Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபில் மனைவியை அடிக்க சொல்வது பற்றி...

முஹல்லாவாசி ஒருவரின் மனைவி தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவனோடு தொடர்பு வைத்திருந்தார். கணவனுக்கு தெரிந்த மறுநாளே கணவரையும், தான் பெற்றெடுத்த இரண்டு பிள்ளை கனியமுதுகளையும் விட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்.

கணவரோ ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார், ‘அவர் அவனை விட்டு விட்டு திரும்ப திருந்தி வருவாரேயானால் நான் ஒரு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று.

-----------------------------------------------------------

இன்னொரு முஹல்லாவாசி எப்போதும் அரை கை சட்டை போடுபவர். நிகாஹ் முடிந்த பிறகு மாப்பிள்ளை மாதிரி முழுகை சட்டை அணிந்தவாறு வந்தார்.

‘சூப்பரா இக்கிதுங்கணி..’ என்றால் ‘எல்லாம் அவன் செயல்’ என்பது போல்

‘எல்லாம் பொண்டாட்டி செயல்..’ என்றார்.

ஆஹா நம்மளும் நிகாஹுக்கு பிறகு இப்படி தான் முழுகை சட்டை எல்லாம் போட்டு அசத்தணும் என்ற ஆசை வந்தது.

ஒரு நாள் முழுகை சட்டையின் ரகசியம் உடைந்தது.

உடைந்த ரகசியம் இது தான்,  ’அவரது மனைவியோடு சண்டையிட்டதில் அவரது மனைவி கையெல்லாம் கீறி விட்டு கை பூரா ரத்தம் தோய்ந்த கோடுகளாய் காட்சி தந்தது.

அது வெளியே தெரியாமல் இருக்கவே இந்த முழு கை சட்டை ஏற்பாடு.

இதையெல்லாம் அவர் வாயாலேயே கேட்டு தெரிந்த பிறகு என்னை பார்த்து இப்படி கேட்டார், ‘உங்களுக்கு எப்போ நிகாஹ்’ என்று.

இன்னொரு அடி(னு)பவசாலி இப்படி சொன்னார், ‘ஏங்க நம்ம கதைய எல்லாம் சொல்லி அவர பயமுறுத்துறீங்க.. நீங்க பயப்படாதீங்க தம்பி.. நம்ம ம்மா வாப்பா நம்மள அடிச்சதில்ல... நம்மட வாத்தியார் நம்மள அடிச்சதில்ல... அத மாதிரி தான்...’ என்றார்.

நிகாஹ் செய்துகொள்ள அல்ல நிகாஹ் என்ற இந்தி படத்தை பார்க்கவே கூட முதன்முதலாய் பயம் வந்தது.

-------------------------------------------

பொண்டாட்டிட்ட அடிவாங்கிய உண்மை சம்பவம் ஒரு பக்கமா இருக்கட்டும். குரான் ஷரீஃபில் ”...மனைவியை அடியுங்கள்...” என்று ஒரு வசனமே இருக்குதாமே..

இந்த வசனம் பற்றி பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள்.

’இஸ்லாம் வெளிப்படையாகவே மனைவியை அடிக்க சொல்வதால் இது சர்வ நிச்சயமாக ஒரு ஆணாதிக்க மதம்..’

‘மனைவியை அடிப்பதா... முதல்ல அடி வாங்காம இருக்க வழி இருக்கான்னு சொல்லுங்க...’

’அடிக்க சொல்ல ஒரு வேதம் எதற்கு... இதை தான் எல்லா குடிமகன்களும் செய்றாங்களே..’

இன்னும் எப்படியெல்லாம் வாய்க்கு வருதோ எப்படியெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்களோ அப்படியெல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.

சிலர் ’குரான் ஷரீஃப் அப்படி தவறாக வழிகாட்டினாலும் எல்லா முஸ்லீமும் அப்படி செய்வதில்லை..’ என்றும் சொல்கிறார்கள்.

சில பேர் தெரியாதமாறி, ‘உங்க மதத்துல பொண்டாட்டிய அடிக்க சொல்லியிருக்கா, என்ன..?’  என்று மூக்குடைப்பது போல் வாயடைக்காமல் பேசுவார்கள்.

‘சரி நீங்க என்ன இல்லைன்னு சொல்ல போறீங்களான்னு..’ படிக்கிற ஒன்னு ரெண்டு பேரும் என்ன பார்த்து கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்.

இப்போ போலீஸ்காரங்கள பாத்தீங்கன்னா கையில லத்தி, இடுப்புல துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பாங்க... அதுக்கு என்னா அர்த்தம்...? எல்லாத்தையும் சும்மா அடிச்சிகிட்டே இருங்கன்னா அர்த்தம்.. இல்லை பாக்குறவங்கள எல்லாம் சுடுங்கன்னு அர்த்தமா..?

இப்படி பதில் கேள்வி எழுப்பி ’அடியுங்கள்’ என்று வார்த்தையை நியாயப்படுத்த போகிறீர்களா..? என்று கேட்கவும் கூடும்.

’அல்லது டாக்டர் கையில கத்தி இருக்குற மாதிரி உடலை காயப்படுத்தி கட்டுப்போடுவது உடலில் இருக்கிற வியாதியை போக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கை தான்’ என்று விளக்கம் தரப் போகிறீர்களா என்று வினவவும் கூடும்...

‘கிராமத்துல மனப்பிறழ்வு அல்லது சாமி வந்த போது ஒரு மாதிரி வேப்பிலை வைத்துக் கொண்டு அடிப்பார்களே... அந்த மாதிரி அடி தான் இது.. அந்த மாதிரி பிடித்திருக்கிறது நீங்க எடுக்கப்படும் நியாய அடி வைத்தியம் தான் இது...’ என்று அதிரடியாய் கூறப் போகிறீர்களா என்று தோன்றவும் கூடும்.

-------------------------------------------

குரான் ஷரீஃபில் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) என்ற

- 4வது அத்தியாயம் -

- 34 வது வசனம் -

”.... எந்த பெண்கள் விஷயத்தில் - அவர்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களை படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிபட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்”

--------------------------------------------------

மேலே உள்ள இறைவசனத்தில் கணவனுக்கு மாறு செய்யும் பெண்களை பற்றிய விவகாரத்திற்கு மூன்று வழிகள் சல்யுசன்ஸ் சொல்லப்படுகிறது.

இப்போது கணவன், மனைவி இருவரும் இனிய இல்லறம் நடத்தி வருகிறார்கள் என்று வையுங்கள். (ஒவ்வொருவரும் அவரவரை பொருத்தி பார்த்துக் கொள்வது நல்லது)

இப்போது அந்த கணவருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது.  அதாகப்பட்டது அந்த மனைவி இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று.

’ஒரு நிமிஷம்.. நிறுத்துங்கள்’ என்ற குரல் கேட்கிறது.

குரல் தொடர்கிறது, ‘ஏங்க.. மேலே உள்ள இறைவசனத்துல, மாறு செய்வார்கள் என்று தானே வருகிறது.. அதெப்படி நீங்க இந்த இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற உதாரணத்தை தரலாம்.. வேறொரு உதாரணம் பொருந்தி வராதா..’ என்று கேட்டது.

இதே வசனத்தின் முந்தைய பகுதியை பார்த்தீர்கள் என்றால் இப்படி வருகிறது, “..இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்து கொள்வார்கள்..’ என்று வருகிறது.

கணவன் இருக்கும் போது மனம் குளிர வைத்து விடுவதோடு யாரும் இல்லாத போதும் கணவனுடைய மான மரியாதைக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நல்ல மனைவிக்கு அடையாளம்.

யாரும் இல்லாத சமயத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய எதுவும் இதை குறிக்கும் என்றாலும் நான் சொன்ன உதாரணம் முதன்மை பெறுகிறது என்பதால் தான் இதனை குறிப்பிடுகிறேன்.

அதுவும் தவிர, மாறு செய்வது என்ற வார்த்தைக்கு ’நுஸுஜஹுன்ன’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதே நுஸுஜன்’ என்ற வார்த்தை இதே ஸூரத்துன்னிஸாவுன் எனும் அத்தியாயம் 128வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த வசனத்தில் மனைவிக்கு மாறு செய்யும் கணவர்களை பற்றி பேசுகிறது.

மனைவி கணவனுக்கு மாறு செய்வதும், கணவன் மனைவிக்கு மாறு செய்வதும் இரண்டுக்குமே இந்த ஒரு விஷயம் இயல்பாகவே பொருந்தி வரும். இதுவும் ஒரு காரணம் இந்த உதாரணத்தை கொண்டு பேசுவதற்கு..

இனி தொடர்வோம்..

மனைவியின் எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்ஃபேர்ஸை கேட்ட உடனே சாதாரணமா ஊர் உலகத்துல என்ன நடக்குது..?

கணவனுக்கு கோபம் கொப்பளிக்கும். கண்கள் சிவக்கும். வீட்டிற்கு வந்து கண்ணை மூடிக் கொண்டு காதை பொத்திக் கொண்டு மனைவியை அடித்து கவரிமான் ரேஞ்சுக்கு கொன்று போட்டு விடுவார். எத்தனையோ செய்திகள். எத்தனையோ வரலாறுகள்.

குரான் ஷரீஃப் சொல்கிறது, அதெல்லாம் செய்ய கூடாது. நான் மூன்று வழிகள் சொல்கிறேன். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

-----------------------------------------------------------

முதல் வழி:

ஒரு மாதிரி கவுன்சிலிங். அட்மோனிஷ். அட்வைஸ். அறிவுறை, நல்லுபதேசம், எப்படி வெர்பலாக பேசி புரிய வைக்க முடியுமோ அப்படி தவறை உணர வைக்க வேண்டும். இதுவே மிகவும் சவாலான விஷயம் தான்.

ஊர் உலகம் மனைவியை ஒரு மாதிரி பேச ஆரம்பித்த உடனேயே வெளியில் தலை காட்ட முடியாத நிலைமையில் இருப்பதாக உணர்வார்கள்.

இந்த நேரத்தில் தான் போய் பொண்டாட்டியோடு சமாதானம் பேச சொல்கிறது குரான் ஷரீஃப்.

சரி, கள்ளக் காதலனின் ஆசை வார்த்தைகளில் கணவரின் அர்த்தமுள்ள வார்த்தைகள் காணாமல் போய் தொடர்பு தொடர்கிறது என்று வையுங்கள்.

------------------------------------------------------

இரண்டாவது வழி:

முதல் வழியில் பேச சொன்ன குரான் ஷரீஃப் இந்த இரண்டாவது வழியில் பேசாமல் இருக்க சொல்கிறது. அவர்களுடன் எந்த தருணத்திலும் மகிழ்வாக இருக்க கூடாது. அட்வைஸ் பண்ணி பார்த்து சரி வரவில்லை என்றால் அவாய்ட் செய்ய வேண்டும்.

இத்தகைய உங்களது நடவடிக்கையால் குடும்பத்தில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இதுவும் சரிப்பட்டு வராமல், ‘அப்பாடா.. இப்ப தான் நிம்மதியாக இருக்கு..’ என்கிற தொனியில் நடந்து கொண்டு தொடர்ந்து மாறு செய்து கொண்டு நடந்தால் மூன்றாவது வழி.

-------------------------------------------------------

மூன்றாவது வழி:

அடியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கருணையோடு அடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பிரேக்கெட்டில் இலேசாக என்று சேர்க்கவும் பட்டுள்ளது.

இப்பொழுது நாம் அரபியில் என்ன பதம் பயன்படுத்தப் படுகிறது என்று பார்த்து விடுவது நலம்.

’வழ்ரிபூஹுன்ன..’ என்ற அரபி பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வார்த்தை ’யழ்ரிப்’ என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை. இந்த மூல வார்த்தையை குரான் ஷரீஃபில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

உதாரணமாக:
ஸூரத்துர் ரஃது (இடி) எனும்
-13 வது அத்தியாயம் -
-17 வது வசனம் -

’.... கதாலிக யழ்ரிபுல்லாஹுல் ஹக்க வல் பாதில்...’

இங்கே யழ்ரிப் என்ற பதத்திற்கு அடிப்பது என்று பொருள் கொண்டால் கொஞ்சம் கூட பொருந்தாமல் இப்படி வரும்..

‘... இவ்வாறு சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் அடிக்கிறான்...” என்று

ஆனால் ’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ‘எக்ஸ்பிளெய்ன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வோமே.. அந்த அர்த்தம் தான் பொருந்தும் படியாக இருக்கும்..

எப்படி?

‘... இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் விளக்கமளிக்கிறான்...’ என்று.

இவ்வாறு இந்த பதம் இன்னும் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. குரான் ஷரீஃபில் மட்டுமே பத்து அர்த்தங்கள் இடத்திற்கு தக்கவாறு இடம் பெறுகிறதாம். அதில் ஒன்று தான் மேலே கண்ட உதாரணம்.

இன்னும் குரான் ஷரீஃபில் சொல்லப்படாத பல்வேறு அர்த்தங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பழைய அரபிய அகராதியில் அதிகமான அர்த்தங்களை கொண்ட வார்த்தையாக இந்த ‘யழ்ரிப்’ என்ற வார்த்தையே இடம் பெறுகிறதாம்.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் வரும் போது இப்படி தான் மொழி பெயர்ப்பு தடுமாறுகிறது.

உதாரணமாக ‘அடிப்பது’ என்ற தமிழ் வார்த்தையையே எடுத்துக் கொண்டாலும் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்பவதை பேச்சு வழக்கில் காண முடியும்.

‘தண்ணி அடிக்கலாமா?’ என்றால் என்ன அர்த்தம்..

பச்சை தண்ணீரை ஓங்கி அடிப்பது என்று அர்த்தம் சொல்ல மாட்டோம் இல்லையா?

அதே போல் ’பரீச்சைல காப்பி அடிக்க கூடாது’ என்றால் என்ன அர்த்தம்...

ஆங்கிலத்திலும் இதே போல் ‘beat‘ என்ற வார்த்தை பலவாறு பயன்படுத்த முடியும்.

உதாரணமாக, ‘இந்தியா பீட் பாகிஸ்தான் இன் தி வேர்ல்ட் கப் செமி ஃபைனல்’ என்றால் என்ன அர்த்தம்?

beating around the bush' என்ற phraseல் வரும் ’பீட்’டுக்கு என்ன அர்த்தம்?


எல்லாத்துக்கும் கையால் அடிப்பது என்று பொருள் கொடுக்க முடியுமா?


குரான் ஷரீஃபில் இதே ஸீரத்துன்னிஸாவில் 19வது வசனத்தில் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறான்.


“... இன்னும், அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்” என்று மனைவியிடம் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள், வெறுக்கின்ற ஒன்றில் தான் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்துள்ளான்’ என்று பாடம் நடத்தப்படுகிறது.


இப்படியாபட்ட வசனங்களை உடைய குரான் ஷரீஃபில் ‘அடிக்க’ சொல்லி வருவதாவது...?


அர்த்தம் கொடுப்பதில் தான் தவறு நடந்திருக்க வேண்டும்.


’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் கையாளப்படுகிறது.
1. beat
2. strike


இணையத்தில் மெர்ரியம்-வெப்ஸ்டெர் என்ற அகராதி உள்ளது.


இதில் மேலே உள்ள இரண்டு வார்த்தைக்குமே (verb) நிறைய அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன...


இங்கே வந்து ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதனை தீர்க்கும் வழிகளை சொல்லி கொண்டு வருகிறது. 


இங்கே அடிப்பது என்று கையால் அடிப்பது என்று புரிந்து கொண்டால் அர்த்தம் போட்டால் அது எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.


அப்போ, அடிக்க அடிக்க தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தால் பரவாயில்லையா?


இப்படி பலவாறாக யோசித்து தான் ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமே தவிர.. இது தான் என்று முடிவுக்கு வர முடியாது. அடித்து கூறவும் முடியாது...


என்னளவில் கேட்டால் 'strike them out'  அதாவது ‘வெளியேற்றி விடுங்கள்’ என்று தான் மூன்றாவது வழியாக நான் புரிந்து கொள்வேன்.


நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

நவீன சாமிரிகள்

குரான் ஷரீஃப் வசனம்:


நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.


-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்


இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம். 

அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.

மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள். 


இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள். 

திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.


“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.


-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்


அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார். 


எதில் கண்டு இருக்கிறார்?


தூதரின் காலடி மண்ணில், 


- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.


1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.


2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.


3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.


4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். 


5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.


6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.


7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.


நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.


சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள், 


சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள். 

சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள். 

சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.

இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...


"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது

ஹஜ்ரத் கௌதுனா (றலி)

இன்றைக்கு ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பினார், அதில், ‘உயிரோடிருக்கும் போது பாம்பு எறும்பை தின்கிறது, பாம்பு இறந்த பிறகு எறும்பு பாம்பை தின்கிறது - காலம் மாறிக்கிட்டே இருக்கும் மறந்துவிட வேண்டாம்” என்று (ஆங்கிலத்தில்) எச்சரிக்கும் தொனியில் இருந்தது.

நான் சேமித்த வைக்காத எண்களை கொண்ட அந்த நண்பருக்கு நான் திருப்பி அனுப்பினேன், “சரி, நான் இப்போ பாம்புங்கறீங்களா? அல்லது எறும்புங்கறீங்களா?” என்று திருப்பி அனுப்பினேன்.

அப்புறம், ‘சாரி சார், நான் ஜஸ்ட் ஷேர் பண்ணினேன், அவ்வளவு தான்..” என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பிய செய்தியில் உண்மை இருக்கிறது. இன்றைக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள மனிதன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான்.

ஒழுக்கம், பண்பு எல்லாம் பழைய சரக்காகி விட்டது. மனிதநேயமோ பழங்கதையாகி விட்டது.

கை. கால், கண், இதயம் உள்பட எல்லாம் இனி இயந்திரத்திலேயே செய்து விடலாம். அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை அதுவே இயந்திரங்களாக தான் காட்சியளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
அந்த சதைத் துண்டு மனித இருதயமே” என்று.

மனித இருதயங்களை எச்சரிக்கையோடு சரி செய்த சூஃபியாக்கள் வகுத்த மெய்ஞ்ஞான வழிமுறைகளுக்கு ‘தஸ்ஸவுஃப்பு” என்று பெயர். ‘தஸ்ஸவுஃப்பு’க்கு ‘தவ்ஹீது’ எனும் இறை ஓர்மையே மூலக்கரு.

‘தவ்ஹீது’ எனும் இந்த கோட்பாடு இறைவனோடு ஒன்றாக கலந்துவிடுவது அல்ல இறை பண்புகள் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருதயத்தை தூய்மைபடுத்திக் கொள்வதே தவ்ஹீது எனப்படும்.

சூஃபியிச குழந்தை பிறந்தது அரேபியாவில் தான் என்றாலும் அது அதிக போஷாக்குடன் வளர்ந்தது பாரசீகத்தில் தான்.

இந்த சமயத்தில் இஸ்லாம் அதன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வெறும் அசைவற்ற உடலாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசாங்கங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைக்க ஆரம்பித்தனர். உலமாக்கள் என பெயரளவில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஒத்தூதீனர்.

இதனை தட்டிக் கேட்ட சூஃபியாக்களை ஷரியத்தை விட்டு விலகி விட்டதாக குறை கூறி ஷரியத்திற்கு பொருந்தாத வகையில் தண்டனையும் அளித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இமாம் அல்-கஸ்ஸாலி அவர்களையே சாரும். குரான் ஷரீஃப், ஹதீது ஆகியவற்றை வழுவறக் கற்றதோடு மக்களுக்கு புரியும் வகையிலும் உலமாக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் தனது ‘இஹ்யா உலூமித்தீன்’ எனும் சூபியாக்களின் வாழ்க்கையை விளக்கும் கருத்துக் கரூவூலத்தை உலகுக்கு படைத்தார்கள்.

திருக்குரான் ஷரீஃபுக்கும், ஹதீதுகளுக்கும் அவர்கள் கொடுத்த ஆழ்ந்த விளக்கம் சூஃபியிசத்தின் காப்பியங்களாகும்.

இவர்களின் காலம் கி.பி. 1058 லிருந்து 1111 வரை.

இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தான் குத்பு நாயகம் மஹ்பூபே சுபுஹானி மஹ்சூகே ரஹ்மானி ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களும் வாழ்ந்தார்கள்.

இவர்களின் காலம் கி.பி 1078 லிருந்து 1166 வரை.

- தொடரும்..

படிக்க வேண்டியவை:

http://sufibooks.info/Sufism/Memorial_of_Saints_Muslim_Saints_and_Mystics-Attar.pdf 
-------------------------
ஸூரத்து ஸாத் - வசனங்கள் 71 - 85

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:


“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);


அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.


இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.


(இப்லீஸென்று யாரும் இல்லை, இறைவன் மனிதனை படைத்து அவனது ஆவியை மனிதனிடத்தில் ஊதி அவனை கண்ணியப்படுத்திய நிகழ்வு வரை)


“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.


“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(இப்லீஸாகிய அவன் தான் மேலானவன் என்பதற்கு ஒரு காரணத்தை கண்டு பிடிக்கிறான். 
அதாவது களி மண்ணால் படைக்கப்பட்ட ஒருவரை விட நெருப்பால் படைக்கப்பட்ட ஒருவர் மேலானவர் தானே என்கிறான். இது ஒரு வகையில் சரிதான். 
ஆனால் உண்மையிலேயே இங்கே பார்க்க வேண்டியது களிமண்னா அல்லது நெருப்பா என்பது அல்ல. 
மாறாக இறைவனால் பிரத்தியேகமாக ஆவி ஊதப்பட்ட களிமண்னா அதாவது இறைவனுடைய இயல்புகளின் ஒரு துளியை இறைவனாலேயே கொடுக்கப்பட்ட களிமண்னா அல்லது நெருப்பின் இயல்புகளை மட்டுமே கொண்ட நெருப்பா என்பதை தான். 
இப்லீஸின் கூட்டத்தார்கள் பார்க்க தவறுவதும் இதை தான்)


(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.


“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).


“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.


“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.


“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).


அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.


(நன்றாக கவனியுங்கள் வழிகெடுப்பதற்கு யாருடைய கண்ணியத்தை சாமர்த்தியமாக கொள்கிறான் என்பதை - இப்பொழுது புரிந்திருக்குமே இறைவனுடைய கண்ணியத்தை உயர்த்துவதாக புலம்புவதெல்லாம் யாவரையும் வழிகெடுக்கத்தான் என்பதை)


“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).


(இப்லீஸ் ஒப்புக் கொள்கிறான் வழிகெடுப்பேன் தான், ஆனால் எல்லாரையும் வழிகெடுக்க முடியாது, யாரை என்றால்.. அந்தரங்க சுத்தியான் உன் அடியார்களைத் தவிர.. 


அந்தரங்க சுத்தியான அடியார்கள் யார்?


அவர்களுடைய கூட்டத்தில் நாம் எப்படி இணைவது?


அவர்களுடைய வழியை எப்படி கண்டுபிடிப்பது?


இதற்கு தான் ஃபாத்திஹா சூரா - 6 வது வசனம் கீழ்கண்டவாறு வருகிறது. 


(அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.)


(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.


“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)


-----------------------------------------------------------------------------------------------
மெய்ன்ஞ்ஞான பேரரசரான ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்கள் உலகில் இருக்கும் அத்தனை மெய்ஞ்ஞான தரீக்காக்கள் அத்தனைக்கு தாயான ’காதிரிய்யா தரீக்கா’ எனும் மெய்ஞ்ஞான பாதையின் ஸ்தாபகர் ஆவார்கள்.


வாளை கொண்டு இஸ்லாம் பரப்பட்டதாக அவிழ்த்து விடும் புழுகு மூட்டைகளை இன்றளவும் பொய்கள் என்று எடுத்துரைப்பதற்கு காதிரிய்யா தரீக்காவே வரலாற்று சான்றுகளாக உள்ளன. 


இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா இன்னும் ஏராளமான நாடுகளிலும் இஸ்லாம் வேரூன்றி நிலைத்து நிற்பதற்குக் காதிரியா தரீக்காவே முக்கிய காரணமாக அமைந்து இருக்கின்றது.
(இந்த உண்மைதனை வரலாற்றாசிரியர்கள் பலர் குறிப்பாக ஹெச்.ஏ.ஆர். கிப் என்பவர் எடுத்துரைக்க தயங்கியதில்லை)


அந்தரங்க சுத்தியான அந்த கூட்டத்தை தவிர மற்றவர்களை வழிகெடுப்பதாக இப்லீஸ் சொல்கிறான். தன் உள்ளத்தை சுத்தம் திக்ரின் மூலம் செய்யும் அந்த அந்தரங்க சுத்தியான கூட்டத்தை பார்க்கும் இப்லீஸின் கூட்டத்தாரின் கண்களுக்கு அன்று முதல் இன்று வரை எரிச்சலூட்டுவதாகவே இருந்து வருகிறது.

------------------

குரான் ஷரீஃப் வசனம்:

ஸூரத்துத் தாஹா - 42 வது வசனம்

”ஆகவே, நீரும் உம் சகோதரர்ரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள். (... 
and do not, you both, slacken and become weak in My Remembrance)


இறைவன் மூஸா நபியை பிர்அவ்னிடம் அத்தாட்சிகளுடன் அனுப்பும் போது இறைவன் சொல்லி அனுப்பியது இது தான்.

 “ என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள்”

நினைவு கூர்வது என்பது இறைவனின் அழகிய திருநாமங்களை நாவால் உச்சரிப்பது. அதாவது திக்ரு செய்வது.

மெய்நிலை கண்ட எங்கள் மெய்ஞ்ஞானி சொல்கிறார்கள்..

”...இறைவனை நினைவு கூர்ந்து துதிக்க முனையும் ஒருவர் துவக்கத்தில் இறைநாமத்தை நாவினால் உரக்க உச்சரிக்க வேண்டும். அதன் மூலம் படிப்படியாக இறைநினைவு உடல் முழுவதும் பரவி இருதயத்தைச் சென்றடைகிறது. பின்னர் அது ஆத்மாவைத் தொடுகிறது. மேலும் அது தொடர்ந்து சென்று இறை இரகசியங்களின் உறைவிடத்தையும் எட்டுகிறது. அதனையடுத்து இரகசியத்திலும் இரகசியமாக விளங்கும் ஆதிமூல வட்டத்தையும் அது சென்றடைகிறது...”

“...இதய உணர்வு அசைவுகள் வழியே இறைவனை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் வல்லமையும் எழிலும் ஆகிய அத்தாட்சி உள்ளத்தே முகிழ்க்கிறது..”

இவ்வாறு இறைவனை நினைவு கூர்வதை விட்டும் சூஃபியாக்கள் ஒரு போதும் சளைத்ததில்லை.

சூஃபியாக்களை பொறுத்தவரை இறப்பு என்பது என்ன தெரியுமா?

இறைவனை மறந்திருப்பது தான்.

ஒரு விநாடியாவது அவர்கள் இறைவனை மறந்திருந்தால் அவர்கள் இறந்து விட்டதாகவே கருதினார்கள்.

அவர்கள் உறக்கத்தில் கூட இறைவனை மறப்பதில்லை...

அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள்,

‘அறிந்தவர்களின் உறக்கம் அறியாதவர்களின் வணக்கத்தை விட சிறந்தது’

அறியாதவர்கள் இறைவனை இறைவணக்கத்தில் கூட நினைக்க வேண்டிய  முறைப்படி நினைப்பதில்லை

இதோ தீனை உயிர்ப்பித்தவர்களின் ஞான மொழிகள்...

”அறியாமையை மயக்கம் என்றும் உறக்கம் என்றும் கூறலாம். மயக்கத்தையும் உறக்கத்தையும் உதறிவிடுவோரே இருள் சூழாத இதயம் பெற்றிருப்பர்...”

”தூய உள்ளங்கள் தூங்குவதில்லை..”

”மெய்யடியார்களின் அகவாழ்க்கையில் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே வேறுபாடில்லை.”

இவர்கள் மெய்யடியார்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்திலிருந்தே சொல்கிறார்கள்.

இவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்தது போல் தங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார்கள்.

அவ்வாறு முழுமையாக ஒப்படைத்து விடுவதை பற்றி இந்த அவ்லியாக்களின் அரசர் குறிப்பிடுகையில்..

“ஒரு இறந்த உடல் எப்படி தன்னை குளிப்பாட்டுபவனின் கையில் ஒப்படைத்து விடுமோ அப்படி ஒரு அடியான் இறைவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தவக்குல்”

என்று கூறுகிறார்கள்.

அவர்கள் தங்களின் இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதை பார்க்கும் எல்லா கண்களுக்கும் புலப்படுவதில்லை. அவர்கள் குகை வாசிகளை போன்றவர்கள்.

”...மேலும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்.”

ஸீரத்து கஹ்ஃபு - 18வது வசனம்

நினைவு கூர்ந்து தங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதையே குறிகோளாக கொண்டவர்கள் இவர்கள்.

ஸூரத்து கஹ்ஃபு  28 வது வசனம்:

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன்  இச்சையை பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.”

மேலே கண்ட வசனம் அஸ்ஹாபுஸ் ஸுஃபா எனப்படும் திண்ணை தோழர்களை பற்றியது.

படிக்கவும்: http://www.sufiway.net/ar_org_Suf.html

திண்ணை தோழர்களின் சங்கிலித் தொடர் தான் சூஃபியாக்கள் என்றழைக்கப்பட்ட இறைநேசச் செல்வர்கள்.

அவர்களின் வழியில் அவர்களை விட்டும் நம் கண்களை திருப்பி விடாத வரம்பு மீறிய கூட்டத்தில் சேராதவர்களாக நம்மை இறைவன் காத்தருள வேண்டும்.
------------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களின் மொழிகள்:

”தங்களின் தனித்தன்மை, தனிப் பேராற்றலை இன்னதென அறிந்து, சீரிய முறையில் செயல்படுவோரே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவர்.”

”மனிதத் தன்மையை மாசுபடுத்துவோர் இழப்படைந்தவராகிறார்கள்.”

--------------------------------------------------------------------------------------