Thursday, January 7, 2016

எத்திராஜ் காலேஜை தெரியுமா? - இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் கேள்வி

 ஆபிதீன் நானா அவர்கள் இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் எஸ்.எம்.எஸ்.   ஐ பதிவாக எழுதியிருந்தார்கள். அதில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்க்ள் 'அல்லா என்று உனக்கு பெயரிட்டது யார்?' என்று கவிதை எழுதியிருந்தார்கள்.

அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள். 

அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.

எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.

இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது. 

என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான். 

ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.

ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள். 

ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.

ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.

வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.


1. http://abedheen.googlepages.com/zafarulla.html 

2. http://nagoori.wordpress.com/category/கவிஞர்-ஜபருல்லா/ 


3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1 

இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..

நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை. 

அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.

அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.

அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..

இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?

நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு

இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே, 

நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது

இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?

எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.

"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த

எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.

இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.

'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.

ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை. 

'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.

'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.

'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்

'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா

No comments: