Thursday, January 7, 2016

நாகூர்ல கொடியேத்தம்

1
எங்க ஊர் ஆசாமி ஒருவர் ரொம்ப இறை பக்தி உள்ளவர். பக்கத்து ஊருக்கு போய் வாஞ்சூர் மருந்த குடிச்சா கூட 'பிஸ்மில்லா' சொல்லி தான் குடிப்பார்ன்னா பாத்துக்குங்களேன். 

அவர் கிட்டே நான் சொன்னேன், 'நானா, நம்ம ஒடம்புக்குள்ளே நம்மளால சொந்தமா உருவாக்க முடியாத வெலை மதிப்பில்லாத பொருளெல்லாம் இருக்கு, நீங்க சாராயத்த குடிச்சு அதெல்லாம் அழிக்க பாக்குறீங்களே..'ன்னேன், அத்தோடு விடாமல், 'நம்ம ஒடம்பு நமக்கு ஒரு வூடு மாதிரி நானா, நம்ம வூட்டுக்குள்ளே நமக்கு கெடுதலானத நாம சேர்ப்போமா..' என்றேன்

அரை போதையில் அறைக்குள் இருந்த அவர், 'ஏன் சேர்க்க மாட்டோம், நம்ம வூட்டுக்குள்ள கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய சேக்குறதில்லை..' என்றார்.

நான் கைலியை காணோம் கைநேஞ்சியை காணோம்னு ஓடியே வந்துட்டேன்.

அவர் நாகூர் தர்ஹால எஜமாண்ட வாசல்ல ரொம்ப மரியாதையா ஒக்கார்ந்திருப்பார், வாஞ்சூருக்கு போவும் போது கூட மியா தெரு, குஞ்சாலி மரைக்கார் தெரு சந்திக்கும் முனையில் தர்ஹா பெரிய மனாரா தெரியும், அங்கே செருப்பை கழட்டி போட்டுட்டு கையை கண்ணுல வச்சு முச்சம் கொடுத்துட்டு தான் வாஞ்சூர்க்கே போவார். 

அதே மாதிரி திரும்ப வரும் போது குடிச்சிட்டு வர்ரது எஜமானுக்கு தெரிய கூடாதுங்கறதுக்காக அப்படியே வாயை பொத்திகிட்டு தலையை திருப்பிகிட்டு தான் போவார். அவ்வளவு மரியாதை.

மரியாதை பலவகைப்படும் என்றால், அதில் நானாவின் இந்த மரியாதை ஒரு வகை. இது மாதிரி மரியாதைகளில் பல வகைகள் உள்ளது. 

அதில் ஹந்திரியே நடக்கக் கூடாது தர்ஹாக்கே போவக்கூடாதுங்கறது தான் உச்சபட்ச மரியாதை.

2
எங்க ஹஜ்ரத் ஒரு கதை சொல்லி காண்பித்தார்கள்,

ஒரு ஊர்ல ஒரு தர்ஹா இருந்துச்சு, அந்த தர்ஹாவ ஒட்டி ஒரு பள்ளிவாசலும் இருந்துச்சு, அந்த பள்ளிக்கி ஒரு முத்தவல்லி ஒருத்தர் இருந்தாரு, அவர் அஞ்சு வேலை தொழுவ, குரான் ஷரீஃப் ஓதுறது, தர்ஹா ஜியாரத்ன்னு ரொம்ப இபாதத்தா இருந்திருக்காரு. 

ஆனா அவர்ட மவன் ஒரு வேலைக்கு கூட பள்ளி பக்கமோ இல்ல தர்ஹா பக்கமோ வராதவனா ஒரு ஆட்டு மேலேயே ரொம்ப புரியமா இருந்துகிட்டு இருந்திருக்கான்.

அவர் எவ்வளவோ சொல்லி பார்த்தாரு, இவன் கேக்கலை, ஆட்டு கூடேயே சுத்திகிட்டு இருந்திருக்கான். அதனால் கோவப்பட்டு 'நீ என் புள்ளையே இல்ல, இப்படி தர்தீப் இல்லாத புள்ளை எனக்கு தேவையுமில்லைண்டு சொல்லி வூட்டை வுட்டே தொறத்தி வுட்டுட்டாரு'.

அவன் ரொம்ப சந்தோஷமா, ஆட்டை கூட்டிட்டு அந்த ஊரை வுட்டே போயிட்டானாம். அப்புறமா, திடீர்ன்னு ஒரு நாள்  அந்த ஆடு எறந்துடுச்சு, அத பொதச்ச எடத்துலேயே இவன் ஒக்காந்து அழுவிகிட்டு இருந்திருக்கான்.

அந்த வழியா போற வர்ற ஜனங்க பாத்துட்டு, யாரோ ஒரு மகான் இந்த எடத்துல தான் அடக்கமாயிருக்காருன்னு அவங்களுக்குள்ளாகவே  பேசிகிட்டதோடில்லாம  அவன் கைல காசயும் கொடுத்துட்டு போயிருக்காங்க.

ஒடனே, அவன் ஒரு உண்டியலை வச்சுட்டான், அது பெரிய தர்ஹாவாயிடுச்சு, அதை ஒட்டி ஒரு பள்ளியும் கட்டுனான், தாடிய வச்சிகிட்டு தசுவமணிய ஓதிகிட்டு முத்தவல்லியா ஒக்காந்துட்டான்.

அவர்ர வாப்பா 'பையன் பெரிய இபாதத்துகரனா மாறிட்டான்'னு கேள்விபட்டு இவன வந்து பார்த்திருக்காரு. அதோட, 'எப்டிப்பா இதெல்லாம்..?'ண்டும் கேட்டிருக்கார்.

அவன் வாப்பாட்ட உண்மையை ஒத்துகிட்டு இருந்திருக்கான், 'இந்த கப்ருல அடங்கியிருக்கிறது அவ்லியாவெல்லாம் இல்ல, என்னோட ஆட்டுகுட்டி தான்'னு

உடனே அவண்ட வாப்பா சொன்னாராம், 'அதானே, புலிக்கு பொறந்தது பூனையாவுமா?, நம்ம ஊர்ல தர்ஹால அடங்கியிருக்கிறது யாரு?, நீ கூட்டிட்டு வந்த ஆட்டுகுட்டியோட ம்மா தானே' என்று.

எப்படியிருக்கு கதை?

3
நாகூரில் 453வது வருட கந்தூரி வருகிற மே மாதம்  15ந் தேதி சனிக்கிழமை சிறப்பாக தொடங்க இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.

ஹந்திரி என்பது இறைவனின் நண்பர்கள் என்று அறியப்படும் அவ்லியாக்கள் மறைந்த தினத்தில் அவர்களின் சீடர்கள், குடும்பத்தார்கள், இன்னும் பொது மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அன்னாரை நினைவு கூர்வதையே குறிக்கும்.

இந்த வகையில் சையிது அப்துல் காதிர் என்ற இயற் பெயரை கொண்ட சுல்தானுல் அவ்லியா நாகூர் பாதுஷா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிகிழமை அதிகாலை நேரத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள்.

அவர்களின் சீடர்களான 404 பேரும் சன்மார்க்க பணி புரிய நான்கு குழுக்களாக பான்வா, மலங்கு, மதாரி, ஜலாலி என நான்கு வகுப்பாக பிரிந்து சென்றார்கள். பிரிந்து சென்ற அவர்கள் ஹிஜ்ரி 979 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் முதல் தேதியில் சந்தித்தார்கள். 10ஆம் நாள் வாழ்வை நீத்த அந்த தருணத்தில் திக்ரில் ஈடுபட்டார்கள். இதுவே ஹந்திரியானது.

4

ஆனால் ஊரில் இன்னேரத்துக்கு சுறா, பையா, குட்டி பிசாசு கைலிங்க எல்லாம் கம்பில தொங்கிட்டு இருக்கும். மூக்கை துளைக்கும் முட்டை புரோட்டாவிலிருந்து மலேசியா ஸ்பெஷல் மீங்கோரிங் வரை கடைகள் குவிந்திருக்கும். அலங்கார வாசல் வெளக்கு ஜெதப்பா எறிய ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும். இசை முரசு இசை அமுதமெல்லாம் செவிக்கொரு சுவையாய் விருந்து படைத்து கொண்டிருப்பார்கள்.

இப்படியாக ஒரு புரம் ஹந்திரி வேடிக்கை தடபுடலாக நடந்து கொண்டிருக்க இன்னொரு புரம் முஸ்லீம்களில் ஒரு சாரார் எங்கே ஷிர்க் வைத்து விடுவார்களோ என்ற உண்மையான (?) அக்கறையிலும் கவலையிலும் கபுரு வழிபாடு கூடாது, கல்லை படுக்க வச்சு வணங்காதீங்க, அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீங்க என்று கூடு வருவதற்கும் கொடி ஏற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க தயாராகிக் கொண்டு இருப்பார்கள்

அவ்லியாக்களின் கப்ரில் மரியாதையின் குறியீடாக போர்வை போர்த்துவார்கள், அதற்கு ஒரு மேலே சொன்ன ஷிர்க் பற்றி கவலைப்படும் அறிஞர்களில் ஒருவர் இப்படி கேட்டார், ‘ஏன்..? அஹலுக்கு என்ன குளுராவா இருக்குது..” என்று

4

குரான் ஷரீஃப், ஹதீஸை மட்டும் தான் பின்பற்றுங்கள் என்று சொல்வோர்கள் ஒரே அணியாக இருக்க தவறி விட்டார்கள். மேடையேறி ஒருவர் மீது ஒருவர் வசை பாடி அறிக்கை விட்டு பிரிவினைக்கு காரணமாகி இருக்கிறார்கள்.

ரசூல் (சல்) அவர்களை ‘அழகிய முன்மாதிரி’ என்று ஒப்புக் கொண்ட நாம் இந்த ஏகத்துவத்தை விட சொந்த பிரச்சினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி பல குழுவாகி நிற்கும் இவர்களை ‘மோசமான முன்மாதிரி’ என்று ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் ஹந்திரி நிகழ்ச்சியானது முஸ்லீம்களை முஸ்லீம்களோடு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களோடும் ஒன்றிணைந்து ஒரே மனநிலைக்கு கொண்டு செல்கிறது எனலாம்.

சீர்திருத்தம் என்பது தேவையான அளவு தான் இருக்க வேண்டும், ரசூலுல்லாஹ் (சல்) அவர்கள் மக்காவில் உள்ள சிலையை தான் உடைத்தார்கள். மக்காவில் குறைஷிகளால் கஃபாவை சுற்றி கட்டியிருந்த துணிகளை கிழிக்கவில்லை. அதற்கு அவசியமுமில்லை.

’ஷிர்க்’ புகழ் அறிஞர்கள் (அதாவது எதற்கெடுத்தாலும் அவன் ஷிர்க் வச்சுட்டான் என்று கவலைப்படுபவர்கள்) துணிகளையும் கிழித்து எரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனது கருத்தாகும்.

5

’ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் போது ஹந்திரி வருது என்று உங்களை யாரும் கூப்பிட்டு நீங்கள் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், முழு ஊர்வலமும் முடிந்து திரும்ப வந்து விட்ட இடத்திலிருந்து கடிதத்தை உடனே தொடங்க உங்களால் முடியணும்..’ - எங்கள் ஹஜ்ரத் கற்றுக் கொடுத்தவை தான்..


ஹந்திரியில் கொடியேறுவது, கப்பல் வருவது, கூடு வருவது இவை அத்தனையும் எஜமானை நினைவு கூர்வதை விட்டும் தடுத்து விடாத அளவுக்கு  நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றே நான் எங்களின் ஹஜ்ரத்திடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘கத் அஃப்லஹ மன் தஜக்கா..’ - மனதை தூய்மை படுத்தியவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்பது குரான் ஷரீஃபின் வாசகம்.

இறைநேச செல்வர்களின் மீது அன்பு பாராட்டுவதிலும் மரியாதை செலுத்துவதிலும் அவர்களின் வாசலில் நின்று சலாம் சொல்வதிலும் மனம் தூய்மையடையவே செய்யும்.

No comments: