Thursday, January 7, 2016

திராவிஹ் தொழுகை - மௌலவி ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்

ஹமீது ஜாபர் நானாவிற்கு நன்றி:

எங்களது ஹஜ்ரத் அவர்களின் பேச்சை எழுத்தில் பதிவு செய்ததோடு எனக்கு பதிவிட கொடுத்து அனுப்பி உதவிய ஹமீது ஜாஃபர் நானாஅவர்களுக்கு ஜஜாகல்லாஹ் ஹைர்..

*******************************************************

எங்கள் ஹஜ்ரத் அவர்களை பற்றி:

அவர்கள் யாரையும் பார்க்க வேண்டும் என்று இவ்வளவு பிராய்சைப்பட்டு நான் பார்த்ததேயில்லை.எல்லோரும் அவர்களை பார்க்க தான் காத்திருப்பார்கள்.

ஆனால் அவர்கள் அன்று ஒரு நபரை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என விடாப் பிடியாக நின்றார்கள்.

’நீங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றால் அவர்களது வீட்டில் உட்காருவதற்கு கூட நல்ல வசதி இருக்காது’ என்று சொல்லப்பட்டது

‘பரவாயில்லைப்பா.. நான் பார்க்க வேண்டும்.. ஏற்பாடு செய்’ என்ற பதிலே அவர்களிடமிருந்து வந்தது

கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர் வேறு யாருமல்ல ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில் அவர்கள் தான்

அவர்கள் பார்க்க விரும்பிய நபர் எங்களுடைய ஹஜ்ரத் அவர்களை.

அப்படி எதனால் ஜட்ஜப்பாவுக்குஎங்கள் ஹஜ்ரத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவlல் ஏற்பட்டது..?

வேறு ஒன்றுமில்லை, எங்கள் மரியாதைக்குறிய ஹஜ்ரத் அவர்கள் எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ என்ற நூலை படித்து பிரம்மித்து போனது தான் காரணம்.

கடைசியாக சந்திப்பு நிகழ்ந்தது எங்களது சின்னாப்பா வீட்டில் அதை பற்றியெல்லாம் எனது ஜட்ஜப்பா தொடரில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும்.

இன்னொரு சமயம் எங்களது வீட்டில் எங்களது பாட்டியாவின் மையித்திற்கு சென்னையிலிருந்து வந்த ஜட்ஜப்பா அவர்கள் கேட்டார்கள், ‘உங்க ஹஜ்ரத் இப்போது ஏதாவது புஸ்தகம் எழுதியிருக்கிறாஹலா..?’ என்று

கற்றாரை கற்றாரே காணுறுவர் என்பார்களே அதை போல் ஹஜ்ரத் அவர்களை கண்டு கொண்டதனாலேயோ என்னவோ எங்கள் ஹஜ்ரத் அவர்கள் மீது ஜட்ஜப்பா மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள்.

*********************************************************
தர்க்கத்து அப்பால் எனும் நூலிலிருந்து..

இதே மூலத்திலிருந்து வினைச் சொல்லாக வந்திருப்பது ‘அன்ஸல்னா’ எனும் வார்த்தை, ‘இறக்கினோம்’ என்பது இதற்கு நேரடியான மொழி பெயர்ப்பு.

இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுகிற இறை வசனம் ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

       ”நாம் தெளிவான குர் ஆனை இறக்கினோம்.”

இந்த இறைவசனத்திற்கு எப்படிப் பொருள் கொடுக்க வேண்டும் என்பதை நான் எடுத்துக் கூற வேண்டியதில்லை, இது வரை நான் சொன்ன செய்திகளை நீங்கள் ஓரவளவேனும் உணர்ந்திருந்தால் இந்த இறைவசனத்துக்குறிய உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்வது சிறிதும் சிரமமில்லாத காரியமாகும்.

திருக்குர்ஆன் என்பது பெருமானாருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒன்று என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஆனால் அது ஏழாவது வானத்திலிருந்து இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது என்று கூறுவது உண்மைக்கு எதிரானது மட்டுமல்ல, ‘இறைவன் எங்கும் நிறைந்தவன்’ எனும் அடிப்படைக் கருத்துக்கு களங்கம் விளைவிப்பதாகும்.

எனவே ‘இறக்கினோம்’ என்ற வார்த்தைக்கு ‘கொடுத்தோம்’ என்றோ ‘அளித்தோம்’ என்றோ பொருள் கொடுக்கிறோம்.

*************************************************************

திராவிஹ்
மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி 

திராவிஹ் தொழுகை எட்டு ரக்காஅத்துதான், இருபது ரக்காஅத் தொழுதார்கள் என்று சர்ச்சைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் போன்ற மிடீயாக்கள் மூலமாகவும் விவாதங்கள் நடக்கின்றன. ஒரு சமயம் நிரூபித்தால் ரூ. 5000 தருகிறேன் என்று துண்டு பிரசுரங்கள்கூட  அனுப்பியிருந்தார்கள்.

திராவிஹ் உண்டு என்பதற்கும் திராவிஹ் இல்லை என்பதற்கும் ஆதாரம் புகாரி, முஸ்லிமிலுள்ள ஹதீஸ்தான். மொத்தம் 13 ஹதீஸ் இருக்கின்றன அந்த தலைப்பில்.  அதற்கு இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் போட்டத் தலைப்பு “சலாத்துத் திராவிஹ்”. அதிலுள்ள ஹதீஸ்களில் ஒன்று நான்கு ரக்கஅத் தொழுதார்கள் என்பது. அன்னை ஆயிஷா(ரலி) சொன்னார்கள், அப்துர் ரஹ்மான் பின் அபு ஸலாமா என்ற சஹாபி கேட்டதற்கு, “நான்கு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள், அதன் நீட்டத்தைப் பற்றியும் அதன் அழகைப் பற்றியும் கேட்காதிர்கள்.” கேட்காதீர்கள் என்றால் கேட்கக்கூடாது என்ற அர்த்தமல்ல; நாம் சொல்வதில்லையா! அந்த அழகு இருக்கிறதே அதை கேட்காதீர்கள் என்பதில்லையா, என்ன அர்த்தம்? சொல்ல வார்த்தை இல்லை என்று அர்த்தம். “அப்புறம் நான்கு ரக்கஅத் தொழுவார்கள், அப்புறம் மூன்று ரக்கஅத் (வித்று) தொழுவார்கள். இது ராத்திரியில் நடு சாமத்திற்குப் பிறகு சில நேரங்களில் சாவல் கூவுவதற்குமுன் தொழுவார்கள்.” (புகாரி: 1147)
http://www.tamililquran.com/bukharisearch.php?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

அப்பொ, அப்துர் ரஹ்மான், “கைஃப கான சலாத்துன் நபி ஃபில் ரமலான்” என்று கேட்டார்கள். ரசூலல்லாஹ் தொழுகை ரமலானில் எப்படி இருந்தது? என்று பொருள். எங்களுக்குத் தெரியாமல் உங்களுக்குத் தெரிந்தமாதிரியுள்ள செய்தி என்ன என்றுதானே அர்த்தம்? ரசூலல்லாஹ்வின் நடை, உடை, பாவனைத் தெரியும், ரசூலல்லாஹ்வின் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியுமா? இதை யாரிடம் கேட்கவேண்டும்? ஆயிஷா நாயகிடம்தான் கேட்கவேண்டும். ரசூலல்லாஹ் எப்படி உறவு வைத்தார்கள்; அவர்களுடைய இல்லற வாழ்வு பற்றிய ஹதீஸெல்லாம்  ஆயிஷா நாயகியிடமிருந்து வந்ததுதான்.

ஆயிஷா நாயகியை அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள், பாங்கு சொன்னவுடன் அப்படியே விட்டுவிட்டு தொழுதார்கள், ஒலு செய்யமல். அப்படியானால் அணைத்தால், முத்தமிட்டால் ஒலு முறியாது.  சாதாரணமாக உணர்ச்சி வந்தால்; குறி எழுந்து நின்றால் ஒலு முறியும். தெரிந்ததுதான் அதற்குமேல் ஆசை தண்ணீர் வழவழப்பு வந்துவிட்டால் பேச்சே இல்லை. அப்பொ ரசூலல்லாஹ் முத்தமிட்டது குழந்தையை முத்தமிட்டது மாதிரி முத்தமிட்டிருக்கிறார்கள். குழந்தையை முத்தமிட்டால் ஒலு முறியுமா?

இதை அப்படியே வைத்துக்கொண்டு இங்கே வாருங்கள். பொம்பிளைமேல் ஆம்பிளை கைப் பட்டாலும் ஆம்பிளைமேல் பொம்பிளை கைப் பட்டாலும் ஒலு முறிந்துவிடும் என்று பயான் பண்ணும்போது சொல்கிறார்கள். இதை விளங்கி சொல்கிறார்களா இல்லை விளங்காமல் சொல்கிறார்களா என்று புரியவில்லை. எப்படி கைப் பட்டால் ஒலு முறியும் என்று கேட்டால், “மஸ்” என்ற வார்த்தைக்கு தொடுவது என்று அர்த்தம். தமிழில்கூட பொருத்தமான வார்த்தை இருக்கிறது. அவன் ஒரு வீட்டில் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் மூனுபேர்மேலே கை வைத்துவிட்டான் என்றால் மூன்று பேரைக் கெடுத்துவிட்டான் என்று அர்த்தம். இங்கே தொடுவது என்பது உறவு வைப்பது என்று அர்த்தம். உறவு வைத்தால் ஒலு முறியத்தானே செய்யும். அதுதான் குர்ஆனில் ஆயத் இருக்கிறதே. அதை வைத்துக்கொண்டு தொடாதே தொடாதே என்று சொன்னால்..?

குர்ஆனுடைய ஆயத்துக்கு அப்படியே நேரடியாக அர்த்தம் பண்ணினால் சொல் சரியாக இருக்கும், ஆனால் அதை வைத்து வாழமுடியாது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்த பிரச்சினைக்கும் குர்ஆனில் பதில் கிடைக்காது. ‘தர்க்கத்துக்கு அப்பால்’ என்ற என் புத்தகத்தில் ஒரு வரி இருக்கிறது, “முதலடி நேரானால் முற்றும் நேராகும் என்று சொல்வது வழக்கம். ஆனால் அப்படி நேரான காரணத்தினால் பின்னால் அடுத்தடுத்த அடிகளும் நேராக வைக்கப்பட்டு லட்சியத்தை அடைந்துவிடுவான் என்று சொல்லமுடியாது. முதலடி நேராக வந்து இடையில் கோணிக்கொண்டு போகவும் முடியும். அதனால் முதலடி நேரானால் முற்றிலும் நேராகும் என்பது  தர்க்கரீதியானதல்ல.”

குர்ஆன் ஷரீஃபை நீங்கள் நேரடியாக அத்தம் பண்ணினால் அதனுடைய இலக்கிய நயத்தை உங்களால் மாற்ற முடியாது, கொண்டுவரமுடியாது. “இதா ஜுல்ஜிலத்துல் அர்ளு ஜில்ஜாலஹா..” இந்த அழகு, இந்த கோர்வை.. பூமி அதிர்ந்து நடுங்கும் நேரத்தில்; பூமி தன்னுடைய பாரங்களை எல்லாம் வெளியே தள்ளும் நேரத்தில் மனிதன் கேட்பான் இதற்கு என்ன வந்துவிட்டது என்று.  இதில் என்ன அழகு இருக்கிறது தெரியுமா? பூமி தன்னுடைய பாரங்களை எல்லாம் என்று சொன்னால் இலக்கியத்தில் மிக அழகான வார்த்தை. இந்த அழகை கவிதை ரீதியாக, இலக்கிய ரீதியாக குர்ஆன் ஷரீஃபை பார்க்கவேண்டும். அதல்லாமல் நீங்கள் நேரடியாக அர்த்தம் பண்ணினால்.. முட்டாள்தனம் என்று அர்த்தம்.

அப்புறம் “கைஃப கான சலாத்துன் நபியி ஃபில் ரமலான்..” அப்பொ ரமலானில் அவர்கள் என்ன செய்வார்கள் எப்படி இபாதத் பண்ணுவார்கள் என்று ஆயிஷா நாயகியிடம் கேட்டால் அது எதைப் பற்றியதாக இருக்கும்? ஜனங்களுக்குத் தெரியாத நேரத்தில் ஜனங்களுடைய பார்வைப் படாமல் செய்கிற இபாதத்தைப் பற்றிதான் கேட்டிருக்கவேண்டும். திராவிஹ்க்கு இரண்டுமூன்று நாட்கள்தான் வந்தார்கள் அப்புறம் வரவே இல்லை. தொடர்ந்து வந்தால் அது கடமை என்று ஆகிவிடும் இல்லையா? அதனால் வரவில்லை.

அப்பொ, நிச்சயமாக இரவில் தொழுகிற தொழுகை பற்றியதாகத்தானிருக்கும் கேள்வி. “காலத்த ஆயிஷா,” ஆயிஷா பதிலளித்தார்கள், எப்படி? “லா ஃபி ரமலான வலா ஃபி கைரிஹி..” ரமலானிலும் சரி மற்ற நாட்களிலும் சரி நான்கு ரக்கஅத் தொழுவார்கள், நீட்டத்தையும் அழகையும் கேட்காதீர்கள், அப்புறம் நான்கு ரக்கஅத் தொழுவார்கள், நீட்டத்தையும் அழகையும் கேட்காதீர்கள், அப்புறம் மூன்று ரக்கஅத் வித்று தொழுவார்கள். இது திராவிஹ் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ரமலானிலும் சரி மற்ற நாட்களிலும் சரி என்ற வார்த்தையிலிருந்து தெரிகிறது இது திராவிஹ் அல்ல என்று. ஏன்? மற்ற நாட்களில் திராவிஹ் கிடையாது.

உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் ரசூலல்லாஹ்வின் பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்துவிட்டு - 1500 வருஷத்திற்கு பிறகு இங்கே  உட்கார்ந்துக் கொண்டல்ல, பக்கத்திலிருந்து பார்த்துவிட்டு இப்போது நாம் தொழுதுக்கொண்டிருக்கும் முறையை, இருபது ரக்அத்தை கொண்டுவந்தார்கள்.

ரசூலல்லாஹ்வைப் பற்றி அவர்கள் பேசுவதை நம்புவதா? இல்லை நீங்கள் சொல்வதை நம்புவதா? பக்கத்திலிருந்து பார்த்தவர்கள் சொல்வதை நம்புவதா? நீங்கள் புத்தகத்துக்குப் புத்தகத்துக்குப் புத்தகத்துக்குப் புத்தகம் படித்ததை நம்புவதா? முல்லா நசுருதீன் கதை தெரியுமா? அவர் தன் நண்பனுக்கு சூப்பு போட்டுக் கொடுத்தார். அது சுவரில் ஒட்டும். அப்படிப்பட்ட அருமையான சூப்பு, அதை குடித்துவிட்டு அவர் தன் நண்பனிடம் சொல்ல; அவன் முல்லாவிடம் கேட்க, அதை கொடுக்க அவர் குடித்துவிட்டு சூப்பு நன்றாக இருக்கிறது ஆனால் என் நண்பன் சொன்னதுபோல் அவ்வளவாக சுவரில் ஒட்டவில்ல இருந்தாலும் குடிக்க நன்றாக இருக்கிறது. இதை அவன் தன் நண்பனிடம் சொல்ல இப்படி வருசையாக பல நண்பர்கள் குடிக்க கடைசியாக ஒருவன் கேட்க அவர் சுடுதண்ணீரில் கொஞ்சம் மிளகு தூளைப் போட்டுகொடுத்தார். அதை குடித்துவிட்டு சூப்பு சுவரில் ஒட்டவில்லையே என்று சொல்ல, நீங்கள் யார் என்று முல்லா கேட்க, நான் உங்கள் நண்பனுக்கு நண்பனுக்கு நண்பனுக்கு நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன். அப்படியா! இது சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்பு என்றாராம்.

இதே 13 ஹதீஸ் முஸ்லிமில் இருக்கிறது. ஆனால் முஸ்லிம்(ரஹ்) அதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? “பாபுல் இஹ்யாவுல் லைல்”- இரவுக்கு உயிர் கொடுக்கிற பாடம்.  உயிர் கொடுக்கிற பாடம் என்றால் இரவு இபாதத்து, இரவு தொழுகை. இமாம் புகாரி(ரஹ்) “சலாத்துத் திராவிஹ்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இமாம் அவர்கள் இந்த தலைப்பை போட்டார்களா அல்லது அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் போட்டார்களா  என்ற செய்தி கிடையாது. இதுதான் திராவிஹ் பற்றிய செய்தி. திராவிஹ் இருபது ரக்கஅத்துதான். இதில் எந்த மாற்றமும் கிடையாது. மக்காவிலும் மதினாவிலும் இருபது ரக்கஅத்துதானே தொழுகிறார்கள். சிந்தித்துப் பார்க்கும் திரனில்லாததுதான் காரணம்.

---o0o---

No comments: