Monday, February 15, 2021

அஜ்மீர் ஹாஜா நாயகம்

 1.

கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளர்) என்று இன்றளவும் ஏழை மக்களால் வழங்கப்படுகின்ற ஹஜ்ரத் முயினுதீன் அஜ்மீர் ஹாஜா நாயகம் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்று குறிப்பிலிருந்து:
பிறப்பு:

கி.பி. 1142-ல் ஹிஜ்ரி 530 ரஜப் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சஞ்சர் என்ற கிராமத்தில் பிறந்தார்கள். பிறந்த நிலையிலும் சுஜுதில் தான் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
பெற்றோர்கள்:
தாயார்: பீபி உம்முல் வரஃ மற்றும் தந்தை: ஸையத் கியாஸுத்தீன் அவர்கள்.தந்தை வழியில் செய்யதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் தாயார் வழியில் செய்யதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவார்கள்.
இறைநேசச் செல்வர்களுக்கெல்லாம் அரசர் கொதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் தாய் மாமனார் ஆவார்கள் என்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. இருவரும் வாழ்நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து குத்பு நாயகம் அவர்களின் துவாவை அஜ்மீர் ஹாஜா நாயகம் பெற்றிருக்கிறார்கள்.
சிறு பிராயம்:
ஐந்து வயதிலேயே ஐவேளையை தொழுகையை தந்தையோடு சென்று பள்ளியில் நிறைவேற்றுவார்கள். ஒன்பது வயதிலேயே குரான் ஷரீஃப் முழுவதையுமே மனப்பாடம் செய்து விட்டார்கள்.பாரசீக மொழியிலேயே குரான் ஷரீஃ தப்ஸீர், ஹதீது, ஃபிக்ஹ் போன்ற மார்க்க நூல்களை கற்றார்கள். அவர்களுக்கு தஸவ்வுஃப் என்று இஸ்லாமிய மெய்ஞ்ஞான கலையின் மீது ஆர்வம் அதிகரிக்கவே அதனையும் கற்றார்கள்.
14 வயதில் தந்தையை இழந்தார்கள். இழந்த சிறு மாதங்களில் 15 வயதை அடைந்த போது தாயாரையும் இழந்தார்கள். தந்தை வழி வந்த பழத்தோட்டத்திலிருந்து கிடைத்த வருவாயில் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்.
தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் போது கூட சதா இறைவனையே திக்ரு செய்த வண்னம் இருப்பார்கள்.
உஸ்தாத்மார்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி அவர்கள் - முதியவரான இவர்களை தனது தோட்ட வேளையில் ஈடுபட்டிருக்கும் தோட்டத்தில் ஓரிடத்தில் அமர்ந்து திக்ரு செய்த வண்ணம் இருப்பதை ஹாஜா நாயகம் காண்கிறார்க்ள். உடனே சில திராட்சைகளை பறித்துக் கொண்டு போய் வைத்தார்கள். அந்த முதியவர் கண் விழித்தார்கள். ஹாஜா நாயகமவர்களை முன்னால் வைத்து விட்டு அமர சொன்னார்கள். அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். திராட்சை பழத்தில் ஒன்றை எடுத்து ஹாஜா நாயகமவர்கள் வாயில் ஊட்டினார்கள். கண்களை மூடி திராட்சையை கவனமாக உணர்ந்து சாப்பிட்டு விட்டு கண் விழித்திருக்கிறார்கள். எதிரே அமர்ந்திருந்த அந்த முதியவர் மறைந்திருந்தார்கள். ஆனால் ஹாஜா நாயகத்தின் உள்ளே முதல் ஞான வெளிச்சம் ஒளியூட்டியிருந்தது.
ஹாரூன் நகரத்தில் வசித்து வந்த ஹாஜா உதுமான் ஹாரூனி என்பவர்கள் பகலில் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்கள் மறுமுறை இரவிலும் ஒருமுறை குரான் ஷரீஃப் ஓதி முடிப்பார்களாம். இரவில் சிறிது நேரமே தூங்குவார்களாம். இவர்கள் எதை சொன்னாலும் அது பலிக்கும், இவர்களின் இறைஞ்சுதல் இறைவனால் உடனே கபூல் செய்யப்பட்டு விடுமாம். இப்படிப்பட்ட சிறப்புடையவர்களை பற்றி கேள்விப்பட்டு அவர்களை சந்திக்க காடு மலைகளை கடந்து காண சென்றார்கள். உதுமான் ஹாரூனி அவர்களின் தரீக்கா ஷிஸ்தியா தரீக்காவாகும். இவர்களை நேரில் சந்திக்கிறார்கள். தேடலின் சந்திப்பில் ஹாரூனி அவர்களின் முகத்தை பார்த்தவுடனேயே தம் மனதிற்கு இறைவனிடத்தில் இறைஞ்சுகிறார்கள், “யா அல்லாஹ்! இவர்களே ஆன்மீக குருவாக அமைய நீ அருள வேண்டும்..” - தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது தாகம் கொண்டவர்களை என்ற மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் கூற்றுக்கு ஏற்ப தண்ணீரான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களும் தாகம் கொண்ட ஹாஜா நாயகத்தை தம் சீடராக ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களோடு தான் இருபது ஆண்டு காலம் உண்டு, உறங்கி, திக்ரு செய்து, பல ரிலாயத் எனும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த கட்டத்தில் தமது தாய் மாமாவான கௌதுல் அஃலத்தை சந்தித்து அவர்களின் துவா பரக்கதையும் பெறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஷாம் நகரில் ஒரு குகையின் வாசலில் இரண்டு சிங்கங்கள் காவல் காப்பதை காண்கிறார்கள். அப்போது குகைக்குள் இருந்து ஒரு முதியவர் இவர்களை அழைத்து (இவர்கள் யாரென்று நான் படித்த எந்த புத்தகத்திலும் பதிவாகவில்லை) எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள், “இந்தியா செல்கிறேன்” என்று இவர்கள் பதிலளித்ததும், அந்த முதியவர், “..அல்லாஹ்வைத் தவிர.. எல்லாக் காரியங்களும், ஏழைகளுக்கும், வறுமைபட்டோருக்கும் (தர்வேஷ்கள்) நன்மை அளிப்பதாக அமையட்டும்..” என்று துவா செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
ஷாம் நகர் வழியாக பகுதாதில் வந்தடைந்து தம் உஸ்தாதான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து மதினா பயணத்தின் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி இந்தியா பயணம் சென்று தீன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக தாம் உணர்ந்ததாக தமக்கு நேர்ந்த அந்த அனுபவத்தை எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள் உளமகிழ்ந்து ஒரு ஆசா கோலும், முஸல்லாவும், கபன் துணி போன்ற ஹிர்கா எனும் உடையையும் கொடுத்து துவா செய்து வழியனுப்பினார்கள்.
மேற்கொண்ட பயணங்கள்:
ஹஜ்ரத் இப்ராஹீம் கந்தூஸி ஏற்றி வைத்த விளக்கின் ஒளியால் ஏற்பட்ட வெளிச்சத்தில் தனது தோட்டத்தை விற்று வந்த காசை ஏழைகளுக்கு வழங்கி விட்டு (ஏழைகளின் பங்காளராயிற்றே) பயணமானார்கள்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகரம் சென்றார்கள். பின்னர் சமர்கந்த் சென்றார்கள். அந்நாளில் சமர்கந்தும் புகாராவும் அறிவின் இரு கண்கள் என்று வருணிக்கப்பட்டதாம். பின்னர் ஹாரூன் நகரத்தை நோக்கி ப்யணமானார்கள். இங்கு தான் இவர்களின் ஆன்மிக குருவான ஹாஜா உதுமான் ஹாரூனி அவர்களை சந்தித்து தஸவ்வுஃப் பாடம் பயின்றார்கள். இருவரும் சேர்ந்து மக்கமா நகரம் பயணமானார்கள்.
பின்பு பகுதாத் பயணத்தில் கௌதுல் அஃலம் அவர்களுடைய சந்திப்பு. 53ம் வயதில் ஹிஜ்ரி 583ம் ஆண்டு மக்கா நக்ர் ஹஜ் பயணம். பின்பு எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் புவியின் பூஞ்சோலை மதீனா பயணம்.
இங்கே தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “நீங்கள் இந்தியாவுக்கு சென்று தீன் பணியாற்றுங்கள்” என்று தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக உணர்கிறார்கள்.
பின்பு ஷாம் நகர் வழியாக பகுதாது மீண்டும் பயணமானார்கள். ஹிஜ்ரி 586ல் அப்போது இந்தியாவில் உள்ள லாஹூர் வந்தடைகிறார்கள். அங்கே புகழ்பெற்ற ஹுஜ்விரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்தில் நாற்பது நாட்கள் தனித்திருந்து இறை தியானத்தில் “சில்லா” இருந்தார்கள். லாஹூரில் ஐந்து ஆண்டுகள் தங்கி இஸ்லாமிய பணி செய்தார்கள். இவர்களுக்கு இந்தியே தெரியாது ஆனாலும் ஏராளமானோர் மககள் வெள்ளம் போல் திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
அதன் பின்பு டெல்லிக்கு வருகை தருகிரார்கள். அங்கிருந்து 40 சீடர்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த அஜ்மீர் எனும் நகரை தேர்ந்தெடுத்து வந்தடைந்தார்க்ள். அங்கு தான் தம் வாழ்வின் இறுதி வரை வசித்தார்கள்.

திருமணம்:
இந்தியாவில் அஜ்மீர் ஹாஜா நாயகம் வந்த காலங்களில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.
ஒரு முறை ஹாஜா நாயகம் அவர்கள் சம்பல் நதிக்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது.
(சற்று முன் என்ன நடந்தது என்றால்:)
ராஜ குல புத்திரர்களில் ஒருவனான இளவரசன் ஒருவனுக்கு குஜராத்தை சேர்ந்த அரச குல பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. பெண்ணையும் குஜராத்திலிருந்து ராஜஸ்தான் பகுதிக்கு அழைத்து வந்தாயிற்று. ஆனால் திடீரென இளவரசன் இறந்து விட்டான். இவர்களது குல வழக்கப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டாலே கணவன் மனைவியாகத் தான் கருதப்படுவார்கள். ஆகையினால் கணவனான இளவரசன் இறந்து போய்விட்டான் என்றும் அந்த பெண்ணை கையை காலை கட்டி இளவரசன் உடல் எரியும் சிதையில் தள்ளி விடும் காட்டுமிராண்டித் தன சூழலிலிருந்து தப்பித்து ஓடி வருகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டு பிற ராஜ புத்திரர்களும் மூச்சிறைக்க தீப்பந்தங்களுடன் ஓடி வருகிறார்கள். அந்த பெண் தூரத்தில் ஒருவர் வந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு அவர்களிடம் போய் அடைக்கலம் தேடுகிறார்கள்.
“என்னைக் காப்பாற்றுங்கள். எனக்கு உயிர் பிச்சைக் கொடுங்கள். நான் உங்கள் அடிமை” என்றாள்.
யாரிடம் வந்து அடைக்கலம் கேட்டிருக்கிறார்கள் என்று சொல்ல தேவையில்லை.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்கள், “பெண்ணே! யாரும் யாருக்கும் அடிமையில்லை.. நாம் எல்லோருமே அல்லாஹ்வுக்கு தான் அடிமைகள்..” என்று விசாரிக்கிறார்கள்.
பின்னாடியே துரத்திக் கொண்டு வந்தவர்கள், “பெரியவரே..” என்று அஜ்மீர் ஹாஜா நாயகத்தை அழைத்து “அந்த பெண்ணை தம்முடன் அனுப்பி வைக்குமாறு” கேட்டுக் கொள்கிறார்கள்.
ஹாஜா நாயகம் அவர்கள் மறுத்து அவர்களுடன் கராமத்து மூலமாக சண்டையிட்டு திருப்பி அனுப்புகிறார்கள்.
அந்த பெண் தான் பின்னாளில் இஸ்லாத்தில் இணைந்து பீபி அமதுல்லாஹ் ஆகிறார்கள், இவர்களையே அஜ்மீர் ஹாஜா நாயகம் நிகாஹ் செய்கிறார்கள்.
ஹாஜா நாயகமவர்களுக்கு இன்னொரு மனைவியும் உண்டு. அவர்கள் அஜ்மீரில் வாழ்ந்த காஜா வஹ்ஹுத்தீன் மஷ்ஹதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகளார் பீபி இஸ்மத்துல்லாஹ் அவர்களையும் நிகாஹ் செய்து கொண்டார்கள்.
பிள்ளைகள்:
மூன்று ஆண் பிள்ளைகள்:
1. ஹஜ்ரத் காஜா பஹ்ருத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
2. ஹஜ்ரத் காஜா ஜியாவுத்தீன் அபுசாது ரஹ்மத்துல்லாஹி அலைஹி
3. ஹஜ்ரத் காஜா ஹிஷா முத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஒரு மகள்:
பீபி ஹாஜா ஜமால் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3

அஜ்மீரில் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏழை எளியோரெல்லாம் இவர்களின் கராமத்து மூலம் சுகம அடைந்து கொண்டிருந்தார்கள். ஆயிரமாயிரம் மக்கள் தூய இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.
இந்த கால கட்டத்தில் தான் அஜ்மீரை பிருதிவிராஜன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அஜ்மீர் ஹாஜா நாயகத்தின் செல்வாக்கு உயர்வதை இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தம் படையை அனுப்பி இவர்களை இந்த நாட்டை விட்டு சென்று விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.
ஆனால் "அதெல்லாம் முடியாது" என்று அஜ்மீர் ஹாஜா நாயகம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
இதனால் சினம் கொண்ட பிருதிவிராஜன் இவர்களை அழித்து ஒழித்து விட முடிவு செய்தான்.
இந்த காலகட்டத்தில் கடும் புயலும் மழையும் வெள்ளமும் சேர்ந்து அஜ்மீர் நகரம் சீரழிந்திருந்தது. ஏராளமான பொருள் சேசமும் உயிர் சேதமும் ஏற்பட்டிருந்தன. பிருதிவிராஜனின் அன்னையர் வாசவத்தா என்பவர் இந்த சேதங்களுக்கு எல்லாம் காரணம் தன் மகன் ஆளும் அரசு முஸ்லிம் பெரியவரை பகைத்துக் கொண்டது தான் காரணம் என்று நம்பினார். பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முறையிட்டார். ஆனால் பிருதிவிராஜனோ, “உங்களுக்கு தெரியாது அம்மா!. ஒரு சாதாரண பக்கீர் இந்த சம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை அழித்துவிட முடியுமா? என் வாளும், தோளும் அப்படியா வலிமை இழந்து போயின்! வயதானதால் நீங்கள் நம்பிக்கைத் தளர்ந்து போனீர்கள். நான் வெல்வது உறுதி!” என்று திமிராக கூறினான்.
அன்றிரவே தன் ராஜகுருவும் தளபதியுமான ஜெயபாலரை அழைத்து இதற்கொரு முடிவு கட்ட முடிவெடுத்தான்.
ஜெயபாலர் பெரும் படைகளுடன் ஒரு ஏழை பக்கீரை எதிர்க்க போரிடுவது போல் சென்றார். அங்கே அந்த ஏழை பக்கீரின் கராமத்தினால் கண்கள் ஒளியிழந்து திரும்பினார்.
அப்போது காளி கோயிலின் முன்னே அவர் வேண்டிக் கொண்டார், “காளியே! நான் என் குழந்தையை உயிர்பலி தருகிறேன்.. எனக்கு இந்த முஸ்லிம் பக்கீரை வெல்லும் சக்தியை கொடு!” என்று வேண்டிக் கொண்டு சொன்னது போலவே தன் ஐந்து வயது மகனை பலி பீடத்தில் கிடத்தில் அந்த பாலகனோடு சேர்ந்து கோயிலே அலறுவதை பொருட்படுத்தாது பலியும் கொடுத்து விட்டான்.
பின்னர் எதுவும் நடக்காமல் போகவே நட்ட நடு நிசி நேரம் காளி கோயிலில் நின்று கொண்டு கத்தினான், “என் நரபலியை ஏற்றுக் கொள்ள மாட்டாயா! நான் மன்னருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதா!! ஐயகோ!!! நான் என் செய்வேன்!!!!” என்று அழுது புலம்பினான். சிறிது நேரத்தில் அவன் தோள்களில் ஒரு பூவின் ஸ்பரிசம் பட்டது. திரும்பி பார்க்கிறான். அஜ்மீர் ஹாஜா நாயகம் நின்று கொண்டிருந்தார்கள்.
அவனிடத்திலே அன்போடு நடந்து கொள்கிறார்கள். போதனை செய்கிறார்கள். இறந்த குழந்தையையும் உயிரோடு கொண்டு வருகிறார்கள். அடுத்த கனமே அவன் அவர்களாகி ஜெயபாலர் அப்துல்லாஹ்வாகி இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு நாம் ஜியாரத்திற்கு செல்லும் அஜ்மீர் தர்கா ரௌலா ஷரீஃப் என்பது இந்த ஜெயபாலராக இருந்து அப்துல்லாஹ்வாக மாறிய இவர்களின் இல்லம் தான் என்றும் அறியப்படுகிறது.
இதற்கிடையில் மாமன்னர் ஷிகாபுத்தீன் கோரி கஜ்னவி ஒரு கனவு காண்கிறார்கள். கனவிலே ஒரு பக்கீர் அவர்கள் “படைகளோடு போரிட்டு பிருதிவி ராஜனை கைது செய்! வெற்றி உனக்கு தான்!!” என்று காண்கிறார்கள். பின்னாளில் தாம் கனவில் கண்டது அஜ்மீர் ஹாஜா நாயகம் என்பதை அறிந்து கொள்கிறார்கள். உடனே பெரும் படையை திரட்டி பிருதிவி ராஜனை எதிர்த்து போரிட தயாரானார்.
பிருதிவிராஜனும் போருக்கு ஆயத்தமாகி யானை மீதேறி டில்லி நோக்கி புறப்பட்டான். அப்போது ஹாஜா நாயகம் இருக்கும் இடத்தை கடக்க நேர்ந்தது, அப்போது அவன் உறுமினான், “போரில் வெற்றி பெற்று வரும் போது இந்த தவச்சாலையை அழிப்பேன். இங்கு உள்ளவர்களைக் கொன்று அவர்களது ரத்தத்தை உடம்பில் பூசிக் கொண்டு தான் ஊருக்கு திரும்புவேன்” என்று புறப்பட்டான்.
டில்லியில் நடந்த கடும் போரில் பிருதிவிராஜன் தோற்று போய் கைது செய்யப்படுகிறான். மாமன்னர் ஷிகாபுதீன் தமது வெற்றியை அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார்.
அத்தோடு நிற்காமல் படையோடு புறப்பட்டு அஜ்மீருக்கு வந்து அவர்களின் துவாவை பெற்றார். டில்லி பாதுஷாவாக ஆனார். அவர் மட்டுமல்ல அவ்ரை தொடர்ந்து டில்லியை ஆட்சி செய்த குத்புதீன் ஐபெக், இல்துத் மிஷூம், ஆகியோர்களும் பெரிதும் மரியாதை செலுத்தினார்கள்.

4
மறைவு:
ஹிஜ்ரி 633 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 6-ஆம் நாள் (கி.பி. 1236ம் ஆண்டு) தம்முடைய 97வது வயதில் இறைவனின் நாட்டப்படி கொடுக்கப்பட்ட மிஸ்ஸனை சிறப்பாக நிறைவேற்றி விட்டு இறைவனிடம் திரும்பினார்கள்.
இவர்களின் மூத்த மகனார் ஹாஜா பஹ்ருத்தீன் ஷிஸ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அவர்களுக்கு எந்த இடத்தில் கஃபனிடப்பட்டதோ அந்த இடத்தில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்கள் மக்கமா நகரில் கஃபாவின் முன்னிலையில் இறைவனிடம் கையேந்தினார்கள், “யா அல்லாஹ்! யார் என்னுடைய வம்சா வழியில் மூரிதாகி உன்னை (அல்லாஹ்வை) வழிபடுகிறார்களோ அவர்களை நீ மன்னிப்பாயாக! என்று.
அந்த துவா இன்றளவும் கபூலாக்கப்படுகிறது என்பது கண்கூடு.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

No comments: