Monday, July 4, 2016

நோன்பு கவிதைகள்

ரமலானே வருக! இறையருளை தருக!!

உலகம் அழிக்கும்
மடமை ஒழிக்க
உலகம் வியக்கும்
மறையை வழங்கிய
உயர்வான
ரமலானே வருக! இறையருளை தருக!!

உலகம் அழிக்கும்
மூடநம்பிக்கை ஒழிக்க
உலகம் காக்கும்
இஸ்லாம் அருளிய
துணிவான
ரமலானே வருக! இறையருளை தருக!!

புனித மாதம்


பசியில்லாத இறைவனை
பசிபொறுத்து உணரும்
மாதம்

பெருமான் நபிகள்
போற்றி புகழ்ந்த 
மாதம்

மாறாத மறையாத
மறைகுரான் இறங்கிய
மாதம்

பசியெனும் ஏழையினாடையை
பணக்காரரும் அணியும்
மாதம்

கஞ்சனாய் இருந்தவரும்
கணக்கின்றி வாரிவழங்கும்
மாதம்

இரும்பிதயம் படைத்தவரும்
இதயம் கனியும்
மாதம்

விரட்டப்பட்ட ஷைத்தான் 
விலங்கு பூட்டப்படும்
மாதம்

அகிலமாளும் அல்லாஹ்வின்
அருள்மழை பொழியும்
மாதம்

முக்காலம் அறிந்தவராம்
முஹம்மதுநபி அகமகிழும்
மாதம்

இந்த 
புனித மாதம் 

நோன்பு


தொண்டையில் தாகமிருக்கும்
வயிற்றில் பசியிருக்கும்
மனம் நாடாது
பொறுத்து இருக்கும்
வறுமை அல்ல
கடமை..

ஜகாத்*

கழுத்துவரை தேவையிருக்கும்

கையளவே காசிருக்கும்
மனம் விரும்பி 
ஜகாத் கொடுக்கும்
விரயம் அல்ல
விவேகம்..
(ஜகாத்* - ஏழைவரி)



நபிமொழி

பசி வந்தால்

பத்தும் பறக்கும்
- இது பழமொழி
பசி பொறுத்தால்
சொர்க்கம் கிடைக்கும்
- இது நலமொழி


என்றும் நல்லமொழி
எங்கள் நபிமொழி
முற்றும். 

Friday, June 10, 2016

62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

முன்னுரை

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தினை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை எப்படி அழிக்கலாம் என்று யோசித்து பார்த்த போது அவர்கள் மூன்று விஷயங்கள் இஸ்லாத்தில் இருக்கும் வரை அதை அழிக்க முடியாது என்று இறுதி முடிவுக்கு வந்தார்களாம்.

அந்த மூன்றாவது
1. கஃபா எனும் இறையில்லம்
2. குரான் ஷரீஃப் எனும் இறைவேதம்
3. ஜும்ஆ எனும் வெள்ளிக்கிழமை தொழுகை.

ஜும்ஆ என்ற அரபி வார்த்தைக்கு பிரார்த்தனை அல்லது பிரசங்க கூட்டம் என்று பொருள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனமா நகருக்கு சென்ற ஐந்தாவது நாளே ஜுமுஆ தொழுகையை செயல்படுத்தினார்கள்.

ஷஹீஹ் புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

ஆங்கிலம் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

தமிழ் - புஹாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ள ஜும்மா பற்றிய ஹதீதுகள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்வார்கள்.

இதற்கிடையே சிரியாவிலிருந்து ஒரு வியாபார கூட்டம் மதினமா நகருக்கு வந்திருந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் ஊருக்கு வந்திருந்த அந்த வியாபார கூட்டம், சந்தை முடிந்து ஊருக்கு புறப்பட்டு போவதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டி  பறை கொட்ட ஆரம்பித்தது.

அந்த பறையொலியை கேட்டதும் 12 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போதே  வியாபாரத்தை முடித்து விட, இன்னும் சிலர் வேடிக்கை பார்க்க வெளியேறி விட்டனர்.

இந்த கட்டத்தில் தான் நாம் வெள்ளிக் கிழமை பிரசங்கத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஒழுங்குமுறைகளை இந்த ஆயத்தின் மூலமாக எடுத்து கூறுகிறான்.

இந்த ஸூரா மதினாவில் இறங்கப்பட்டது.

’யுஸப்பிஹ்” என்று அல்லாஹ்வை புகழ்ந்துரைக்கும் வார்த்தையை முதல் வார்த்தையாக வரும் ஸூராக்களுக்கு ”முஸப்பிஹத்” என்று பெயர். அந்த வகையில் இது ”முஸப்பிஹத் ஸூரா”வாகும். (குரான் ஷரீஃபில் இருக்கும் பிற முஸப்பிஹத் ஸூரக்களாவன: 57 அல் ஹதீத், 59. அல் ஹஷ்ர், 61. அஸ் ஸஃப்ஃபு, 64 அத் தஃகாபுன்)

இந்த ஸூராவை 4 பகுதிகளாக பிரிக்கலாம்

1. அல்லாஹ்வை பற்றி கூறுவது (1வது ஆயத்)
2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது (2 லிருந்து 4 வரை உள்ள ஆயத்)
3. வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது (5 லிருந்து 8வரை உள்ள ஆயத்)
4. ஜும்ஆ வைப் பற்றி கூறுவது (9லிருந்து 11வரை உள்ள ஆய்த்)

பகுதி 1 - அல்லாஹ்வை பற்றி கூறுவது

1வது வாக்கியம்
   يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏ 

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

யுஸப்பிஹ் -  சிறப்பு செய்வது, புகழ் சேர்ப்பது, மேன்மைப் படுத்துவது

யாரை?

லில்லாஹி - அல்லாஹ்வை

யார் சிறப்பு செய்கிறார்கள் அல்லாஹ்வை?

மா ஃபிஸ் ஸமாவாதி - வானங்களில்லுள்ளவையும்

நமக்கு தெரிந்து வானத்தில் பல இருக்கின்றன, தெரியாமல் என்னென்னவோ இருக்கின்றன. இதில் ’மா’ என்றால் எதுவெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கின்றதோ அது அத்தனையையும் குறிக்கும்.

- மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் and

மா ஃபில்அர்ள் - பூமியிலுள்ளவையும்

இங்கேயும் “மா” வருவதால் நமக்கு தெரியாமல் பூமியில் இருக்கின்றதோ அவைகள் அனைத்தையும் குறிக்கும்.

ஆக, வானத்திலும், பூமியிலும் மறைவாக உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வை சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.

இப்போது அத்தகைய அல்லாஹ் யாரென்று சொல்கிறான். வழக்கமாக குரான் ஷரீஃபில் தன்னை யாரென்று சொல்லி ஆயத்தை முடிக்கும் போது இரண்டு பெயர்களை மட்டுமே சொல்லும் அல்லாஹ் இந்த இடத்தில் மட்டும் தனது நான்கு பெயர்களை சொல்கிறான். அவையாவன...

1. மலிகில் - உச்ச அதிகாரம், (இது மாலிக் அல்ல - மாலிக் என்றால் உடமையாளர் என்று அர்த்தம்)
2. குத்தூஸில் - இயல்பாகவே தூய்மையான (அதாவது தூய்மையானது அல்லாஹ்வின் இயல்பிலேயே உள்ளது. ஜகாத் என்றாலும் தூய்மை தான் ஆனால் காசு தூய்மையாக இல்லை ஜகாத் கொடுத்ததும் தூய்மையாகி விடுகிறது, தஜ்கியா என்றாலும் தூய்மை என்று தான் பொருள், ஆனால் இயல்பில் தூய்மையில்லை, தஜ்கியா எனும் நற்செயல்கள் செய்தால் தூய்மையாகலாம். ஆனால் குத்தூஸ் என்றால் இயல்பிலேயே தூய்மையாக இருப்பதையும் எல்லா தூய்மைக்கும் மூலமாக இருப்பதையும் குறிக்கும்.)
3. அஜீஜில் - அதிகாரமும் மரியாதையும் (சிலருக்கு அதிகாரம் இருக்கும், மக்களிடம் மரியாதை இருக்காது வேறு சிலருக்கு மரியாதை இருக்கும் ஆனால் அதிகாரம் இருக்காது, இங்கே அஜீஜ் என்ற வார்த்தை அதிகாரத்தையும் மரியாதையையும் சேர்த்தே குறிக்கும்)
4. ஹக்கீம் - விவேகமும், ஞானமும்

உச்ச அதிகாரமுடைய, இயல்பாகவே தூய்மையுடைய, அதிகாரமும் மரியாதையும் கொண்ட, விவேகமும், ஞானமும் நிறைந்த அல்லாஹ்வை வானங்களிலும் பூமியிலும் நாம் அறியாத பல படைப்பினங்கள் சிறப்பு செய்கின்றன, புகழ் சேர்க்கின்றன, மேன்மை படுத்துகின்றன.


பகுதி 2 - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூறுவது

2வது வாக்கியம்

   هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ 
وَالْحِكْمَةَ 
 وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ 
     
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

ஹுவ - அவன்

யார்?
அல்லாஹ் தான்

அல்லதி - (அவன்) தான்

பஃஸ - அனுப்பினான்

ஃபி -  (அவர்கள்) இடையே

ல் உம்மிய்யின - எழுத்தறிவில்லா

ரசூலன் - ஒரு தூதரை

மின்ஹும் - அவர்களிலிருந்து

(முன் ஆயத்தில் படித்தோமே அத்தகைய அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து தனது தூதராக அவர்களிடையே அனுப்பினான்.

பக்கத்து தேசங்களான ரோமும் பாரசீகமும் நாகரீகத்தில் கல்வியில் தேர்ந்தவர்களாக இருக்கும் போது அல்லாஹ் படிப்பறிவில்லாத சமூகத்திலிருந்து ஒருத்தவர்களை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறான். (இதனை அல்லாஹ் வழங்கிய கொடை என்றும் அடுத்த ஆயத்தில் சொல்கிறான்)

அந்த தூதர் என்ன செய்கிறார்கள்?

4 விஷயங்கள் செய்கிறார்கள்

1.
யதுலு - ஓதுகிறார்கள்
அலைஹிம் - அவர்களிடம்
ஆயாதிஹி - வாக்கியங்களை

2.
வ யுஜக்கீஹிம் - தூய்மையும் படுத்துகிறார்கள்.

3.
வ யுஅல்லிமுஹும் - போதிக்கவும் செய்கிறார்கள்
ல் -கிதாபி - புத்தகத்தை

4.
வ உல் ஹிக்மத - விவேகத்தையும், ஞானத்தையும்.

முதல் ஆயத்தில் அல்லாஹ் அவனை பற்றி நான்கு பெயர்களை சொன்னான்.

1. உச்ச அதிகாரமுடைய (அரசன்),

2. இயல்பாகவே தூய்மையுடைய,

3. அதிகாரமும் மரியாதையும் கொண்ட,

4. விவேகமும், ஞானமும் நிறைந்த

இரண்டாவது ஆயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 4 திருப்பணிகளை செய்வதாக சொல்கிறான். அல்லாஹ்வின் பெயருக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பணிக்கும் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ளலாம்.

1. ஆயத்துகளை ஓதிக் காட்டுவது - ஆயத்தில் அல்லாஹ்வின் அதிகாரம் (ஆட்சி) இருக்கும் உதாரணமாக, இம்மையில் உள்ளவை மறுமையில் இருக்க போறவை இவை அனைத்தையும் குறிக்கும்,  அதனை ஓதிக் காட்டுகிறார்கள்

2. தூய்மைப்படுத்துகிறார்கள் - இறைவன் இயல்பாகவே தூய்மையானவன், மனிதன் அப்படியல்ல, அவனை தூய்மைப்படுத்தி இறைவன் நேசிக்க கூடியவர்களாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றுகிறார்கள்.

3. கிதாபை போதிக்கிறார்கள் - கிதாபில் தான் அல்லாஹ்வின் அதிகாரம் கட்டளைகள் இருக்கும் (ஹராம், ஹலால்)

4. விவேகம் நிறைந்தவர்களாக ஞானம் மிக்கவர்களாக மாற்றுகிறார்கள் - அல்லாஹ் விவேகமிக்கவன் ஞானமிக்கவன்.

அல்லாஹ் எந்த தன்மையில் இருக்கின்றானோ அந்த தன்மைக்கு மனிதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மாற்றுகிறார்கள். அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளான் மனிதர்களை அவ்வாறு மாற்றுவதற்கு.

வ இன் - இருந்த போதிலும்

கானு - அவர்கள்

மின் - இருந்து

கப்லு - முன்னர்

லஃபி - தெளிவான

ழலாளன் - வழிகேடு

அவர்கள் முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.


(அல்லாஹ்வாகிய) அவன் தான் எழுத்தறிவில்லா மக்களிலிருந்து ஒருவரை தனது தூதராக  தேர்ந்தெடுத்து அவர்களிடையே அனுப்பினான். (அந்த தூதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஆயத்துகளை (அல்லாஹிவின் அதிகாரம் எத்தகையது என்பதை) ஓதிக்காட்டுகிறார்கள், தூய்மை படுத்துகிறார்கள், (அல்லாஹ்வின் அதிகாரங்கள், கட்டளைகள் நிரம்பிய) கிதாபை போதிக்கிறார்கள், ஞானவான்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் (இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.

3வது வாக்கியம்
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 

(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

வ ஆஹரீன - மற்றும் அவர்களல்லாத

மின்ஹும் - அவர்களிலிருந்து

லம்மா - இன்னும் இல்லை

யல்ஹகூ - சேர்வது

பிஹிம் - அவர்கள்

வ ஹுவ - மற்றும் அவன்

ல் - அஜீஜு - அதிகாரமும் மரியாதையும் கொண்டவன்

ல் - ஹகீம் - விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

இன்னும்  அவர்களல்லாத (வ ஆஹரீன)

யார் அல்லாத?

படிப்பறிவில்லாதவர்களை குறிக்கலாம்
 மக்காவாசிகளல்லாதவர்களை குறிக்கலாம்

அவர்கள் (அதாவது மக்காவாசிகளல்லாதவர்கள்) இவர்களோடு இன்னும் சேரவில்லை (அதாவது முஸ்லிமாக வில்லை அல்லது இன்னும் பிறக்கவே யில்லை)

அதாவது இனிமேல் சேரலாம், அப்படி சேருகின்ற நான் நீங்கள் உள்பட முஸ்லிமாக பிறக்கின்ற அல்லது மாறுகின்ற அனைவரையும் இது குறிக்கும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி தூதுவர் என்பதற்கு இந்த ஆயத்து கூட சாட்சி தான் பகர்கின்றது.

மக்காவாசிகளல்லாத (பிற மக்கள், அதாவது) இன்னமும் (முஸ்லிமாக மாறி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூதராக ஏற்று அவர்களிடம் போதனை பெறாத) வேறு சிலர் இருக்கிறார்கள். (கியாமத் நாள் வரை வர இருக்கும் அவர்களுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூதராக இருப்பார்கள், போதனை செய்வார்கள்). அன்றியும் அவன் தான் அதிகாரமும் மரியாதையும் கொண்டவன், விவேகமும், ஞானமும் நிறைந்தவன்

4வது வாக்கியம்
   ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ

அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

தாலிக - அது

ஃபழ்லு - கொடை

ல் லாஹி - அல்லாஹ்வின்

அது அல்லாஹ்வின் கொடை.

எது?

அல்லாஹ் எழுத்தறிவில்லாத ஒருவரை தூதராக அனுப்பியது

யூதர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ”உம்மி (எழுத்தறிவில்லாதவர்கள்)” என்று ஏளனம் செய்தார்கள். ’உம்மி’யான ஒருவரை தூதராக ஏற்க முடியாது என்றார்கள். ”உம்மி’களில் எந்த இறைத்தூதரும் வரமுடியாது , இறைத்தூதார் என்பவர் யூத இனத்தவராகவே இருக்க முடியும் என்று பெருமை பேசினார்கள்.

ஆனால் அல்லாஹ் அப்படி”உம்மி’யான ஒருவர்களை தமது தூதராக தேர்ந்தெடுத்ததோடு அவர்கள் தூய்மைபடுத்துகிறார்கள் என்கிறான், அவர்களை நாம் தூதராக பெற்றது நமக்கு அல்லாஹ் வழங்கிய கொடை என்கிறான்.

அதுவும் பெருமானார் 4 செய்திகளை சொல்வதாக குறிப்பிடும் போது முதல் செய்தியில் “யுத்லு ஆயத்திஹி” வாக்கியங்களை படிக்கிறார்கள் என்று கூறினான். எழுத்தறிவில்லாத அவர்களை இறைவன் படிக்க வைத்தது இறைவனின் கொடையாகும்.

1400 வருடங்களுக்கு பிறகு வாழ்கின்ற நமக்கு அவனுடைய ஆயத்துகளை, தூய்மையாக மாறுவதை, கிதாபை விளங்கி கொள்வதை, ஞானவானாக மாறுவதை அதுவும் உலகின் மிக சிறந்த மனிதரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக கிடைக்க பெறுவதை கொடை என்கிறான்.

யூதிஹி - அவன் வழங்குகின்றான்

மன் - யாருக்கு

யஸாஉ - நாடுகிறானோ

இத்தகைய கொடை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கு மட்டுமே அந்த கொடையை பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

து - உடைமையாளன்

ல் ஃபழ்லி - கொடை

ல் அழீம் - தலை சிறந்த

அல்லாஹ் தான் மேலான கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன்

(எழுத்தறிவில்லாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் தூதராக பெற்றது, அவர்கள் மூலமாக இறைவனின் ஆயத்துகளை கேட்பது, தூய்மையடைவது, கிதாபை புரிவது, ஞானவானாக உயர்வது, இப்படியாக,) அது (யாவும்) அல்லாஹ்வின் (அருட்) கொடையாகும். (இத்தகைய கொடையை) அவன் (யாருக்கு) நாடுகிறானோ அவருக்கு வழங்குகின்றான். அவனே (அருட்) கொடைகளின் தலைசிறந்த உடைமையாளன். 


பகுதி 3 - வேதத்தின் படி நடக்காதவர்களை பற்றி கூறுவது

5வது வாக்கியம்

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ 

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

அல் லதீன - யாருக்கு

ஹும்மிலு - சுமத்தப்பட்டு/ ஒப்படைக்கப்பட்டு/ பொறுப்பு சாற்றப்பட்டு (கர்ப்பினி பெண்களை ’ஹமலா’யிட்டாஹா என்று சொல்வோம் அல்லவா... ஹமல் என்றால் சுமப்பது... ஹும்மிலு என்றால் கடுமையான சுமை (powerful burden))

ல் தவ்ராத - தவ்ராத் என்ற இறைவேதம்

சும்ம - பிறகு

லம் - இல்லாமல்/ செய்யாமல்

யஹ்மிலூஹா - பொறுப்புகளை (ஏற்றுக் கொள்ளவில்லை)

கமசலி - (அவர்களின்) உதாரணம்

ல் ஹிமாரி - கழுதை

யஹ்மிலு - சுமப்பது

அஸ்ஃபாரன் - புத்தகங்கள்

பிஃஸ - கொடுமையான/ மோசமான

மஸலு - ஒப்புமை/ உதாரணம்

ல் கவ்மி - அந்த நாட்டு மக்கள்

ல் லதீன - யார்

கத்தபு - மறுப்பு

பி ஆயாதில்லாஹி - அல்லாஹ்வின் வாக்கியங்கள்

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

லா - இல்லை

யஹ்தி - வழிகாட்டுதல்

ல் கவ்ம - அந்த நாட்டு மக்கள்

ல் ழாழிமீன் - (வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றும்) வழி தவறியோர்

ஒரு மக்களுக்கு தவ்ராத் எனும் கடுமையான சுமையை மகத்தான பொறுப்பை சுமக்கும்படி ஒப்படைத்தான். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை கொஞ்சம் கூட ஏற்று அதன்படி நடக்கவில்லை.

இந்த இடத்தில் அல்லாஹ் யஹூதிகள் என்றோ பனி இஸ்ராயீல்கள் என்றோ சொல்லவில்லை... உதாரணமாக சொல்கிறான்.... ”ஒரு மக்களுக்கு...” என்று.

அப்படி என்றால் இந்த உதாரணம் எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை முஸ்லிம்கள் குரான் ஷரீஃபை பெற்றுக் கொண்டு அந்த மகத்தான பொறுப்பை சுமக்க தவறினால்... என்றும் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

இத்தகையோரின் உதாரணமாவது ஒரு கழுதை புத்தகங்களை சுமந்து செல்வதை போன்றதேயாகும். கழுதையானது தனது முதுகில் புத்தகங்களை சுமந்து செல்கிறது. அதே போல் வேதத்தை அவர்கள் தங்கள் முதுகுக்கு பின்னால் வைத்து விட்டனர்.

இதே போன்றதொரு ஆயத் 2 வது ஸூராவான ஸூரத்து பகராவில் 101 வது ஆயத்தில் வரும்.. (அதன் மொழிபெயர்ப்பு: )

“... அல்லாஹ்வின் வேத்தத்தை தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.”

ஆக, இங்கே அல்லாஹ்வின் வேதத்தை பெற்று அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் ஆனால் அந்த வேதத்தை பேருக்கு வைத்திருக்கும் இவர்களின் உதாரணாமானது (இவர்களை கழுதை என்று சொல்லவில்லை... இவர்களின் உதாரணம் என்று தான் வருகிறது) புத்தக மூட்டையை சுமக்கும் கழுதையை போன்றது.

அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை நிராகரித்து அல்லது அதிலிருந்து படிப்பினைகள் பெறாமல்/ அதனை பின்பற்றாமல்/ அதில் சுமத்தப்பட்டிருக்கும் சுமைகளை ஏற்றுக் கொண்டு சுமக்காமல்/ செல்லும் நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு மோசமான/ கொடுமையான/ கொடூரமான உதாரணம் பாருங்கள்.

அல்லாஹ் இவ்வாறு தவறிழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட மாட்டான்.

தவ்ராத் (போன்ற) வேதத்தை சுமத்தப் பெற்று (தவ்ராத் வேதம் என்பது சுமை) அதிலிருந்து கொஞ்சம் கூட சுமந்து செல்லாமல் (படித்து பயன்பெறாமல்) இருந்த நாட்டு மக்களின் உதாரணம். அவர்களின் உதாரணமாவது, அடுக்கடுக்காய் புத்தகங்களை சுமந்து செல்லும் கழுதைக்கு ஒப்பானதாகும். (அல்லாஹ்வின் வேதங்களை நிராகரித்தவர்கள்/ படித்து பயன்பெறாமல் போன) அந்த நாட்டு மக்களின் உதாரணம் எவ்வளவு கொடூரமான உதாரணமாக இருக்கின்றது, அல்லாஹ் தவறிழைக்கும் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்க மாட்டான்.

6வது வாக்கியம்
   قُلْ يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 

(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”

குல் - சொல்லுங்கள்..!

யா அய்யுஹல்லதீன - ஓ..!

ஹாதூ - யூதவியத்தை கடைப்பிடிப்பவர்களே..!

இன் - ஒருவேளை

ஜஅம்தும் - உரிமை கோருவது

அன்னகும் - அதாவது நீங்கள்

அவ்லியாஉ - நேசர்கள்

லில்லாஹி - அல்லாஹ்வின்

மின் - லிருந்து

தூனி - தவிர்த்து

ல் னாஸி - மனிதர்கள்

ஃபதமன்னஉ - அப்போ விரும்புங்கள்

ல் மவ்த - மரணத்தை

ன் குன்தும் - நீங்கள் இருந்தால்

சாதிகீன் - உண்மையாளர்களாக


சில செய்திகள் விளங்க வேண்டும்:
குரான் ஷரீஃபில் அல்லாஹ் இறை நேசர்களை பற்றி குறிப்பிடும் போது அவர்களுக்கு பயம், கவலை எல்லாம் கிடையாது என்கிறான்.
அவர்களுக்கு மரணம் பற்றியும் கூட பயமோ, கவலையோ, துக்கமோ கிடையவே கிடையாது.
அதனால் தான் இறை நேசர்களின் மரண இரவை “உரூஸ்” என்று சொல்கிறோம். உரூஸ் என்பது பாரசீக மொழி.  சரியான வார்த்தை “அரூஸ்” என்பதாகும். ’ஷபே - அரூஸ்’ என்றால் ”திருமண இரவு” என்று பொருள். அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். இது தான் மருவி “உரூஸ்” என்றானது.

இங்கே யூதவியத்தை பின்பற்றும் மக்கள் உண்மையிலேயே மற்றவர்களை விட நாங்கள் தான் இறைவனுக்கு நேசத்துக்குறியவர்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்படி அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் எங்கே மரணத்தை விரும்புங்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யூதவியத்தை பின்பற்றும் மக்களை நோக்கி கூறும்படி கூறுகிறான்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..! யூதவியத்தை பின்பற்றும் மக்களே..! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான் அல்லாஹ்வுக்கு நேசத்துக்குறியவர்கள் (உற்ற தோழர்கள்/ பாதுகாக்கப்பட்ட நண்பர்கள்) என்று உரிமை கொண்டாடுகிறீர்களே..! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்கே?) மரணத்தை விரும்புங்கள்... (பார்க்கலாம்?)!?” (என்று கூறுங்கள்)

7வது வாக்கியம்
   وَلَا يَتَمَنَّوْنَهٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏ 

ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

வலா - ஆனால் இல்லை

யதமன்னவ்னஹு - அவர்கள் விரும்புவது

அபதன் - எப்பொழுதும்

பிமா - எதனை

கத்தமத் - முன்னர் அனுப்பி வைத்த

அய்தீஹிம் - கைகள்

வல்லாஹு - அல்லாஹ்

அலீமுன் - எல்லாம் அறிந்தவன்

பிழ்ழாழிமீன் - தவறிழைப்பவர்களை

ஆனால் அவர்கள் மரணத்தை விரும்புவதில்லை.

இப்பொழுது நமக்கும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளலாம்? நாம் மரணத்தை விரும்புகிறோமா? என்று

யார் தான் மரணத்தை விரும்புவார்கள்?
அவனுடைய நேசர்கள் மட்டும் தான் விரும்புவார்கள்.

ஏன் அவ்வாறு விரும்புவார்கள்?
அவர்கள் மரணத்திற்கு பிறகு தேவைப்படும் பொருள்களை சம்பாதித்து அனுப்பி வைத்து விட்டார்கள். அவர்கள் இங்கே செய்த அமல்கள் இரட்டிப்பாகி அவர்களுக்கு லாபம் தரும் இடமாக காட்சியளிக்கிறது.

யார் மரணத்தை விரும்ப மாட்டார்கள்?
யார் மரணத்திற்கு பிறகு தேவையானதை இன்னும் சம்பாதித்து அனுப்பவில்லையோ அவர்கள் தான் விரும்ப மாட்டார்கள்.

அவர்கள் கைகள் முன்னர் அனுப்பி வைத்த (செய்த பாவங்கள்) காரணத்தினால் அவர்கள் அதனை (மரணத்தை) ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மற்றும் அல்லாஹ் தவறிழைக்கும் மக்களை முழுதுமாக அறிந்தவனாகவே இருக்கின்றான்.


8வது வாக்கியம்
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

குல் - சொல்லுங்கள்..!

இன்ன - நிச்சயமாக..!

ல் மவ்த - மரணமானது

ல் லதீ - எது

தஃபிர்ரூன - நீங்கள் விரண்டு ஓடுகிறீர்களோ

மின்ஹு - அதனை விட்டும்

ஃப இன்னஹு - அது நிச்சயமாக

முலாகீகும் - சந்திக்கும்

மரணம் நாம் விரும்பாமல் போனதற்காக நமக்கு வராமல் போய்விடுமா என்ன?

அல்லாமா இக்பால் ஒரு கவிதையில் இப்படி எழுதியிருப்பார்கள், “மக்கள் எல்லோரும் மரணத்தை கண்டு விரண்டு ஓடுகிறார்கள். ஆனால்... ஏ மரணமே..! அவர்கள் உன்னை நோக்கி தான் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்..” என்று

சும்ம - அப்பொழுது

துரத்தூன - நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள்

இலா - நோக்கி

ஆலிமி - அறிந்தவன்

ல் கைபி - மறைவானவையும்

வஷ்ஷஹாததி - வெளிப்படை யானவற்றையும்

ஃப யுனப்பி  ஊகும் - அவன் உங்களுக்கு அறிவிப்பான்

பிமா - எதை

குன்தும் - வழமையாக

தஃமலூன் - செய்து கொண்டிருந்தீர்களோ (அதனை)


(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!, நீங்கள்) சொல்லுங்கள்..!  எந்த மரணத்தை கண்டு விரண்டு ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ..! நிச்சயமாக அந்த மரணமானது உங்களை சந்தித்தே தீரும் (அது வழியில் வந்து கொண்டிருக்கிறது) அதன் பிறகு நீங்கள் அனைவரும் (மரணம் வந்ததும்), மறைவானவற்றையும் (நாம் யாரும் இல்லாத சமயத்தில் வெளியே தெரியாமல் செய்ததையும்), பகிரங்கமானவற்றையும் (வெளிப்படையாக தைரியமாக கொஞ்சம் கூட பயமோ கவலையோ படாமல் செய்ததையும்) அறிந்தவனிடம் அனுப்பி வைக்கப் படுவீர்கள். அப்பொழுது நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று (ஒன்று விடாமல் அனைத்தையும் உங்களிடமே) அறிவிப்பான்.


                                        பகுதி 4 - ஜும்மாவை பற்றி கூறுவது

9வது வாக்கியம்
  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

யா அய்யுஹல்லதீன ஆமனு - ஓ..! ஈமான் கொண்டவர்களே..!

இதா - எப்பொழுது

நூதிய - அழைப்பு விடுக்கப்படுகிறது

லிஸ்ஸலாதி - தொழுகைக்கு

மின் - (நாளில்) ஒரு பகுதி

யவ்மி - நாள்

ல் ஜும்அதி - வெள்ளிக் கிழமை

வெள்ளிக்கிழமையின் ஒரு பகுதி (60 நிமிடங்கள் - 1 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம்)யினை பள்ளியில் கழிக்க உங்களுக்கு அழைப்பு விடப் படுகிறது.

யூதர்களுக்கு ‘சப்த்து’ (சபாத்து நாள் என்போமே, அது) எனும் சனிக்கிழமை வரையறை இருந்தது, அது ஒரு நாள் முழுமைக்கும் பொருந்தும். அதாவது ‘அந்த முழு நாளையும் அவர்கள் ஓய்வுக்கும் வணக்க வழிபாட்டுக்கும்  ஒதுக்கி விட வேண்டும். எந்த உலக அலுவல்களிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது’ என்று சட்டம் பிறப்பிக்கப் பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் அதனை மீறி விட்டார்கள் அவர்களை இறைவன் எவ்வாறு தண்டித்தான் என்று ஸூரத்துல் பகறாவில் 65, 66 ஆயத்துகளில் விளக்குகிறான்.

ஆனால் இங்கே முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமையில் ஒரு பகுதி மட்டுமே வேலைக்கு ஓய்வு கொடுக்க கட்டளையிடப் பட்டிருக்கிறது.

ஃபஸ் அவ் - விரைந்து செல்லுங்கள்

இலா - நோக்கி

திக்ரில்லாஹி - அல்லாஹ்வை நினைவு கூற

அல்லாஹ்வை நினைவு கூற - அதாவது முழுமையாக அல்லாஹ்வின் நினைவில் மூழ்கி இருக்க விரைந்து செல்ல வேண்டும்.

இங்கே அல்லாஹ்வை நினைவு கூற என்று வரும் போது முன்னர் கூறிய வசனங்களிலிருந்து தொடர்பு படுத்தி பார்ப்பது உகந்ததாகும்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது என்றால் அல்லாஹ் மலிக்காகவும், குத்தூஸாகவும், அஜீஜாகவும், ஹகீமாகவும் இருக்கிறான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கிடைத்த கொடை, அவர்கள் மூலமாக நாம் மலிக்கை பற்றியும், குத்தூஸை பற்றியும், அஜீஜை பற்றியும் ஹகீமை பற்றியும் தெரிந்து அதுவாக மாறுகிறோம்.

கைகளால் நாம் நன்மையை முற்படுத்தி அனுப்பி வைத்ததன் காரணத்தால் மரணத்தை விரும்புகிறோம்.

இத்தகைய நன்மையை அடைவதற்காக நாம் எதையாவது கொடுக்க வேண்டுமா?

ஆம்

எதனை?

வதரு - அதோடு விட்டும் விடுங்கள்

ல் பைஅ - வியாபாரங்களை (விற்பனைகளை)

வியாபாரம் என்றால் பல வேலைகள் இருக்கும், சரக்கு வாங்குவது, சம்பளம் தருவது, கடனில் வாங்கிய பொருளுக்கு காசு கொடுப்பது, இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். வியாபாரத்தில் எல்லா வேலைகளும் நமக்கு நாட்டம் வந்துவிடுவதில்லை. ஒரு பணம் போட்ட முதலாளிக்கு வியாபார வேலைகளில் பிடித்தமானது பொருள் விற்பனை நடந்து அதற்குறிய லாபத்தோடு பணம் வருவது தான்.

அல்லாஹ் இங்கே “பைஅ” என்று சொல்கிறான். “பைஅ” என்றால் வியாபாரம் என்ற பொது அர்த்தம் பொருந்தாது. “பைஅ” என்றால் குறிப்பாக விற்பனையை தான் குறிக்கும். ஆக, அல்லாஹ் ரொம்ப குறிப்பாக ஒரு வியாபாரத்தில் அல்லது வேலையில் எதில் நாட்டம் வருமோ அந்த காசு வரும் விற்பனையை(/ சம்பளம் வாங்குவதை அல்லது காசு வருவதை) விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவு கூற நாளின் ஒரு பகுதியை மட்டும் செலவிட விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான்.

தாலிகும் - அது

ஹைருன் - சிறந்தது

லகும் - உங்களுக்கு

இன் - எப்பொழுது

குன்தும் - நீங்கள்

தஃலமூன் - அறிவீர்களானால்

நாம் (அல்லாஹ்வை) அறிந்திருந்திருந்தால் நமக்கு வழங்கியிருக்கின்ற வாய்ப்பை பற்றி விளங்கியிருந்தால் நாம் விற்பனையை விட அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு விரைவது தான் சிறந்தது என்று தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமையன்று நாளின் ஒரு பகுதியில் (அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பள்ளியில் செலவழிக்க) தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் (பாங்கு சொல்லப்பட்டால்) விற்பனையை (காசு வரும் அந்த வியாபாரத்தை) விட்டுவிட்டு அல்லாஹ்வை (முற்றிலுமாக) நினைவு கூற (காசை பத்தியெல்லாம் நினைக்காமல் அல்லாஹ்வை பற்றி நினைக்க) பள்ளிக்கு விரைந்து செல்லுங்கள். நீங்கள் (அல்லாஹ்வை, ஹக்கை) அறிந்திருந்தால் (காசை பற்றி நினைப்பதை விட அல்லாஹ்வை பற்றி நினைப்பது தான்) அது தான் உங்களுக்கு சிறந்தது.

10வது வாக்கியம்
   فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

ஃப இதா - அதன் பிறகு

குழியதி - முடிந்து விட்டால்

ல்  ஸலாது - தொழுகை

ஃப அன்தஸிரு - பரவிச் செல்லுங்கள்

ஃபில் அர்ழி - பூமியை நோக்கி

வப்தகூ - அதோடு தேடுங்கள்

மின் ஃபழ்லில்லாஹி - அல்லாஹ்வின் அருட் கொடைகளை

நாள் பூரா பள்ளியிலேயே இருக்க சொல்லவில்லை, தொழுகை முடிந்ததும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட் கொடைகளை தேடுங்கள் என்று சொல்கிறான்.

பள்ளியிலிருந்து வெளியேறி வந்து விட்டால் வியாபார நாட்டத்தில் அல்லாஹ்வை நினைக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்க தோன்றும்.

அது தான் கிடையாது? பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடன் தான் இன்னும் அதிகமதிகமாக நினைக்க வேண்டும்.

பள்ளிவாசல் என்பது பயிற்சி கூடம், அங்கே பெற்றதை வெளியே வந்தவுடன் வழமையாக மாற்ற வேண்டும்.

வத் குருல்லாஹ -  அத்தோடு அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்

கஸீரன் - அதிகமாக

லஅல்லகும் - அதனால் நீங்கள்

துஃபிலிஹூன் - வெற்றி பெறலாம்

அருள்கொடையை தேடுங்கள் என்று சொல்லிவிட்டு நிறுத்தவில்லை, அல்லாஹ்வை நினைவு கூற பள்ளிக்கு சென்றோம், தொழுது முடிந்து அருளை தேடுகிறோம்,

அருள் காசு பணம் என்று வைத்துக் கொண்டால் காசு பணம் தேடுகிறோம், சம்பாதிக்கிறோம். ஆனால், பள்ளியில் எவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூறினோமோ அதே போல் வியாபாரம் செய்யும் போதும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அப்போது தான் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறான்.

தொழுகையை முடித்ததும் பூமியை நோக்கி பரவிச் சென்று அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள், அத்தோடு வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள் இதனால் நீங்கள் வெற்றி பெறலாம்

11வது வாக்கியம்
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏ 

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

வ இதா - அத்தோடு எப்பொழுது

ர அவ் - அவர்கள் பார்த்தார்களோ

திஜாரதன் - வியாபாரத்தை

அவ் - அல்லது

லஹுவன் - கேளிக்கையை

ன் ஃபழ்ழு - விரைகிறார்கள்

இலைஹா - அதனை நோக்கி

இங்கே தான் எந்த சூழலுக்கு இந்த ஆயத் இறக்கப்பட்டதோ அந்த விஷயத்துக்கு வருகிறான்.

ஒரு சாரார் பள்ளிக்கு அல்லாஹ்வை நினைவு கூற விரையவில்லை, மாறாக பள்ளியிலிருந்து ஒரு வியாபாரத்தையோ அல்லது வேடிக்கையையோ பார்த்ததும் அங்கே விரைந்து செல்கிறார்கள்.

இங்கே இரண்டு விஷயங்களை தேடி மக்கள் ஓடுகிறார்கள்.
1. வியாபாரம்
2. வேடிக்கை

இதில் வியாபாரம் என்றால் தனது பொருளை விற்பனைக்கு செய்து லாபம் பார்க்க விரைகிறார்கள்.
வேடிக்கை என்றால் அங்கே எதையும் விற்கவோ வாங்கவோ அல்ல, விண்டோ ஷாப்பிங் என்று சொல்கிறோமே அப்படி வேடிக்கை பார்க்க வேண்டியும் செல்கிறார்கள்.

எப்போது தெரியுமா செல்கிறார்கள்?

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது...

வதரகூக - அத்தோடு விட்டுவிடுகிறார்கள்

காயிமன் - நின்ற நிலையில்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்க அவர்களை பேச விட்டு விட்டு அந்த கூட்டத்திலிருந்து எழுந்து செல்வது என்பது மிகவும் அவமரியாதையான நன்னடத்தை இல்லாத செயலாகும்.

குல் - சொல்லுங்கள்..!

மா - எது

இன்தல்லாஹி - அல்லாஹ்விடத்தில் உள்ளது

ஹைருன் - சிறந்தது

மினல் லஹ்வி - கேளிக்கையை விடவும்

வமினல் திஜாரதி - வியாபாரத்தை விடவும்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து சொல்ல சொல்கிறான்..

என்ன சொல்ல சொல்கிறான்?

அல்லாஹ்விடத்தில் உள்ளது மேலே கண்ட இரண்டையும் விட சிறந்தது என்கிறான்.

ஆனால் மேலே சொல்லும் போது முதலில் வியாபாரத்தையும் இரண்டாவது வேடிக்கையையும் சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் உள்ளது சிறந்தது என்று வரும் போது முதலில் வேடிக்கையையும் வியாபாரத்தையும் விட சிறந்தது என்று மாற்றி சொல்கிறான்.

முதலில் சொன்னது மக்கள் விரைந்து செல்வது வேடிக்கையை விட வியாபாரத்திற்கு தான். அல்லது வேடிக்கைக்கு செல்பவர்களை விட விற்பனைக்கு செல்பவர்கள் அதிகமாக விரைந்து முடிக்க பார்ப்பார்கள்.

ஆனால், இரண்டிலும் எது தவறானது என்று கேட்டால், அது வேடிக்கைக்காக செல்வது தான், அதனால் தான் வேடிக்கையையும் வியாபாரத்தையும் என்று சரியான இடத்தில் முன் பின் பொருத்தி அல்லாஹ்விடத்தில் உள்ளது இதனை விட சிறந்தது என்கிறான்.

வல்லாஹு - மற்றும் அல்லாஹ்

ஹைரு - சிறந்த

ல் ராஜிகீன் - வழங்குபவன்

மற்றும் அல்லாஹ் தான் நமக்கு வழங்குபவன், அந்த நேரத்து விற்பனைக்கு வாங்க வரும் வியாபார குழு அல்ல.

இன்னும் (நபியவர்களே. நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, (ஊருக்கு திரும்புவதை) கண்டால் அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், (நீங்கள் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது,) நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Friday, May 20, 2016

இமாம் அபுஹனிபா றஹ்மத்துல்லாஹி அலைஹி

இமாமவர்கள் ஈராக்கில் உள்ள கூஃபா நகரில் ஹிஜ்ரி 80ஆம் ஆண்டு பிறந்தார்கள்.  இவர்களது தந்தையார் ஒரு பாரசீக வியாபாரியாக இருந்தார்கள். இவர்களது முழு பெயர் நுஃமான் பின் தாபித் இப்னு ஜவ்தி என்பதாகும்.

ஹஜ்ரத் அலி றலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் கூஃபா நகரம் தலைநகராக கொள்ளப்பட்டது. அச்சமயம் இமாமவர்களது தந்தையான தாபித் என்பவர்கள் ஹஜ்ரத் அலி றலியல்லாஹு அவர்களை சந்தித்து உள்ளார்கள். கூஃபா நகர் வரலாற்றின் ஒரு காலத்தில் மிக முக்கிய கல்வி மையமாகவும் 1000த்திற்கும் மேற்பட்ட ஷஹாபா பெருமக்களும் வாழும் நகரமாகவும் இருந்து வந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உத்தம தோழர்களான ஷஹாபாக்களில் ஒருத்தவர்களையேனும் நேரில் சந்தித்தவர்களை தாபியின் என்று அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இமாமவர்கள் ஒரு தாபியின் ஆவார்கள்.

இமாமவர்கள் தம்முடைய 20வது வயதில் இஸ்லாமிய சட்ட கல்வியில் பயின்று தேறுவதறுக்கு ஆர்வம் கொண்டார்கள்.

இமாமவர்களுக்கு 4000க்கும் மேற்பட்ட ஷெய்குமார்கள் (மார்க்க குரு) இருந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் இமாம் ஹம்மாத் அவர்கள். இமாம் ஹம்மாத் அவர்கள் மார்க்க கல்வியை உத்தம ஷஹாபாக்களில் ஒருவர்களான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் றலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்றார்கள். இமாம் ஹம்மாத் அவர்கள் ஹிஜ்ரி 120ஆம் ஆண்டு மறைந்தார்கள்.

இமாமவர்கள் அவர்களது ஷெய்கு அவர்கள் மீது எந்த அளவுக்கு மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் என்றால், 7தெரு தாண்டி வசித்து வந்த தமது ஷெய்கு அவர்களது வீடு இருக்கும் திசையை நோக்கி தமது காலை கூட நீட்டி அமர மாட்டார்களாம்.

இமாமவர்கள் தமது தந்தையாரது துணி வியாபாரத்தில் பங்கெடுத்து மிகுந்த விழிப்போடு நேர்மையாகவும் நியாயமாகவும் அல்லாஹ்வுக்கு பயந்து நடத்தி வந்தார்கள். ஒரு முறை இவர்களது ஊழியர் ஒருவர் ஒரு வாடிக்கையாளரிடம் சிறிய குறைபாடுள்ள துணியை அதை பற்றி வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமல் விற்று விட்டார், இதை கேள்விபட்டதும் அவர்கள் அந்த வாடிக்கையாளரிடம் பணத்தை திருப்பி கொடுக்க முயன்று முடியாமல் போனது. மிகுந்த வருத்தத்துடன் இருந்த அவர்கள் உடனடியாக வந்த வியாபார வருவாய்களை (30,000 திர்ஹம்கள்) தான தர்மமாக கொடுக்க உத்திரவிட்டார்கள்.

இமாமவர்கள் கல்வியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் கூஃபா நகரில் ஒரு பள்ளியை நிறுவினார்கள். அது பிற்காலத்தில் இறையியல் பாடத்தில் புகழ் பெற்று விளங்கிற்று. இந்த பள்ளியில் அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் சம்மந்தமான பாடங்களை நடத்தினார்கள்.

இங்கே மாணவர்கள் ஃபிக்ஹ் அல்லது இஸ்லாமிய சட்டங்களை திட்டமிட்ட ஒரு பல்கலைக்கழக படிப்பினை போல் இமாமவர்களின் நேரடி மேற்பார்வையில் நிர்வாகத்தில் படித்து வந்தார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இமாமவர்களிடம் மதித்து தங்கி பயின்ற ஏராளமான அறிவாற்றலுள்ள மாணவர்கள் இருந்தார்கள், இந்த மாணவர்களது முயற்சி  தான் ஹனஃபி மத்ஹப் எனும் பொக்கிஷம் கிடைக்க காரணமானது.

இமாமவர்கள் தான் முதன் முறையாக இஸ்லாமிய சட்டதிட்டங்களை திட்டமிட்ட கல்வி முறை வடிவில் மாணவர்கள் பயில அமைத்து தந்தார்கள்.

இமாமவர்களின் மாணவர்களான இமாம் அபு யூசுஃப் அவர்களும் இமாம் முஹம்மத் அவர்களும் இமாமவர்களின் கருத்துக்களை கிதாபுல் ஆஸார் எனும் நூல் வடிவில் தொகுத்து தந்தார்கள்.

பக்தாதில் அல் மன்சூர் எனும் பனு அப்பாஸ் கலிஃபா என்பவரின் ஆட்சி நடந்த போது இமாமவர்களை நாட்டின் தலைமை காதியாக பொறுப்பேற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் இமாமவர்கள் அந்த வேண்டுகோளை அல்லது அரசு உத்திரவை ஏற்க மறுத்து தாம் தனிப்பட்ட முறையில் செயல்பட விரும்பினார்கள். அந்த பதவிக்கு தாம் பொருந்தவில்லை என்று பதிலனுப்பினார்கள்.

ஆட்சியாளரான மன்சூருக்கு இமாமவர்களை தலைமை காதியாக நியமிக்க அவருக்கான காரணங்கள் இருந்திருக்கலாம் ஆனால் இமாமவர்கள் மறுத்ததை கேட்டு இமாமவர்கள் பொய்யுறைக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

இமாமவர்கள் மிகுந்த பொறுமையோடு, “நீங்கள் சொல்வது உண்மையென்றால் நான் மறுப்பது இரண்டு வகையில் சரியாகிறது, ஒரு பொய்யுறைப்பவரை எப்படி தலைமை காதி பதவிக்கு நியமிக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

கோபமுற்ற மன்சூர் இமாமவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை சிறையிலடைத்தான்.

சிறையில் இருந்த போது தம்மிடம் அனுமதி பெற்று வந்தவர்களுக்கு சட்டதிட்டங்களை போதித்து வந்தார்கள்.

அதே சிறையில் இருக்கும் போது விஷம் கொடுக்கப்பட்டார்கள். தமது மறைவு நெருங்குகிறது என்பதை உணர்ந்த இமாமவர்கள் தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும் போதே ஹிஜ்ரி 150ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் மறைந்தார்கள்.

மறைவு செய்தி பக்தாத் முழுக்க பரவியது. ஒட்டு மொத்த நகரமே இஸ்லாமிய உலகின் தலைச்சிறந்த இமாமவர்களது இறுதி மரியாதை செலுத்த திரண்டது. 50,000க்கும் மேற்பட்டவர்கள் முதல் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றார்கள். கட்டுபடுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் ஜனாஸா தொழுகை மட்டுமே மொத்தமாக ஆறு முறை நடந்தது. அன்று வரமுடியாதவர்கள் இன்று வரை தொடர்ந்து அவர்களது மக்ரபாவிற்கு சென்று ஜியாரத் எனும் மரியாதை சந்திப்பை செய்து வருகிறார்கள்.


Friday, January 22, 2016

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை போன்ற மனிதரல்ல

பகுதி 1:

இதயத்தில் அழுக்குள்ளவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “நம்மை போன்ற ஒரு மனிதர் தான்” என்று சொல்வார்கள். 

இதயத்தை சுத்தமாக்க பயிற்சி எடுப்பவர்கள் (சூஃபியாக்களின் வழியில் பயணிப்பவர்கள்) அப்படி அழுக்குள்ளவர்கள் சொன்னதை எழுதியதற்கு கூட மன்னிப்பு கோருவார்கள்.

அப்படி அழுக்குள்ளவர்கள் தங்களது கீழான சிந்தனையின் உதவிக்கு ஆதாரமாக குரான் ஷரீஃபின் வாக்கியத்தை கொண்டு வருவார்கள். அப்படி அவர்கள் கொண்டு வந்த ஆயத்து கீழே வருகிறது.

குரான் ஷரீஃப்
18. சூரா கஹ்ஃபு
110வது வாக்கியம்

  قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏ 

(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களை போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

நன்றி: http://www.tamililquran.com/qurandisp.php?start=18 

”பார்த்தீர்களா? எவ்வளவு தெளிவாக இருக்கின்றது” என்று மார்தட்டுவார்கள் அந்த அழுக்குவாசிகள். இந்த ஆயத்தை எப்படி விளங்குவது என்பதை பார்ப்போம்.

ஒரு பகுதி மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

குல் - சொல்வீராக..!
இன்னமா (அரபி எழுத்தில் “இ” என்ற எழுத்தில் “அலிஃப்” அல்ல “அம்ஜா” பயன்படுத்தப்பட்டிருக்கிறது சில குரான் ஷரீஃப் பிரதிகளில் என்பதை கவனத்தில் கொள்க) - Only/ Indeed - நிச்சயாமாக..!
அனா - I - நான்
பஷருன் - (am) a man - மனிதன்
மிஸ்லுகும் - like you - உங்களைப் போன்ற 

பகுதி 2:

மேற்கொண்டு படிக்கும் முன்னர் முக்கிய மூன்று செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது:

1. “குல்’ என்ற வார்த்தை.. அதாவது “சொல்லுங்கள்..” என்ற வார்த்தை. அல்லாஹ் மேலே படித்த, “உங்களை போன்ற மனிதன்” என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் தான் சொல்ல சொல்லியிருக்கிறான்.. “யா அய்யுஹல்லதீன ஆமனு..” என்று முஃமீன்களை பார்த்து இந்த வார்த்தையை சொல்லவில்லை. ஆகையினால், இது பெருமானாருக்கு மட்டும் சொல்ல சொன்ன வார்த்தை. வேறு யாருக்கும் இதை சொல்ல அனுமதியில்லை.

இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் ஒரு உதாரணம் சொல்வார்கள், ஒரு பெரிய கோடீஸ்வரர் தன்னை தாழ்த்திக் கொண்டு, “நான் என்னங்க... ஒரு முஸாஃபர்..” என்று சொன்னால்... நீங்கள், “அப்படியா இந்தாங்க சோத்து சீட்டு.. பாபா பாய் கடைல கொடுத்தீங்கன்னா சோறு கறி கொடுப்பாரு”ன்னு சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்.

2. “பஷருன்” என்ற வார்த்தை... “பஷருன்..” என்றால் apparent skin/ apparent feature/ physical form அதாவது வெளிப்புற தோல்.. என்று அர்த்தம். அரபியில் ஒரு வார்த்தைக்கு நூறு அர்த்தம் இருக்கும். “ஸலாத்” என்ற வார்த்தைக்கு “தொழுகை” என்று சொல்கிறோமே, அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் 90 அர்த்தங்கள் இருக்கிறதாம்..
”பஷருன்” என்ற வார்த்தைக்கு எதிர்பதம் “ஜின்” (hidden) என்பதாகும்

3. அரபிய இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா” என்றால் கேள்விகள் என்று அர்த்தம். Dr. Fatai Owolabi Jamiu என்ற நைஜீரிய நாட்டில் உள்ள Ogun மாநிலத்தில் உள்ள அரபிய கல்லூரியில் ”A Transformational- Generative Approach towards Understanding Al-Istifham” என்று ஆய்வு செய்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பிடிஎஃப் கோப்பாக படிக்க கிடைக்கிறது. இதில் இஸ்திஃபாம் பற்றி 41/42ம் பக்கத்தில் இஸ்திஃபாமுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார். 

Seeking for an information on something that is not Known before and always answered by specifying the information required or by using one of the answer tools”. 
அதாவது, “முன்னர் அறியப்படாத சில தகவல்களை அறிய முற்படுவதும் எப்பொழுதும் தேவையான பதிலை சொல்வதும் அல்லது பதில் சொல்லும் முறைகளை ஒன்றை பயன்படுத்துவதும் ஆகும்”

அதாவது, ஒரு கேள்வி கேட்கப்படும், அந்த கேள்விக்கு உள்ள பதில் தெரியாது, எப்போதும் பதில் தொடர்ந்து சொல்லப்படும்.

இத்தகைய இஸ்திஃபாமா வகை கேள்வியை பல வகையாக பிரிக்கலாம், அதில் ஒரு வகை அம்ஜா கேள்விகள் என்று ஒன்று உண்டு. (பார்க்க டாக்டரின் ஆய்வு கட்டுரை பக்கம் 42)

أقرأت الكتاب ؟ 
(இக்ர அல் கிதாப்) 

வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பார்த்தால்  - ”கிதாபை படி” என்று ஒரு செய்தி போல் தான் வரும். ஆனால் அதுவே முதல் எழுத்தில் “அம்ஜா” எனும் அரபி எழுத்து சேர்ந்து விட்டால் அதை கேள்வியாக படிக்க வேண்டும்.”கிதாபை படித்தாயா? - Did you read the book?" என்று.

மேலே சொன்ன மூன்று செய்திகளையும் மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ளளதை படியுங்கள்:

பகுதி 3:

மேலே வார்த்தைக்கு வார்த்தைக்கு மொழி பெயர்த்திருக்கும் 4 வார்த்தைகளை மட்டும் தமிழில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதுவோம்.
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்.”

நான் அதே வாக்கியத்தை கொஞ்சம் மாத்தி எழுதறேன்.. இப்போது படித்து பாருங்கள்..
“சொல்வீராக...! நிச்சயமாக நான் உங்களை போன்ற மனிதன்?”

என்ன வித்தியாசம் என்றால் முதல் மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் முற்றுப்புள்ளி இருந்தது இரண்டாவது மொழிபெயர்ப்பின் வார்த்தையின் இறுதியில் கேள்விக்குறி இருக்கிறது.

’இன்னமா” என்று ஆரம்பிக்கும் வார்த்தையில் “அலிஃப்” அல்லாமல் “அம்ஜா” வந்திருந்தால் அது அரபி கிராம்மரில் (இஸ்திஃபாமியா) கேள்வி போல் படிக்க வேண்டும் என்று ஒரு சரத்து உள்ளது.

உதாரணமாக, 6. சூரத்துல் அன்ஆம்
76வது வாக்கியம்

”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்.....”

இந்த வாக்கியத்தில் இப்ராஹீம் நபியவர்கள் நட்சத்திரத்தை பார்த்து “இதுதான் என் இறைவன்! (ஹாதா ரப்பி என்ற அரபி வார்த்தை)” என்று ஒரு செய்தியாக கூறினார்கள் என்று படித்து வந்திருக்கின்றோம். அப்படியல்ல.. இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸலாம் அவர்கள் எந்த காலத்திலும் எதனையும் இறைவன் என்று கூறவில்லை. குரான் ஷரீஃப் முழுக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்தை பற்றி அல்லாஹ் “ஹனிஃப்” (பார்க்க: 3வது ஸூரா 67வது ஆயத்) என்பதாக புகழ்ந்து கூறுகிறான்.

அப்போ இந்த வாக்கியத்தை எப்படி படிக்கணும்னா இறுதியில் ஒரு கேள்விக்குறியை சேர்த்து படித்து பார்க்க வேண்டும். இதற்கு பெயர் அரபி இலக்கணத்தில் “இஸ்திஃபாமியா - கேள்விகள்” என்று சொல்லப்படுகிறது. அம்ஜா மறைவாக உள்ளது.

”ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தை பார்த்தார், “இதுதான் என் இறைவன்?” என்று கூறினார்.....”

அதாகப்பட்டது, இதுதான் என் இறைவன் என்று ஆச்சர்யப்பட்டவில்லை, அவர்கள் கேள்வியாக கேட்கிறார்கள், “இதுவா என் இறைவன்?” என்று - நிச்சயமாக இல்லை என்ற தொனியோடு கேட்கிறார்கள்.

அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”... ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்” என்று வருகிறது.

அதே போல் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கத்து காபிர்கள் “என்னா பெரிய தூதுவர், எங்களை போன்ற மனிதர் தான்” என்று அவர்கள் கூறிய போது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள், “நான் என்ன உங்களை போல மனிதனா?” - நிச்சயமாக இல்லை என்ற தொனி இங்கே இருக்கின்றது.

அதனால் தான் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ”...  (யூஹா இலய்ய) எனக்கு வஹி வருகின்றது....” என்று சொல்கிறார்கள்.

Thursday, January 7, 2016

குரான் ஷரீஃபில் ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்)

பெருமானார் (ஸல்) அவர்களின் மேன்மைமிக்க பதவி



ஸூரத்துல் மாயிதா (5)
வசனம் 15

பேரொளி - நூர் - Sacred Light

வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்மிடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்து கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை உங்களுக்கு விளக்கி காட்டுவார். இன்னும் அநேகத்தை விட்டுவிடுவார் (forgiving much). நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

2

ஸூரத்துல் அஹ்ஜாப் (33)
வசனம்: 56

அல்லாஹ்(ஜல்) அருள் புரிகிறான் - ஸலாம், ஸலவாத், தஸ்லீமாத் -Allah Blesses Him

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.  நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

3

ஸூரத்துல் அன்பியா (21)
வசனம்: 107

அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை ரஹ்மத்தல் லில்ஆலமீன் - Mercy for all the Worlds

நாம் உம்மை அகிலத்தாருக்கெல்லாம் (meaning, not just send for one community, He (upon Him be holy benedictions) sent down as Mercy for the entire humanity and all the worlds) ஒரு அருட்கொடையாக வேயன்றி அனுப்பவில்லை


4

ஸூரத்து முஹம்மத் (ஸல்) (47)
வசனம்: 2

பெயரே புகழுக்குரியவர் (புகழப்பட்டவர்) - முஹம்மது (ஸல்) - His Name is Muhammad (Meaning the Most Praised One)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல அமல்களை செய்து,முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டவையின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்துள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

5

ஸூரத்து அலம் நஷ்ரஹ் (94)
வசனம்: 4

அவர்களை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்வது - வரஃபனா லக திக்ரக் - Allah has exalted his Zikr

மேலும், நாம் உமக்காக உம்மை நினைவு கூர்வதை மேலோங்கச் செய்தோம்

6

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 8 - 9

மிஹ்ராஜ் இரவில் அவர்களின் நிலை உயர்த்தப்பட்டது - சும்ம தனா ஃபததல்லா ஃப கான காப கவ்சைனி அவ்அத்னா - His Exaltation in the night of Mihraj

பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்
வில்லின் இரு முனைகளைப் போல், அதினும் நெருக்கமாக வந்தார்

(Then he drew near, then he came closer 
Till he was (distant) two bows' length or even nearer)

7

ஸூரத்து பனீ இஸ்ராயில் (17)
வசனம் 79

புகம் பெற்ற தலம் - மகாமம் மஹ்மூதன் - His Station of Praise

இன்னும் இரவின் பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது வருவீராக; உம்முடைய இறைவன் புகழ் பெற்ற தலத்தில்உம்மை எழுப்ப போதும்

அல்லாஹ்வின் நேசர்களில் முதன்மையானவர்கள் 

8

ஸீரத்துல் ஆல இம்ரான் (3)
வசனம்: 31

அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமென்றால் நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும் - ஃபத்தபிஊனி யுஹ்பிப்குமுல்லாஹு -  If you want to gain the love from Allah then follow him (upon Him be holy benedictions)

நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசீப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிக்க கருணைய உடையவனாகவும் இருக்கின்றான்.

9

அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அழைக்கின்றான் - Allah addresses him with love and affection

A

ஸூரத்து தாஹா (20)
வசனம்: 1

தாஹா

B

ஸூரத்து யாஸீன் (36)
வசனம்: 1

யாஸீன்

C

ஸீரத்துல் முஸ்ஸம்மில் (73)
வசனம்: 1

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

(O you wrapped up in your raiment)

D
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (74) 
வசனம்: 1


போர்த்திக் கொண்டிருப்பவரே! 

(O you enveloped in your cloak)

10

ஸூரத்துல் ஹுஜுராத் (49)
வசனம்: 7

”அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கிறார்” என்று அல்லாஹ் கூறுகிறான் - ரஸூலுல்லாஹ் - Allah says: Realise that My Prophetic Messenger himself is with you

அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர்  இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிபட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.

11

ஸூரத்துத் தவ்பா (9)
வசனம்: 128

அல்லாஹ் மிக்க கருணையாளன், மிக்க கிருபையாளன் என்ற தனது தன்மை பெயர்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது சூட்டுகிறான் - ரஊப், ரஹீம் -  Allah describes Hajrath Mohamed (Sal) with His own attributes of Most Kind and Merciful

நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்;நீங்கள் துன்பத்திற்க்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கின்றது; அன்றி அவர் உங்களையே பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்

12

ஸூரத்துன்னிஸாவு
வசனம்: 113

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் கிருபையையும் பெற்றவர்கள் - Possessor of Allah's Grace and Mercy

உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. 

13

அவர்களை கொண்டே நம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் அருள் 

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

(Certainly, Allah has shown a special favour to the believers by raising among them a (Prophetic) Messenger from among themselves who recites to them His revelations, and purifies them, and teaches them the Scripture and the Wisdom, although before (he came to them) they were in manifest error) 
  
 14

ஸூரத்துல் அன்ஃபால் (9)
வசனம்: 33

முஹம்மத் (ஸல்) அவர்கள் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் வேதனை செய்வதில்லை - Allah does not punish the people if He is in their midst

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை

15

ஸூரத்துல் ஃபத்ஹ் (48)
வசனம்: 10

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்வது அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்வது போன்றது - பைஅத் - Allegiance to Him is allegiance to Allah 


நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான். 

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு குரான் ஷரீஃப் அருளப்பட்டது

16

ஸூரத்துல் ஹிஜ்ர் (15)
வசனம்: 87 

அல்லாஹ் பெருமானாருக்கு ஸூரத்துல் ஃபாத்திஹாவையும், குரான் ஷரீஃபையும் அருளினான் 

நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான  குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.


17

ஸூரத்துந் நஜ்ம் (53)
வசனம்: 3 - 4

Totally Inspired

அவர் தம் இச்சைப்படி பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.



18

ஸூரத்துஷ் ஷூஃரா (26)
வசனம்: 192 - 197

அகிலங்களின் இறைவன் அருள்பாலிக்கப்பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் இதயத்தில் இறக்கிய குரான் ஷரீஃப் - ரப்பில் ஆலமீன், கல்ப் - Allah revealed the Noble Quran Shareef in His (upon Him be holy benedictions) Blessed Heart

மேலும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது-

தெளிவான அரபி மொழியில்.

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் இருக்கிறது.

பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?


19

ஸூரத்துல் அலஃக் (96)
வசனம்: 1

The first revelation He (upon Him be holy benedictions) received


படைத்த உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக.


20

ஸூரத்துல் ஜுமுஆ (62)
வசனம்: 

நம்மை பரிசுத்தப்படுத்த நம்மிலிருந்தே ஒருவர்

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரிய பண்புகள்

21

ஸூரத்துல் அஹ்ஜாப் (33) 
வசனம்: 21

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி - உஸ்வதுன் ஹஸனதுன் - an excellent (outstanding) example

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் மிக்க அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

22

ஸூரத்துல் அஹ்ஜாப் (33) 
வசனம்: 22

உண்மையாளர் - ஸாதிக் (வஸதக) - Truthful

அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

23

ஸூரத்துல் கலம் (68)
வசனம்: 4

முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்கள் - வ இன்னக அலயா ஹுலுகின் அளீம் - Recieved a Conduct Certificate as "Exalted Moral Character" from the Almighty

மேலும், நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

24 

ஸூரத்துன்னிஸாவு (4)
வசனம்: 65

அவர்களே நீதிபதி

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

25

ஸூரத்துன்னிஸாவு (4) 
வசனம்: 175

அவர்களே அத்தாட்சி அவர்களே பேரொளி

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம் 

26 

ஸூரத்துல் ஹாஃக்ஃகா (69)
வசனம்: 40

அவர்கள் கண்ணியமிக்கவர்கள் - கரீம் - Honoured, Noble

நிச்சயமாக, இது கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்

27
ஸூரத்துல் அஃராஃப் (7)
வசனம்: 199

முஹம்மத் (ஸல்) அவர்கள் மன்னிக்கும் மாண்பாளர் - Forgiving

எனினும்  மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

28 

ஸூரத்துந் நூர் (24)
வசனம்: 51

அவர்களின் தீர்ப்புக்கு கீழ்படிந்தவர்களே வெற்றியடைந்தவர்கள்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அழைக்கப்பட்டால், அவர்கள் சொல் எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், கீழ்படிந்தோம்” என்பது தான்; இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

29 

ஸூரத்துல் ஆலஇம்ரான் (3)
வசனம்: 121

போர் படைத் தளபதி - Brave: Commands Muslims in battle 

நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக இடத்தில் நிறுத்தினீர்அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.