Wednesday, September 26, 2007

இஸ்லாமிய கடவுள் கொள்கை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்

1

அண்டசராசரங்கள் முழுவதும் தானாக தோன்றின அதுமட்டுமல்லாமல் தானாக தான் இயங்கி வருகின்றன என்றால் அதை ‘நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது’ என்று நம்பி கூறிய மாபெரும் மேதையும் நாத்திகருமான ஐன்ஸ்ட்டீன் போன்றவர்களால் கூட ஏற்க முடிவதில்லை.

காரணம், தானாக தோன்றியிருந்தால் இப்பொழுது இருக்கும் ஒரு அழகு இருந்திருக்காது, தானாக இயங்கி வந்தால் இப்படி ஒரு ஒழுங்கு இருக்காது என்பது தான்.

வரையறைக்குள் சுற்றும் பூமி, தூணில்லாத வானம், பறக்கும் போது விழுந்து விடாத பறவை, நிறத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் வடிவத்தில் வித்தியாசம் காட்டும் இலைகள் இப்படியாக நான் குறிப்பிட்ட அந்த அழகின், அந்த ஒழுங்கின் அடையாளங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏன் மனிதன் தன்னை பற்றி ஒரு கணம் சிந்தித்தால் கூட அவனை விட ஒரு சிறந்த அடையாளம் இறைவனுக்கு ஆதாரம் வேறு எதுவுமே தேவையில்லை..

இதை வலியுறுத்தி தான் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட, ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்று கூறினார்கள்.

அனைத்தும் ஒரு கட்டுபாட்டுக்குள் தான் இருக்கிறது என்றால் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ‘அது(?)’ நிச்சயமாக நினைத்து கூட பார்க்க முடியாத மாபெரும் சக்தியாக தான் இருக்க வேண்டும்.

அந்த சக்தியை தான் நாம் இறைவன் என்று பொதுவாக சொல்கிறோம் அல்லது நம்புகிறோம்-
சரி, அந்த இறைவன் யார்?
எப்படியிருப்பான்? எங்கே இருக்கிறான்?
ஆணா? பெண்ணா? அல்லது
இரண்டும் இல்லாத வேறொன்றா?
எதன் அடிப்படையில் இறைவனை நம்புவது?

அந்த இறைவனை மனிதர்களாகிய நாம் அறிந்து வைத்திருக்க தான் வேண்டுமா?
அல்லது வணங்கித் தான் ஆக வேண்டுமா?

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? மனிதனால் இறைவனை நெருங்க முடியுமா?

இப்படியாக இறைவனை பற்றிய வினாக்கள் இதயத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது..

இறைவனை பற்றி பேச, சிந்திக்க துணிந்து விட்டதால் மதங்களை பற்றி பேசி தான் ஆக வேண்டும்.

ஏனெனில் மதங்கள் தானே இறைவன் இருப்பதாக நம்ப சொல்கிறது அல்லது இறைவனை சென்றடையும் வழிகளை காட்டி தருகிறது.

எல்லா மதங்களும் பொதுவாக ‘தீமையை தவிர்’ என்றும் ‘நன்மையை செய்’ என்றும் தான் சொல்கின்றன-

மது, சூது, கொலை, களவு, காமம், பொய், பித்தலாட்டம் என எல்லாவற்றையும் ‘பாவம்’ என்று ஒதுக்குவதில் எல்லா மதமும் ஒத்து போகின்றன-

நேர்மை, நாணயம், உண்மை, சத்தியம், தர்மம் இவையெல்லாம் ‘புண்ணியம்’ என்று சேர்த்துக் கொள்வதில் கூட எல்லா மதமும் ஒத்து போக தான் செய்கின்றன-

ஆனால் ‘இறைவன்’ என்று வந்து விட்டால் மனிதர்களாகிய நாம் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் மதங்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்து விடுகிறோம்.

வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல மதங்களுக்கு ஒரு இறைவன் என்றிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. நிச்சயமாக இறைவன் என்றால் அது ஒரே ஒரு பரம்பொருளை தான் குறிக்கும்.

உண்மை இப்படியிருக்க, மதங்களுக்கு இடையில் கடவுள் கொள்கையில் மட்டும் ஏனிந்த முரண்பாடு?

இதில், இஸ்லாம் எவ்வாறு மற்ற மதங்களுக்கு இடையில் இருந்து மாறுபடுகிறது?

2

ஆனால் அதற்கு முன்னால் இஸ்லாம் எப்போது தோன்றியது? தோற்றுவித்தது யார்? இவை பற்றியெல்லாம் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் தவறான கருத்தை கலைந்தாக வேண்டும்-

பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்-

இஸ்லாமிய மதத்தின் ஸ்தாபகர் முஹம்மது என்பவர் ஆகும்.-

‘இஸ்லாமியர்கள்’ யாவரும் முஹம்மதியர்கள் என்று பெரும்பாலோர் கருதி வருகிறார்கள்-

ஆனால் உண்மை என்னவெனில்,

இஸ்லாம் என்பது மிகமிகப் பழமையான மார்க்கம்-
உலகின் முதல் மனிதர்- ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய போதே தோன்றிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்.

இறைவன் உலக மக்களுக்கு (முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல) வழங்கிய வேதமான திருக்குரானில் மக்களிடம் பேசும் போது, ‘ஆதமுடைய மக்களே..’ என்று அழைத்து தான் பேசுகிறான்.

மேலும் திருக்குரானில் அந்னிஸாஉ(பெண்கள்) எனும் அத்தியாயத்தின் முதல் வசனமே, ‘மனிதர்களே! அவன் (இறைவன்) உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்தே உற்பத்தி செய்தான்’ என்று வருகிறது.

ஆகவே ஆதம்(அலை) அவர்கள் முதலே இஸ்லாமிய மார்க்கம் தோன்றி இன்றளவும் முக்கிய கொள்கையாம் இறைவன் ஒருவன் என்பதை விட்டு கொடுக்காமல், மாறாமல், மறுக்காமல் இருந்து வருகிறது.

நாம் தொடர்ந்து படிக்கும் முன்பு மேற்சொன்ன உண்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இனி தொடர்வோம்-

‘நல்ல வார்த்தை கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனது’ இது நம்மவர் எனும் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி-

இன்றைக்கு நம்மிடையே பல வார்த்தைகள் அர்த்தம் மாறி அதன் தன்மையை இழந்து விட்டதை கண் கூடாக காண்கிறோம்- காது கூடாக கேட்கிறோம்.

உதாரணமாக,
‘மாமா’ என்ற உன்னத உறவை குறிக்கும் மேன்மைக்குறிய வார்த்தையை எவ்வளவு கீழான நிலைக்கு நாம் பேசி பேசியே தள்ளி விட்டிருக்கிறோம் எனபது தெளிவு.

அது போல் இறைவன் என்ற வார்த்தையும் அல்லது அதை ஒத்த வார்த்தைகளையும் நாம் பேசி பேசியே அதன் அர்த்தத்தை கீழ் நிலைக்கு தள்ளியிருக்கிறோம்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் போது ‘தெய்வமே’ என்று அழைப்பதை சொல்லலாம்.

சிலர் ஏதாவது நன்மை செய்து விட்டால் ‘உனக்கு கோயில் கட்டி தான் கும்பிடனும்’ என்று கூட சொல்வார்கள்.

ஒரு சமுதாயத்திற்காக உயிர், வாழ்க்கை எல்லாம் தியாகம் செய்து ஒருவர் உழைக்கிறார் என்று வையுங்கள்- அவரை ‘குலதெய்வ’மாக்கி வணங்க தொடங்கி விடுவார்கள்-

‘கடவுள்’, ‘தெய்வம்’, ‘இறைவன்’ என்ற பெயர்களின் உண்மையான தன்மை தான் என்ன?

அந்த தன்மைகள் பற்றி எழுதி விட முடியுமா? காகிதத்தில் அடங்கி விடுமா? நினைத்து பார்த்தால் என் கை மட்டுமல்ல என் எழுதுகோலின் மையும் அல்லவா நடுங்குகிறது..

இறைவனை பற்றி இறைவனை தவிர வேறு யாரால் தான் சரியாக கூறி விட முடியும்..
இதோ அவனே கூறுகிறான்.. தனது திருமறையில்..

மேலும், நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள்(யாவும்) எழுதுகோல்களாகவும், கடல்(நீர்யாவும் மையாக இருந்து) அ(து தீர்ந்த) பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் (மையாக) சேர்ந்து கொண்டாலும் அல்லாஹ்வின்(இறைவனின்) வாக்குகள் (எழுதித்) தீராது; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்.
(குரான் அத்தியாயம் லுக்மான்(31): வசனம் 27)

ஆக இறைவனை பற்றி எழுதவே முடியாது என்று இருக்கும் போது அவனை ஒரு உருவத்துக்குள் எப்படி அடக்கி வைக்க முடியும்..?

3

ஆமாம்.. அதாவது கடவுளுக்கு சிலை, படம் என உருவம் அமைத்துக் கொள்வதை இஸ்லாம் எதிர்க்கிறது- எதிர்க்கிறது என்றால் மிகமிக கடுமையாக எதிர்ப்பு-

இஸ்லாத்தின் முக்கிய பெருநாள் ஹஜ் பெருநாளாகும். இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் தான் தள்ளாத வயதில் ஈன்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் நபி(அலை) அவர்களை அல்லாஹ்வுக்காக அவனது கட்டளைக்கு பணிந்து அறுத்து பலி கொடுக்க முனைந்தார்கள்.

அப்பொழுது இஸ்மாயில் நபி(அலை) அவர்களூம் அதற்கு மனமுவந்து இணங்கினர். ஆனால் இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் எவ்வளவோ முறை முயன்றும் இஸ்மாயில் நபி(அலை) அவர்களின் கழுத்து அறுபடவே இல்லை.

ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஒரு ஆட்டுடன் வந்தார்கள். இறுதியாக இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் அந்த ஆட்டை அறுத்து பலியிட்டார்கள்.

நரபலி கூடாதென்றும், இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகமும் ஒன்று சேர உணர்த்தப்பட்ட சிறப்பான நிகழ்ச்சியை நினைவு கூர்வதே ஹஜ் பெருநாளாகும்.

இந்த தியாகத்தை நினைவுறுத்தி தான் உலக முஸ்லீம்கள் ஹஜ் பெருநாளன்று ஒவ்வொரு கிரியைகளும் செய்கிறார்கள்.

இப்ராஹீம் நபி அவர்களின் குடும்பம் என்னென்ன செய்ததோ அதை ஹாஜிகள் அதே இடத்திற்கு ஹஜ் பெருநாளன்று சென்று அதே கிரியைகளை செய்கிறார்கள்.

அவ்வளவு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்ட இப்ராஹீம் நபி அவர்களின் சிலை, இஸ்மாயில் நபியவர்களின் சிலை ஆகியவற்றை புனித மக்கா நகரில் க•பா என்ற தேவாலயத்தில் வைத்து இறைவன் என்று கருதி வணங்கி வந்தார்கள்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கு பிறகு இது போல் க•பா சுவர்களில் பல காலமாக வீற்றிருந்த 360 சிலைகளையும் தன் கைத்தடியால் அடித்து உடைத்தார்கள்.

அப்படி உடைக்கும் போது அவர்கள் கூறியது என்ன தெரியுமா?
‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்து விட்டது, நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியது தான்’ என்ற திருமறை குரான் ஷரீப் வசனத்தை தான் உச்சரித்தார்கள்.

ஆக யாருடைய படமும் சரி உருவமும் சரி கடவுள் என்று கருதப்படக் கூடாது என்ற கொள்கையை வெறும் சொல்வது மட்டுமின்றி வென்றும் காட்டியிருக்கும் மகத்தான மார்க்கம் தான் இஸ்லாம்.

இப்பொழுது உதாரணமாக உங்களது கடவுச்சீட்டில்(passport) உங்கள் படம் உள்ளது அல்லவா?

அதை ஒருவர் திருடி உங்களது போட்டோவை எடுத்து விட்டு திருடியவர் அவரது போட்டோவை ஒட்டி அவர் தான் நீங்கள் என்று பயணம் போகிறார் என்று வையுங்கள்.. அது குற்றமா? இல்லையா? நிச்சயமாக சட்டவிரோதம் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. இல்லையா..?

ஆனால் அதே குற்றத்தை கடவுளுக்கு செய்கிறார்கள், அதாவது.. ஒரு ஆணுடைய உருவத்தை வரைந்து(இன உறுப்புகள் எல்லாம் சேர்த்து தான்) இது தான் கடவுள் என்று காட்டுகிறார்கள்.. இதில் பெண் கடவுள் படஙகள் வேறு..? அவர்கள் உருவத்தையும் வரைந்து கடவுள் என்று கூறுகிறார்கள்..?

எப்படி முடிகிறது? எப்படி கடவுள் பெயரில் இப்படி ஒரு அபாண்டத்தை செய்ய துணிந்து விட்டார்கள்..?

கடவுள் நீங்கள் வரையும் உருவமாக அவர் இல்லாத போது கடவுளால் எப்படி குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்க முடியும்? கடவுச்சீட்டில் நம் புகைப்படம் மாறும் போது நாம் குற்றம் காணுகிற போது..

இதனை தான் பழந்தமிழர்கள் கூட ‘கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை’ என்று கூறினார்கள்.

இறைவன் தெளிவாக திருகுரானில் அன் ஆம் எனும் அத்தியாயத்தில் 100வது வசனத்தில் ‘.... இன்னும் அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண்மக்களையும் பெண்மக்களையும் அவனுக்கு(இறைவனுக்கு) கற்பனை செய்து விட்டார்கள்; அவர்கள் வர்ணிப்பவைகளை விட்டும் அவன் தூய்மையானவனாக பரிசுத்தமானவனுமாய் இருக்கிறான்’ என்று இறைவனே உண்மையை வெளிச்சப் படுத்துகிறான்.

மக்கா வாசிகள் வெளியூருக்கு பயணம் சென்றால் நான்கு கற்களை சுமந்து செல்வார்கள். மூன்று கற்களை உணவு தயாரிக்க வேண்டி அடுப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான்காவது கல் எதற்கு தெரியுமா? கடவுளாக வழிபட..

நம் நாட்டில் கூட கடவுள் சரித்திரங்கள் பற்றி பேசும் போது ‘வரன் கொடுத்த கடவுள் தலையிலேயே கை வைத்த பத்மாசுரன்’ பற்றி பேசுவார்கள். இஸ்லாமை பொறுத்த வரை இதற்கு எல்லாம் சாத்தியமே இல்லை.

கடவுளுக்கு குடும்பம் இருக்கிறது, கடவுளுக்கு சந்ததிகள் உள்ளன, கடவுள்களுக்குள் போர் எல்லாம் நடந்திருக்கிறது என்று கூறும் போது அந்த கடவுள் தன்மை எவ்வாறு அங்கே சிதைக்கப் படுகிறது என்று சிறிது யோசிக்க வேண்டும்.

4

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு புதுக்கவிதை எழுதினார்,
கடவுளுக்கு நிறைய பெயர் உண்டு
நாத்திகன் வைத்த பெயர்
இல்லை-

உண்மை தான்.. கடவுள் எப்படி இருப்பான் என்று நாம் கற்பனை செய்கிறோமோ அப்படி அவன் இல்லை என்பதை தான் இஸ்லாம் உணர்த்துகிறது.

ஆக, உருவம் இல்லாத எவரையும் மனிதன் என்று குறிப்பிட முடியாது. உருவம் உள்ள எதையும் இறைவன் என்று குறிப்பிட முடியாது.

சரி, கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் ஏன் அறிய வேண்டும்? அல்லது வணங்க வேண்டும்? அல்லது நெருங்க வேண்டும்?

கடவுளை பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி(ஸல்) அவர்களே கூட , ‘இறைவனே.. உன்னை நான் எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு அறிந்து கொள்ள வில்லை’ என்று கூறினார்கள். இந்த பிரார்த்தனை பெருமானார் அவர்களின் இறைவனை பற்றிய தேடலையும் இறைவனின் விசாலத்தையும் குறிக்கிறது.

ஆனால் கையிலிருக்கும் மெழுகு திரியில் எறியும் நெருப்பை ஆராய்ந்து சூரியனின் வெப்பத்தை அறிய முற்படும் முயற்சியாக தான் இறைவனின் ஆற்றலை அறிய முற்படுவதை கருத வேண்டும்.

நமக்குள் மெழுகு திரி இருக்கிறது.. அதாவது நமக்குள் இறைவன் இருக்கிறான். நாம் சிறியதாக கருதி செய்யும் பல்வேறு தவறுகளால் இறைவனை விட்டு நாம் தூர சென்று விடுகிறோம், அதாவது குரான் குறிப்பிடுவது போல், ‘நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம்’.

5

நம் வீட்டிற்கு நமக்கு பிடித்த விருந்தாளி ஒருவர் வருகிறார் என்று வையுங்கள் அவருக்காக நம் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி சுத்தம் செய்து அலங்கரித்து வைத்து இருப்போம் அல்லவா..

அது போல் தான் இந்த பூமியையும் இன்னும் யாவற்றையும் அதாவது ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனால் ஏற்படுத்த முடியாத ஆனால் அவனுக்கு அவசியம் தேவையான அனைத்தையும் முதலில் படைத்தான்.

அதன் பிறகு அவன் மனிதர்களை படைத்தான். இதை இறைவன் தனது திருமறையில் உலகத்தின் தலைமையை இறைவனின் பிரதிநிதியாக (கலீபாவாக) இருந்து-ஏற்பதற்காகவே மனிதன் படைக்கப்பட்டதாக (குரான் ஷரீ•ப் அல்பகறா:30) கூறுகிறான்.

இறைவனின் பிரதிநிதியாக இருந்து உலகை ஆள வேண்டிய மனிதன் அவனுக்காக படைக்கப்பட்டதையே இறைவனாக்கி அதற்கு அடிமையுமாகி இருப்பது தான் இன்றைய வேதனை நிலை.

நம்மை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்திருப்பதாக எடுத்து கூறும் இறைவன் நமக்கு அருகிலேயே இருப்பதாகவும் நம்பிக்கை தருகிறான்.

‘பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட நாம் அவனுக்கு(மனிதனுக்கு) மிக சமீபமாகவே இருக்கிறோம்’ என்று குரான் ஷரீ•ப் அத்தியாயம் கா•ப் வசனம் 16ல் தெளிவு படுத்துகிறான்.

இறைவன் எவ்வாறெல்லாம் இருப்பான் என்று நாம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோமோ அவ்வாறு இருப்பதிலிருந்தும் அவன் தூய்மையானவன், அவன் பரிசுத்தமானவன்..

இறைவன் மனிதர்களாகிய நம்மை அவனது பிரதிநிதியாக இருந்து அகில உலகத்தையும் ஆளக் கூடியவனாக இறைவனுக்கே சான்றாக இருக்குமாறு படைத்துள்ளான்..

இறைவன் நமக்கு எதுவெல்லாம் அல்லது யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் விட மிக மிக நெருக்கமாக சிறு சிறு அசைவுகளை கூட கூர்ந்து கவனித்தவாறு உள்ளான்..

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் உணர்ந்து விளங்கி வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

இதை உணர்ந்து விட்டால் உள்ளத்தில் ஒலி ஏற்றப்பட்டு விட்டால் வானங்கள் எனும் திரை விலகி இறைவன் எனும் மாபெரும் பேருண்மையை உணரக் கூடிய பாக்கியங்கள் பெற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறியாகும்.

இறைஞானி ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொல்வார்கள், ‘தனக்கென உள்ள நன்மைகளை மற்றவர்களுக்கு சிரமம் இல்லாமல் அடைய வேண்டும்’ என்று.