைவரும் எதிர்நோக்கும் அடுத்த விநா.

அவன் யானைப் படையையோ அல்லது குதிர்ரைப் படையையோ அனுப்பவில்லை. அவன் அனுப்பியது ஒரே ஒரு சிலந்தி பூச்சி. ஆம், அவன் அனுப்பிய அந்த சிலந்திப் பூச்சி திடீரென்று நுழைவாயிலில் ஒரு வலை பின்னியது. அல்லது இறைவன் அவ்வாறு பின்ன சொல்லி அதற்கு செய்தியை அனுப்பினான். பின்னிய அந்த வலை நுழைவாயிலையே மூடியிருந்தது.

அந்த இடையன் சொன்னதை கேட்டு குகையின் உள்ளே சென்று பார்க்கலாம் என்று குனிந்த ஒருவன், "வீணாக உள்ளே போய் ஏன் பார்க்க வேண்டும்?, இந்த வலையை பார்த்தாலே முஹம்மது பிறப்பதற்கு முன்னாலேயே பின்னப்பட்ட வலை
மாதிரியல்லவா இருக்கிறது.." என்று கூறி விட்டு "வாருங்கள் போகலாம்.." என்று கூறி விட்டு ஊர் திரும்புகிற வழியை பார்த்தான்.

பெருமானார் அவர்கள், "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று நன்றி பெருக்குடன் கூறினார்கள்.

------------------------------------------------------------------------------

தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் இறைவன்.

அல்ஹம்து லில்லாஹ்

------------------------------------------------------------------

சிலந்தி வலை பற்றிய குரான் ஷரீபின் வசனம் கீழே தரப்பட்டுள்ளது

அல்குரான் ஷரீப்:

அத்தியாயம் 29 - அல்-அன்கபூத் -

வசனம் 41:

அல்லாஹ் அல்லதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்)
--------------------------------------------------------------------------
 இஸ்லாத்தில் கவிஞர்களுக்கு மரியாதை உள்ளது. ஹஸ்ஸானுப்னுதாபித் (ரலி) என்ற பெருமானாரின் தர்பார் வித்வானுக்கு அவர்களின் கவிதையை அனைவரும் கேட்பதற்கென மஸ்ஜித் நபவியில் தனி ஆசனம் அமைக்கப்பட்டிருக்குமாம்.

நம் மதிப்பிற்குறிய தாய்மொழிக் கவிஞர்களும் சிலந்தி மாலை பாடியிருக்கிறார்கள். மெய்சிலிர்க்க வைக்கும் கவிதைகள் இதோ:


கவிக்கோ அப்துற் றஹ்மான்

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
'சஜ்தாவின்' சுவடுகள்
(சஜ்தா - சிரம் பணிதல்)

உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்

நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் 'ஈமான்' பின்னால்
ஏகும் ரகுமான்

இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் - அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே

உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்

இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு

அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை

எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்

அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது

உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது

இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று 'ஹிரா'
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று 'தௌர்'
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

'தௌர்' குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

'தௌர்' குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ

சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்

உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்

மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்

அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ

நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் - இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் - இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்

இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது

இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி  விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது

இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது

என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா

புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு


மு.மேத்தா


நாயகம் ஒரு காவியம்


சிலந்தி மணிமாலை


கவிக்குரல்

சிலந்தி யென்றால் - அது
சாதாரணச் சிலந்தியா?
இல்லை...
சிங்கத்தின் குகைக்கே
ஆடை தைத்த
சிலந்தி!

பட்டொளி வீசிப்
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத்
துணி நெய்யத்தான்
அன்று அச்சிலந்தி
நூல் நூற்றதோ?

ஏகத்துவ நெறியெனும்
இனிய குழந்தைக்கு
தௌர்குகைச் செவிலித்
தாய் அவள்
வலைச்சட்டை பின்னி
மனம் மகிழ்ந்தாளோ?

வள்ளல் நபிகளார்
வருகை புரிந்தால்
குட்டைச் சிலந்திப்பெண்
குகையின் வாசலுக்கு - வெண்
பட்டுக் குஞ்சம்
கட்டிப் பார்த்தாளோ?

இன்று
அருமை நபிகளாம்
அண்ணலாரைப் பற்றி
எத்தனையோ நூல்கள்
எழுதப் படுகின்றன
அவற்றுக் கெல்லாம்
ஆதாரம்

சிலந்தி எழுதிய
அந்தச்
சிறுநூல் தானே?

வெறும் -
நூலாம் படைதான்!
ஆனாலும் அது
அண்ணலாரைக்
காட்டிக் கொடுத்து
ஐந்தாம் படையாய்
ஆகவில்லை - ஆதலினால்
அது
நாலாம் படைக்கும்
மேலாம் படைதான்!

உத்தமத் தலைவருக்கு
உறைவிடம் தந்ததனால்
தௌர் குகைக்கு
சிலந்தி என்கிற
சிறிய பிரமுகர்
பொன்னாடை போர்த்திப்
போற்றினாரோ?

சிலந்தி வலை என்னும்
கலங்கரை விளக்கம்
தேடி வந்த
பகைக் கப்பல்களைத்
திசைதிருப்பி அனுப்பியது..
மனித குலத்தின்
மாலுமியைக் காப்பதற்கு!

சிலந்தியே!
பெருமானாருக்கும்
பகைவருக்கும் நடுவே
நீ ஒரு திரை போட்டாய்!
அந்தத் திரையில்தான்
உத்தம நபியாம்
ஓவியக்காரர்
சாந்தி மார்க்கம் என்ற
சித்திரத்தை வெகு
சிறப்பாகத் தீட்டினார்!

சிலந்தியே! நீ பின்னிய
வலையின்
விலை என்ன தெரியுமா?
அன்றாடம் அதை
ஐந்துமுறை செலுத்துகிறார்!
லட்சோப லட்சம்
பள்ளிவாசல்களில் கேட்கும்
பாங்குச் சத்தம் - உன்
பங்குக்கு மார்க்கத்தார்
பகிர்ந்து தரும் சத்தம்!

ஆண்டவனே நீயொரு
அதிசயமானவன்!
உலக எதிரிகளை
ஊதி அழிக்கின்ற
பாதுஷாமாருக்கும்
கிடைக்காத பாக்கியத்தைச்
சாதாரண சிலந்திக்குத்
தந்தவன் நீ!
உன்னுடைய
பேரருளை நினைத்துப்
பிரமித்துப் போகின்றேன்!

இறைவா!
என்ன நாடகம் இது?
இரும்புக் கோட்டைக்குள்
இருப்பதாய் நினைத்தபடி
தருக்கிக்கொண் டிருப்போரின்
தர்பார் புகழையெல்லாம்
ஒரு சிலந்தி வலைமுன்னே
சேதப்படுத்தினாய்..
என்ன நாடகம் இது?

படைத்தவனே! நீ எம்மைப்
பாதுகாக்க நினைத்துவிட்டால்
படைபலங்கள் தேவையில்லை
சின்னஞ் சிறியதொரு
சிலந்தி வலைகூடப்
போதும் - என்பதை
நாங்கள்
புரிந்து கொள்ள முடிகிறது!

Friday, February 13, 2009

கப்ருகளை ஒழுங்குபடுத்த வேண்டும்

ஆதார விரும்பிகளான வஹ்ஹாபிய கருத்துடைய சகோதரர்களிடத்திலே ஒரு வேடிக்கையான குணம் உண்டு, அதாவது அவர்கள் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதை சரி என்று நிரூபனம் செய்வதற்காக அந்த கருத்துக்கு சாதகமான ஆதாரங்களை தேடுவது, அப்படி எதுவும் கிடைக்காமல் போனாலும் கொஞ்சூண்டு பொருத்தமான ஒரு ஹதீதை எடுத்துக் கொண்டு அதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்து இந்த ஹதீது இந்த கிதாபிலே உள்ளது என்று ஹதீதின் எண்களை சொல்லி குட்டையை குழப்புவது.

அப்படி குழப்பிய குப்பைகளில் ஒன்று கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் என்று அள்ளி விட்டது.

இந்த காட்சி பதிவில் வஹ்ஹாபிய சகோதரர்கள் மேற்கோள் காட்டிய அதே ஹதீதை "தரைமட்டமாக்குங்கள்" என்ற விளக்கம் தவறானது என்று "ஒழுங்குபடுத்துங்கள்" என்ற உணமையான விளக்கத்தை தெளிவு படுத்துகிறார்கள்.

அருமையான விளக்கம்.

Wednesday, November 26, 2008

குர்பான்

முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும்.

'கஅபா' என்ற இறையில்லம் அகிலத்தின் அருட்கொடை ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட இடமல்ல. நாயகம் அவர்களுக்கு முன்னால் தோன்றிய பல நபிமார்களுக்கும் அது தொடர்புடைய இடமாகும். குறிப்பாக இப்ராஹீம் நபி (ஸல்) மற்றும் இஸ்மாயில் நபி (ஸல்) அவர்களோடும் சம்மந்தப்பட்ட இடமாகும்.

இப்ராஹீம் நபியவர்கள் அவர்களுடைய எண்பத்தாறாவது வயதில் இஸ்மாயில் என்ற பிள்ளை கனியமுதை பெற்றெடுக்கிறார்கள். முதுமை பருவத்தில் பிறந்த குழந்தையின் மீது தந்தையின் பாசமானது எப்படி இருந்திருக்கும் என்று எதுவும் எழுதாமலே எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியும். அந்த பிள்ளையை தவிர வேறு ஒரு உவப்பான பொருள் எதுவும் எந்த தந்தைக்கும் இருக்க முடியாது என்பது தெளிவு.

இந்த கட்டத்தில் தான் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஒரு மிகப் பெரிய சோதனை காத்திருந்தது. நெஞ்சை உலுக்கும் அந்த சோதனை இறைவனிடமிருந்து சமிக்ஞை மூலமாக இப்ராஹீம் நபியவர்களுக்கு வருகிறது. அதாவது தனது அருந் தவப் புதல்வனை ஆருயிர் செல்வனை குழந்தை இஸ்மாயிலை அறுத்து பலியிட வேண்டும் என்பது தான் அது.

இந்த இடத்தில் சற்று உணர்ந்து சிந்தித்தல் நல்லது. இப்ராஹீம் நபியவர்கள் உள்ளம் எப்படி இருந்திருக்கும்..? நினைத்து பார்க்கையில் ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது.

இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர வேறு எதையும் நாடிராத இப்ராஹீம் நபியவர்கள் இறைவனின் செய்தியை இஸ்மாயிலிடம் வெளியிடுகிறார்கள். குணக்குன்றான இஸ்மாயில் அவர்கள் சொன்னார்கள், 'இறைவனின் கட்டளையை தயக்கமின்றி நிறைவேற்றுங்கள்.. அல்லாஹ் அருள் கூர்ந்தால் அவற்றைப் பொறுத்து கொண்டு உறுதியாக இருப்பவனாகவே என்னைக் காண்பீர்கள்..' என்று. இப்ராஹீம் நபியவர்கள் திருவாயிலிருந்து, 'அல்ஹம்து லில்லாஹி ஹம் தன் கதீரா..' என்ற நன்றிமொழி வெளிவந்தது.

இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் இறைவனுடைய கலீல் என்பதற்கு பொருத்தமான இப்ராஹீம் நபியவர்களது கூரிய வாள் மினா எனுமிடத்தில் கழுத்தை உறுதி படக் காட்டிக் கொண்டிருந்த தமது அருமை மைந்தன் இஸ்மாயிலை குறி பார்த்தது.

அப்போது தான் வல்ல இறைவன் கூறினான், 'இப்ராஹீமே! நீர் கண்ணுற்றதை மெய்ப்பித்து காட்டி விட்டார். நல்லவர்களுக்கு யாம் இவ்வாறே வெகுமதி அளிப்போம் திட்டமாக் இஃது ஒரு தெளிவான பெரும் சோதனையாகும்!' என்று.

அதன் பிறகு இறைவன் இஸ்மாயில் அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இதை தனது திருமறை குரானில் 'மகத்தான பலியின் மூலம் அவரை மீட்டோம். அவருடைய புகழை அவருடைய வழித்தோன்றல்களின்கண் நிலைத்திடவும் செய்தோம். இப்ராஹீமுக்கு சாந்தி உண்டாவதாக!' என்று மிக அழகிய சொற்களால் எடுத்துரைக்கின்றான்.

'மகத்தான பலி' என்றால் சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இகபர உலகில் நாடியது நிறைவேற வேண்டி கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான்.

'முஸ்லீம்' என்றால் இறைவனுக்கு முற்றிலும் வழிபடுதல் என்று பொருள். எனவே இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட ஒரு உண்மை முஸ்லீமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே இந்த மகத்தான பலியாகும்.

இந்த 'மிருக பலியான' குர்பான் எனப்படுவது புறச் சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து ஊன் உருக, உளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.

இதை தான் இறைவன் தனது அற்புத திருமறையில் '(இவ்வாறு குர்பான் செய்த போதினும்) அதன் மாமிசமோ அதன் இரத்தமோ இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே அவனை அடையும்' என்று அத்தியாயம் 22  வசனம் 37ல் மிக அற்புதமாக விளக்குகின்றான்.

திருமறையின் இந்த வசனங்கள் இஸ்லாமிய தியாகத்தின் தத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்கி விடுகின்றன.

இப்ராஹீம் நபியவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி தியாகத்தை நெஞ்சில் நிறுத்திடவும் நிறுத்திய தியாகம் நிலைத்திடவும் வல்ல அல்லாஹ்(ஜல்)விடம் பிரார்த்திப்போம்

Saturday, November 22, 2008

மஸ்னவி பற்றி

மஸ்னவி எனும் மாபெரும் இலக்கியம் கதை கவிதை எனும்  கூறுகளை உள்ளடக்கியது. இதனை பாரசீக மொழியில் இயற்றியவர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) என்ற இறைஞானியே ஆவார்கள்.

இவர்கள் மஸ்னவியை அவர்களது வாழ்வின் இறுதி காலங்களில் தான் அருளினார்கள், இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இறுதியாக எழுதிய கதை/கவிதை முழுமை பெறாமலே உள்ளது. மஸ்னவியை 54 அல்லது 57 வயதிலிருந்து (1258 - 1261) மரணம் வரும் வரை (1273) எழுதிக் கொண்டே இருந்தார்கள். 

மஸ்னவி எனும் நூலானது சூபி எனப்படும் இறைஞானிகளின் கதைகள், நீதி கதைகள் மற்றும் ஆன்மீக போதனைகளை அடிப்படையாக கொண்டது. உண்மையில் இது, குரான் ஷரீபின் விளக்கங்களாகவும் குறிப்புகளாகவும்
அமையப் பெற்றுள்ளது.

ரூமி (ரஹ்) அவர்களே மஸ்னவியை பற்றி குறிப்பிடும் போது, "இது (இஸ்லாம்) மார்க்கத்தின் வேருக்கு வேருக்கு வேராகவும் குரான் ஷரீபின் விளக்கமாகவும் உள்ளது (வ ஹூவா உஸுலு உஸுலு உஸுலுத் தீன்)"  என்றார்கள்