Thursday, January 7, 2016

ஸூரத்துல் ஃபாத்திஹா

அவூது பில்லாஹி மின ல்-ஷைத்தானி ல்-ர்ரஜீம் - விலக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் - I seek refuge from the accursed/stoned Satan

முன் குறிப்பு:
குரான் ஷரீஃபின் எல்லா அத்தியாயங்களும் இறைவனிடமிருந்து தக்வா உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாக இருக்கிறது, ஆனால் அல்-பாத்திஹா எனும் தோற்றுவாயில் உள்ள ஏழு வசனங்களும் மனிதன் இறைவனிடம் கேட்கும் துவாவாக உள்ளது.

குரான் ஷரீஃபின் 15வது அத்தியாயம் 87வது வசனமானது ”(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்ப திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்தான குரானையும் வழங்கியிருக்கின்றோம்” என்று இறைவனே கூறுகின்றான்.

முஸ்லிம்கள் தங்களுடைய தொழுகையில் தினந்தோறும் இதனை ஓதி வருகிறார்கள். தொழுகையில் எத்தனை ரகாஅத் உள்ளதோ அத்தனை முறை இந்த அல்-பாத்திஹா சூராவை ஓதி வருகிறார்கள்.

இது தான் முதன் முதலாக முழுமையாக ஒரே நேரத்தில் வஹியாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்ட சூரா.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட ஆரம்ப காலத்தில் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் இது.

இதற்கு முன்பாக ‘அல்அலக்’ (96), ’அல்முஸம்மில்’ (73), ’அல்முத்தஸ்ஸிர்’ (74) ஆகிய அத்தியாயங்களில் சில வாக்கியங்கள் மட்டுமே இறங்கியிருந்தன.

------------------------------------------------------------------------------------------------------------

முதலாவது வசனம் (சில விளக்கங்களில் இந்த வாசகம் பாத்திஹா சூராவுடன் சேராது என்று வருகிறது, நாம் அந்த குழப்பங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டியதில்லை):
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகின்றேன். - In (the) name (of) Allah, the Most Gracious, the Most Merciful

கீழே வருவது நான் புரிந்து கொண்ட விளக்கங்கள்:
பகுதி 1:

இரண்டாவது வசனம்:
அல் ஹம்து - எல்லா புகழும், நன்றியும் - All Praises and Thanks
புகழ் -
புகழ் என்பது நாம் ஒன்றை (பொருளையோ அல்லது மனிதரையோ) அங்கீகரித்து பாராட்டுவதை குறிக்கும். உதாரணமாக ஒரு கல்யாண வீட்டிற்கு விருந்துக்கு போகிறோம், சாப்பிட்டுவிட்டு, “பண்டாரி யாரு.. தாளிச்சாவும் குருமாவும் உருசையா இக்கிது.. கொண்டா கொண்டாங்குது...” என்கிறோம்.
இந்த அங்கீகாரம், இந்த பாராட்டு பண்டாரிக்கு நன்றி சொல்வது அல்ல மாறாக பண்டாரியை புகழ்வதே ஆகும்.

நன்றி -
நன்றி என்பது யாரேனும் ஒருவர் நமக்கு செய்த உபகாரத்திற்காக நாம் தெரிவிப்பது. அதாவது நாம் பல நாள் பட்டினியாக கிடக்கிறோம், ஒருவர் நமக்கு சாப்பாடு தருகிறார், அவரை நாம் ”ரொம்ப அருமையா சாப்பாடு போட்டீங்க” என்று பாராட்டுவதை விட ”என் வயித்துக்கு நீங்க செஞ்ச உதவிய என்னென்னைக்கும் நான் மறக்க மாட்டேங்க” என நன்றி தான் சொல்வோம்.

இன்னொரு உதாரணமாக கீழே வரும் குரான் ஷரீஃபின் வசனங்களை கவனியுங்கள்:

இறைவன் மூஸா நபியவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று இரண்டு செய்திகளை கூறுமாறு சொல்கிறான் (குரான் ஷரீப் 26வது அத்தியாயம்: 16 & 17வது வாக்கியங்கள்). அவ்வாறு அவர்கள் எடுத்து கூறிய போது ஃபிர்அவ்ன் பதிலாக கூறுகிறான்.

குரான் ஷரீஃப்
26வது அத்தியாயம் - ஸூரத்துஷ்ஷுஃரா - கவிஞர்கள் 
18வது வாக்கியம்

 قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ

(அவ்வாறே) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உங்களைக் குழந்தையாக எடுத்துக் கொண்டு வளர்க்கவில்லையா? நீங்கள் (உங்கள் வாலிபத்தை அடையும் வரையில்) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்கள்.

19வது வாக்கியம்


 وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنتَ مِنَ الْكَافِرِينَ
நீங்கள் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்கள்! (அதனை மன்னித்திருந்தும்) நீங்கள் நன்றி கெட்டவராகவே இருக்கின்றீர்கள்” என்றான்.

இங்கே ஃபிர்அவ்ன் முன்னர் தான் செய்த உபகாரத்திற்காக மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமிருந்து நன்றியை எதிர்பார்க்கிறான்.

பிறிதொரு வாக்கியத்தில் இறைவனே பெற்றோர்களுக்கு நன்றி செலுத்துமாறு வழியுறுத்துகிறான்.

குரான் ஷரீஃப் 
31வது அத்தியாயம் - ஸூரத்து லுக்மான்
14வது வாக்கியம்
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
“தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியத்திருக்கிறது.

மேலே உள்ள வசனத்தில் தாய் தந்தை சிறு வயது முதல் ஆளாக்கியதற்காக நன்றி செலுத்துமாறு கூறுகிறான்.

நன்றிகும் புகழுக்குமான வித்தியாசத்தை தெரிந்திருப்போம்.

இங்கே “ஹம்து” என்ற வார்த்தை “புகழு”ம் “நன்றி”யும் இணைந்த ஒரு சொல்லாக வருகிறது.

லில்லாஹி - அல்லாஹ்வுக்கு உரியது - To Allah

நிலையான ஹம்தானது (புகழும் நன்றியும்) அல்லாஹ்வுக்கு உரியது.

குரான் ஷரீஃபின் பிறிதொரு இடத்தில் ‘அல்ஹம்து லில்லாஹி’ என்பதை வார்த்தைகளை இடமாற்றி ‘லில்லாஹி ஹம்து’ என்று குறிப்பிடுகிறான்.

குரான் ஷரீஃப் 
45வது அத்தியாயம் - ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)
36வது வாக்கியம்
 فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ

வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தாகும்.

மேலே உள்ள அரபி வாக்கியத்தில் “ஃப்லில்லாஹில் ஹம்து..” என்று ஆரம்பிப்பதை கவனிக்கலாம்.

”அல்ஹம்து லில்லாஹ்” என்பதற்கும் “லில்லாஹில் ஹம்து” என்ற வார்த்தைக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பேசும் செய்திகளை இரண்டு பல வகைகளாக பிரிக்கலம், அதில் சில கீழே தரப்படுகிறது:
1. தகவல் சொல்தல் (information)
2. உத்திரவு போடுதல் (instruction)

ஸூரத்துல் ஜாஸியாவில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுடன் பேசுகிறான். அவர்கள் புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கு உரியன என்ற உண்மையை மறுக்கிறார்கள். அப்பொழுது வாதிடும் விதமாக உத்தரவாக கண்டிப்புடன் சொல்கிறான். 

ஆனால் இங்கே அல்-ஃபாத்திஹாவில்  “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வது ஒரு தகவலாக தான் சொல்கிறான். உத்திரவாகவோ கட்டாயப்படுத்தியோ சொல்லவில்லை. அவன் நம்மிடம் வாதிடவோ, கண்டிப்புடனோ எடுத்து கூற விரும்பவில்லை. ஏனெனில் இது ஒரு அறிமுக கட்டம். அல்லாஹ்வுக்கு தான் புகழும் நன்றியும் உரியன என்று உண்மை இருப்பை வெளிப்படுத்துகிறான். 

அல்லாஹ் தன்னை முதன் முதலாக அறிமுகம் செய்யும் போது “அல்லாஹ்” என்றே அறிமுகப் படுத்துகிறான். அவனுடைய பண்புப் பெயர்களை அறிமுகம் செய்யவில்லை.

ரப்பில் ஆலமீன் -அகிலத்தின் இறைவன் - The Lord of the Universe

தன்னை “அல்லாஹ்” என்று அறிமுகம் செய்த பிறகு, அவன் யாரென்று சொல்கிறான்.
அவன் தான் “அகிலத்தின் இறைவன்”

அல்லாஹ் என்று சொல்லாமல் அல்ஹம்து லிரப்பில் ஆலமீன் என்று வந்திருந்தால் அது முழுமை பெற்றிருக்காது, குழப்பம் தான் வந்திருக்கும்.

உதாரணமாக, மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) இறைவனின் கட்டளையை ஏற்று ஃபிர்அவ்னிடம் செல்கிறார்கள். கைத்தடியை எறிந்து அது மலைப்பாம்பாகும் அத்தாட்சியை காண்பிக்கிறார்கள். தன்னை இறவன் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் சபையோரிடம் கலந்தாலோசிக்கிறான். அவர்களின் ஆலோசனைப்படி மூஸா நபியவர்களுக்கு தவணை கொடுத்து துப்பறிபவர்களை அனுப்பி சூனியக்காரர்களை வரவழைக்கிறான். அவர்களும் தடியை எறிகிறார்கள். பாம்பாக மாறுகிறது, மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவனின் வஹ்யியை ஏற்று தமது தடியை எறிகிறார்கள். அது சூனியக்காரர்களின் பாம்பையே விழுங்கிவிட்டது. தன் நிலையல்லாது மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நிலையையும் உணர்ந்த அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.

ஃபிர் அவ்னுடைய சபையிலே ஃபிர் அவ்ன் கண் முன்னாலேயே அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தவுடன் ஃபிர் அவ்ன் குழப்பமானான். என்ன செய்கிறார்கள் இவர்கள்? - இது அடுத்த கட்ட நடவடிக்கையா? என்று விழித்தான்.

அவர்கள் சொல்கிறார்கள், குரான் ஷரீஃப் வசனம் சொல்வதையே படிப்போம்:

குரான் ஷரீஃப்
7வது அத்தியாயம் - ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
121வது வாக்கியம்


 قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ

”அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்” என்று கூறினார்கள்.

(மேலே வருவது http://www.tamililquran.com/qurandisp.php?start=7 இணைய தளத்தில் இருந்து எடுத்த மரியாதைக்குறிய அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு. ஆனால் அவர்கள் ‘..அல்லாஹ்வையே..” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தையே இல்லை)

நேரடி மொழி பெயர்ப்பு இப்படி வரும்:
கூறினார்கள் (யாரு? - என்றால் சூனியக்காரர்கள் தான்) நம்பிக்கை கொண்டோம் அகில்த்தின் இறைவனை

இதை கேட்டவுடன் ஃபிர் அவ்னுக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. ஏனெனில் தன்னை தான் அவன் ”அகிலத்தின் இறைவன்” என்று பிரகடனப்படுத்தியிருந்தான். 

அதாகப்பட்டது,
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.
ஃபிர் அவ்ன் என்ன இது என்று புரியாமல் குழப்பமடைந்தான்

சூனியக்காரர்கள் “அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்
ஃபிர் அவ்ன் தன்னை தான் சொல்கிறார்கள் என்று அதற்கும் ஆத்திரம் வராமல் ‘மேலே சொல்லுங்கள்.. என்ன செய்யப் போகிறீர்கள்.. “ என்பது போல் சூனியக்காரர்களை பார்க்கிறான்.
ஃபிர் அவ்னுக்கு இன்னும் விளங்கவில்லை என்பதால் அந்த சூனியக்காரர்கள் மேற்கொண்டு அவர்களது நிலையை 122வது வாக்கியத்தில் விளக்குகிறார்கள்.

குரான் ஷரீஃப்
7வது அத்தியாயம் - ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
122வது வாக்கியம்

  رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
”மூஸா, ஹாருனுடைய இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்.

சூனியக்காரர்கள் ”ரப்பில் ஆலமீன்.. மேற்கண்டவாறு கூறியவுடன் தான் ”ஆகா.. இவர்கள் அகிலத்தின் இறைவன்” என்று சொன்னது நம்மையல்ல.. மூஸா, ஹாருனுடைய இறைவனை” என்று குழப்பம் நீங்கி அவர்களை மாறு கால், மாறு கை வாங்க உத்தரவிடுகிறான்.

இங்கே சூரத்துல் ஃபாத்திஹாவில், அல்லாஹ் இது போன்ற குழப்பங்களை எல்லாம் ஏற்படுத்த விரும்பாமல் படிக்கும் மக்களுக்கு அல்ஹம்து லில்லாஹி.. ரப்பில் ஆலமீன் என்று தெளிவாக ‘அல்லாஹ்வை’ முதலில் சொல்லி விட்டு ‘ரப்பில் ஆலமீன்’ என்று கூறுகிறான்.

’ரப்’ என்ற அரபி வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதில் சில:

  • உரிமையாளர்/ சொந்தக்காரர்/ முதலாளி/ எஜமானன் (மாலிக்)
  • பரிபாலனம் செய்பவன்/ பாதுகாப்பவன்/ பேணுபவன்/ நலம் காப்பவன்/ கண்காணிப்பவன் (முரப்பி)
  • பரிசளிப்பவன் (வல்முன்’இம்)
  • நிலைத்தவன் (அல் கய்யூம்)
  • முழு அதிகாரம் படைத்தவன் (அஸ்ஸய்யித்)

அல்லாஹ் தன்னை பற்றி அல்லாஹ் என்ற பெயரை குறிப்பிட்டு விட்டு நாம் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதாக மேலே உள்ள அனைத்தையும் தான் குறிப்பிடுகிறான்.

அதாவது அல்லாஹ் யாரென்றால்...
அவன் தான் அனைத்திற்கும் உரிமையாளன் - அதாவது எதுவும் நமக்கு உரிமை பொருளில்லை, 
அவன் தான் அனைத்தையும் பரிபாலனம் செய்பவன் - அதாவது நம்முடைய வளர்ச்சிக்கு அவனே காரணமாக இருக்கின்றான், 
அவன் தான் நமக்கு பரிசளிப்பவன் - நம்மால் எத்தனையோ வேலைகளை செய்ய முடிந்தாலும் இது எல்லாம் நாமே உருவாக்கி கொண்டவை அல்ல மாறாக எல்லாம் அல்லஹ் நமக்கு பரிசாக தந்தவை, 
அவன் தான் நிலைத்தவன் - நம்மை நிலைபெறச் செய்பவன் அவன் தான் நாம் உடலை கவனித்துக் கொள்வதனால் மட்டுமோ, எந்த வியாதிக்கான வரலாறும் நம் உடலில் இல்லாதது மட்டுமோ நான் அடுத்த மூச்சை விடுவதற்கான காரணமல்ல், மாறாக அல்லாஹ் தான் நம்மை நிலைபெறச் செய்கிறான், 
அவன் தான் முழு அதிகாரம் படைத்தவன் - அவன் தான் எதுவும் செய்ய முழு அதிகாரம் படைத்தவன், அவனன்றி எவரும் எதையும் எந்த காலத்திலும் அல்லது எல்லா காலத்திலும் எதையும் செய்ய முடியாது.

அனைத்திற்கும் உரிமையாளனாக, 
அனைத்தையும் பரிபாலனம் செய்பவனாக,
உரியவற்றை பரிசளிப்பவனாக,
எக்காலத்திலும் நிலைத்தவனாக,
எல்லா வற்றிற்கும் முழு அதிகாரம் படைத்தவனாக
- ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் தான் ரப்.  
அல்லாஹ் தன்னை இப்படி தான் அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

ஆக அல்லாஹ் ‘ரப்’ என்றால் மனிதன் அவனின் ‘அப்து’ அதாவது ‘அடிமை’ என்பதாகும்.

இஸ்லாத்தின் அடிப்படையில் அல்லாஹ் தான் ‘ரப்’ என்றும் அனைவரும் அவனது ‘அடிமை’ என்றால்... சோ வாட்? அடுத்து என்ன?

உதாரணமாக, நான் எனது அலுவலகத்தில் வேலை செய்கிறேன், என் வேலை நேரம் 8 மணி முதல் 5:30 மணி வரை தான். 5:30 க்கு மேல் என்னை எவரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. நான் அங்கு ஊழியன் தான் அடிமை இல்லை.

அடிமை என்றால் அடிமையின் முழு அதிகாரமும் அவனுடைய ரப்பின் கையில் தான் இருக்க வேண்டும். அடிமையாக அவனுக்கு எதையும் செய்ய அதிகாரம் கிடையாது, எந்த ஃப்ரி வில்லும் கிடையாது. அவனுடைய ரப் அவனுக்கு இட்ட கட்டளையை செய்வதை தவிர. அதே நேரத்தில் அந்த அடிமை என்ன செய்ய வேண்டும்/ செய்ய கூடாது என்று ’ரப்’பும் தெளிவு படுத்தியிருக்க வேண்டும், வழிகாட்டுதல் வழங்கியிருக்க வேண்டும்.

ஆக, ரப் என்ற வார்த்தைக்கும் வழிகாட்டுதல் என்ற வார்த்தைக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அது குரான் ஷரீஃப் முழுக்க ரப்பும் வழிகாட்டுதலும் இணைந்தே வருகின்றது.

’(வழிகாட்டுதல்) யஹ்தி’யும்- ’(இறைவன்) ரப்’பும் சேர்ந்தே வரும் வசனங்கள்

குரான் ஷரீஃப்
87வது அத்தியாயம் - ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
1. 2,  3வது வாக்கியம்
                                                                                                                                         سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى


(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக


                                                                                                                                               الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, அவைகளை ஒழுங்குபடுத்தியவன்.
                                                                                                                                               وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
அவனே (அவைகளுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவைகளை அடையக்கூடிய) வழிகளையும் அவைகளுக்கு அறிவித்தான்.

குரான் ஷரீஃப்
18வது அத்தியாயம் - ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
24வது வாக்கியம்
                                                              إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدً
ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதனை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள். தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுங்கள்.

குரான் ஷரீஃப்
26வது அத்தியாயம் - ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
62வது வாக்கியம்
                                                                                                                               قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார். 

ஆகவே தான், ரப் என்று தன்னை அறிமுகப்படுத்தும் இறைவன் இதே அத்தியாயத்தில் ‘இஹ்தி நஷ்ஷிராத்தல் முஸ்தகீம்’ - ‘நேரான வழியை காட்டுவாயாக..’ என்று அவனது அடிமையை இறைஞ்சுமாறும் இதே சூரத்துல் பாத்திஹாவில் பணிக்கிறான்.

ஆலமீன் என்ற் அரபி வார்த்தைக்கு உலகம் என்ற பொருள் வராது அல்லது முழுமை பெறாது, ஏனெனில் அரபியில் உலகம் என்பதை ’அல் அவாலிம்’ என்று சொல்லலாம்.

குரான் ஷரீஃப்
2வது அத்தியாயம் - ஸூரத்துல் பகரா (பசு மாடு)
47வது வாக்கியம்
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ 



இஸ்ராயிலீன் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய் அருட்கொடையையும் உலக்த்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்து பாருங்கள்.

நான் ஐந்து வருடத்திற்கு முன்னால் சிங்கப்பூரில் உள்ள ஜுரோங் ஏரியாவிற்கு வந்தேன். ஐந்து வருடத்திற்கு முன்னால் இருந்ததற்கும் இப்போது இருப்பதையும் பார்க்கும் போது முன்னர் இருந்தது வேறு உலகம் போல் தோன்றுகிறது.

சிங்கப்பூரில் இருந்து விட்டு இங்கே உள்ள கலாச்சாரத்தில் ஊறி விட்டு ஊருக்கு போனால தாளை கீழே போட பயம் வருகிறது. கவனிப்பதற்கு அது வேறு ஒரு உலகமாய் இருக்கிறது.

மக்கள் மாறுகிறார்கள். 
ஊர் மாறுகிறது. 
கலாச்சாரம் மாறுகிறது.
மொழி, உடை, உணவு பழக்கம் எல்லாமே மாறுகிறது

’ஆலமீன்’ என்ற வார்த்தைக்கு நீங்கள் எந்த காலத்தில், தேசத்தில், மொழி பேசுகிற, கலாச்சர்ர வழி வந்த, உணவு, உடை பழக்க வித்தியாசமுள்ள, வாழ்ந்த, வாழ்கிற, வாழ இருக்கின்ற மக்களாய் இருந்தாலும், அத்தனையையும் ஆலமீன் என்ற வார்த்தை குறிக்கும்.
ஆகவே, இங்கே இன்னொரு ஆழமான கருத்தும் புதைந்து கிடப்பதை கவனிக்க தவறக் கூடாது, நீங்கள் எந்த மொழியையும் பேசலாம், எந்த கலாச்சாரத்தையும் பின்பற்றலாம், எந்த வகை உணவு, உடை பழக்க வழக்கத்தையும் கொண்டவராக இருக்கலாம், நீங்கள் எல்லோரும் ஒரே உலகம் தான், உங்களுக்கு இறைவன் ஒருவன் தான், மேலோர் கீழோர் என்று எந்த பாகுபாடும்  கிடையாது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாவது வசனம்:
அர்ரஹ்மானி - அளவற்ற அருளாளன் - The Most Gracious
ல்-ர்ரஹீம் - நிகரற்ற அன்புடையோன் - The Most Merciful

மேலே கண்ட இரண்டு வார்த்தைகளிலும் அடிப்படையான ஒரு வார்த்தை இருக்கிறது, அது தான் ‘ரஹ்ம்’ என்ற அரபிய மூல வார்த்தை.
ரஹ்ம் என்றால் ஆழமான அன்பு intense love, பராமரிப்பு care, அக்கறை concern, கருணை/ இரக்கம் grace, அருள் mercy

இதற்கு முன்பு அல்லாஹ் தன்னை ரப்பில் ஆலமீன் என்கிறான், அவன் தான் எஜமானன்/ அதிகாரம் படைத்தவன். அதிகாரத்தில் உள்ள எவரும் தனது அடிமைகளை எப்படி நடத்துவார்கள் என்பது தெரியும் தானே. ஆனால் இங்கே அல்லாஹ் தான் தான் அனைத்திற்கும் அதிகாரமுடையவன் என்று சொல்லிவிட்டு தான் எப்படிப்பட்ட அதிகாரமுடையவன் என்று சொல்கிறான். இப்படிபட்ட அதிகாரமுடையவன் எவனும் இருக்க முடியாது, 

அனைத்திற்கும் அதிகாரம் படைத்த அவன் தமது அடிமைகள் மீது அவன் மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான், பராமரிப்பை கவனிக்கிறான், அக்கறை கொள்கிறான், கருணை/ இரக்கம் கொண்டு அணுகுகிறான், அருள் பொழிகிறான்.

ரஹ்ம் என்ற வார்த்தையில் அர்ரஹ்மான், நிர்ரஹீம் என்ற இரு வார்த்தைகளும் வந்திருந்தாலும் இரண்டு வார்த்தைகளுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

’அல்லாஹ்’, ‘அர்ரஹ்மான்’ ‘அர்ரஹீம்’ இந்த மூன்று வார்த்தையை வைத்து மட்டுமே ‘அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்’ என்ற நூல் நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களால் எழுதப்பட்டது.

அதிலே அவர்கள் குறிப்பாக ‘அர்ரஹ்மான்’ பற்றியும் ‘அர்ரஹீம்’ பற்றியும் ஓரிடத்தில் இப்படியாக குறிப்பிடுகிறார்கள்:

முதலாவது: அருளை அடைபவர்களின் செயலைக் கவனியாது, அளிப்பது. இவ்விதம் அவன் அளிப்பதைப் பற்றியே ரஹ்மான் என்று அவனுக்குப் பெயர் கூறப்படுகின்றது. (இதற்கு அவர்கள் துறை சார்ந்த அழகான உதாரணத்தை, விளக்கத்தை அவர்கள் எடுத்து அதே நூலிலேயே பிறிதோரிடத்தில் விளக்கியிருப்பார்கள்)

இரண்டாவது: அருளை அடைபவர்களின் செயலைக் கவனித்து, அவர்களுடைய சீரான நடத்தைக்குச் சன்மானமாக அளிப்பது. இவ்வாறு அவன் அளிக்கின்றான் என்பதற்காக, ரஹீம் என்று அவனுக்குப் பெயர் கூறப்படுகின்றது.

அர்ரஹ்மான் என்று வரும் போது மூன்று செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன:
1. உச்ச அளவு - எதிர்பார்ப்புகளுக்கு அப்பால்
2. உடனடியாக காட்டக் கூடியது - தற்பொழுது காட்டிக் கொண்டிருப்பது
3. தற்காலிகமானது (’ஆன்’ - என்று ஒரு வாத்தையின் முடிவில் வந்தாலே அரபியில் அது நிரந்திரமாக இருப்பதை குறிக்காது - உதாரணமாக: ’ஙள்த்பான்’ என்றால் உச்ச அளவு கோபம் என்று அர்த்தம் ஆனால் அந்த கோபம் தற்காலிகமானது, தணியக் கூடியது; ’அத்ஸான்’ என்றால் உச்ச அளவு தாகம் என்று  அர்த்தம் ஆனால் அந்த தாகம் தண்ணீர் குடித்தவுடன் தணிந்து விடும்; ’ஜவ்ஆன்’ என்றால் உச்ச அளவு பசி என்று அர்த்தம் ஆனால் அந்த பசி உணவு உட்கொண்டவுடன் அடங்கி விடும்)

அர்ரஹீம் என்று வரும் போது இரண்டு செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன:
1. நிரந்திரமானது
2. இப்பொழுது உடனடியாக காட்ட வேண்டிய அவசியமில்லாதது

அர்ரஹ்மான் - இம்மைக்கும்; அர்ரஹீம் - மறுமைக்குமானது.
அர்ரஹ்மான் - பொதுக்கருணை; அர்ரஹீம் - தனிக்கருணை
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நான்காவது வசனம்:
மாலிகி யவ்மி  ல்-த்தீன் -தீர்ப்பு நாளின் அதிபதி - (The) Master (of the) day (of the) Judgement

நாம் மேலே கண்ட விளக்கங்களின்படி ‘ரப்’பாகியவன் வழிகாட்டுதல் காட்டுகிறான், அதே நேரத்தில் அவன் அளப்பெரும் கருணையாளன், அன்பாவன் என்று சொல்கிறான்.
இதை மட்டும் சொல்லி விட்டு விட்டிருந்தால் மனித இயல்பில் இந்த கருணையையும் அன்பையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளுண்டு.
‘ஒண்ணும் சொல்லமாட்டாஹா’ என்று செல்லம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் சீரழிவதும் இந்த சாதகப் பயன்படுத்தலினால் தான்.
அல்லாஹ் அங்கே தான் ஒரு ச்செக் வைக்கின்றான். அவன் வழிகாட்டுதல் வழங்கியவன், அளப்பெரும் கருணையாளன் அன்பானவன் மட்டுமல்ல, அவனது வழிகாட்டுதலையும் உங்களின் வாழ்நாள்விநாடி குறிப்புகளையும் அலசிபார்த்து தீர்ப்பு வழங்கும் அதிபதியும் அவன் தான்.
‘மாலிகி’ என்றால் ‘அரசன்’ என்றும் ‘உரிமையாளன்’ என்றும் பொருள்படும்.
‘அரசன்’ என்பது பெரிய அளவில் நிலங்களை, நாடுகளை ஆள்வதை குறிக்கும்.
‘உரிமையாளன்’ என்றால் சிறிய அளவில் சொத்துக்களை, வீடுகளை கொண்டிருப்பதை குறிக்கும்.
இங்கே அல்லாஹ் பெரிய அளவில் நடைபெறும் ஒவ்வொரு மனிதருக்குமான தீர்ப்பு நாளின் அதிபதியும் சிறிய அளவில் ஒவ்வொரு மனிதரின் காரியங்களை கணக்கு பார்க்கும் உரிமையுடையவனாகவும் இருப்பதை குறிக்கிறது.
‘யவ்மித்தீனில்’ வரும் ’யவ்மி’ என்றால் நாள்; ‘தீன்’ என்றால் துல்லியமான பரிவர்த்தனை என்று அர்த்தம். அதாவது ‘துல்லியமான பரிவர்த்தனை நடக்கும் நாள்’ என்று பொருள்.
மீண்டும் புரிந்து கொள்வோம், ‘ரப்’பாகியவன் வழிகாட்டுதல் வழங்குகிறான், வாழும் அவகாசங்களையும் வழங்குகிறான், பிறகு அந்த ‘ரப்’பிடமிருந்து இரண்டு முடிவுகள் தான் கிடைக்கும்.
ஒன்று, அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் அன்பும்
இரண்டாவது, அல்லாஹ்வின் துல்லியமான தீர்ப்பு. அதாவது தண்டனை என்று கூட அல்லாஹ் சொல்லவில்லை, செய்த காரியங்களுக்கு துல்லியமான தீர்ப்பு என்று தான் அல்லாஹ் சொல்கிறான், இதுவும் அவனது அளப்பெரும் கருணையும் அருளும் தான் மறைந்துள்ளதோ..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாவது வசனம் (1)
இய்யாக நஅபுது - நாங்கள் உன்னிடமே அடிமையாக இருக்கின்றோம்  - You alone We Slave
அல்லாஹ்வை பற்றி மேலே உள்ள அனைத்தையும் ஒருவன் நம்பி ஏற்பானேயானால் அவன் வேறு வழியில்லாமல் ஒரே ஒரு முடிவுக்கு தான் வந்தாக வேண்டும். அது தான் அல்லாஹ்வுக்கும் நமக்குமான உறவை சொல்லும்.
பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் ’நஅபுது’ என்ற வார்த்தைக்கு ‘வணங்குகிறோம்’ என்று வருகிறது. உள்ளபடி ‘அப்து’ என்றால் அடிமையாக இருத்தலையே குறிக்கும். இதற்கும் மேலான in-depth விளக்கங்கள் எல்லாமும் கிடைக்கின்றன.
இங்கே அல்லாஹ் ‘குல்’ என்று ஆரம்பித்து ‘நான் அடிமை’ என்று சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. அவன் நமது முடிவிற்கே விட்டு விடுகிறான். 
அவன் புகழுக்கும் நன்றிக்கும் உரியவன்
அவன் தான் அல்லாஹ்
அவன் தான் அகிலத்தின் இறைவன்
அவன் அளப்பெரும் கருணையாளன் அன்பானவன்
அவன் தான் தீர்ப்பு நாளன்று துல்லியமாக கணக்கு பார்த்து தீர்ப்பு வழங்கும் அதிபதியுமாவான் 
இப்படி ஒருவன் இருக்கின்றான், அது உண்மையிலும் உண்மை.

அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது அவரவரது விருப்பமாகும்.
அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஒரு முடிவுக்கு வாருங்கள், ‘அவன் தான் அரசன், தான் ஒரு அடிமை’ என்று, ‘அவன் ஒருவனிடமே நான் அடிமையாக இருக்கின்றோம்’ என்று.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 2:

ஐந்தாவது வசனம் (2) (தொடர்ச்சி):
வ இய்யாக நஸ்தஈனு- நாங்கள் உன்னிடமே உதவியும் தேடுகிறோம் - And You alone We ask for Help

மேலே உள்ள வாக்கியத்தின் படி அல்லாஹ் “எனக்கு அடிமையாக இரு..” என்று சொல்லவில்லை. 
“நான் உன்னிடமே அடிமையாக இருக்கின்றோம்” என்று நாம் சொல்வது போல் அமைத்து தந்திருக்கிறான். அதாவது, அவனிடம் அடிமையாக இருப்பதா வேண்டாமா என்று. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. 
பொதுவாக, யாரும் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்புவதில்லை, ஆனால் உண்மையிலேயே அல்லாஹ்வை பற்றி ஃபாத்திஹா சூராவில் வரும்  முதல் நான்கு வசனங்களையும் உணர்ந்து கொண்டோம் என்றால் அந்த ரப்பிடம் அடிமையாக இருப்பதை பெருமையாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
சரி, அல்லாஹ்வாகிய ரப்பு ஒருவனுக்கு அடிமையாக இருக்க நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றால்...? எப்படி அடிமையாக இருப்பது?
எனக்கு தெரிஞ்ச அடிமைப்படி நான் அடிமையாக இருந்துக்கிறேன் என்று சொல்வதல்ல... அடிமையாக இருப்பதற்கும் கூட அவனிடமே உதவியையும் கேட்க வேண்டும்.
 “நஸ்ர்”, ”முஸாதா”, ”மெத்”, “அவ்ன்” இப்படியாக அரபியில் உதவி என்ற வார்த்தைக்கு எவ்வளவோ வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் “நஸ்தஈனு” எனும் வார்த்தை “அவ்ன்” என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கிறது, இதற்கு குறிப்பிட்ட நாம் முயன்று பார்த்து நம்மால் முடியாது என்ற போது இன்னொருவரை உதவிக்கு அழைத்து அவரும் அதை முடித்து கொடுக்கிறார் அல்லவா அத்தகைய உதவியை தான் இங்கே குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக இரண்டு செய்திகள் இங்கே கவனிக்க வேண்டியது உள்ளது,
1. நான் எதுவும் செய்ய மாட்டேன், ஆனா எனக்கு உதவி வரணும் என்ற உதவியை பற்றி இங்கே குறிப்பிடவில்லை. நம்முடைய முயற்சி முதலில் வர வேண்டும். முதலில் உத்தம ஷஹாபாக்கள் பத்ரு போர்க்களத்திற்கு வரவேண்டும், வந்தால் அவர்களுக்கு மலக்குமார்களின் உதவி கிடைக்கும். போர்க்களத்திற்கே வராமல் வீட்டில் இருக்கும் போது மலக்குமார்கள் போய் போரிட மாட்டார்கள்.
2. நானே என் இஷ்டத்திற்கு எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.. என்ற முடிவுக்கும் வர முடியாது. உன்னிடமே உதவியும் தேடுகிறோம் என்றால் வாழ்க்கையில் கிடைக்கின்ற வெற்றிக்கு நீங்கள் உங்களால் மட்டுமே பெற்றதாக நினைக்க கூடாது. அல்லாஹ்வுடைய உதவி இல்லாமல் அந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்று தான் அடிமையாக இருப்பதாக ஒத்துக் கொண்டவர் எண்ண வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறாவது வசனம்:
இஹ்தினா - வழிகாட்டுவாயாக! - Guide Us

இது வரை..
அல்லாஹ்வை பற்றி தெரிந்து கொண்டேன்..
நான் நானாக சுதந்திரமாக இருப்பதை விடவும் அவனிடம் அடிமையாக இருப்பது தான் சிறந்தது என்று உள்ளத்தால் ஏற்றுக் கொண்டேன்.
அப்படி அடிமையாக இருப்பதற்கு உதவியும் அவனிடமே கேட்கிறேன்...
அடுத்து..
என்ன உதவி?

தாகத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது தான் உதவி... கார் மோட்டர் பைக் கொடுப்பது அல்ல..
பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பது தான் உதவி.. படுக்க பாய் தலையணை கொடுப்பது அல்ல..
வழி தெரியாமல் நிற்பவர்களுக்கு பாதையை காட்டுவது தான் உதவி..  உடுத்த உடைகள் எடுத்து கொடுப்பது அல்ல...
இங்கே அல்லாஹ்விடம் நாம்.. ”எனக்கு வழிகாட்டுவாயாக” என்று கேட்கிறோம்.. இதுவே முதலாவதாக நாம் கேட்கும் உதவி.. 

“எனக்கு - வழிகாட்டுவாயாக (இஹ்தினி)” என்று நமக்கு மட்டும் தனியாக கேட்க வில்லை, “எங்களுக்கு - வழிகாட்டுவாயாக (இஹ்தினா)” என்று அனைவருக்கும் கேட்கிறோம்.. ஒரே சமுதாயமாக இறைவனின் உதவிகளை பெற வேண்டும் என்ற சமுதாய நோக்கும் இங்கே அறிவுறுத்தப்படுகிறது...

இந்த உதவியும்.. ஒரே ஒரு முறை கேட்டு பெறும் உதவி அல்ல... முதலில் உதவி கேட்பது.. அல்லாஹ் உதவி செய்வான்.. திரும்பவும் கொஞ்சம் நேரம் கழித்து மறுபடி அவனிடமே போய்.. உதவி கேட்பது.. அவன் உதவி செய்வான்.. இப்படி..தொடர்ந்து கேட்டுக் கொண்டே பெற வேண்டும். 
ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு எனக்கு போதும் நான் நேற்றே குடித்து விட்டேன் என்று இருக்க முடியாது.

ல்-ஸிராத ல்-முஸ்தகீம -நேரான வழியில் - (To) the path, the Straight

நேரான பாதைக்கு வழிகாட்டுவாயாகவா? அல்லது நேரான பாதையில் நடந்து சென்று சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு வழிகாட்டுவாயாகவா?

அதாவது - வழி தெரியாம மாட்டிகிட்டோம்.. ஒருத்தவங்க கிட்ட கேட்கிறோம்.. இப்படியே போனா ஒரு ரோடு வரும்ங்க.. என்கிறார்.. அங்கே போய் அந்த ரோட்டுல போயிடுங்க.. என்கிறார்.
இது வந்து ரோட்டுக்கு செல்ல வேண்டிய வழிகாட்டுதல்..

இப்போ அவர் சொன்னபடி நான் அந்த ரோட்டுக்கு வந்துட்டேன்.. ரோட்டுக்கு தான் வந்திருக்கிறேனே தவிர.. நான் போக வேண்டிய இடத்திற்கு வரவில்லை. ரோட்டுல நடந்து போகும் போதும் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்படும்..

இங்கே இந்த இரண்டையுமே குறிப்பிடப்படுகிறது... அதாவது நேரான பாதைக்கு வழிகாட்டுவாயாக.. நேரான பாதையை கடந்து சென்று இலக்கை அடைவதற்கும் கூடவே வந்து வழிகாட்டுவாயாக..

நேரான பாதை என்பது
6. ஸூரத்து அன் ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
151, 152 153வது வாக்கியங்களில் சிராத்துல் முஸ்தகீம் என்றால் என்ன என்று குறிப்பிடப்படுகிறது. அதன் சம்மரியை நான் கீழே தருகிறேன்:

151 வது வாக்கியம்
(1) எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; 
(2) பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; 
(3) வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
(4) வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; 
(5) அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - 
இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். 

152 வது வாக்கியம்
(6) அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; 
(7) அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; 
நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; 
(8) நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; 
(9) அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

153 வது வாக்கியம்
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். 


இலக்கு என்பது வேறு எதுவும் அல்ல? ஜன்னத் தான். கீழே வரும் ஆயத்தை வாசியுங்கள்

7. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)  
43வது வசனம்

 وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ ۖ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ ۖ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۖوَنُودُوا أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம். அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தை பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்கு காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்ட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.

ஸிராத் என்றால் - அகலமான பாதை என்று ஒரு அர்த்தம்
ஸிராத் என்பது - நேரான (வளைவுகள் அல்லாத) பாதை என்று ஒரு அர்த்தம்
ஸிராத் என்றால் - ஆபத்தான பாதை என்றும் ஒரு அர்த்தம் உள்ளது.

முஸ்தகீம் என்றால் நேரான என்று தான் அர்த்தம் ஆனால் செங்குத்தாக உயரே நேராக செல்வதை குறிக்கும்.

அதாவது நிறைய பேர்கள் பயணிக்கக் கூடிய, வளைவுகள் இல்லாத நேரான, ஆபத்தான உயரே செல்லும் பாதைக்கு (ரொம்ப உயரே போனால் ஆபத்து ஒரு சின்ன பெருமை.. கீழே கொண்டு வந்து தள்ளிடும்) வழிகாட்டுவாயாக.. என்று கேட்கிறோம்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏழாவது வசனம்:
ஸிராத அல்லதீன அன்அம்த அலைஹிம் - எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ (இலேசாக்கி வைத்தாயோ)  அவர்கள் சென்ற பாதையில்  - (The) path (of) those You have besto)wed (Your) Favours on them

நிறைய பேர்களை கொள்ளும் பாதையில் அல்லாஹ் எத்தனையோ பேருக்கு வழிகாட்டியிருக்கிறான். அவர்கள் தான் இறைதூதர்கள், இறையன்பர்கள் யாவரும்.
யாருக்கு அருள் புரிந்தாயோ என்றால் யாருக்கு நீ அருள் ஏற்கனவே புரிந்தாயோ அவர்களுடைய பாதையில்..

அன் அம்த என்ற பெயரில் ஒரு ஸூரா கூட உள்ளது.. அன் அம்த என்றால் ஆடு மாடு ஒட்டகம்.. என்று அர்த்தம்... அதாவது அது மிகவும் சாஃப்டாக பாதையில் நடக்கும்... அது போல் இந்த கடினமான பாதையில் இறையருளால் மென்மையாக கடந்து சென்றவர்கள்.

இவர்கள் எல்லாம் நல்லடியார்களாக இருந்தார்கள்.
நல்வழியில் முயன்றார்கள்.
இறைவன் வழி காட்டினான்
கடினமான பாதையை மென்மையாக, சுலபமாக கடந்து சென்றார்கள்.

அப்படி எங்களையும் அதாவது அந்த முயற்சியில் ஈடுபட்டு வருபவர்களையும் கடந்து செல்வதற்கு வழிகாட்டுவாயாக என்று கேட்கிறோம்.

கய்ரி ல்-மக்ளூபி அலைஹிம் - கோபத்தை சம்பாதித்தவர்கள் (வழியுமல்ல) - not (of) those who earned wrath on themselves

ஒரு சிலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு வழிகாட்டுதல் வந்தது.. அவர்கள் அதனை நன்கு படித்து தெரிந்து கொண்டார்கள். தெரிந்த பிறகு அவர்கள் அந்த வழியை புறக்கணித்து மனப்போக்கில் வேறு பாதையில் செல்கிறார்கள்... இவர்கள் தான் கோபத்தை சம்பாதித்தவர்கள்.

மேலே நல்லடியார்களை பற்றி குறிப்பிடும் போது “எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ” என்று “நீ” என்று அல்லாஹ்வை குறிப்பிடுகிறோம்..
ஆனால் இங்கே “கோபத்தை சம்பாதித்தவர்கள்” என்று மட்டுமே சொல்கிறோம்.. “உன்னுடைய” அல்லது “நீ” என்று அல்லாஹ்வை கோபத்தோடு குறிப்பிட்டு வரவில்லை. இது ஏனெனில் இத்தகையவர்களோடு தன் பெயர் வருவது வரக்கூடாத அளவிற்கு அவர்கள் மீதான கோபம் அது மட்டுமல்லாமல் இவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் மட்டுமல்ல மற்ற இறையடியார்களுக்கும் இவர்கள் மீது கோபம் காரணமாக இருக்கலாம்.

அதுவும் தவிர யாருக்கு அருள் புரிந்தாயோ என்றால் ஏற்கனவே அருள் புரிந்தவர்களை பற்றி வருகிறது. 
ஆனால், இங்கே கோபத்தை பற்றி குறிப்பிடும் போது இப்பவும் கோபத்தோடு இருப்பது போல் வாக்கியம் அமையப் பெற்றுள்ளது.

இவர்கள் சென்ற வழியில் செலுத்தி விடாதே.. என்று இறைஞ்சுகிறோம்.. 


வ ல ல்-லாழீன் - (வழிதெரியாமல் போனவர்கள்) வழிதவறியவர்கள் (சென்ற வழியுமல்ல)  - and not (of) those who gone astray (lost)

வேறு சிலர் இருக்கிறார்கள்.. இவர்கள் எப்படி என்றால் எது நேரான வழி என்றே தெரியாமல் இருப்பவர்கள்.
அல்லாஹ் இவர்களை பற்றி குறிப்பிடும் போது கோபத்தை குறிப்பிடவில்லை. காரணம் வழி கிடைத்தால் இவர்கள் நேரான பாதைக்கு வரக்கூடும்.
அதற்காக இந்த வழியையும் நியாயப்படுத்தவுமில்லை. இப்படியே வழிதெரியாமல் இருக்கும் படியும் செய்து விடாதே என்று கேட்கிறோம்.

ஆக, மூன்று பேர்கள்:
1. நேர்வழி வேண்டி நேர்வழியில் கடந்து சென்று இலக்கை அடைந்த அருள் பெற்றவர்கள்.(Had earned His favour because of Had knowledge guidance and followed the guidance)
2. நேர்வழிக்கான தகவல்கள் கிடைத்த பின்பும் அதை படித்தும் தெரிந்து கொண்டு அந்த வழியை புறக்கணித்து கோபத்திற்கு ஆளானவர்கள். (Have earned wrath because of Having knowledge guidance and not following the guidance)
3. நேர்வழி இன்னதென்றே தெரியாமல் வழிதவறிப் போய் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். (Having no knowledge guidance and following the other ways)

அல்லாஹ்விடம் முதல் வழியில் செலுத்துமாறும் இரண்டாவதும் மூன்றாவது வழியிலும் செலுத்தி விடாதே என்றும் இறைஞ்சுகிறோம்.

No comments: