Wednesday, September 26, 2007

இஸ்லாமிய கடவுள் கொள்கை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்

1

அண்டசராசரங்கள் முழுவதும் தானாக தோன்றின அதுமட்டுமல்லாமல் தானாக தான் இயங்கி வருகின்றன என்றால் அதை ‘நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது’ என்று நம்பி கூறிய மாபெரும் மேதையும் நாத்திகருமான ஐன்ஸ்ட்டீன் போன்றவர்களால் கூட ஏற்க முடிவதில்லை.

காரணம், தானாக தோன்றியிருந்தால் இப்பொழுது இருக்கும் ஒரு அழகு இருந்திருக்காது, தானாக இயங்கி வந்தால் இப்படி ஒரு ஒழுங்கு இருக்காது என்பது தான்.

வரையறைக்குள் சுற்றும் பூமி, தூணில்லாத வானம், பறக்கும் போது விழுந்து விடாத பறவை, நிறத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் வடிவத்தில் வித்தியாசம் காட்டும் இலைகள் இப்படியாக நான் குறிப்பிட்ட அந்த அழகின், அந்த ஒழுங்கின் அடையாளங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏன் மனிதன் தன்னை பற்றி ஒரு கணம் சிந்தித்தால் கூட அவனை விட ஒரு சிறந்த அடையாளம் இறைவனுக்கு ஆதாரம் வேறு எதுவுமே தேவையில்லை..

இதை வலியுறுத்தி தான் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட, ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்று கூறினார்கள்.

அனைத்தும் ஒரு கட்டுபாட்டுக்குள் தான் இருக்கிறது என்றால் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ‘அது(?)’ நிச்சயமாக நினைத்து கூட பார்க்க முடியாத மாபெரும் சக்தியாக தான் இருக்க வேண்டும்.

அந்த சக்தியை தான் நாம் இறைவன் என்று பொதுவாக சொல்கிறோம் அல்லது நம்புகிறோம்-
சரி, அந்த இறைவன் யார்?
எப்படியிருப்பான்? எங்கே இருக்கிறான்?
ஆணா? பெண்ணா? அல்லது
இரண்டும் இல்லாத வேறொன்றா?
எதன் அடிப்படையில் இறைவனை நம்புவது?

அந்த இறைவனை மனிதர்களாகிய நாம் அறிந்து வைத்திருக்க தான் வேண்டுமா?
அல்லது வணங்கித் தான் ஆக வேண்டுமா?

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? மனிதனால் இறைவனை நெருங்க முடியுமா?

இப்படியாக இறைவனை பற்றிய வினாக்கள் இதயத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது..

இறைவனை பற்றி பேச, சிந்திக்க துணிந்து விட்டதால் மதங்களை பற்றி பேசி தான் ஆக வேண்டும்.

ஏனெனில் மதங்கள் தானே இறைவன் இருப்பதாக நம்ப சொல்கிறது அல்லது இறைவனை சென்றடையும் வழிகளை காட்டி தருகிறது.

எல்லா மதங்களும் பொதுவாக ‘தீமையை தவிர்’ என்றும் ‘நன்மையை செய்’ என்றும் தான் சொல்கின்றன-

மது, சூது, கொலை, களவு, காமம், பொய், பித்தலாட்டம் என எல்லாவற்றையும் ‘பாவம்’ என்று ஒதுக்குவதில் எல்லா மதமும் ஒத்து போகின்றன-

நேர்மை, நாணயம், உண்மை, சத்தியம், தர்மம் இவையெல்லாம் ‘புண்ணியம்’ என்று சேர்த்துக் கொள்வதில் கூட எல்லா மதமும் ஒத்து போக தான் செய்கின்றன-

ஆனால் ‘இறைவன்’ என்று வந்து விட்டால் மனிதர்களாகிய நாம் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் மதங்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்து விடுகிறோம்.

வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல மதங்களுக்கு ஒரு இறைவன் என்றிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. நிச்சயமாக இறைவன் என்றால் அது ஒரே ஒரு பரம்பொருளை தான் குறிக்கும்.

உண்மை இப்படியிருக்க, மதங்களுக்கு இடையில் கடவுள் கொள்கையில் மட்டும் ஏனிந்த முரண்பாடு?

இதில், இஸ்லாம் எவ்வாறு மற்ற மதங்களுக்கு இடையில் இருந்து மாறுபடுகிறது?

2

ஆனால் அதற்கு முன்னால் இஸ்லாம் எப்போது தோன்றியது? தோற்றுவித்தது யார்? இவை பற்றியெல்லாம் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் தவறான கருத்தை கலைந்தாக வேண்டும்-

பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்-

இஸ்லாமிய மதத்தின் ஸ்தாபகர் முஹம்மது என்பவர் ஆகும்.-

‘இஸ்லாமியர்கள்’ யாவரும் முஹம்மதியர்கள் என்று பெரும்பாலோர் கருதி வருகிறார்கள்-

ஆனால் உண்மை என்னவெனில்,

இஸ்லாம் என்பது மிகமிகப் பழமையான மார்க்கம்-
உலகின் முதல் மனிதர்- ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய போதே தோன்றிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்.

இறைவன் உலக மக்களுக்கு (முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல) வழங்கிய வேதமான திருக்குரானில் மக்களிடம் பேசும் போது, ‘ஆதமுடைய மக்களே..’ என்று அழைத்து தான் பேசுகிறான்.

மேலும் திருக்குரானில் அந்னிஸாஉ(பெண்கள்) எனும் அத்தியாயத்தின் முதல் வசனமே, ‘மனிதர்களே! அவன் (இறைவன்) உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்தே உற்பத்தி செய்தான்’ என்று வருகிறது.

ஆகவே ஆதம்(அலை) அவர்கள் முதலே இஸ்லாமிய மார்க்கம் தோன்றி இன்றளவும் முக்கிய கொள்கையாம் இறைவன் ஒருவன் என்பதை விட்டு கொடுக்காமல், மாறாமல், மறுக்காமல் இருந்து வருகிறது.

நாம் தொடர்ந்து படிக்கும் முன்பு மேற்சொன்ன உண்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இனி தொடர்வோம்-

‘நல்ல வார்த்தை கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனது’ இது நம்மவர் எனும் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி-

இன்றைக்கு நம்மிடையே பல வார்த்தைகள் அர்த்தம் மாறி அதன் தன்மையை இழந்து விட்டதை கண் கூடாக காண்கிறோம்- காது கூடாக கேட்கிறோம்.

உதாரணமாக,
‘மாமா’ என்ற உன்னத உறவை குறிக்கும் மேன்மைக்குறிய வார்த்தையை எவ்வளவு கீழான நிலைக்கு நாம் பேசி பேசியே தள்ளி விட்டிருக்கிறோம் எனபது தெளிவு.

அது போல் இறைவன் என்ற வார்த்தையும் அல்லது அதை ஒத்த வார்த்தைகளையும் நாம் பேசி பேசியே அதன் அர்த்தத்தை கீழ் நிலைக்கு தள்ளியிருக்கிறோம்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் போது ‘தெய்வமே’ என்று அழைப்பதை சொல்லலாம்.

சிலர் ஏதாவது நன்மை செய்து விட்டால் ‘உனக்கு கோயில் கட்டி தான் கும்பிடனும்’ என்று கூட சொல்வார்கள்.

ஒரு சமுதாயத்திற்காக உயிர், வாழ்க்கை எல்லாம் தியாகம் செய்து ஒருவர் உழைக்கிறார் என்று வையுங்கள்- அவரை ‘குலதெய்வ’மாக்கி வணங்க தொடங்கி விடுவார்கள்-

‘கடவுள்’, ‘தெய்வம்’, ‘இறைவன்’ என்ற பெயர்களின் உண்மையான தன்மை தான் என்ன?

அந்த தன்மைகள் பற்றி எழுதி விட முடியுமா? காகிதத்தில் அடங்கி விடுமா? நினைத்து பார்த்தால் என் கை மட்டுமல்ல என் எழுதுகோலின் மையும் அல்லவா நடுங்குகிறது..

இறைவனை பற்றி இறைவனை தவிர வேறு யாரால் தான் சரியாக கூறி விட முடியும்..
இதோ அவனே கூறுகிறான்.. தனது திருமறையில்..

மேலும், நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள்(யாவும்) எழுதுகோல்களாகவும், கடல்(நீர்யாவும் மையாக இருந்து) அ(து தீர்ந்த) பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் (மையாக) சேர்ந்து கொண்டாலும் அல்லாஹ்வின்(இறைவனின்) வாக்குகள் (எழுதித்) தீராது; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்.
(குரான் அத்தியாயம் லுக்மான்(31): வசனம் 27)

ஆக இறைவனை பற்றி எழுதவே முடியாது என்று இருக்கும் போது அவனை ஒரு உருவத்துக்குள் எப்படி அடக்கி வைக்க முடியும்..?

3

ஆமாம்.. அதாவது கடவுளுக்கு சிலை, படம் என உருவம் அமைத்துக் கொள்வதை இஸ்லாம் எதிர்க்கிறது- எதிர்க்கிறது என்றால் மிகமிக கடுமையாக எதிர்ப்பு-

இஸ்லாத்தின் முக்கிய பெருநாள் ஹஜ் பெருநாளாகும். இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் தான் தள்ளாத வயதில் ஈன்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் நபி(அலை) அவர்களை அல்லாஹ்வுக்காக அவனது கட்டளைக்கு பணிந்து அறுத்து பலி கொடுக்க முனைந்தார்கள்.

அப்பொழுது இஸ்மாயில் நபி(அலை) அவர்களூம் அதற்கு மனமுவந்து இணங்கினர். ஆனால் இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் எவ்வளவோ முறை முயன்றும் இஸ்மாயில் நபி(அலை) அவர்களின் கழுத்து அறுபடவே இல்லை.

ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஒரு ஆட்டுடன் வந்தார்கள். இறுதியாக இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் அந்த ஆட்டை அறுத்து பலியிட்டார்கள்.

நரபலி கூடாதென்றும், இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகமும் ஒன்று சேர உணர்த்தப்பட்ட சிறப்பான நிகழ்ச்சியை நினைவு கூர்வதே ஹஜ் பெருநாளாகும்.

இந்த தியாகத்தை நினைவுறுத்தி தான் உலக முஸ்லீம்கள் ஹஜ் பெருநாளன்று ஒவ்வொரு கிரியைகளும் செய்கிறார்கள்.

இப்ராஹீம் நபி அவர்களின் குடும்பம் என்னென்ன செய்ததோ அதை ஹாஜிகள் அதே இடத்திற்கு ஹஜ் பெருநாளன்று சென்று அதே கிரியைகளை செய்கிறார்கள்.

அவ்வளவு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்ட இப்ராஹீம் நபி அவர்களின் சிலை, இஸ்மாயில் நபியவர்களின் சிலை ஆகியவற்றை புனித மக்கா நகரில் க•பா என்ற தேவாலயத்தில் வைத்து இறைவன் என்று கருதி வணங்கி வந்தார்கள்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கு பிறகு இது போல் க•பா சுவர்களில் பல காலமாக வீற்றிருந்த 360 சிலைகளையும் தன் கைத்தடியால் அடித்து உடைத்தார்கள்.

அப்படி உடைக்கும் போது அவர்கள் கூறியது என்ன தெரியுமா?
‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்து விட்டது, நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியது தான்’ என்ற திருமறை குரான் ஷரீப் வசனத்தை தான் உச்சரித்தார்கள்.

ஆக யாருடைய படமும் சரி உருவமும் சரி கடவுள் என்று கருதப்படக் கூடாது என்ற கொள்கையை வெறும் சொல்வது மட்டுமின்றி வென்றும் காட்டியிருக்கும் மகத்தான மார்க்கம் தான் இஸ்லாம்.

இப்பொழுது உதாரணமாக உங்களது கடவுச்சீட்டில்(passport) உங்கள் படம் உள்ளது அல்லவா?

அதை ஒருவர் திருடி உங்களது போட்டோவை எடுத்து விட்டு திருடியவர் அவரது போட்டோவை ஒட்டி அவர் தான் நீங்கள் என்று பயணம் போகிறார் என்று வையுங்கள்.. அது குற்றமா? இல்லையா? நிச்சயமாக சட்டவிரோதம் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. இல்லையா..?

ஆனால் அதே குற்றத்தை கடவுளுக்கு செய்கிறார்கள், அதாவது.. ஒரு ஆணுடைய உருவத்தை வரைந்து(இன உறுப்புகள் எல்லாம் சேர்த்து தான்) இது தான் கடவுள் என்று காட்டுகிறார்கள்.. இதில் பெண் கடவுள் படஙகள் வேறு..? அவர்கள் உருவத்தையும் வரைந்து கடவுள் என்று கூறுகிறார்கள்..?

எப்படி முடிகிறது? எப்படி கடவுள் பெயரில் இப்படி ஒரு அபாண்டத்தை செய்ய துணிந்து விட்டார்கள்..?

கடவுள் நீங்கள் வரையும் உருவமாக அவர் இல்லாத போது கடவுளால் எப்படி குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்க முடியும்? கடவுச்சீட்டில் நம் புகைப்படம் மாறும் போது நாம் குற்றம் காணுகிற போது..

இதனை தான் பழந்தமிழர்கள் கூட ‘கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை’ என்று கூறினார்கள்.

இறைவன் தெளிவாக திருகுரானில் அன் ஆம் எனும் அத்தியாயத்தில் 100வது வசனத்தில் ‘.... இன்னும் அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண்மக்களையும் பெண்மக்களையும் அவனுக்கு(இறைவனுக்கு) கற்பனை செய்து விட்டார்கள்; அவர்கள் வர்ணிப்பவைகளை விட்டும் அவன் தூய்மையானவனாக பரிசுத்தமானவனுமாய் இருக்கிறான்’ என்று இறைவனே உண்மையை வெளிச்சப் படுத்துகிறான்.

மக்கா வாசிகள் வெளியூருக்கு பயணம் சென்றால் நான்கு கற்களை சுமந்து செல்வார்கள். மூன்று கற்களை உணவு தயாரிக்க வேண்டி அடுப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான்காவது கல் எதற்கு தெரியுமா? கடவுளாக வழிபட..

நம் நாட்டில் கூட கடவுள் சரித்திரங்கள் பற்றி பேசும் போது ‘வரன் கொடுத்த கடவுள் தலையிலேயே கை வைத்த பத்மாசுரன்’ பற்றி பேசுவார்கள். இஸ்லாமை பொறுத்த வரை இதற்கு எல்லாம் சாத்தியமே இல்லை.

கடவுளுக்கு குடும்பம் இருக்கிறது, கடவுளுக்கு சந்ததிகள் உள்ளன, கடவுள்களுக்குள் போர் எல்லாம் நடந்திருக்கிறது என்று கூறும் போது அந்த கடவுள் தன்மை எவ்வாறு அங்கே சிதைக்கப் படுகிறது என்று சிறிது யோசிக்க வேண்டும்.

4

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு புதுக்கவிதை எழுதினார்,
கடவுளுக்கு நிறைய பெயர் உண்டு
நாத்திகன் வைத்த பெயர்
இல்லை-

உண்மை தான்.. கடவுள் எப்படி இருப்பான் என்று நாம் கற்பனை செய்கிறோமோ அப்படி அவன் இல்லை என்பதை தான் இஸ்லாம் உணர்த்துகிறது.

ஆக, உருவம் இல்லாத எவரையும் மனிதன் என்று குறிப்பிட முடியாது. உருவம் உள்ள எதையும் இறைவன் என்று குறிப்பிட முடியாது.

சரி, கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் ஏன் அறிய வேண்டும்? அல்லது வணங்க வேண்டும்? அல்லது நெருங்க வேண்டும்?

கடவுளை பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி(ஸல்) அவர்களே கூட , ‘இறைவனே.. உன்னை நான் எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு அறிந்து கொள்ள வில்லை’ என்று கூறினார்கள். இந்த பிரார்த்தனை பெருமானார் அவர்களின் இறைவனை பற்றிய தேடலையும் இறைவனின் விசாலத்தையும் குறிக்கிறது.

ஆனால் கையிலிருக்கும் மெழுகு திரியில் எறியும் நெருப்பை ஆராய்ந்து சூரியனின் வெப்பத்தை அறிய முற்படும் முயற்சியாக தான் இறைவனின் ஆற்றலை அறிய முற்படுவதை கருத வேண்டும்.

நமக்குள் மெழுகு திரி இருக்கிறது.. அதாவது நமக்குள் இறைவன் இருக்கிறான். நாம் சிறியதாக கருதி செய்யும் பல்வேறு தவறுகளால் இறைவனை விட்டு நாம் தூர சென்று விடுகிறோம், அதாவது குரான் குறிப்பிடுவது போல், ‘நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம்’.

5

நம் வீட்டிற்கு நமக்கு பிடித்த விருந்தாளி ஒருவர் வருகிறார் என்று வையுங்கள் அவருக்காக நம் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி சுத்தம் செய்து அலங்கரித்து வைத்து இருப்போம் அல்லவா..

அது போல் தான் இந்த பூமியையும் இன்னும் யாவற்றையும் அதாவது ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனால் ஏற்படுத்த முடியாத ஆனால் அவனுக்கு அவசியம் தேவையான அனைத்தையும் முதலில் படைத்தான்.

அதன் பிறகு அவன் மனிதர்களை படைத்தான். இதை இறைவன் தனது திருமறையில் உலகத்தின் தலைமையை இறைவனின் பிரதிநிதியாக (கலீபாவாக) இருந்து-ஏற்பதற்காகவே மனிதன் படைக்கப்பட்டதாக (குரான் ஷரீ•ப் அல்பகறா:30) கூறுகிறான்.

இறைவனின் பிரதிநிதியாக இருந்து உலகை ஆள வேண்டிய மனிதன் அவனுக்காக படைக்கப்பட்டதையே இறைவனாக்கி அதற்கு அடிமையுமாகி இருப்பது தான் இன்றைய வேதனை நிலை.

நம்மை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்திருப்பதாக எடுத்து கூறும் இறைவன் நமக்கு அருகிலேயே இருப்பதாகவும் நம்பிக்கை தருகிறான்.

‘பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட நாம் அவனுக்கு(மனிதனுக்கு) மிக சமீபமாகவே இருக்கிறோம்’ என்று குரான் ஷரீ•ப் அத்தியாயம் கா•ப் வசனம் 16ல் தெளிவு படுத்துகிறான்.

இறைவன் எவ்வாறெல்லாம் இருப்பான் என்று நாம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோமோ அவ்வாறு இருப்பதிலிருந்தும் அவன் தூய்மையானவன், அவன் பரிசுத்தமானவன்..

இறைவன் மனிதர்களாகிய நம்மை அவனது பிரதிநிதியாக இருந்து அகில உலகத்தையும் ஆளக் கூடியவனாக இறைவனுக்கே சான்றாக இருக்குமாறு படைத்துள்ளான்..

இறைவன் நமக்கு எதுவெல்லாம் அல்லது யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் விட மிக மிக நெருக்கமாக சிறு சிறு அசைவுகளை கூட கூர்ந்து கவனித்தவாறு உள்ளான்..

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் உணர்ந்து விளங்கி வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

இதை உணர்ந்து விட்டால் உள்ளத்தில் ஒலி ஏற்றப்பட்டு விட்டால் வானங்கள் எனும் திரை விலகி இறைவன் எனும் மாபெரும் பேருண்மையை உணரக் கூடிய பாக்கியங்கள் பெற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறியாகும்.

இறைஞானி ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொல்வார்கள், ‘தனக்கென உள்ள நன்மைகளை மற்றவர்களுக்கு சிரமம் இல்லாமல் அடைய வேண்டும்’ என்று.

Thursday, August 2, 2007

இறைவனின் ஆசனம்

உலகின் உள்ள அனைத்திற்கும் இறைவனே முதலானவன். அவனுக்கு முந்தியது என்று எதுவும் இல்லை. அது போல் அனைத்திற்கும் முடிவும் இறைவனே ஆவான். அவனைத் தவிர அனைத்தும் அழிந்து விடும்.
இறைவன் அமரும் ஆசனம் ஒன்று நம்மிடம் உள்ளது. ஆனால் அது தூசியுடனும் கரை படிந்தும் அழுக்குகள் நிறைந்தும் காணப்படுகிறது. இறைவனுக்கென இருக்கும் அந்த ஆசனத்தில் நாம் தான் இறைவனை அமர விடாமல் தடுத்து பெருங் குற்றத்தை புரிந்து வருகிறோம்.
நான் எந்த ஆசனத்தைப் பற்றி பேச வருகிறேன் என்று தெரிகிறதா? ‘கல்ப்’ என்ற இதயத்தைப் பற்றித் தான். நம் இதயத்தில் ஷைத்தானிற்கு தான் முதலிடம் கொடுத்திருக்கிறோம். ஏராளமான குப்பைகள் நம் இதயத்திற்குள் இருக்கின்றன.
அறிவு கூட ஒரு வகையில் குப்பையை சேர்ந்தது தான். அறிவு தான் சிறந்தது என்றால் இப்லீஸ் இறைவனிடம் வாதிட்டது சரி என்றாகி விடும். இறைவன் விரட்டியடித்தது கூட அறிவு என்ற இப்லீஸை தான்.
இறைநேசர்களை நம் அறிஞர்களுக்கு புரியாமல் போனது அப்படி ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல. ஹிளுர்(அலை) அவர்களின் செயல்கள் நபி மூஸா(அலை) அவர்களுக்கு புரிந்ததா என்ன?.
இறைவன் தனது திருமறையில் (25:53 மற்றும் 55:20) இரு கடல்களுக்கு இடையில் திரையையும் மீற முடியாத தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறான்.
கடல் இரண்டு சேரும் போது ஏற்படும் திரையை(உஷ்ணம், உப்பின் அளவு) நீங்கள் அறிவை வைத்து கடலில் சென்று ஆராய்ந்து பார்க்கலாம். ஜாக்ஸ் காஸியோ என்ற கடல் நீர் ஆராய்ச்சியாளர் அப்படி தான் ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தை தழுவினார் என்பது உண்மை வரலாறு.
ஆனால் மூஸா நபியவர்கள் ஹிள்ர்(அலை) அவர்களை காண செல்லும் போது ‘இரு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை நான் செல்வேன்..’(திருமறை 18:60) என்று கூறுகிறார்கள்.
‘தப்ஸீர் பைழாவி’யில் இரண்டு கடல்கள் என்பது புற அறிவாகிய மூஸாவும் உள் அறிவாகிய ஹிள்ரும் ஒன்று சேருதல் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. சிந்திக்க வேண்டும்.
மனித உறுப்புகள் எனும் புற அவயங்கள் என்று எதை எடுத்து வைத்துக் கொண்டும் இறைவனை அறிய முடியாது. இறைவனின் குரலை நபி மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் நாம் நினைக்கிற படி புற காதுகளால் அல்ல- இறைவனின் குரல் தொண்டையில் இருந்து வந்திருந்தால் அதை கேட்க புற காது தேவைப் பட்டிருக்கலாம். ஆனால் ஒலியுமற்ற ஓசையுமற்ற குரலை கேட்க இந்த புற காதுக்கு சக்தியில்லை என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஹிள்ர்(அலை) அவர்கள்(திருமறை 18:78), ‘எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்)’ என்று சொன்னார்கள். புற அறிவிற்கும் உள் அறிவிற்கும் எத்தகைய தடையை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் என்று உணர்ந்து படிப்பவர்களுக்கே விளங்கும்.
எங்கள் ஹஜ்ரத் இறைஞானி மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் ‘ரசூலுல்லாவை பார்த்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்’ என்றார்கள்.
ஓர் அறிஞர் குறுக்கிட்டார், ‘அதெப்படி.. அபுஜஹ்லும் தான் ரசூலுல்லாவ பார்த்திருக்கான். அவன் நரகம் புகுவான் என்று ஆதாரம் உள்ளதே’ என்றார்.
எங்களது கண்ணியத்திற்குறிய ஹஜ்ரத் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் சொன்னார்கள், ‘அபுஜஹ்ல் எங்கே ரசூலுல்லாவ பார்த்தான். அவன் முஹம்மது பின் அப்துல்லாவை அல்லவா பார்த்தான்’ என்று. இப்பொழுது புரிகிறதா? உங்கள் பார்வைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஹதீஸ்களை மாற்றாதீர்கள்.
‘இறைநேசர்கள் ‘அஸ்ஹாபுல் கஹ்•ப்’ என்ற குகைத்தோழர்களை போன்றவர்கள். அசைவிலும் விழிப்பிலும் அவர்கள் உறக்கத்தில் தான் உள்ளார்கள். அதாவது இறைவனே அவர்களை அசைக்கிறான். அவர்களே அறியாமல் அவர்கள் மூலமாக அவனே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான்...’ என்று மௌலானா ரூமி அவர்கள் மஸ்னவியில் குறிப்பிடுகிறார்கள். ‘கற்றாரை கற்றாரே காணுறுவர்’- எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
பெருமானார் அவர்கள் ‘இறைவனிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்’ என்று கூறியது இந்த நிலையைத் தான்.
இத்தகைய நிலையை அடைய இதயத்தை துய்மைப் படுத்தி கண்ணாடியாக்க வேண்டும். காலம் கனியும் போது மனித ஆத்மா தன்னை படைத்தவனோடு நெருக்கமடையும்.
எண்ணற்ற மக்களுக்கு அகக்கண்ணை திறந்த மெய்ஞான பேரரசர் முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், ‘மெய்ஞான வழி பயணத்தின் முதலாவது குறிகோள் உளத்தூய்மையே’ என்றார்கள்.
உள்ளத்தை தூய்மையாக்குவது சிரமமான காரியம் தான். அதற்கு சில அல்லது பல தியாகங்கள் புரிய வேண்டும். பெருமானாரின் வாழ்க்கையை ஆதாரத்திற்காகவும் பேச்சு திறனால் மற்றவர்களை மடக்குவதற்காகவும் படிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
பெருமானாரின் வரலாற்றை உள்ளத்தால் படிக்க வேண்டும். நபித்தோழர்கள் வரலாற்றை சிந்திக்க வேண்டும்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் ‘என் எஜமானனின் ஒளியைக் கொண்டே என் இதயம் எஜமானனைக் காண்கிறது’ என்று கூறினார்கள் என்றால் உமர்(ரலி) அவர்களின் இதயம் எப்படி கண்ணாடியாகி இறை அத்தாட்சியை பிரதிபலித்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைவன் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். நமக்குள் இரகசியமாக இருக்கிறான். அதனால் தான் இறைவன் மனிதனை படைத்த பிறகு, ‘என் இரகசியமே..’ என்று கூறியதாக ஹதீஸ் குத்ஸி உள்ளது.
நாம் நம் இறைவன் அமரும் ஆசனமான இதயத்தை தூய்மைப் படுத்த தவறி விட்டால் மனிதர்களை நான் படைக்க போகிறேன் என்று இறைவன் கூறிய போது மலக்குகள் நகைத்தது மிகை அல்ல என்று ஆகி விடும்.

கரை சேர்க்குமா இந்த தொழுகை?

தொடங்கு முன் சில வார்த்தைகள்:
சமுதாயத்தில் தொழுகையை பற்றி இன்றைக்கு இருக்கிற முக்கிய பிரச்சினை தொப்பி போடுவது, தொழும் போது விரலை ஆட்டுவது மற்றும் தக்பீர் எங்கு கட்டுவது என்பதை பற்றித் தான்..
ஒருவருக்கு வலது கையில் ஆள் காட்டி விரல் இல்லை என்றால் தொழுகையே கிடையாது என்று பேசுகிற அளவிற்கு இப்பொழுது இது தான் பிரச்சினையாக இருந்து வருகிறது..
நின்று தொழ முடியவில்லை என்றால் உட்கார்ந்து தொழுங்கள் இல்லை அதுவும் முடியவில்லை என்றால் படுத்துக் கொண்டாவது தொழுங்கள் என்று ஒரு ஹதீஸ் உள்ளது..
படுத்துக் கொண்டு கூட ஒருவர் தொழ முடியும் என்றால் சிந்திக்க வேண்டும் தொழுகையில் உயிர் என்று ஒன்று உள்ளது.. ஆனால் அதை விட்டு விட்டு நாம் வேறு ஒன்றில் கவனம் செலுத்துகிறோம்.
உதாரணமாக அப்துல்லாஹ் என்று ஒருவர் இருக்கிறார் அவருக்கு விபத்தில் கையை எடுத்து விட்டார்கள். அப்பொழுது அப்துல்லாஹ் கொஞ்சம் குறைந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அவர் அப்துல்லாஹ் என்றே அழைக்கப் படுவார்.
ஆனால் அப்துல்லாஹ்வின் உயிர் போய் விட்டால் அந்த உடலை அப்துல்லாஹ் என்று யாரும் அழைப்பதில்லை. மய்யித் என்று தான் அழைப்பார்கள்.
அது போல் தொழுகைக்கு உயிரே போய் விட்டது இங்கே கை போனதை பற்றி குழப்பம் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் நாம் இந்த கட்டுரையில் நம் தொழுகையின் உயிரை காப்பாற்ற நாம் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சிந்திக்க இருக்கிறோம்.
இனி தொடங்குவோம்:நான் தொழுகை பற்றிய புஸ்தகத்தில் பாங்கு சொல்லும் போது எப்படி பதில் சொல்வது என்று ஆரம்பித்து தொழுகையில் தக்பீர் கட்டும் போது, நிற்கும் போது, ருகூ•வின் (குனியும்) போது, ஸஜ்தா(சிர வணக்கம்) செய்யும் போது, கடைசி இருப்பில் உட்கார்ந்து இருக்கும் போது தொழுகையை முடிக்கும் விதமாக ஸலாம் சொல்லும் போது என்ன சொல்வது? என்பது வரைக்கும் ஆர்வமாக படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.
தொழுகையை ஆரம்பித்து பல நாட்களுக்கு பிறகு எனக்கு ‘தொழுவாளி(தொழுகையாளி)’ என்று பெயர் கிடைத்தது.
தொழாதவர்களை பார்த்தால், ‘அல்லாக்கு பயப்புடுங்க.. தொழுவ ரொம்ப முக்கியம்..’ என்பேன். அப்படி சொல்லும் போது எனக்குள் கண்ணுக்கு தெரியாத ஒரு வித பெருமை ஒட்டிக் கொள்ளும் என்பதும் உண்மை.
எனக்கு எங்க ஹஜ்ரத் இறைஞானி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது..
ஹஜ்ரத் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள், ‘மத்தவங்கட்ட பத்து குறைய நீ கண்டுபுடிச்சீன்னா உங் கிட்டே குறைஞ்சது பதினோரு குறையாவது இருக்கும்’ என்று..
இதன் அடிப்படையில் எழுந்த சுய குறை கண்டுபிடிப்பே.. இந்த கட்டுரை..
நான் ஒழுங்காக தொழுது வருகிறேனா? என்றால்.. அது சந்தேகம் தான்.பல நாள் பஜர்(அதிகாலை) தொழுகை நான் தொழுததே இல்லை.
எங்கள் சுபஹ்கள் பெரும்பாலும் லுஹரிலேயே சம்பவிக்கின்றன்!என்று மரியாதைக்குறிய நாகூர் ரூமி அவர்கள் மணிவிளக்கி(டிஸம்பர் 79)ல் எழுதிய கவிதை வரிகள் எனது மறைந்திருக்கும் உண்மைகள்.
ஒரு முறை எங்கள் ஊரில் ஹிலுறு பள்ளிவாயிலில் ‘சன்மார்க்க சொற்பொழிவு’ நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது பேசிய கவிக்குரிசில் z.ஜபருல்லா அவர்கள், ‘இரண்டு ரகாத் தொழுகைல எத்தனை முறை ‘அல்லாஹ¥ அக்பர்’ ன்னு சொல்றீங்க தெரியுமா?’ என்று கேட்டார்கள்.
எனக்கு தெரியவில்லை.. ஏன் தெரியவில்லை?.. நான் கவனித்து தொழ வில்லை.
அதன் பிறகு அவர்களே விடை அளித்தார்கள், ‘11 முறை’ என்று..
இதையெல்லாம் யார் கவனித்தார்கள்?..
ஆனால் பெருமானார் அவர்கள் சொன்னார்கள், ‘ஒருவன் தன் தொழுகையை எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கின்றானோ அந்த அளவிற்கு தான் அவனுக்கு நன்மை கிடைக்கும்..’ என்று- சிந்திக்க வேண்டும்..
பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போது எல்லாம் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் பள்ளி வாசலில் நுழைவேன். ஒலு எடுக்கும் இடம் வரும் வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டே வருவேன்..
இகாமத் முடிந்து தொழுகை ஆரம்பித்து விடுவார்கள்.. அப்பொழுது தான் ஒலு செய்தது பாதி செய்யாதது பாதி என்று அவசர அவசரமாக அதுவும் அரைகுறையாக ஒலு செய்து விட்டு ஓடி வருவேன்.. இமாம் ருகூவில் குனிவார்கள்.. ஓடி வந்து பஸ்ஸ புடிக்கிற மாதிரி தொழுகையை பிடித்து விடுவேன்.. ‘அப்பாடா ஒரு ரகாத்துக்காக தனியாக மறுபடியும் எழுந்து தொழ தேவையில்லை’ என்ற நினைப்புடன்..
‘பெருமானார் அவர்கள் எங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள் நாங்களும் அவர்களுடன் உரையாடிக் கொண்டு இருப்போம் ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் நாங்கள் எதிரில் இருப்பதே தெரியாமல் செல்வார்கள்..’ என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சொன்ன ஹதீஸ் எனக்கு தெரிந்திருந்தும் இதே நிலை தான் நீடித்தது..
தொழுகை முடிந்ததும் இரண்டாவது ரகாத்தில் இமாம் என்ன சூரா ஓதினார்? என்று யாராவது கேட்டால் எனக்கு நிச்சயமாக தெரியாது..
ஏனெனில் நான் தான் தக்பீர் கட்டியவுடன் பாங்கு சொல்லும் போது வீட்டு வாசற் படியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்த போது பாதியில் விட்ட செய்தியை பற்றி சிந்திக்க போய் விட்டேனே.. தொழுகையில் நின்று கொண்டே..
இதில் வேதனை என்னவென்றால் நான் எதை பற்றியெல்லாம் தொழும் போது சிந்தித்தேன் என்று கேட்டாலும் எனக்கு சொல்ல தெரியாது என்பது தான்.. இத்தனைக்கும் இமாமை பின் தொடர்ந்து தொழுகிறேன்.. என்று பொய்யான நிய்யத் வேறு..
‘பாவ மன்னிப்பு கேட்டு விட்டு பாவம் செய்ய துணிந்து விட்டாய்.. நீ கேட்கும் பாவமன்னிப்பே பாவமாகி விட்டது.. ஆகவே நீ கேட்ட பாவமன்னிப்புக்கு முதலில் பாவமன்னிப்பு கேட்டுக் கொள்..’ என்று மெய்ஞ்ஞானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சொன்னார்களாம்..
எவ்வளவு உண்மை..?உள்ளம் எல்லாம் நடுங்குகிறது உணர்ந்து படித்தால்..அப்படி பார்க்கும் போது நான் தொழுது விட்டு துவா கேட்க முடியாது முதலில் என் தொழுகைக்காக பாவ மன்னிப்பு தான் கேட்க வேண்டும்..
‘நீ செய்வது என்ன என்றே தெரியாதிருக்கும் நிலையில் இருக்கும் போது தொழுகைக்கு செல்ல வேண்டாம்..’ என்ற இறைவசனம் எதை குறிக்கிறது?
நான் செய்வது என்ன என்றே தெரியாத நிலை குடி போதையில் இருக்கும் போது மட்டுமல்ல.. கவனக் குறைவாக இருக்கும் போது கூட தான் ஏற்படுகிறது.
இதைக் காரணம் காட்டி தொழுகையை நிறுத்தி விடுவதா? அல்லது கவனமாக தொழ முயற்சிப்பதா? எது சிறந்தது?
பெருமானாரின் சிறப்புகளில் ஒன்று அவர்கள் மி•ராஜ் என்ற விண்ணேற்ற பயணம் மேற்கொண்டு வல்ல அல்லாஹ்வை தரிசித்தது..
காலம், நேரம், இடம் என்று எதற்கும் கட்டுப்படாத அல்லாஹ் என்ற மாபெரும் பேருண்மையை(ஹக்கனை) பெருமானார் அவர்கள் யாரும் நெருங்க முடியாத இடத்தில் சந்தித்தார்கள் என்றால் பெருமானார் அவர்கள் எந்த உன்னத நிலையில் இருந்துக் கொண்டு சந்தித்தார்கள் என்பது வார்த்தைகளுக்கு கட்டுபடாத இஸ்லாமிய இரகசியங்களில் ஒன்று..
பெருமானார் அவர்களிடம் அவர்களது தோழர்கள் ‘எங்களுக்கு மி•ராஜ் கிடையாதா?’ என்று கேட்ட போது பெருமானார் அவர்கள், ‘தொழுகை மு•மீன்களுக்கு மி•ராஜ் ஆகும்’ என்றார்கள்.
அப்படி என்றால் மி•ராஜ் என்ற உன்னத நிலையை நான் கூட தொழுகையில் அடைய முடியும்.. அடைந்தேனா...? அடைய முயற்சியாவது மேற்கொண்டேனா..?இல்லவே இல்லை..
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் போரில் குத்தப்பட்ட அம்பை தொழுகையின் போது தான் எடுக்க சொல்வார்களாம்.. அவர்கள் தொழுகையில் மி•ராஜ் சென்றிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது..
தொழுவாளி என்ற பட்டத்தை பெற்றிருக்கும் நான் எனது தொழுகையால் விண்ணை அல்ல என் வீட்டு கூரையை கூட அடைய முடியாது என்பதும் எனக்கு நன்றாகவே விளங்கியிருக்கிறது..
யாராவது ஒருவர் தொழுகிறார் என்றால் அந்த இடத்தில் இருந்துக் கொண்டு குரான் ஷரீ•பை கூட தொழுபவருக்கு இடையூறாக இல்லாமல் மெதுவாக தான் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் உள்ளது.
குரான் ஷரீப் என்பது இறைவனின் பேச்சை படிப்பது தொழுகை என்பது இறைவனுடன் பேசுவது போன்றது..
இறைவனிடம் மோன உரையாடலில் ஒருவர் ஈடுபடும் போது அவருக்கு இடையூறாக இறைவனின் பேச்சை கூட படிக்க கூடாது என்று அர்த்தம்..
ஆனால், நான் தொழும் போது யாராவது பேசிக் கொண்டிருந்தால் கவனம் தொழுகையை விட்டு விட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க எனது மனத்தை செலுத்தி விடுகிறேன்..
உண்மையிலேயே இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தால் இந்த அர்த்தமற்ற பேச்சுக்களில் நாட்டம் செல்லுமா என்ன..?
அல்லது யாராவது தொழுது கொண்டிருந்தால் நான் பேச்சை நிறுத்துவதுமில்லை சத்தத்தை குறைத்து கொள்வதுமில்லை..
குடையை மறந்து எங்கேயோ தொலைத்து விட்ட ஒருவர் நபில் தொழுது தான் குடையை எங்கே வைத்தோம் என்று கண்டுபிடித்தாராம்.
தொழ தக்பீர் கட்டியவுடன் அவருக்கு வீட்டை விட்டு வெளியே சென்றதிலிருந்து ஒவ்வொரு இடமாக சென்று குடையை இந்த கடையில் தான் விட்டோம் என்பது வரைக்கும் ஒவ்வொரு காட்சியாக ஞாபகம் வந்து கடைசியில் ஸலாம் கொடுத்து விட்டு குடையை போய் எடுத்து வந்தாராம்..
தொழுகை இது போல் பயனை தான் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்லாம் இந்த காரணத்திற்காக தொழுகையை கடமையாக்க வில்லை.
எங்க ஹஜ்ரத் அவர்கள் நான் தொழுகின்ற அழகை பார்த்து விட்டு, ‘தொழுகை கடமையாக தொழ வேண்டும் கடனுக்கு கழித்து விடக் கூடாது’ என்றார்கள்.
தொழுகைக்கும் பொறுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.. அதனால் தான் இறைவன் திருமறையில்.. ‘தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள்..’என்று கூறுகிறான்.
தொலைக் காட்சியில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தால் அல்லது வேறு ஏதேனும் எனக்கு பிடித்த படம், காட்சிகள் ஓடினால் நான் வேகமாக தொழுகையை முடிக்க எண்ணுகிறேன்.
என் தொழுகையில் பொறுமையும் இல்லை உண்மையும் இல்லை என்பது தான் உண்மை.
நாகூரின் அரசர்(King of Nagore) எஜமான் பாதுஷா நாயகம் அவர்கள் தனது மகனார் தொழுகைக்கு தாமதமாக வந்ததற்காக நாற்பது நாட்கள் பேசவே இல்லையாம்.
அதன் பிறகு காரண மகனார் ஹஜ்ரத் யூசுப் சாஹிப் அவர்கள் ‘வாப்பா.. நீங்கள் பேசாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது’ என்று கூறிய போது எஜமான் அவர்கள் ‘நான் பேசாம இருந்தது தான் உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா.. தொழுகைக்கு முன்னாடியே வராமல் போனதற்கு நீங்கள் வருத்தப் பட வில்லையா..’ என்று கேட்டார்களாம்..
இறைவனை வணங்கினால் இறைவனை நெருங்கலாம். எனக்கு தொழுகை புரிந்து விட்டது.
‘யா அல்லாஹ்.. எனக்கு சொர்க்கத்தில் ஆசையில்லை.. நரகத்தை கண்டு பயமுமில்லை.. ஏனெனில் சொர்க்கம் நரகம் எல்லாம் நீ படைத்தது தான்.. நீயே அல்ல.. எனக்கு உன் மீது தான் விருப்பம்.. உன்னை அறியும் பாக்கியத்தை தொழுகையின் மூலம் எனக்கு கொடுப்பாயாக..!’