Thursday, January 7, 2016

இக்ரா - (படியுங்கள் அல்லது ஓதுங்கள்)

இறக்கி அருளப்பட்ட குரான் ஷரீஃபின் முதல் வார்த்தையே 'இக்ரா (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read) என்பதாக உள்ளது.

கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - கல்வியே  செல்வத்துட்  செல்வம் என்பதும் தமிழர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று தான்.

கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்ற வித்தியாசத்தை பார்த்ததில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.

"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது

எங்கள் ஹஜ்ரத் சொன்னார்கள், 'சீன்'ங்குற வார்த்தைய தான் 'சீனா'ன்னு சொல்லி இக்கிறாஹா, 'சீன்'ங்குற வார்த்தைக்கு சிங்கத்துட நெத்தின்னு இன்னொரு அர்த்தம் இருக்கு, அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா இருக்கும்..' என்று 

அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் அது சிங்கத்தின் நெற்றியில் இருந்தாலும் சரி' - என்று அர்த்தம். (இந்த அர்த்தத்தில் பார்த்தால் சீனாக்காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும்)

குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில் வருகிறதாம். 

இந்த கல்வி மார்க்க கல்வியை மட்டும் தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும் உண்டு. உண்மை அப்படி அல்ல என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லீம்கள் மீது போர் தொடுக்கிறார்கள் காஃபிர்கள் எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் (kafir means non-muslim). முஸ்லீம்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் கைதிகளாகி நிற்கிறார்கள் காஃபிர்கள்.

இந்த கட்டத்தில் நமக்கு நமது இந்த நவீன காலத்தில் நம் அறிவுக்கு உட்பட்டு போரில் சிறைப்பட்ட நமது தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை கண்கூடாக பார்த்தும் கையையும் காலையும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது. 

பெருமானார் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள், 'முஸ்லீம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று. 

இங்கே கவனிக்க வேண்டியது கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள், சற்று முன்னர் தங்களோடு போர் களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக் கொண்டவர்கள். 

வழக்கமாக சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தான், 'நான் அவனுக்கு (தோல்வி அடைந்தவருக்கு) சரியான அல்லது நல்ல பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால் அன்று பத்ரு போரில் தோல்வி அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தார்கள்.

முஸ்லீம்கள் அவர்கள் பெற்ற வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடவில்லை. மாறாக தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவனாக பாடம் கற்றுக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.

படிக்க வரக்கூடாது உங்களுக்கு கல்வி கிடையாது என்று கல்வி மறுக்கப்பட்ட மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால்  அந்த  சிறந்த பாடத்தை புரிந்து கொள்ள முடியும். 

அதுவும் தவிர இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் முஸ்லீம்களுக்கு என்ன இஸ்லாமிய ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள். உலக கல்வியை தான் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பள்ளிவாசலானது முஸ்லீம்கள் தொழுத நேரம் போக அன்று முதல் பகுதிநிலை பள்ளிகூடமாகவும் மாறியது அதாவது ஜாமிஆவாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தான். 

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிவாசல் பகுதி நேர வகுப்புகள் (பார்ட் டைம் கிளாஸ்) நடக்கும் இடமாக மாறியது, அந்த வகையில் பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு பார்ட் டைம் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நான் அறிகிறேன்.

இன்றைக்கு முதியோர் கல்வி, Adult Learning, continuous learning, life long learning   என்ற  கல்வி  முறைகளுக்கெல்லாம் பெருமானார்  அன்று  வகுத்து  தந்த  திட்டம் தான் முன்னோடி.

இதெல்லாம் ஒரு புறமிருக்க என் வகுப்பில் நான் பாடம் நடத்தும் போது ஒருவர் உறங்கி கொண்டிருந்தார். (முழிச்சிக்கிட்டிருந்தா தானே நியூஸ் என்கிறீர்களா?)

நான் அவர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் 'அவரை எழுப்பி விடுங்கள்' என்று சொன்னேன்.

அவரும் எழுப்பி விடவே, திடுக்கிட்டு எழுந்திருந்த அவர், 'சாரி சார், அசந்துட்டேன்..' என்றேன்

நான், 'என்னா அசந்துட்டேன்.. நான் என்ன சண்டை காட்சியா நடத்தி காட்டுனேன்..' என்று சொல்லி விட்டு 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன்

அவர் உடனே 'காமராஜ்' என்றார்

நான் சொன்னேன், 'என்னங்க காமராஜ் தான் கல்வி கண்ணை தொறந்தாரும்பாங்க.. நீங்க என்னடான்னா கண்ணை மூடிட்டிங்களே.." என்றேன்

No comments: