Thursday, January 7, 2016

யூசுஃப் நபியின் மிக அழகான வரலாறு

1

குரான் ஷரீஃபிலே மிகவும் விளக்கமாகவும் நேரடியாகவும் காலவரிசைப்படியும் ஒரு அத்தியாயம் அமைந்திருக்கிறது என்றால் அது ஸுரத்துல் யூசுஃப் என்ற குரான் ஷரீஃபில் இடம் பெற்ற 12வது அத்தியாயத்தை மட்டுமே குறிக்க முடியும். 

குரான் ஷரீஃபே இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கும் போது 

"... மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம்.." (3வது வசனம்)

என்று கூறுகிறது. வேறு எந்த வரலாற்றை பற்றி குறிப்பிடும் போதும் இப்படி சொன்னதாக நான் அறியவில்லை.

நாகூர் ரூமி அவர்கள் அவர்களது 'இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்' எனும் நூலில் இந்த வரலாற்றை பற்றி குறிப்பிடுகையில் "கனவில் தொடங்கி கனவு பலிப்பதில் முடிகிறது" என்று அழகாக எழுதியிருந்தார்கள்.

மேலும் குரான் ஷரீஃப் இந்த வரலாற்றில் பல படிப்பினைகள் இருப்பதாக சொல்கிறது..

"நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன." (7வது வசனம்)

குரான் ஷரீஃபிலிருந்து நாம் புரிந்து கொள்ளுவதற்கும் இறைவனின் மெய்யன்பர்கள் எனப்படும் சூஃபியாக்கள் புரிந்து கொள்வதற்கும் வானபூமி வித்தியாசம் இருக்கிறது.

இங்கே மெய்யன்பர்களின் பார்வையில் இந்த அத்தியாயத்தில் படிப்பினை பெற வேண்டிய சில செய்திகள் (Which means not limited with the below) இறையருளால் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

முதலாவதாக, யூசுஃப் நபியவர்கள் அவர்களின் தந்தையான யாகூப் நபியை  அழைக்கும் போது "என் அருமை தந்தையே (அரபியில் 'யா அபதி" எனும் வார்த்தை) " (4வது வசனம்) என்று அழைக்கிறார்கள்.

ஆனால் யாகூப் நபியின் மற்ற பிள்ளைகள் அவர்களை அழைக்கும் போது'எங்கள் தந்தையே (அரபியில் 'யா அபானா' எனும் வார்த்தை)" (11 வது வசனம்) என்று அழைப்பதையும் கவனிக்கலாம்.

இவ்விரண்டு அழைப்பிற்கும் உள்ள வித்தியாசமே யூசுஃப் நபியவர்கள் தமது தந்தையை மிகவும் அன்போடு தமக்கே உரிய வார்த்தைகளில் அழைத்தது தான் (in more personal form of addressing). ஆனால் மற்ற பிள்ளைகள் மிகவும் சாதாரன வார்த்தைகளில் (formal) ஆக அழைக்கிறார்கள்.

இது மற்றவர்கள் பார்வையில் எப்படி படுகிறதோ எனக்கு தெரியாது, சூஃபியாக்கள் பார்வையில் இது மிகவும் உள்ளர்த்தம் உள்ளதாக அனுகப்படுகிறது. ஏனெனில் அவர்களின் இறைவனுடனான தொடர்பு தூய்மையான அன்பிலிருந்து தான் பிறந்தது.

தந்தை மகனையும் தாண்டிய இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு தெய்வநிலை சார்ந்த தொடர்பாக 'யா அபதி' எனும் அழைப்பு  இருந்திருக்கிறது. இந்த அன்பு தான் மற்ற மகன்களுக்கு பொறாமையையும் உண்டு பண்ணுகிறது.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் சம்சு தப்ரேஜ் (ரஹ்) அவர்களுடன் இத்தகைய தெய்வ நிலை சார்ந்த அன்பு கொண்டிருந்த போது தான் ரூமி (ரஹ்) அவர்களின் பிற மாணாக்கர்களுக்கும் இதே போல் பொறாமையை உண்டு பண்ணியது. 

யூசுஃப் நபியவர்களின் சகோதரர்ளுக்கு ஏற்பட்ட இந்த பொறாமை அவர்களை யூசுஃப் நபியவர்களை கிணற்றின் கீழே தள்ளி விடும் அளவுக்கு அவர்களை கொண்டு போய் வைத்தது.

"(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, ..." (15வது வசனம்)

இங்கே யூசுஃப் நபியவர்கள் Physical ஆக கீழே போனது என்பது அவர்களது தெய்வநிலை சார்ந்த தன்மை Spiritual ஆக மேலே சென்றதற்கான குறியீடாகும்.  அந்த கிணற்றின் இருளில் யூசுஃப் நபியவர்களுக்கு இறை செய்தி மூலம் ஒளியேற்றப்பட்டதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இறைவசனமே சான்றாகும்.

“ ...நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்." (15 வது வசனம்)

கிணற்றின் இருட்டிலே யூசுஃப் நபியவர்கள் இறைவனின் ஒளியை பெற்றுக் கொண்டார்கள். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் அவர்களை இறைவன் பொருந்திக் கொண்டான்.

2

யூசுஃப் நபியின் சகோதரர்கள் யூசுஃப் நபியவர்களுக்கும் தீங்கிழைத்திருந்த போதும் பிற்காலத்தில் மிஸ்ரு (தற்போதைய எகிப்து நகரம்) நாட்டின் மந்திரியாக இருந்த யூசுஃப் நபிகளிடத்திலே வந்து அவர்கள் தாம் கிணற்றில் தள்ளி விட்ட தமது சகோதரன் என்று தெரியாத நிலையிலேயே (ஸதகா - ஸ த க எனும் மூன்று எழுத்துக்களை உடைய வார்த்தை) தருமம் கேட்கிறார்கள்.

ஆனால் யூசுப் நபியவர்கள் அவர்களுக்கு கொடுக்க நினைத்த ஸதகாவை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. யூசுஃப் நபியவர்கள் வெறும் பொருள்களை மட்டும் தானமாக கொடுக்கவில்லை உண்மையில் அந்த யூசுஃப் நபியின் சகோதரர்கள் எதை தானமாக கேட்டார்களோ அதையே அவர்களின் இதயங்களை சீராக்கி மறைபொருளான உண்மையினை (ஸித்திக் - ஸ த க எனும் மூன்று எழுத்துக்களை உடைய வார்த்தை) விளங்கிக் கொள்ளும் மனநிலையினை பரிசாக கொடுக்கிறார்கள்.

யூசுஃபின் சகோதரர்கள் யூசுஃப் நபிகளிடத்திலே கேட்டது குரான் ஷரீஃபிலே தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

"அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும்பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையேகொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்." (88 வது வசனம்)

இதில் பெருந்துயர் என்பது யூசுஃப் நபியவர்களை கிணற்றில் தள்ளி விட்டதால் நேர்ந்து விட்ட பெருந்துயர். 

சொற்பமான பொருள் என்பது தங்களின் இதயங்களில் இது வரை சேர்த்து வைத்திருந்த நன்மை இல்லாத உயர்வற்ற பொருள்

அளந்து கொடுங்கள் என்பது இத்தகைய நிலையில் அவர்களிருப்பதை பார்த்து யூசுஃப் நபியவர்களே அளந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதையே அவர்கள் விருப்பமாக கொண்டது.

தானமாகவும் கொடுங்கள் என்பது அவர்களின் பாவங்களை போக்கி அவர்களை நல்லடியார்களின் நிலைக்கு உயர்த்துவதை குறிக்கும் சொல்

தன்னை உணர்ந்து விட்ட எவருக்கும் இறைவனிடமிருந்தும் இறையடியார்களிடமிருந்தும் மன்னிப்பும் கருணையும் உண்டு அல்லவா..?

வெறும் பொருளை தானமாக கேட்டவர்களுக்கு தெய்வநிலை சம்மந்தப்பட்ட மறுசீரமைப்பு (a complete spiritual restoration) எனும் பரிசை தானமாக தருகிறார்கள்.

அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார். (92வது வசனம்)

3

யூசுஃப் நபியவர்களின் சகோதரர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதற்கு முன்னர் அவர்கள் தமது தவறை உளப்பூர்வமாக உணர்ந்தார்கள்.

அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.(91 வது வசனம்)

தீயசக்திகளுக்கு கட்டுப்படும் நப்ஸ் அமாரா எனும் மனநிலையில் இருந்த யூசுஃப் நபியவர்களின் சகோதரர்களை யூசுஃப் நபியவர்கள் அவர்களின் தவறான செய்கைகளை உணர வைத்து தன் தவறுகளை உணரும், தனது நிலையிலையே குறை காணும் நப்ஸ் அல் லவ்வாமா எனும் உயரிய நிலைக்கு உயர்த்தி விட்டார்கள். 

அவர்களுக்கு இந்த மனநிலை வந்து விட்டது என்பது அல்லாஹ்வின் ஆதரவு அவர்களுக்கு கிட்டும் என்று அவர்கள் அவர்களின் தந்தை யாகூப் நபியால் சொல்லப்பட்ட கீழே வரும் வசனம் உறுதிப்படுத்துகிறது

“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்)அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்." (87 வது வசனம்)

உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்து கொண்ட நிலையில் அவர்கள் யூசுஃப் நபியிடம் பணிவை ஒப்புக் கொண்டதை குறிப்பிடும் போது 'சுஜ்ஜதன் - சிரம் பணிதல்' என்ற பதத்தை இறைவன் பயன்படுத்துகிறான்

"இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் அருமை தந்தையே (யா அபதி எனும் அரபி பதம்)! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்." (100 வது வசனம்)

இதே 'சுஜ்ஜதன்' எனும் பதம் உதாரணத்திற்கு குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில் வருவதை கவனிப்போம்

19 வது மர்யம் எனும் அத்தியாயம் 58 வது வசனம்

".. அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும்விழுவார்கள்."

முன்னர் யூசுஃப் நபியவர்களின் சகோதரர்களும் யூசுஃப் நபியவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அனுபவித்தார்கள். அவர்கள் யூசுஃப் நபியவர்களை தெய்வநிலை சார்ந்த தங்களை மறுசீரமைத்த ஒரு குருவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக யூசுஃப் நபியவர்களிடத்தில் தங்களுடைய பணிதலை ஒப்புக் கொண்டு சிரம் பணிந்தார்கள்.

4

யூசுப் நபியவர்கள் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் தான் கண்ட கனவை தனது அருமை தந்தையரிடம் சொல்லும் போது தந்தை தனது அருமை மகனாருக்கு கீழே வருமாறு அருளுரை வழங்குகிறார்கள்..

"இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”(6 வது வசனம்)


யாகூப் நபி அவர்கள் அப்போது (6 வது வசனம்) சொன்னதை யூசுஃப் நபியவர்கள் வெறும் வார்த்தையால் நம்பியதை பல வருடங்கள் கழித்து பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து புரிந்து கொள்கிறார்கள் (101 வது வசனம்). அந்த அனுபவத்தின் வெளிப்பாடு தான் கீழே உள்ள யூசுஃப் நபிகளின் மொழிகள்

"என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே ("ஃபாத்திர் எனும் அரபு வார்த்தை - பிரித்தவன் என்ற நேரடி பொருளை கொண்டது)! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன் (வலி எனும் அரபு வார்த்தை - Which means Proximate loving guardian); ...." (101 வது வசனம்)

யூசுஃப் நபியவர்கள் இறைவனிடத்திலே நன்றி பெருக்குடன் கூறும் போது நீயே எனது இந்த Material Universe எனப்படும் துனியாவிலும் Spiritual World எனப்படும் ஆஹிரத்திலும் நீயே எனது வலி என்று கூறுகிறார்கள்.

இந்த வசனத்தில் வரும் ஃபாத்திர் எனும் வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் யூசுஃப் நபியவர்களின் வாழ்க்கை பற்றிய முடிவு செய்யப்பட்ட செய்திகளை யூசுஃப் நபியவர்களை தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கம் எனும் வழிகாட்டுதலை கொண்டு 6 வது வசனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை 100 வது வசனத்தில் மிகவும் நுட்பமாக இறைவன் நிறைவேற்றியுள்ளான்.

மேலும், யூசுஃப் நபியவர்கள் ஹக்கை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்ட இந்த உன்னத நிலையிலேயே தன்னை கைப்பற்றி விடும்படியும் நல்லடியார் கூட்டத்தில் தன்னை சேர்த்து விடும் படியும் இறைஞ்சுகிறார்கள். 

".. முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)" (101 வது வசனம்)

No comments: